Thursday, October 08, 2015

ஹோத்தா ஹை சார்...

காலையில் கிளம்பும் போதே நேரமாகிவிட்டது. சாலை நெருக்கடியில் அவனவன் தான் எப்படிப் போவது என்பது பற்றி மட்டும் யோசிக்கிறானே தவிர மற்றவரைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. என்ன ஊர் இது? என்று கொதித்தபடி சிக்னலில் நின்றிருந்தேன்.
'அங்கிள், ஹெல்மெட் போட்டிருக்கறதுக்கு நன்றி. ப்ளீஸ் இதை வச்சுக்குங்க' என்றது ஒரு கீச்சுக்க்குரல். திரும்புவதற்குள் சீருடை அணிந்திருந்த அந்த குண்டு பையன், என் கையில் ஒரு அட்டையைத் திணித்தான். கேட்பதற்குள் அருகிலிருந்த காரில் சீட் பெல்ட் அணிந்திருந்தவரிடம் ஒரு அட்டையைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான்.


கிட்டத்தட்ட பத்து மாணவ மாணவியர்கள், சிக்னலில் ஹார்ன் அடிக்காது நிற்பவர்கள், ஹெல்மட் போட்டிருப்பவர்கள் என்று சாலை விதிகளை மதிப்பவரகளுக்கு அட்டைகளையும் ஒரு சாக்லேட்டையும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். அருகிலிருக்கும் கோகுல்தாம் பள்ளி மாணவர்கள் என அறிந்தேன்.
இதைப் பெருமையுடன் குத்திக்கொள்ள வேண்டுமென நினைத்தி அடுத்த சிக்னலைக் கடந்திருப்பேன்...
திடீரெனத் திரும்பிய அக்ஸெண்ட் காரினால் நிலைகுலைந்து வண்டியோடு விழுந்தேன். கீச் கீச் என அடுத்தடுத்து. வண்டிகள் நின்றதன் ஒலிகள். சிறு சிராய்ப்புகளின் எரிச்சலோடு சற்றெ உடல் நடுக்கம். இருவர் அவசரமாக பைக்களை ஒரம் கட்டி என்னை நோக்கி விரைந்து வந்தனர். வண்டியை ஒருவர் எடுக்க , மற்றொருவர் மெல்ல கை பிடித்து தூக்கிவிட்டார். சாலை ஓரமாக நிறுத்தி " ஒண்ணுமில்ல. நிதானமா மூச்சை இழுத்து விடுங்க. தண்ணி இருக்கா? குடிங்க' என்றனர்.
எனக்கு ஒன்றுமில்லை எனத் தெரிந்ததும், லாப்டாப் பையை முன்னால் வைத்துவிட்டு,' ஹோத்தா ஹை..நடக்கும் .இது சகஜம் ' என்பதாகச் சொல்லிப் போனார்கள்.

ஹோத்தா ஹை...இது சகஜம் , வாழ்வில் வரும் சிறு இடர்களை 'என்னமோ எனக்குத்தான் வந்திருக்கு பாரு' என்பதாக நினைக்கக்கூடாது, போய்க்கொண்டே இருக்கணும். நல்ல சிந்தனை என்று நினைத்துக் கொண்டு வண்டியைச் செலுத்தினேன். ஓவர்டேக் செய்த பைக் ஒன்றில் இருந்தவர் 'முன் விளக்கு எரிகிறது' என்பதாக சைகை காட்டினார். அடுத்த சிக்னலில் அவருக்கு நன்றி என்பதாக கை தூக்கினேன். அவரும் , பேஸ்புக் லைக் போல கை காட்டி விரைந்தார்.

இதே சிக்னலில், காரில் அடிபட்டு ரத்தம் வழிய ஒருவர் தடுமாறி எழுந்து செல்போனில் பேசியபடியே அடுத்த டாக்ஸியைப் பிடித்து வேலைக்குப் போனதையும், அவருடன் காயம்பட்ட டிரைவரை அம்போவென விட்டுப் போனதையும் நண்பர்கள் வி கே எஸ், ஆர் வி எஸ் ஸிடம் சொல்லியிருக்கிறேன். முமபையில் மனிதாபிமானம் மறைந்துவிட்டது என்று புலம்பியிருக்கிறேன்.

ஆரே காலனியில் செல்லும்போதுதான் கவனித்தேன். வெட்டப்பட்டுக் கிடந்த பெரிய மரத்தண்டின்மீது, புதிதாகக் கிளைகள் மெல்லிதாக முளைத்திருந்தன.

ஹோத்தா ஹை..

No comments:

Post a Comment