Saturday, February 28, 2009

”நிஜமான” ஸ்லம்டாக் மில்லியனர்

டொமினிக் லாப்பியர்-ன் ”சிட்டி ஆப் ஜாய்” புத்தகம் படித்த நண்பர்கள் ”ஸ்லம்டாக் மில்லியனர்” குறித்து என்ன சொல்கிறார்கள் எனக் கேட்க ஆவலாயுள்ளேன்.
எனக்கு இப்படிப் படுகிறது.
நடைமுறை வாழ்க்கை குறித்தது ஒன்று, மற்றொன்று சல்மான் ரஷ்டி சொன்னதுபோல “கற்பனைக்கும் எட்டாத நடக்கவியலாத” மற்றொன்று. உண்மையான ஏழ்மையையும் அடிமட்ட சுரண்டலையும் , வாழ்க்கைப் போராட்டத்தையும் காட்டியது ஒன்று;பணக்காரக்கனவுகளையும், நிதர்சனத்தையும் குழப்பியடித்த கொலாஜ் மற்றொன்று. இரண்டும் ஆழமானவை. மனத்தைத் தாக்கக்கூடியவை.
ஸ்லம்டாக், திரைக்கதைக்கான தகுதியைப் பெற்றிருந்தது. 2 மணிநேரத்திற்குள் ஒரு போராட்டத்தைச் சொல்லவேண்டும் என்ற நிர்பந்தத்தை சுளுவாக சமாளித்தது. சிட்டி ஆப் ஜாய்- அப்படியல்ல. மெதுவாக உள்வாங்கி அசைபோடவேண்டும். பொறுமையும், நிதானமும் வேண்டும். அது கதை. ஸ்லம்டாக்- திரைக்கதை. டொமினிக் லாப்பியர் கல்கத்தாவில் ஆராய்ச்சி செய்தபோது மனத்தை அசைத்த அதிர்வுகளின் உண்மை வெளிப்பாடு .மற்றொன்று மும்பையின் வாழ்வுத்தாக்கத்தில், ஓடிய கற்பனையில் உருப்பாடு. கற்பனையின் படிவம் இருப்பதால் சினிமா உருவாகியதில் ஆச்சரியமில்லை.

இதற்கு ஆஸ்கார்? ஹாலிவுட் வேறு உலகம். ரகுமானுக்கும் ரசூல் பூக்குட்டிக்கும் விருது கிடைத்ததற்கு சந்தோசப்படலாம். அவ்வளவுதான். ரெண்டு மணிநேரம் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு இந்தப்படம் உண்மையான தாராவிச் சேரியையும் சித்தரிக்கவில்லை.. “என்ன ஆக்டிங் பாரு!” என ஆச்சரியப்படுமளவு யாரும் நடிக்கவும் இல்லை. சேரித்தனம் வியாபாரமாக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல அமெரிக்கா “வாவ்” என ஆச்சரியப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான். பேசாமல் எதாவது அழுவாச்சி சீரியலைப் பாருங்கள். ”நேரத்தை வீணே செலவழித்தேன்” என்ற உண்மை தெரிந்த நிறைவோடாவது உறங்குவீர்கள்.

ஏழ்மையையும், வறுமையையும் குறுகுறுப்பாகப் பார்க்கும் மேல்நாட்டுப் பழக்கம் இன்று நேற்றதல்ல. மதர் இந்தியா புத்தகத்தில் “ இந்தியா ஒரு திறந்தவெளி கழிப்பிடம்” என காதரின் மேயோ எழுதியதற்கு, காந்தி “ இப்புத்தகம் ஒரு சாக்கடை மேலாய்வாளரின் அறிக்கை” எனக் கண்டனம் தெரிவித்தது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உண்மை வேறு.. உண்மையை குழியாடி/குவியாடிகளால் ஒளியியல் பம்மாத்து செய்து விகாரமாக எதிரொளித்து “இதாண்டா ரியலிஸம்” எனச் சொல்வது வேறு.ஸ்லம்டாக் இரண்டாவது வகை.
மும்பைக்கு வரும் பல முதல்முறை சுற்றுலாப் பயணிகள் “ தாராவிக்கு எப்படிப் போகணும்?” எனக் கேட்பது வழக்கம். அங்கு சென்று வருவது ஒரு சுற்றுலா ஆக்கப்பட்டிருக்கிறது. ஏழ்மையை ரசிப்பது கொடூரமா இல்லையா என்பதல்ல எனது கேள்வி.. இந்தியாவில் எத்தனையோ பார்க்கவும், பழகிக்கொள்ளவும் இருக்க... இது என்ன கேணத்தனம்? என்ற எண்ணம் எனக்கு எழுவதில் எந்தத் தவறும் இல்லையெனவே நினைக்கிறேன்.
சேரிகள் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமல்ல. பங்களாதேஷ், பாக்கிஸ்தான் போன்றவைகளும்தான் சேரிகளைக் கொண்டுள்ளன. அங்கு இல்லாத எந்த அதிசயத்தை இங்கே கண்டுவிட்டனர்? ஒரே வித்தியாசம்... மும்பை சேரிகள் வெறும் ஏழ்மை வலிக்கோடுகளல்ல. முயற்சியும், வலியும், சொந்தங்களும், நட்புகளும், மத, இன வெறிக் கொலைகளும், அதன் நடுவே உயிரைக்கொடுத்தாவது மற்றவனைக் காப்பாற்றும் உணர்வுகளும் கூடிய ஒரு கலவை. ஒரே சமயத்தில் சாக்கடை நாற்றமும், அத்தரும், குல்கந்தும், ரத்த வாடையும் வீசும் விபரீத கலவை. இந்த நவீன சித்திரத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதில் இருக்கிறது நமது சாமர்த்தியம். அமெரிக்கா தவறாமல், 1900களில் பார்த்ததுப்போலவே இன்றும் பார்த்திருக்கிறது.

தாராவியில் இருந்து உயர்ந்த மனிதர்கள் ஏராளம். நானே பார்த்திருக்கிறேன். இன்று ஒருவர் ஒரு பெரும் அமெரிக்க நிறுவனத்தில் , ஜப்பானிய ஆய்வு சாலையின் தலைவர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விஞ்ஞனிகள், தொழிலதிபர்கள் பலர் தாராவியில் இருந்து வந்திருக்கின்றனர். இன்றும் தாராவி என்றால் வெறும் ஏழ்மையல்ல. அச்சுத் தொழில், தோல் பொருட்கள் ஏற்றுமதி என்று பல தொழில்கள் பெருகிய, துடிப்பான ஒரு பகுதி. என்ன துரதிருஷ்டம் என்றால்... இவர்களைக் குறித்து உண்மையையும் எவரும் எழுதவில்லை... திரைக்கதையையும் ஒருவரும் எழுதவில்லை.

நமது இளைய தலைமுறை எதைப் பார்க்கும்? தாராவியின் வறுமையும், வலியுமாக ஓடும் சாக்கடையாக இப்புத்தகம், தொலைக்காட்சி காட்டியவை கண்டு முகம் சிறுக்கும் அவர்களுக்கு, இவ்வூடகங்கள் தெரிந்தே விட்டுப்போன மாணிக்கங்கள் அச்சாக்கடையின் உள்ளே அழுந்திக் கிடப்பதைப் பார்க்க இயலாது. சாக்கடையை யார் கிளறுவது? எவருடைய பணி இது?

No comments:

Post a Comment