Saturday, August 20, 2016

கம்பனும் அலைகடல் சந்தமும்


கம்பராமாயணத்தில் சந்தம் ஜிங்கு ஜின்கு என்பதாக மட்டுமல்ல, இடத்திற்கும் நிகழ்விற்கும் தகுந்தாற்போல பொருத்தமான இயற்கை ரிதம் கொண்டும் வருவதுண்டு. யுத்தகாண்டத்தில் ஒரு இடத்தைப் பார்க்கலாம்.

அலைகள் எழுந்து ஆராவரிப்பதை நினைவில் கொள்வோம். . முதலில் அகடு (கீழ்நிலை),அதன்பின் முகடு ( மேல் எழும் நிலை), பின் மீண்டும் அகடு, முகடு என்று மாறிமாறி ஒரு சீராக வரும்.

 சொல்லின் அசையில், அகடு - நிரை , முகடு - நேர்.   டட -டா -டட- டட-டா-டட _/\_ _/\_   நிரை நேர் நிரை, நிரை நேர் நிரை  என்று போவதாக  அலைகள் ஏறி இறங்குவதை கற்பனையில் பொருத்திக்கொள்ளுங்கள்.



இந்திரஜித்திற்கும் , இலக்குவனுக்கும் போர்... இருவரும் கடுமையாக அங்குமிங்கும் இடம் மாறி போர் புரிகிறார்கள். மூன்று இடங்களுக்கு அவர்கள் செல்வதை மற்ற வீரர்கள் பார்க்க முடிகிறது. வீரர்களின் முன்புறம், இரு பக்கங்கள்.  (பின்புறம் வீரர்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் இருவரும் வேறு இடங்களுக்குள் பெயர்ந்து விடுகிறார்கள்.)..
பாடலை கம்பன் இவ்வாறு அமைக்கிறான்.

இருவீரரும் இவன்- இன்னன் இவன்- இன்னன் இவன் -இன்னனென
பெருவீரரும் அறியா வகை திரிந்தார் , கணை சொரிந்தார்.
ஒருவீரரும் இவர் ஒக்கிலை எனவானவர் உகந்தார் .
பெருவீரையும் பெருவீரையும் பொருதால் எனப் பொருதார்.

இரு-வீ -ரரும் இவ-னின் -னனி வனி-ன்
தட-தா-தட தட-தா-தட தட-தா-தட .... 
முழுப்பாடலுக்கும் இந்த ஏறி இறங்கும் சந்தம் அமையும்.

வீரை - கடல். 
நான்காம் அடியில் இரு பெருங்கடல்கள் போர்செய்வதைப் போல போர்செய்கிறார்கள் என்கிறார் கம்பர்.

இருகடல்கள் அலைகள் ஆர்ப்பரிக்க மோதுவதாக அமைந்த இப்பாடல் அந்த அலைச்சந்தத்தில் அமைந்திருப்பது எவ்வளவு பொருத்தம்?!

கம்பன் பல நேரங்களில் திணற அடித்துவிடுகிறான்.

No comments:

Post a Comment