Wednesday, August 30, 2006

இன்றைக்கு மட்டும் வாழ்வோம் 1

அன்று மும்பையில் வெயில் கடுமையாக இருந்தது. அலுவலகத்தை அடைந்ததும் உள்ளேயும் வெப்பம் கடுமையாக...
"நாளைக்கே பெங்களூர் வர்றேன்"என வாடிக்கையாளர் ஒருவருக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது. தெரியாத எண்..
மீண்டும் பத்து நிமிடத்தில் அதே நம்பர். பதட்டத்துடன் அழைத்தவரை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு நிமிடம் ஆனது. ஒருமுறை ரயிலில் பிறருக்கு உதவுவது குறித்துப் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அறிமுகமானவர். பல தொழில்முறை வல்லுநர்களின் , முறைசாராக் குழுமம் ஒன்றின் உறுப்பினர். மும்பையில் வைர வியாபரத்தில் ஈடுபட்டிருக்கும் பரம்பரை வியாபரக் குடும்பத்தினைச் சேர்ந்தவர்.
"இன்று ஒரு கல்லூரி மாணவனுக்கு உதவி தேவையெனத் தகவல் வந்தது. பண உதவியில்லை. ஊக்கப்படுத்தி, தெளிவாகச் சிந்திக்க வைக்கக் கோரி அவனது நண்பன் அழைத்திருந்தான்.கொஞ்சம் உதவ முடியுமா?"
நான் திகைத்தேன் " நான் என்ன செய்யமுடியும்? இதற்கென்றே படித்த மனவியல் வல்லுநர்கள் யாரையாவது அணுகுவோம். அதுதான் நல்லது"
தயங்கினார். "அதற்கு நேரமில்லை. நாம் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இவன் எதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவான்".
"நான் எனது நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். கூடிய விரைவில் மனநல வல்லுநர்கள் யாராவது கிடைத்தால் அவர்களை ஈடுபடுத்துவோம். அதுவரை கொஞ்சம் தாக்குப்பிடியுங்கள்" என்றார்.
" சரி . அவன் நம்பர் கொடுங்கள்.பேசிப்பார்க்கிறேன்" நாளை பெங்களூர் போகவேண்டும் என்ற கவலை வேறு.
கொடுத்தார். "நேரில் சந்திக்க முயலவேண்டாம். பையன் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறான். யாரையும் பார்க்கத் தயாராயில்லை. அவனது நண்பனின் வீட்டில் இருக்கிறான்.பெற்றோருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். சோலாப்பூரிலிருந்து அவர்கள் நாளை வந்துவிடுவார்கள்"
தான் அவனிடம் பேசியதையும் , எதற்கும் அவன் உடன்பட மறுப்பதையும் சொன்னார்.
" போன தேர்வு முடிவுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான். மனமுடைந்து போய்விட்டான். தன் காதலியிடம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பயமுறுத்தியிருக்கிறான்.அப்பெண் பயந்துபோய் அவனது நண்பனிடம் சொல்ல, அமுக்கமாக நண்பன் வீட்டில் கொண்டுவந்துவிட்டனர். அங்குதான் நேற்று இரவிலிருந்து இருக்கிறான்." இத்தனையும் போனிலேயே சுருக்கமாகச் சொல்லி விட்டு, நண்பர் பிற நண்பர்களுக்கு போன் போட முனைந்துவிட்டார்.

எனக்கு இது புதிது. என்னமோ எனது வாழ்க்கையில் ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்ததைச் சொல்லப்போக, மனிதர் நான் அவ்வாறு இருக்கலாம் என தவறாக முடிவுக்கு வந்துவிட்டாரோ?
தயக்கத்துடனே போன் செய்தேன். அவனது நண்பன் எடுத்தான் ( அவர்களது பெயர், முகவரி இடமெல்லாம் மறைத்திருக்கிறேன்) . எனது போன் என்றதும் அவனிடம் கொடுத்தான்.
" ஹலோ, நான் உனது நண்பன்" என்றேன்.
" எனக்கு இப்படி யாரும் நண்பன் கிடையாது" பட்டென வந்தது பதில். அத்தோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் வரும்.

No comments:

Post a Comment