Sunday, January 11, 2009

மும்பை குறித்த பதிவுகள்

மும்பை குறித்து 26/11க்குப் பிறகு எழுதப்பட்ட வலைப்பதிவுகளை முழுதும் படிக்கவில்லையெனினும் சில பதிவுகளைக் காண நேர்ந்தது.
வீடு தீப்பிடித்து எரியும் போது பீடிக்கு நெருப்பு கேட்ட கதையாய் சிறிதும் சிந்திக்காமல் எழுதப்பட்ட சில பதிவுகளைக்குறித்து சில வார்த்தைகள்.
மும்பையில் சில வருடங்கள் இருந்ததால் அதன் வாழ்க்கையைக் குறித்து அறிந்ததாக எழுதும் இவர்கள் பார்வை வருந்தத்தக்கது.
சில கருத்துக்களைக் கவனிப்போம்.
1. விலைவாசி அதிகம். அதனால் "பெங்களூரில் சில ஆயிரங்களில் வசதியாக இருந்த என்போன்ற மத்திய தர வர்க்கங்கள் வீடு கிடைக்காமல் திண்டாடியதற்கு" மும்பைக்காரர்கள் ஏளனமாகப் பார்த்தனராம். என்ன கதை யிது? மும்பையில் பெரும்பாலும் மத்திய தர மக்கள்தான் வசிக்கின்றனர். பெங்களூரிலும், சென்னையிலும் இல்லாத ஆடம்பர வாழ்வா இவர்கள் இங்கு எல்லாரிடமும் கண்டுவிட்டனர்? மும்பை ரயிலில் அனுதினமும் செல்லும் மக்களைப்பார்த்தால் தெஇரியும் - எவரிடம் பணம் கொழிக்கிறது என்று. மக்கள் நெருக்கடி, இடமில்லாமை, பில்டர்களின் லாபி... மும்பையில் அதிகம். சென்னையில் இப்போது வேளச்செரியிலோ, பெங்களூரிலோ இப்போது இவர்கள் முன்பு போல வீடு வாங்கமுடியுமா?
2005 யில் மழை கொட்டியபோதும் பங்குச்சந்தை குறித்து மட்டும் பேசினராம்... மக்கள் எழுதுமுன் கொஞம் யோசிக்கவேண்டும். சராசரி மும்பைக்கர் மனித நேயம் என்பதை உலகிற்குக் காடிய நாட்கள் அவை. சான்றுகள் ஆயிரம். மீண்டு உயிர்த்து வருவது என்பது மும்பைக்கே உரிய தனித்தன்மை. 1993 குண்டு வெடிப்பிலும் சரி, 2005 மழையிலும் சரி, 2007 ரயில் குண்டு வெடிப்பிலும் சரி, மும்பை அடிபட்ட அளவு எந்த நகரும் அடிபடவில்லை. அகமதாபாத்-ஐ சேர்க்கலாம் ஒரு வகையில்.மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளையும் மும்பையில் இருந்து பார்த்தவன் என்ற அனுபவத்தில் இதை எழுதுகிறேன்.

"தாஜ் ஓட்டலில் உயர்மட்டத்தினர் மட்டும் அடிபட்டதற்கு இன்ன குதி குதிக்கின்றனர்" ஹலோ, என்ன கதை யிது? பழரசம் விற்பவன் சி.எஸ்.டி ரயில் நிலையத்தில் மரிக்கவில்லையா?எத்தனை ஏழைமக்கள் ரயில் நிலையத்தில் அநியாயமாகச் சாகவில்லையா? இவர்கள் எல்லாம் உயர் மட்டத்தினரோ?
தாஜ் குறிவைக்கப்பட்டது. அத்தோடு நரிமன் இல்லமும்...
என்ன பாதுகாப்பு மும்பையில்? மும்பையில் மத்தியதர மனிதன் கட்டும் வரி அதிகம். அடிப்படையான பாதுகாப்பு கேட்பது தவ்றாகப் பட்டது என்றால் என்ன சொல்ல?
மும்பை கட்டும் தனிநபர் , கார்பொரேட் வரிக்கு, அதற்கு என்ன கிடைத்திருக்கிறது?

காஷ்மீரத்தையும், குஜராத்தையும் கண்டுகொள்வதில்லையாம்... கார்கில் போர் நடந்த போது மும்பை மக்கள் செய்ததும் சிந்தித்ததும் தினசரி ரயில் பயணங்களில் நான் அறிவேன். கார்கில் சண்டையின்போது , விராரில் புதிதாக வந்த ராணுவ வீரர் குடும்பத்தை, அந்தனை நெரிசலிலும், இடம் கொடுத்து, மரியாதையுடன் தாதரில் இறக்கிவிட்ட எனது நண்பர்கள் கூட்டம் இன்னும் விரார் 7.40 மணி ரயிலில் செல்கிறது. ஒருசேரச் சென்று மும்பை சென்ட்ரல் நிலையத்தில் ரத்ததானம் செய்ய நின்றதும், கம்பார்ட்மென்டில் உண்டியல் குலுக்கி( அவர் ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவின் மேல் அதிகாரி), இராணுவ வீரகள் குடும்பத்தினருக்கு கணிசமான தொகை அனுப்பியதும் இன்றும் நினவிருக்கிறது. என்னால் அவர்களைக் காட்டவும் முடியும். ரயில் சினேகம் என்பது எதுவரை என்பதை மும்பை வாழ்வு காட்டும்.சராசரி மும்பை மனிதன் நெரிசலில் நசுங்கி மாள்கிறான் எனினும், மனிதநேயம் இங்கு இன்னும் இருக்கிறது, மும்பை குப்பையில்- மற்ற சுத்தமான நகர்ங்களை விட..
நான் இங்கு 20 வருடங்களாக வாழ்பவன். மும்பையை பல காரனங்களுக்காக வெறுக்கவும் முடியும். மதிகவும் முடியும்.
பணம் சும்மா கொட்டவில்லை இங்கு. உழைக்கிறார்கள். உழைக்க விடுகிறார்கள்.

மும்பையை வெறுக்கப் பலகாரண்க்கள் இருக்கலாம். அதற்காக, ஒரு நகரம் ரத்தம் சிந்தும்போது, இந்தியன் அல்லது ஒரு மனிதன் என்ற அளவிலாவது நின்று உதவிகரம் நீட்டாமல் இது நொட்டை இது நொள்ளை எனக் குற்றம் சொல்வது கீழ்த்தரமானது.

பி.கு. சராசரி மும்பைக்கர் இதையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு ரயிலில் தொத்தி போய்க்கொண்டே யிருப்பான். அதுதான் அவனது வெற்றி.

No comments:

Post a Comment