Saturday, November 28, 2015

கம்பனை ரசித்தல் -2

கோவிந்த ராஜூவை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை அவனைக்குறித்து எழுதவில்லை. ராஜபாளையக்காரர் என்று சொல்லிக்கொண்டாலும், அவன் பேசுவது ஜெரால்டு, சூசை பர்னாந்து போலவே தூத்துக்குடி பாஷையிலிருக்கும்.

இசக்கியப்பன் மும்பைக்கு வருகிறார் என்று சொன்னதே அவந்தான். “டே, அந்தக் கஞ்சப்பிசினாரி, 3ஏஸி டிக்கட் போட்டு வருது. கேட்டியா?. மழை சும்மாயில்ல மெட்ராசுல கொட்டுது இப்படி”
“லே, அவரு வந்தா சும்மா இரி என்னா? உளறிவச்சு இருக்கற உறவைக் கெடுத்துப்போடாத, னஒம் பைசா ஒனக்கு வேணுமா, வேணாமா?”

“ஐயாங்... வேணும்லா. ரெண்டு வருசமா அஞ்சாயிரம் ரூவா , இப்ப தர்றேன், அப்பத் தர்றேன்னு இழுத்தடிக்காம்ல.”

“லே, அவரு வந்தா சும்மா இரி என்னா? உளறிவச்சு இருக்கற உறவைக் கெடுத்துப்போடாத, ஒம் பைசா ஒனக்கு வேணுமா, வேணாமா?”

இனிமே ஒழுங்கா இருப்பான் என்ற நம்பிக்கையில் , இசக்கியை அவரது லாட்ஜ் அறையில் காணச் சென்றேன். பத்து நிமிசத்தில் ஹோண்டா ஸ்பெலெண்டர் பைக்கில் இருவரும் வந்து இறங்கினர். “ஏ, வாடே” என்றார் இசக்கி முகமலர்ந்து. அனுதாபத்துடன் “எளச்சிட்டியேய்யா? ” என்றார்.

“சுகர் இருக்குல்லா?”என்றேன் சிரித்தபடி.

“எனக்குந்தான் இருக்கு. ஊசி போட்டுக்கிடுதேன். அப்படியே போயி சாந்தி ஸ்வீட்டுல காக்கிலோ அல்வா. எளவு எத்தன நாளு கிடக்கோமோ? சட்டுபுட்டுன்னு போயிட்டா நல்லது என்னடே?”
என்றார் கோயிந்துவைப் பார்த்து.

அறையில் லுங்கியில் மாறியவர், தனது சூட்கேஸிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து வைத்தார். “அடிக்கியாடே? நல்ல சரக்கு பாத்துக்க. கஸ்டம்ஸ்ல நம்ம பய இருக்கான் , அவன் கொடுத்தான்”

”வேணாம் அண்ணாச்சி” என்றேன். கோயிந்து ஆவலுடன் பார்ப்பது தெரிந்து ”நீ வேணா அடி. ஆனா, வண்டிய இங்கிட்டுப் போட்டுட்டு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போ, வெளங்கா?” என்றேன்.

“சரி”என்பதாகத் தலையாட்டி “ அண்ணாச்சி, ஒரு கிளாஸ் குடுங்க. எப்படி இருக்குன்னு பாப்பம்” என்றான்.

“ஆமா, நீ சொல்லித்தான் ஷிவாஸ் ரீகல் கம்பனிக்காரன் , சரக்கு சரிபண்ணப்போறாம்பாரு. அண்ணாச்சி, ஒரு லார்ஜு அடிக்கணுமுன்னு தோணிச்சி. ஊத்துங்கன்னு கேப்பியா, அத விட்டுட்டு...”

இருவருக்கும் சரியாக ஊற்றி, கீழே பெல் அடித்து சோடா வாங்கிவரச்சொல்லி, ஐஸ்கட்டிகளும் போட்டுக்கொண்டார்.
இரண்டு ரவுண்டுகள் வரை ஏதோதோ ஊர்க்கதை பேசினார்கள்.

திடீரென அவர் குரல் உயர்ந்தது. “லே, தே*** மவனே, கோயிந்து.. பைசா வேணும்னா எங்கிட்ட மட்டுந்தான் கேக்கணும் வெளங்கா?அதென்ன வீட்டுல பேச்சு?”

கோயிந்துவைப் பார்த்தேன்.  அவன் ஒருமுறை உறிஞ்சிவிட்டு ”
 நீங்க கிளம்பி நாரோயில் போயிட்டீய. அண்ணிதான் வீட்டுல இருந்தாக. அதான் அவங்ககிட்ட சொன்னேன்.அய்யாயிரம் எனக்குப் பெரிய அமவுண்ட்டு அண்ணாச்சி” என்றான்.

“இருக்கட்டும்ல. எங்கிட்டல்லா கேக்கணும். அதென்ன பொம்ப்ளேள்ட்ட கேக்கறது? அவ , நான் வீட்டுக்கு வந்ததும் ஒரு ஆட்டம் ஆடுதா. ஏற்கெனவே சகிக்காது. இதுல அழுவாச்சி வேற”

“அண்ணாச்சி” என்றான் கோயிந்து “ நீரு அவிய சொன்னதும் பைசா அனுப்புவீருன்னு தெரியாமப் போச்சி. அண்ணி கால்ல விழுந்து நன்னி சொல்லுறதா நெனச்சிக்கோரும்”

“நான் அனுப்பினேனா?” என்றார் அதிர்ந்து “எப்பலே?”

“பொறவு? ஒங்க அக்கவுண்ட்லேர்ந்துதான் வந்திருக்கும். முந்தானாத்தி வந்துச்சின்னு பேங்க்லேர்ந்து எஸ் எம் எஸ் வந்திச்சே? அதான் அண்ணிட்டே என் அக்கவுண்ட் நம்பரு, பேங்க் NEFT நம்பரு எல்லாம் கொடுத்தேம்லா?”

“செருக்கியுள்ள, அவ அனுப்பிச்சிருக்கா” என்றார் உதட்டைக் கடித்தபடி “ இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கா பாரு. இருந்தாலும் பொம்பளேள்கிட்ட நீ கேட்டிருக்கக்கூடாதுல, சொல்லிட்டேன்”

கோயிந்துவீன் சிறிய விழிகள் ரத்தச்சிவப்பாயிருந்தன. “வே ,அண்ணாச்சி” குழறினான். ” ஒமக்கு என்ன மயிரு தெரியும்? அங்? பொம்பளேள்தான் நியாயமா இருப்பாவ. ஒம்மரை மாதிரி ஏமாத்திட்டுத் திரியமாட்டாவ, வெளங்கிக்கிடும் “

“குடிச்சுட்டு உளறுது நாயி”என்றார் இசக்கி சிரித்தபடி. கோயிந்து ஆவேசமானன்.

“இல்லவே, அனுமாரு தெரியும்லா? ராமருக்கு ரொம்ப நட்பு பாத்துகிடும்.. அவரு..”

“இவன் இப்ப ராமாயணஞ்சொல்லுதான். கேட்டுக்கடே” என்றார் என்னைப்பார்த்து. நான் நெளிந்தேன்.குடிக்கும், ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?

“கேளுவே. அனுமாரு லங்கைல போயி சீதையத் தேடி கண்டுபிடிக்காரு. அவ ஒரு மோதிரங்கணக்கா என்னமோ ஒன்னு, பேர் வரமாட்டேக்கி, சூடாமணியா? அதக் கொடுத்து விடுதா. இங்கிட்டு வந்தவன் ராமருகிட்ட போறான். இனிமேத்தான் கதயே இருக்கு”

“லே, தூக்கம் வருது. இங்கனயே கிட,என்னா? வாந்தி வச்சிறாதே. தா**ளி, அப்புறம் நீதான் அள்ளிப்போட்டு கழுவிவிடணும், சொல்லிட்டேன்” என்றார் இசக்கி, கட்டிலில் காலை நீட்டியபடி அமர்ந்து.

அவன் என்னைப்பார்த்தான். குழறியபடியே தொடர்ந்தான்.
“ராமருகிட்ட வந்துட்டு அனுமாரு, அவர் கால்லல்ல நேரால்லா விழணும்? அங்கன விழலையாம். திரும்பி நின்னு , இலங்கை இருக்கற பக்கமா விழுந்து விழுந்து எளுந்திரிக்கான் பாத்துக்க. மத்தவங்க எல்லாம் அதிர்ந்து போயிட்டாவ. இவன் என்னா, ராமனை விட்டுட்டு எங்கனயோ விழுதானே?ன்னு. ராமனுக்குப் புரிஞ்சுபோச்சி. சிரிக்காரு. ’லே, இவன் கரெக்ட்டா சீதையப் பாத்துட்டு வந்திருக்கான்’ங்காரு. ”

“அதெப்படி?”என்றார் இசக்கி கதை கேட்கும் ஆர்வத்தில்.
“அதாக்கும் சீக்ரெட்டு. முதல்ல நாம கும்புடவேண்டியது தாயாரைத்தான். அதான் சீவில்லிபுத்தூர்ல ஆண்டாள்தான் முக்கியம். கேட்டியளா? அவ , நம்மளப்பத்தி பெருமாள்கிட்ட “இந்தாரும், இந்தப்பய மோசம்தான். ஆனா திருந்தி வந்திட்டான். சும்மா சொணங்காதயும், அனுப்பி வைக்கேன். ஏத்துகிடும், என்னா?”ன்னு சொல்லி வப்பாளாம். நாம, பம்மி பயந்து பெருமாளே, யப்பான்னு போகறச்சே அவரு “ சே..ரி.. வால”ன்னு அன்பா ஏத்துகிடுவாராம்.”

“ஒனக்கு இது யார்ல சொன்னது?”

“அதாம் சொன்ன்னேம்லா? இது ஒரு கம்பன் பாட்டுன்னு சீவில்லிபுத்தூர்ல ஒரு சாமி சொல்லிட்டிருந்தாப்ப்ல. நான் தெருவுல நின்னிட்டிருந்தேன். அங்கன காதுல விழுந்துச்சி. இப்ப ஒம்ம கதையவே பாரும். அண்ணி பாத்து பைசா அனுப்பலேன்னா, இன்னும் அஞ்சு வருசத்துக்கு தாரன், தாரன்ன்னு சொல்லிட்டிருப்பீரு”

“தா**ளி , இந்த கம்பன் பெரிய ஆளுதான் என்னா?” என்றார் இசக்கி, கால்களை நீட்டி, ஆட்டியபடி. 

எனது நினைவுகள் அந்தப்பாடலைத் தேடின.

“எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுதிலன்.முளரி நீக்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகந் தழீஇநெடி திறைஞ்சி வைகினான்”  - சுந்தரகாண்டம்

“சரி, எத்தன மணிக்கு நாளைக்கு வரணும்?” என்றேன் பொதுவில்.
இசக்கியிடமிருந்து குறட்டைதான் வந்தது. கோவிந்த ராஜு, கட்டிலின் மறுபுறம் நீட்டிப்படுத்தான். அவன் ஏதோ முணுமுணுத்தது கேட்கவில்லை. கேட்கும் நிலையிலும் நான் இல்லை.

அவர்கள் இருவருக்கும் ஒரு போதை, எனக்குள் மற்றொரு போதை .

வெளியே வந்தேன். மேகங்கள் விலகி நட்சத்திரங்கள் மெல்ல மினுக்கின. எத்தனை முறை இப்பாடலைக் கேட்டிருப்பேன்? இப்படியொரு யதார்த்தப் பார்வையில் பார்த்ததில்லை.

சிறிதாகத் தெரிகின்ற நட்சத்திரங்கள் , அருகிலிருக்கும் நிலவை விடப் பெரியன.

#கம்பனும்நானும்

4 comments:

  1. . கம்பன் பாடலை சுவை பட சொல்லிய விதம் அருமை,

    ReplyDelete
  2. Eppavume koil ponal mudala thayara parthu permission vanginduthan perumala parkkannumnu rule irukke???sakthi illayel sivan illai....

    ReplyDelete
  3. திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம். முதலுக்கும் மூன்றாவதுக்கும் தொடர்பை ஏற்படுத்துவது இரண்டாவது தானே

    ReplyDelete
  4. திருமந்திரம், த்வயம், சரமஸ்லோகம். முதலுக்கும் மூன்றாவதுக்கும் தொடர்பை ஏற்படுத்துவது இரண்டாவது தானே

    ReplyDelete