Sunday, July 24, 2016

முத்துசாமி

இந்தூரில் நண்பரது அபார்ட்மெண்ட்டிற்குப் போகும்போதெல்லாம், அவரது வீட்டின் அண்டை வீட்டை சற்றே பயத்தோடு கவனிப்பேன். கதவு அடைத்திருந்தால் ஒரு நிம்மதி. பல முறை அப்படி கவனித்து, சற்றே நிம்மதியுடன் விரைவாகத் தாண்டிப் போகும்போது..

“சார், எங்கே பாத்தும் பாக்காம போறேள்?” முத்துசாமி சார் ஜன்ன்னல் வழியே எட்டிப் பார்ப்பார்.

“ஹி.ஹி” வழிவேன்“ சொளக்கியமா சார்? கண்ணன் இருக்கானான்னு பாத்துட்டு உங்களைப் பாக்க வரலாம்னு இருந்தேன்”

“இப்படித்தான் சொல்லுவேள். அப்புறம் நைஸா கிளம்பிப் போயிடவேண்டியது. ஏர்ப்போர்ட்ல வந்து பிடிச்சுறுவேன். ஆமா, பாத்துக்கோங்கோ” கதவை அவர் இன்னும் திறக்கவில்லை என்பதே நிம்மதியாக இருக்கும்.

“ஹ ஹா” “ கண்டிப்பா வர்றேன் சார். கண்ணன்...”

“அவா எல்லாம் மெட்ராஸ் போயிருக்காளே? அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு ரெண்டு நாள் முன்னாடி போன் வந்தது. இவன் மட்டும் ரத்லாம் பக்கம் டூர் போயிருந்தான். அங்கேர்ந்து ராஜ்தானில பாம்பே போயி அங்கேர்ந்து ப்ளைட். நாந்தான் ஐடியா கொடுத்தேன்.உள்ள வாங்கோ”

யப்பா, தொடங்கியாச்சு..

முத்துசாமி ரயில்வேயில் என்ன வேலை பார்த்தார் என்று தெரியாது. கேட்கவில்லை. கேட்டால் அது ரெண்டு நாள் கதை ஓடும்.
“ ராஞ்ச்சியில ரெண்டு வருஷம் தூக்கி அடிச்சான். என் தப்பு என்னன்னு கேளுங்கோ. காண்ட்ராக்டர்ட்ட லஞ்சம் வாங்கினதை போட்டுக் கொடுத்துட்டேன். அப்புறம்னா தெரிஞ்சது, அந்த டிவிஷனல் ஆபீஸருக்கும் அதுல கட் இருக்குன்னு? அவன் பாத்தான். “மிஸ்டர். முத்துஸ்வாமி, வி வாண்ட் ஹானஸ்ட் எம்ப்ளாயீ லைக் யூ இன் ராஞ்ச்சி”னுட்டு...”
இன்னும் முப்பது வருஷக் கதை பாக்கியிருக்கிறது.
முத்துசாமி தனியாக இந்தூரில் இருக்கிறார். பையனும் பெண்ணும் பெங்களூரில். அவளும் சமீபத்தில்தான் லண்டனில் இருந்து வந்தாள் என்று சொன்ன நினைவு.

“லக்‌ஷ்மி போனப்புறம் ஒரு வெறுமை.. யார்ட்டயும் போய் இருக்கவேண்டாம்னு ஒரு நினைப்பு வந்துடுத்து. பொண்ணு “ அப்பா, you talk too much ’ங்கறா. பையனா? அவம் பேசவே மாட்டேங்கறான். மாட்டுப் பொண் அவ வேலையப் பாக்கறதுக்கே சரியா இருக்கு. பேத்தி , தாட் பூட்னு என்னமோ பேசறது. வந்துட்டேன்”

முத்துசாமியின் ப்ரச்சனை, பல முதியவர்களின் ப்ரச்சனைதான். தான் பேசவேண்டும். பிறர் கேட்கவேண்டும்.

“பல்பீர் சிங்னு ஒரு சர்தார்ஜி.. சார், கேக்கறேளா?”

“அங்? சொல்லுங்க” என்பேன் ஏதோ நினைவில். எனது வாடிக்கையாளர் நாளைக்கே சர்வீஸ் எஞ்சினீயர் இந்தூரில் இருக்கவேண்டுமென்கிறான். அதை எப்படி சமாளிக்கப்போகிறேன்?என்று நினைத்துக்கொண்டிருக்கையில், பல்பீர்..

“எங்கயோ பாத்துண்டு இருக்கேள். போரடிக்கறேனோ?”

“இல்ல சார்” சமாளிப்பேன்.. “நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. என்ன சொல்றதுன்னு யோசிச்சிண்டிருக்கேன்”

“ஹா! இதுக்கெல்லாம் கவலைப்படப்படாது. எனக்கு எத்தனை ப்ரஷர் வந்ததுங்கறேள்? ராஞ்ச்சில யூனியன் லீடர், சூப்பிரண்டண்ட், பெரிய அதிகாரியெல்லாம் நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேப்பான்கள். சே, என்ன வேலை விட்டுறலாம்னு தோணும். ரெண்டு கொழந்தைகள், பொண்டாட்டி ஊர்ல இருக்கா. வயசான அம்மா . எப்படி சார் சமாளிப்பேன்?”

“கஷ்டம்தான்”

”எவன் என்ன வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் என் வேலையச் செய்யறேன்னு இருந்துட்டேன். ரெண்டு பேர் கஷ்டம் கொடுத்துண்டே இருந்தான்கள். ராய்ப்பூர்க்கு ட்ரான்ஸ்ஃபர். அப்புறம் ராஞ்ச்சிக்கு ஒரு தடவ போனப்போ, அவன்களே வந்து சொன்னான்கள் “ சர்ஜி, நீங்க போனப்புறம்தான் உங்க அருமை தெரியுது”ன்னான். அதுவும் தலையில ஏறிடப்படாதுன்னுட்டு, வெறுமனே சிரிச்சுட்டு, போன வேலையப் பாத்துட்டு வந்தேன்..”

“ம்ம்”

“எதுக்கு சொல்றேன்னா.. வேலைல வர்ற மாற்றமெல்லாம், உள்மனசுல சலனம் கொண்டு வந்துடப்படாது. ஒரு காபி சாப்படறேளா? இப்பதான் டிகாஷன் இறக்கியிருக்கேன்”

அதன்பின்னும் ராஞ்ச்சி, ராய்ப்பூர், அஸன்ஸோல் என்று அவரது நினைவு ரயில்வண்டி ஓடிக்கொண்டே இருக்கும். இரு மாதங்கள் முன்பு மாட்டினேன்.

”இப்படித்தான் பல்பீர் சிங்குன்னு ஒரு சர்தார்ஜி..”

“சார், தெரியும், போனதடவ சொல்லிட்டீங்க”

“அப்படியா? பல்பீர் வாஸ் எ பெக்கூலியர் மேன்.. ஒரு தடவ”

அந்த சர்தார்ஜியை தேடிப்பிடித்து ஏன்யா இந்தாளுகூட வேலை பாத்தே?ன்னு திட்டிட்டு வரலாமா என்று ஆத்திரம் பொங்கும். சிரமப்பட்டு அடக்கிக்கொள்வேன்.

”ஒரு தடவகூட என் ஹானஸ்டியை விட்டுக் கொடுக்கலை சார். ஸ்கூல்ல பீஸ் கட்டணும், அம்மா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான்னு ஊர்லேந்து போன் வர்றது. அவளால எஸ்.டி.டி.கூட அதிகம் பண்ண முடியாது. ராத்திரி 10 மணிக்கு மேல பண்ணினா பைசா குறையும். ஆனா தெருவுல எப்படி ஒரு பொம்மனாட்டி 10 மணிக்கு மேல தனியா நிக்க முடியும் சொல்லுங்கோ? இப்படித்தான் ஒரு தடவ”

”சார் ஹானஸ்டி பத்தி சொல்லிட்டிருந்தீங்க”

“அங்? யெஸ்! ஆமா, அப்ப ஒரு காண்ட்ராக்டர் பத்தாயிரம் தர்றேன். என் பில்லை பாஸ் பண்ணி விட்டுருன்னான். அது ரெண்டு லெவல்ல பாஸ் பண்ற பில். ரெண்டு நாள்ள சீனியர் ஆபீஸர் ஒருத்தர்ட்டேர்ந்து போன் வர்றது. அந்த பில்லை பாஸ் பண்ணு முத்துஸ்வாமி’ன்னுட்டு. “ஸாரி சார்”ன்னேன் “ ப்ரொசீஜர் படித்தான் போவேன். வேணும்னா என் மேல ஆக்‌ஷன் எடுத்துக்கோ”ன்னுட்டேன். பகவான் இருக்கார் பாத்துக்கோங்கோ. தம்பி வந்து ஸ்கூல் பீஸ் அடைச்சான். அம்மா , பாவம் பரமபதிச்சுட்டா.. நல்ல ஆஸ்பிட்டல் கொண்டுபோயிருக்கலாமே அண்ணா?ன்னு தங்கை அழுதா. கேக்கறப்போ ரம்பமா நெஞ்சு அறுந்தது.” சட்டென கலங்கின கண்களை துடைத்துக்கொண்டார்.

“ஸாரி சார்”

“விடுங்கோ. என்ன செய்யறது. அந்த பைசா வாங்கி, அம்மாவை குணப்படித்தியிருந்தேன்னு வைச்சுக்கோங்கோ, அவளுக்கு தெரிஞ்சிருந்தா, அப்பவே ப்ராணனை விட்டிருப்பா. அவ உடம்பு குணமாயிருக்கும். ஆத்மா ரணமாயிருக்கும். வேணுமா எனக்கு?”

“சார், காபி”

“ஓ. முக்கியமான ஒண்ணை மற்ந்துட்டேன் பாருங்கோ. ஒரு ஹெல்ப் வேணும். என் வாழ்க்கையில பாத்த ரெண்டே ரெண்டு, சாஸ்த்ரம் சொன்ன படி வாழ்றது, அன்பாயிருக்கறது. இத ரெண்டு நோட்டு புஸ்தகத்துல அனுபவமா எழுதி வைச்சிருக்கேன். புக்கா போட முடியுமா? கேட்டுச் சொல்றேளா? கம்ப்யூட்டர்ல டைப் பண்ண முடியலை.”

“பாக்கலாம் சார்” என்று ஏதோ சாக்கு சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
சில நேரங்களில் இந்தூரில் அவருக்கு பயந்தே, ஓட்டல் அறையில் அடைந்தேன்.

சமீபத்தில் அவர் இறந்து போனதாக அறிந்தேன். கண்ணன் வீட்டுக்குப் போகும்போது அடைத்துக்கிடந்த அடுத்த வீட்டுக்கதவு என்னவோ செய்தது. ”என்ன ஆச்சு அவருக்கு?”என்றேன் நண்பனிடம்.

“அப்பா தனியா இருக்க வேண்டாம் என்று பையனும் பொண்ணும் தீர்மானிச்சு அவரை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்க முடிவெடுத்தார்கள். அவர்கிட்ட சொன்னப்போ, சட்டுனு அமைதியாயிட்டார். அதுக்கப்புறம் எங்க கிட்ட கூட அதிகம் பேசலை.”

ஒரு குற்ற உணர்வில் நெளிந்தேன்.

“ஒரு ராத்திரி, கொஞ்சம் காய்ச்சல் மாதிரி இருக்குன்னார். லலிதா, ரசம் சாதம் வைச்சுக் கொடுத்தா. நாங்க ரெண்டுபேரும் அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம். “கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டி விட்டோம்”ன்னார். அடுத்த நாள் காலேல போயிட்டார்”

”எதாவது நோட்டு புக் உங்க கிட்ட கொடுத்தாரா? ”

“இல்லையே? எல்லாத்தையும் பழைய பேப்பர், சாமான் எடுக்கறவன்கிட்ட அப்படியே போட்டுட்டு, வீட்டை வாடகைக்கு கொடுத்தாச்சே? லீவுன்னு அவங்க எல்லாம் ஊருக்கு போயிருக்கா.”

வள்ளலார் பாடல் வரிகள் எப்போதும் மென்மையானவை அல்ல.

1 comment:

  1. மனதை அறுக்கிறது. இன்று நீ நாளை நான். வேறு என்ன சொல்ல.

    ReplyDelete