Wednesday, July 27, 2016

நான் பாடும் பாடல் - அண்ணாச்சி உரையாடல்

நேற்றிரவு ஏதோ பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்கையில் வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

“பாடினே கொன்னுருவேன்” என்று மிரட்ட ஐந்தாம் மாடி சர்தார்ஜி வருகிறானோ? என்ற சந்தேகத்தில்தான் திறந்தேன். ச.வ.ச(ச*..ளவு வளர்ப்போர் சங்கம்) காரியதரிசி வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தார்.

“அட” வியந்தேன்”வே, போனவாட்டி “ நீர் பாடினா கழுத வரும்னீரு’.. உம்ம வாக்குப் பொய்க்கலைய்யா ”
சிரிப்பு உறைந்து போக “இந்தாரும், என்னக் கழுதன்னு சொல்ற வேலயெல்லாம் வச்சுக்காதீரும். கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்” என்றார்.
“உள்ளாற வாரும்” என்றேன். எப்படியும் இன்னும் அரைமணி நேரத்துக்கு ஒன்றும் வெட்டி முறிக்கப் போவதில்லை. பாட்டு, விருதுன்னு பொழுதை வீணடிக்கலாம்.

“எங்காளுக்கு விருது கிடைசிச்ருக்கு தெரியும்லா?” என்றார் பெருமையாக.
‘பாட்டுக்கா? அப்ப சரிதான்.”

“அட, பாட்டு எவம்வேணும்னாலும் பாடிறலாம்வே. கணக்கா நேரத்துக்கு பேசத்தெரியணும்லா? எங்காள் கரெக்டா எல்லாரும் அடிக்கற இடத்துல அடிச்சாரு. பொங்கறதா சீன் போட்டாரு. கொடுத்துட்டானுவோ”

”அங். அப்ப திறமைக்கெல்லாம் மதிப்பில்ல”
“அது இருந்தா மட்டும் போறாதுவே.  பாட்டு பத்தி பேசறத விட்டுட்டு பார்ப்பனியம்னு ஏசி எழுதணும்..”
“எழுதினா எவன் போடுவான்?”
“அட,  இத வெளியிடறதுக்குனே எளவு பத்திரிகை நடத்துதோம்லா? நாலு பக்கத்துக்கு போட்டுறுவம். கழுத விட்டை கை நிறையன்னு , எக்கச்சக்கமா பத்திரிகை வைச்சிருக்கம். வாராந்தரி, மாசாந்தரி என்ன வேணும்னு சொல்லுங்க”

”வே, பாடகன்னா பாட்டுதாம்வே பெரிசாத் தெரியும். எழுதினா எவம் படிப்பான்?”

சிரித்தார் “இப்படி இருக்கீயளேன்னு நினைச்சா பாவமா இருக்கு. கலை, இலக்கியம்னு எவம் பாக்கான் சொல்லுங்க? ஜாதியம் பார்க்கும் பார்ப்பனீயர்கள்னு தம் பாட்டைக் கேக்க வர்றவங்களையே ஏசணும். இவங்களுக்கு டிக்கட் கொடுக்கற சபாவுல பாடமாட்டேன்னு வீராப்பா அறிக்கை விடணும்”

“அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா? போயிட்டாங்கன்னா, ரசிகர் குறைஞ்சுருவாங்களேய்யா?”

“வே, அது ஒரு கேடு கெட்ட ஜென்ம கூட்டம் பாத்துகிடும். என்ன அடிச்சாலும் தாங்குவாங்க. என்ன சொன்னா என்னா, அவம் பாட்டு நல்லாயிருக்குன்னு வெக்கமே இல்லாம கேக்கற கூட்டம் அது. இத்தனை நடந்தப்புறமும் பாருங்க, பேஸ்புக்ல, ட்விட்டர்ல “வாழ்த்துக்கள்”ன்னு முதல்ல எழுதறது அந்த கூட்டம்தான்.”

“ஏம்வே அப்படி ஒரு டிசைனு?”

“எங்கள என்ன சொன்னாலும் கேட்டுகிடுவோம், அறிவுசீவியாக்கும் நாங்கன்னு காட்டிக்கிற போலித்தனம் அதுங்களுக்கு. போவட்டு. நீரு என்ன செய்யுதீரு?”

“டல் அடிச்சு கிடக்கு” என்றேன் சோகமாக “ நம்ம புக் எல்லாம் ஒரு பய சீந்த மாட்டக்கானே? வாங்கினவங்க இருக்காங்கன்னாலும் ஒரு பைசா வரலியே இன்னும்?”

“இதான் ப்ரச்சனையா? எண்ட்ட விடும். பாத்துகிடுதேன். விருது வாங்கிக் கொடுக்கறது என் வேல”

”வே” என்றேன் திகைப்புடன் “ வாங்கிக் கொடுக்கீயளா? விருது தானா வரணும்வே. வாங்க- எல்லாம் கூடாது”

“எந்த ஊர்ல இருக்கீய?” என்றார் எரிச்சலுடன். “ விருதுக்கு நீர் விண்ணப்பம் போடணும், பைசா கட்டணும். இடது சாரித்தனம் இருக்கணும். அப்புறம் பெரிய ஆளுங்க சிபாரிசு வேணும்.”

“சரி, அப்ப எதுக்கு மக்கள் கிட்ட இப்படி பீலா விடணும்? சபா இல்லேன்னா பைசா போயிரும்வே”

“ஹஹ்ஹ” என்றார் “ இங்கதான் பாடமாட்டேன்னு சொல்லச்சொன்னேன். அமேரிக்காவுல பாடமாட்டேன்னா சொன்னேன்? இங்க ரூபாய் கொடுத்து வாங்குவீய. அங்க டாலர்லா? அது போதும்வே. பேருக்கு பேர் ஆச்சி, பைசாவுக்கு பைசா”

“ஆஹா” வியந்தேன். ”இந்த அமெரிக்க இடதுசாரித்தனம் இத்தனை நாளா எனக்கு வெளங்கலையே?”

“உடனே நீரும் அறிக்கை விடணும் கேட்டியளா?” என்றார் சீரியசாக. ஒரு காகிதத்தில் மடமடவென்று எழுதி நீட்டினார் . ”இதை உடனே பேஸ்புக்ல போடும்வே.”

படித்துப் பார்த்தேன் “ இனி ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் வீட்டிற்கு செல்லமாட்டேன் . போலித்தனமாக ஒரு பில்டர் காபி, அடை என்று கூடும் நண்பர்களை விட , அமெரிக்காவில் ஒரு குப்பத்தில் சென்று கதை பற்றி பேசலாமென நினைத்திருக்கிறேன்”

“இது விவகாரம் பிடிச்ச வேலைல்லா? கிளம்பும்வே” என்றேன் கறாராக.

“விசயம் தெரியாம நிக்கீரேன்னு மனசுக்கு விசனமா இருக்கி” என்றார் சோகமாக. “என்ன செய்ய. ஒம்ம தலையெழுத்து அறிவியல், அண்ணாச்சின்னு எழுதியே போயிரணூம்னு இருக்கு. சரி, போற வழிக்கு ஒரு திருநவேலி கொலைவெறி வெண்பா சொல்லும். கேட்டுகிடுதேன்”

”மக்களை திட்டிய சொல்லினில் நிச்சயம்
டக்கெனத் கிட்டும் விருது”

2 comments:

  1. செமயா பொளந்துகட்டிட்டீருவே.. உமக்கு ஒரு இருட்டுக்கடை அல்வா பார்சல் அனுப்சுறவேண்டியதுதான். "அமேரிக்காவுல பாடமாட்டேன்னா சொன்னேன்? இங்க ரூபாய் கொடுத்து வாங்குவீய. அங்க டாலர்லா? அது போதும்வே" - இதுவே போலிகளின் முகமூடியை உரிக்கப் போதுமானது.

    ReplyDelete
  2. Anonymous11:03 PM

    tm krishna paavam sir....

    sesh

    ReplyDelete