Monday, February 27, 2006

அறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்

அறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்
__________________________________________________
அகமதாபாத் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது.போன வாரம் சென்றபோது , மீண்டும் சொந்த ஊருக்குப் போகும் போது வருமே அந்த உற்சாகம் தொத்திக்கொண்டது. நாலு வருடங்கள் வாழ்ந்த ஊர். அதென்னமோ தெரியவில்லை.. இதுவரை நான் பார்த்த தமிழர்கள் அகமதாபாத் பிடிக்கவில்லை எனச் சொன்னதில்லை.
இத்தனைக்கும் மாசு அப்பிக்கிடக்கும் காற்றும், தூசியும், அனல் பறக்கும் கோடையும், ஒழுங்கு என்பதே இல்லாத சாலைப்போக்குவரத்தும் அகமதாபாத்தின் ஆழமான முத்திரைகள். இதெல்லாவற்றையும் தாண்டி அது ஈர்க்கிறதென்றால் -அது புதிர்தான்.
அகமதாபாத்தின் இஸ்லாமிய கட்டிடக்கலையின் வேலைப்பாடுகள் நெரிசல் மிகுந்த சாலையோரம் சர்வசாதாரணமாகத் தென்படும். புகழ்பெற்ற ஜூம்மா மசூதிச் சன்னல், ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் சின்னத்தில் இன்று ஜொலிக்கிறது. என்ன கொடுமையென்றால், வரலாற்றுச் சின்னங்கள் இப்படி அலட்டலில்லாமல் பொதுப்படையாகக் கிடப்பது என்பது இப்போது அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையாக மாறியிருப்பதுதான்.
ஊசலாடும் மினாரெட்டுகள் (swinging minarets) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரே மாதிரியான இரு மினாரெட் தூண்கள் மிக்க கலைவடிவுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். ஒன்றில் ஆட்கள் ஏறி, அசைத்தால், இருபது அடி தூரத்தில் இருக்கும் மற்ற மினாரெட் ஊசலாடும்.. இந்த அதிசய மினாரெட்டுகள் அகமதாபாத்தில் பல இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில், இந்த அதிசயத்தின் ஆணிவேர் காண, அதனைத் தோண்டி நிரந்தரமான பழுதுகளை ஒரு மினாரெட் இணையில் (pair) ஏற்படுத்திவிட்டனர். மற்றொரு மினாரெட் செட் ஒன்று அகமதாபாத் காலுப்பூர் இரயில்வே நிலையத்தின் அருகே இருக்கிறது. இப்போதெல்லாம் ஏறி மினாரெட்டை உலுக்க முடியாது. கீறல்கள் விழுந்துவிடும் என தடை விதித்துவிட்டனர்.
அத்தோடு முடிந்தது அதன் பாதுகாப்பும், பராமரிப்பும்.. இருளடைந்து கிடக்கும் அம்மினாரெட்டுகள் அருகே இம்முறை சென்று பார்த்தேன். இரயில்வே பிளாட்பாரம் முடியும் எல்லையில் புதர்கள் மண்டி , வேலிக்குள் அடைந்துகிடக்கிறது மினாரெட் அதிசயம். அதன் அருகே இரயில்வே நிர்வாகத்தின் அலுவலகம்.. சோம்பலாக குழல்விளக்கொளியில் குளித்து நிற்க... நம்பினால் நம்புங்கள்.. இப்படி ஒரு அதிசயம் ஒரு விளக்கும் இல்லாமல் பேய் பங்களா மாதிரி இருளில் அழுந்திக்கிடக்கிறது.

ஜனவரியில் பிலடெல்பியாவில் நான் சந்தித்த ஒரு பெண், தனது பெற்றோர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். இந்த ஊசலாடும் மினாரெட்டுகள் பற்றிச் சொன்னபோது அவர் வியப்பில் ஆழ்ந்தார். " இப்படி ஒன்று இருக்கிறதா? யாரும் சொல்லவேயில்லையே? இரண்டு வருடம் முன்னால்தான் அகமதாபாத் போய் வந்தேன்" என்றார். இதுதான் நமது பொக்கிஷங்கள் குறித்த அறிவு. இதற்கு பிலடெல்பியா போகவேண்டாம். மும்பையில் அந்தேரி போனால்கூடப் போதும்.

அகமதாபாத்திலேயே பலருக்கும் இதுகுறித்துத் தெரியாது. " என்னமோ மசூதி அல்லது சமாதியாயிருக்கும்" என்பார்கள். இதுமட்டும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருந்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் மொய்த்திருக்க எக்கச்சக்கமாக விளம்பரப்படுத்தி தூள் கிளப்பியிருப்பார்கள். மினாரெட்டுகளையும் நன்றாகப் பராமரித்திருப்பார்கள். ஹூம்..மினாரெட்டுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.

என்றுதான் நமக்கு "பழமை இருந்தநிலை" தெரியுமோ?

No comments:

Post a Comment