Sunday, February 26, 2006

வந்துட்டான்யா.... வந்துட்டான்யா...

வந்துட்டான்யா.... வந்துட்டான்யா...
__________________________________
ஜனவரி முழுதும் வெளிநாட்டுப் பயணங்கள். சரி முடிந்தது என நிமிர்ந்தால், இந்த மாத முழுதும் மீண்டும் உள்ளூர்ப் பயணங்கள். அரக்கப்பரக்க அமெரிக்கா சென்றதில் நண்பர்கள் பலருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை. நமது திருமலைராஜனுடன் மட்டும் பேசமுடிந்தது -அதுவும் தொலைபேசியில். அடுத்த முறை ஒழுங்காகத் திட்டமிட்டுச் செல்லவேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறேன். (ஒவ்வொரு முறையும் இதே கதைதான்!)

அமெரிக்க விசா காலத்தீர்வையானதால் மீண்டும் வரிசையில் நிற்க வேண்டியதாயிற்று. டாக்டர்.கோவர்த்தன் மேத்தாவிற்கே இன்ன பாடு படுத்தினார்கள் என்றால் என்னளவில் எப்படியிருந்திருக்கும் எனச் சொல்லத் தேவையில்லை. வெறுப்பேத்திவிட்டார்கள். "என்ன வேலை உனக்கு?" என ஆரம்பித்தவர்கள் " குரோமோட்டாகிராபி என்றாலென்ன? மாஸ் ஸ்பெக்ட்ட்ரோமீட்டர் என்றால் யார் அல்லது என்ன?எனக்குப் புரியும்படி சொல்லு" எனப் பாதுகாப்பான கூண்டில் மறுபுறமிருந்து ஒருவர் கேட்டதில் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டேன். இரண்டு நிமிஷத்தில் சொல்லமுடிகிற விஷயமா அது? நான் உளற ஆரம்பித்ததும், என்னமோ என் தலையெழுத்து நன்றாக இருந்ததில் "இனிமே இந்த வரிசையில் பத்துவருடத்திற்கு வராதே" என முத்திரை குத்தி அனுப்பிவிட்டார்கள். கிளம்ப ஒரு நாள் இருக்கும்போது விசா கிடைத்ததால் பலருக்கும் முன்பே சொல்ல முடியவில்லை. பல்குத்திக்கொண்டு ஹாய்யாக இருந்த நேரத்தில் சிலரைக் கண்டு அறுத்து எடுத்திருக்கலாம்.. பிழைத்துப்போனார்கள் நம் நண்பர்கள்.

இந்தக்கூத்திற்கெல்லாம் முந்திய நாள் எனது நண்பனின் தொலைபேசி வந்தது. " லே மக்கா. நீ ப்ளாக் எல்லாம் எழுதுவியா?' என்றான். அவனுக்கு படிக்கிற பழக்கம் பள்ளிக்கூடத்திலேயே கிடையாது.வலைப்பதிவு பக்கம் எட்டிக்கூடப்பார்க்கமாட்டான். " ஆமாடே" என்றேன். " அதுல அமெரிக்கா பத்தி தப்பா எதனாச்சும் எழுதியிருக்கியா? இருந்தா அழிச்சுருல" என்றான். விழித்தேன்.
"தப்பான்னா?"
" இராக் , ஒசாமா பத்தி, அமெரிக்க சமூகத்தைப்பத்தி எதாச்சும் காட்டமா எழுதியிருந்தா விசா கிடைக்காதாம்." என்றான்.
'இதெல்லாம் ஓவர். கொஞ்சம் விட்டாபோதுமே, சி.ஐ.ஏ உக்காந்து வேலை மெனக்ககெட்டு "எவண்டா தமிழ்ல தப்பா எழுதியிருக்கான்னு" பார்த்துக்கிட்டிருக்கு-ங்கிற லெவல்ல வம்பு பரப்புவது தவறு' என அவனுக்கு எடுத்துச்சொன்னேன்.
மறுத்தான். "மக்கா, வலையில் வன்முறை, வம்பு பரப்புவது பத்தி படு சீரியசாக அமெரிக்கா கவனித்து வருகிறது. முக்கியமா அமெரிக்கர்களை வெறுக்கும் வகையில் எழுதப்படுவது, அமெரிக்க கலாச்சாரத்தை உதாசீனப்படுத்துவது போன்றவற்றை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். பாத்துடே" என்றான். என்னமோ, என் வலைப்பதிவு அவர்களுக்கு அறுவையாக இருந்திருக்கிறது போலும்.. விட்டுவிட்டார்கள்.

இந்த முறை விமான ரூட் - படு கேணத்தனமாக அமைத்திருந்தார்கள். போய் வந்ததும் டிராவல் ஏஜன்ஸியை ஒரு பிடி பிடித்தேன். மிலான் விமான நிலையத்தில் 4 மணிநேரம்... நியூயார்க்கில் 3 மணிநேரம் காத்திருப்பு.. டாம்ப்பா போக இப்படி தவளை மாதிரி தத்தி தத்திப் போனது ஒரு லூசுத்தனமென்றால், திரும்பிவந்தது இன்னும் பைத்தியக்காரத்தனம்.. பிலடெல்பியாவிலிருந்து நேரே மிலான்/பிராங்க்பர்ட் - மும்பை எனப் போவதை விட்டுவிட்டு, பிலடெல்பியாவிலிருந்து நேரே கீழே அட்லாண்டா ( 4 மணிநேரம்காத்திருப்பு)-மிலான் -மும்பை என ஒரு எலும்பு ஒடியும் பயணம்.. கொடுமை மிலான் விமானதளம் - கழிவறைகள் மும்பையை விட மோசம்.

பொதுவாக இந்த காத்திருப்பு நேரங்களில் கொஞ்சமாக ஆட்களைப் பிடித்து அறுத்து பொழுதுபோக்குவேன். எதாவது விமான நிலையத்தில் கொஞ்சம் லூசு மாதிரி ஒரு ஆள் உங்களோடு இலக்கியம்/ கவிதை/சமூகம் எனப் பேசத்தொடங்கினால் "நீ சுதாகர்தானே" எனத் தைரியமாகக் கேட்டுவிடாதீர்கள். என்னைப்போல பலரும் இருக்கிறார்கள் என்பதை மிலான் நிரூபித்தது.
அதுபற்றி அப்புறம் எழுதுகிறேன்.

No comments:

Post a Comment