Tuesday, November 28, 2006

கைசிகி நாடகம் -டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி

கைசிகி நாடகம் இந்த வருடமும் டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி நம்பி கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
கைசிக ஏகாதசியன்று இரவு முழுதும் நாடகம் நடத்தப்படுவதைக் காண்பது புண்ணியம் என பக்தர்கள் கூறுவது ஒருபுறம் இருப்பினும், அதன் நாடகச் செறிவும், சமுதாயப் பார்வையும் பல அறிஞர்களை ஈர்த்திருக்கிறது.
1900களில் பொலிவுடன் விளங்கிய இந்நாடகப் பாங்கு, கால ஓட்டத்தில் சிதைந்து , அனிதா ரத்னம், பேராசிரியர். செ.இராமானுஜம் போன்றோர்களின் முயற்சியால் மீண்டும் உயிர்பெற்று ,கடந்த சில வருடங்களாக புதுப்பொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களாக புராதன வழக்கு சிதையாமல் , ஓலைச்சுவடிகலில் கிடைத்த பாடல்களைக் கொண்டு,பழைய நடிகர்களை ஊக்குவித்து மீண்டும் கட்டமைத்து, சீர்திருத்தப்பட்டு வந்த இந்நாடகம் இப்போது ஒருவாறு முழுதும் சீர்திருத்தப்பட்டு விட்டது எனலாம்.

வருடாவருடம் கைசிகி காண நாடக வல்லுநர்களும், ரசிகர்களும் அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. "கைசிகி காண்பது ஒரு அலாதி அனுபவம் "என்கிறார்கள் கண்டு ரசித்தவர்கள். நாடக வல்லுநர்கள், தேசிய நாடகப் பள்ளி மாணவர்கள் , பன்னாட்டு வல்லுநர்கள் இம்முறை திரளப் போகிறார்கள் -திருக்குறுங்குடியில். கைசிகி காண விழையும் நண்பர்கள் திருநெல்வேலி, சாத்தான்குளம், நாங்குநேரி வழியே திருக்குறுங்குடி செல்லலாம். பேருந்து வசதி நெல்லையில் உண்டு.
கைசிகி குறித்து எனது வலைத்தளத்திலும் முன்பு சிறிய அளவில் எழுதியிருக்கிறேன். ஆர்க்கைவ் -இல் இருக்கும்.


"எங்கனையோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்.
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நாம்கண்டபின்.
சங்கோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே"
என நம்மாழ்வார் பாடிய நம்பியின் வடிவழகை ,கைசிகியோடு உணர்ந்து அனுபவியுங்கள்.
அன்புடன்
க.சுதாகர்.

4 comments:

  1. Anonymous8:06 PM

    அன்புள்ள சுதாகர்

    விபரத்துக்கு நன்றி. காண ஆவல்தான் தொலைவுதான் தடுக்கிறது. நீங்கள் செல்லப் போகிறீர்களா ?

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  2. நன்றி திருமலை,
    எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.
    பாழாய்ப்போன இந்திய ஃபார்மா காங்கிரஸ் , மும்பையில் டிசம்பர் 1 தொட்டு 3 ம் தேதி வரை நடக்கிறது. வேறு நாட்களே கிடைக்கவில்லை இவர்களுக்கு.
    அகமதாபாத், பெங்களூர் அலுவல் வேலை அது தொடர்ந்து.
    என்றேனும் ஒரு நாள் எனக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும் என நினைக்கிறேன்.
    ஏக்கத்துடன்
    க.சுதாகர்.

    ReplyDelete
  3. சுதாகர்,

    தகவலுக்கு நன்றி.

    நான் கைசிக நாடகத்தை திருவல்லிக்கேணியிலேயே பார்த்திருக்கிறேன் !!!

    பார்க்க:

    http://balaji_ammu.blogspot.com/2007/01/289.html

    http://balaji_ammu.blogspot.com/2007/04/332-model-village.html

    ReplyDelete
  4. அன்புடைய பாலா,
    நல்ல பதிவு. வானமாமலை மடத்து நிகழ்ச்சி மட்டுமல்ல, பல திருத்தலங்களிலும் , இச்சிறுவர் கைசிக நிகழ்ச்சி மேடையேற்றப்பட்டு பாராட்டப்பட்டது. கைசிகி நாடகம் நடனவடிவமல்ல. நடன வடிவும் பாங்கும் அமையப்பெற்றது. அரையர் சேவையாக திருவரங்கத்தில் நடத்தப்படுகிறது.
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete