Saturday, January 25, 2014

பாரதியின் “என் சேவகனும்” ஆழ்வாரின் “ நம் சேவகனாரும்”

”எல்லாக்கவிஞர்களும் கடவுளை தாயா, தந்தையா, தோழனா, காதலனா வைச்சுத்தான் பார்த்திருப்பாங்க. ஆனா நம்ம பாரதிதான் கண்ணன் என் சேவகந்ன்னு அவனை ஒரு சேவகனா நினைச்சு எழுதியிருக்கான்” பல இடங்களில் சிறுவனாக இருந்தப்போது கேட்டது. “ஏ” என்று பெருமிதத்தில் குதித்த அந்த நாட்களில், ஒரு முதியவர் என் பலூனில் ஊசி குத்தினார் “டேய், அதுக்கு முன்னாடி தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையிலே ,ஸ்ரீரங்கதுப் பெரிய பெருமாளை நம் சேவகனார் -ன்னு சொல்லியிருக்கார் தெரியுமா?”
திருமாலையும் தெரியாது, ஆழ்வார் பாடலும் புரியாது கொஞ்சம் குழம்பியிருந்தேன். ஒரு வைணவ சீலரிடம் அந்தப் பாசுரத்தைப் பற்றிக் கேட்டேன். புருவத்தை வியப்பில் உயரத் தூக்கினார். “டேய். அப்படியெல்லாம், ஆழ்வார் பாடல் புரியாம அதச் சொன்னார், இதச்சொன்னார்னு சொல்லிண்டு திரியாதே. குறைகுடமாக் கூத்தாடப்படாது, தெரிஞ்சுதா?”

ஆக, பாடலின் பொருள் புரியாமல்,பாரதியையும் பற்றி ஒழுங்காகப் புரியாமல் தவித்துக்கொண்டிருக்கையில்தான் ‘திருமாலை, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் , சுதர்சனம் ஆசிரியரின் விரிவுரையுடன் கூடியது” என்ற புத்தகம் கிடைத்தது. ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, திருவரங்கத்தின் வெளியீடு.
பாசுரம் இதுதான்
ஒருவில்லால் ஓங்கு முந்நீரடைத்து உலகங்களுய்ய
செருவிலே அரக்கர்கோனைச்செற்ற நம் சேவகனார்
மருவிய பெரியகோயில் மதிள்திருவரஙகம் என்னா
கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே

இந்த “நம் சேவகனார்” தான் படுத்திய சொல். வியாக்கியானத்தில் “சேவகன்” என்பதற்கு  அதன் முன்னிருந்த சொற்களைச்சேர்த்துப் படிக்கவேண்டும். செருவிலே அரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனார் - போரில் ராவணனை வென்ற நமது வீரன் என்ற பொருளில் அவன் சேவகன்  என்று கண்டேன். சரி சேவக் என்று வீரர்களை டி.வி சீரியலில் அழைப்பதில்லையா? என்று கரடுமுரடாகத் தெளிந்தபோதுதான் மற்றும் சில விஷயங்களைக் கண்டேன்.

நஞ்சீயர் என்ற ஆச்சாரியார், பட்டர் ( அவரின் ஆச்சாரியர்) இடத்தில் இதன் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, சிந்தனை வயப்பட்டு தெருவில் சென்றார். அங்கே ஒரு ராஜ சேவகன் ஒரு பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்தான் “ நான் ராஜாவின் ஊழியன்” என்றபோது அவள் எதிர்க்கிறாள் “ உன்னால் என்னை என்ன செய்ய முடியும்.? என்னைப் போன்ற ஏழைகளைக் காக்கத்தான் ராஜா முடிசூட்டிக் கொண்டிருக்கிறார்”. நஞ்சீயர் இதைக்கேட்டு ஆச்சரியப்படுகிறார்.  நமது சேவகனார் என்பதை ஒரு பெண் எளிதாக விளக்கிவிட்டாளே?

சீதை, தாயார் என்றும் நாம் அவளின் குழந்தைகள் என்றும் கொண்டால், ராமன் அவளைக் காத்த சேவகனார் என்றால், அவன் நம்மையும் காக்கின்ற சேவகன் ஆகிறான். எனவே’  நம் சேவகனார் ‘ -எப்படியெல்லாம் உரிமை கொண்டாடிவிடுகிறோம் சட்டென்று?

பட்டர் , மற்றொரு முறை இதைத் தெளிவிக்கும்போது “ கடற்கரை வெளியைக் கண்டு இரும்” என்றாராம். கடற்கரை வெளியில் அன்று குரங்குகள் ராமனுக்கு பாலம் கட்ட முனைந்தபோது, அவற்றைக் காத்து நின்ற சேவகனார் ராமன் என்ற பொருளில் ராமாயணத்தில் வரும் சுலோகத்தை உணர்த்துகிறார்.
இதில் சேவகனார் என்ற ஆர் - ஒரு பெரியவருக்கான மரியாதை விளி இல்லை எனவும். சேவகம் உறையும் இடம் என்பதால் சேவகம் ஆர் என்றும் விரிவு கண்டேன்.

சரி, முண்டாசுக் கவிஞன் சொன்ன சேவகன்?
அவன் சேவகன் - ஊழியன் என்ற அளவிலேயே வைத்து அதிகாரத்துடன் புனைந்த கவிதையல்லவா அது? ஆழ்வார் சொன்ன நம் சேவகனாருக்கும், பாரதி சொன்ன சேவகனுக்கும் எத்தனை வித்தியாசம்.?  கடவுளை ஊழிய சேவகனாக் காட்டியது பாரதி மட்டும்தான். மட்டும்தான்.

நெஞ்சு விரிகிறது இன்று இரட்டிப்பு சந்தோஷம். 

Friday, January 24, 2014

முதிர்ச்சி.

”இதை எதுக்கு எடுத்துண்டு வந்தாய்? “ குரல் கேட்டுத் திரும்பினேன். கருத்த மெலிந்த , சற்றே வழுக்கை ஏறிய உயரமான மனிதர். யாரைத் திட்டுகிறார்? அவர் சற்றே விலகி, ஒரு இருக்கையில் அமர்ந்த பின்னரே பின்னால் அந்த மாமி தெரிந்தாள். சற்றே கூன் விழுந்த உருவம். ரெட்டை மூக்குத்தியும், காதில் பெரிய தோடுமாக மாமி நடந்து வந்ததில், கையிலிருந்த ஒரு பை அதிகமாகவே ஆடியது.

”எங்க கேட்-டுனு ஒங்கயும் போடலையே?”
மாமா சற்றே கண்ணாடியைக் கழற்றி, வாயை விரித்து, கண்ணைச் சுருக்கிப் பார்த்தார். பின் கண்ணாடியைப் போட்டும் இத்தனை கோணஷ்டைகளைத் திரும்பவும் செய்து பார்த்துவிட்டு’யாராவது நம்படவா வருவா. அவாட்ட கேப்பமா?”என்று சொல்லிக்கொண்டிருந்த போது நான் இடையில் புகுந்தேன். ஹாங்காங் ப்ளைட்டா? அதுக்கு கீழே போணும். நிறையநேரம் இருக்கு. இங்க உக்காந்த்துக்கோங்க. “ என்றேன்.
மாமா திரும்பிப் பார்த்தார். “ ஓ. நீங்களும் அதுலதான் போறேளா சார்” “ஆமா” என்றேன். மாமிக்கு அருகிலிருந்த சீட்டில் அமர்ந்தேன். 

மாமி, என்னை கைகாட்டி அழைத்தாள் “ அம்பி. எங்கயாக்கும் இருக்காய்?” குரல் பிசிறு தட்டியிருந்தது.
”பம்பாய், மாமி: 
“பார்யா என்ன பண்றா?” சொன்னேன்.
“குழந்தைகள் இருக்காளோன்னோ?”
மாமா அதட்டினார் “ என்னது, சாரோட ஜாதகத்தையே கேட்டுண்டிருக்காய்? சாரி சார். அவள் அப்படித்தான், எதாவது வழ வழன்னுண்டே இருப்பள்”
”சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. பெரியவா கேக்கறா. இதுல என்ன இருக்கு?” என்றேன்.
மாமியின் முகம் சற்றே விகசித்தது. மஞ்சளாக, தாறுமாறாக இருந்த பற்களைக் காட்டிச் சிரித்தாள்.
“இந்தப் ப்ராம்ணருக்கு எல்லாரையும் சார்னே கூட்டுப் பழக்கம். ரயில்வேஸ்ல இருந்தாரோன்னோ? அதான். “ மாமா பக்கம் திரும்பி “ நம்ம பத்து மச்சினன் மாதிரி இருக்கான்ல்யா? . அம்பி நோக்கு என்ன வயசாறது?”
மாமா சங்கடத்தில் நெளிந்து மறுபுறம் பார்க்க , நான் “ நாப்பத்தஞ்சு ” என்றேன்.
“அதான். எங்காத்து பத்து , பத்மனாபன்னு பேரு, அவன் மச்சினனுக்கும் நாப்பத்தாறு நடக்கறது. அவன் மாமா பொண்ணைத்தான் கொடுத்திருக்கா. வர்ர ஆனிக்கு நாப்பத்து ஆறு முடியும். ஏன்னா ஆனிதானே?” 
அவர் யாருக்கும் புரியாதமாதிரி முணுமுணுத்து , தலையை மீண்டும் மறுபுறம் திருப்பிக்கொண்டார்.
” நாங்க நாலுமாசமா வந்து இருந்தாச்சு. ஒன்றரை வயசுல ஒரு குழந்தை இருக்கு அவனுக்கு. அவளும் பாவம் ஜோலி பாக்கலை. குழந்தையோட நீயும் வாம்மா-ன்னான் இவர் அம்மா படுத்துண்டு இருந்தாளே?..,சூலிப் பொண்ணையும், மாமியாரையும் நாந்தான் பாத்துண்டேன். மாமியார் ஆடத் திவசம் முடிச்சுட்டு நாலு மாசம் முன்னாடி கிளம்பினோம்.கும்பகோணம் பக்கத்துல ...”
“நிறுத்தறயா? பிறத்தியார் என்ன மூட்ல இருக்கான்னே பாக்காம, பனரப் பனரப் பேசிடவேண்டியது. இது நல்லதில்லை கேட்டியா?” 

“சார், நீங்க எங்க பே ஏரியாவா? எந்த கம்பெனி, எங்க இருக்கேள்?’போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு ”பத்மநாபன் என்ன செய்யறார்?” என்றேன்.
“அவன் ஹைதராபாத்ல நல்ல சம்பளத்துலதான் இருந்தான், கேட்டேளா? ஒருத்தன் மெயின் ஃப்ரேன் ஸ்கில் வேணும்னுட்டு இவனை நைச்சியமா பேசி அமெரிக்கா போறியான்னான். இவன் எல்லாரும் போறாளே? நம்மளும் போனா என்னான்னு ஆசை.. கண்ணைக் கட்டிடுத்து அப்ப. அட்லாண்ட்டால ரெண்டு வருஷம். அப்புறம் சியாட்டில்.”
”அங்கதான் அவனுக்கு வேலை போச்சுடா அம்பி” என்றாள் மாமி, புடவையில் மூக்கைத்துடைத்தவாறே.
“ கிடைச்சது, அப்புறம், என்னமோ கிரகம் படுத்தறது. இர்வைன், ஆஸ்டின்-ன்னு அலைஞ்சுண்டே இருக்கான். இப்ப என்னமோ திரும்பவும் இர்வைன்ல கொஞ்ச நாளா இருக்கான். சரி, குடும்பத்த கூப்பிட்டுகறேன்னான். ”
மாமி, தாழ்ந்த குரலில் பேசினாள். “ கஷ்டப் படறதுகள்டா, அம்பி. எங்களுக்கு மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் எடுக்கணும். இவருக்கு சுகர். எனக்கு ப்ரஷர் உண்டு. செலவு இருக்கில்லயா? அதான், குளிர் ஒத்துக்கலேப்பா, ஊர்ல விஷேஷமெல்லாம் வரும்னுட்டு கிளம்பிட்டோம். ”
மாமா ஒரு நிமிடத்தின் பின் தொடர்ந்தார் “ சார், இங்க இருந்தா லைட்டா இருக்கணும். எங்கள மாதிரி சுமைகளெல்லாம் இருந்தா அவாளுக்கும் கஷ்டம், அதப் பாத்து நமக்கும் கஷ்டம். நம்ப மாட்டேள். என் பென்ஷன டாலர்ல மாத்தினா , இவளுக்கு மாத்திரை வாங்க மட்டும்தான் அது வரும். “
நான் எதோ சொல்ல வாயைத் திறந்தேன். நிதர்சனமும், அதனைப் புரிந்து கொண்ட முதிர்வின் நிதானமும் கட்டிப் போட்டுவிட்டன.
“மெட்ராஸ்ல ஒரு வீடு இருக்கு கேட்டேளா?. நாங்க ரெண்டு பேரும்னா என் பென்ஷன் தாராள்மாப்போறும். சமாளிச்சுடுவோம். சரி, கிளம்பலாமா சார்.? இவள் மெள்ளத்தான் நடக்க முடியும்.”
நான் சென்று பார்த்துவிட்டு வந்தேன். ஒரு தளம் கீழே இறங்கவேண்டும். எஸ்கலேட்டர் இருந்தது.
“ஓ அந்த பாழாப்போன எஸ்கலேட்டரா? அதுல நேக்கு பயம்டா அம்பி. படிக்கட்டு இருந்தா, மொள்ள பிடிச்சுண்டு இறங்கிடறேன்” என்றாள் மாமி.
”நீங்க வாங்க. நான் கையப் பிடிச்சுக் கூட்டிண்டு போறேன் என்று இரு முறை உறுதியளித்தபின் தான் மாமி எழுந்தாள்.
எஸ்கலேட்டரில் மாமா ஸ்டைலாக, இறங்கிச் செல்ல, நான் நின்று மாமியின் கையைல் பிடித்து மெல்ல அதில் ஏற்றினேன். 
“அந்தப் பையைக் கொடுங்க எங்கிட்ட. “ என்றதற்கு மறுத்துவிட்டாள்.

“பரவாயில்ல, எடுத்துகிட்டு ஓடிற மாட்டேன்” என்றேன் புன்னகையுடன்.
“பேஷா எடுத்துண்டு போயேன். தட்டை, நாலு முறுக்கு, மைசூர்பாக்குனு வழிக்கு வச்சிருக்கேன். இவனெல்லாம் என்ன சாப்பாடு போடறான்?. வெஜ் மீல்ஸ்னா ஒரே உப்பு. வாயில வைக்க முடியலை. இந்தப் ப்ராம்ணரானா, சாட்டுண்டே இருக்கார். உப்பு ஆகாது. சொன்னா கேக்கமாட்டார். அம்பி, இதுல கொஞ்சம் மைசூர்பாக்கு இருக்கு. உங்காத்துப் பையனுக்கு எடுத்துண்டு போ. நோக்கும் ரெண்டு தட்டை எடுத்துக்கோ. ப்ளேன்ல எங்க ஒக்காருக்காயோ?”

புரிந்து கொள்ளுதலும், கொடுத்தலுமே வாழ்வான இவர்களிடமிருந்து யார் எதை எப்படித் திருடமுடியும்? இவர்களா சுமைகள்?

பாத்ரூம் எந்தப் பக்கம்?

இந்த முறை அமெரிக்கப் பயணம் கொலம்பஸுக்கு நேர் எதிராகச் சுற்றிச் செல்லும் வழியில். மும்பை -ஹாங்காங்- சான் ப்ரான்ஸிஸ்கோ வழியில் டயாப்பர் மாற்றவோ , பால் கேட்டோ வீறிடாத குழந்தைகள் வரவேண்டுமே என்று ஆஜ்மீர் சிஷ்டி தர்காவிலிருந்து , முக்காலங்குடி முச்சந்தி விநாயகர் வரை வேண்டாத தெய்வமில்லை. இந்த டாய்லெட் விசயங்களைக் கொஞ்சமும் கூச்சமே படாது அந்த சிறுசுகள் அலறித் தீர்ப்பதில் எனக்கு ஒரு குறையுமில்லை. ’டயாப்பரை எங்க வைச்சீங்க?’ என்ற கேள்விக்கு, தந்தையாகப்பட்டவன் எழுந்து நின்று, ஜீன்ஸை சரிசெய்து, எக்ஸ்க்க்யூஸ் மீ சொல்லி, தாவி நம் தொடைகளை மிதித்து, வெளியேறி, அனைத்து பைகளையும் இடம் கலைத்து, மரம் வெட்டுபவனும், தேவதையும் கதையில் ஒவ்வொரு கோடாலியாக எடுத்துக் கேட்கும் தேவதை போலே, இதுவா இதுவா எனக் கேட்டு ஒருவழியாக ஒரு பையை எடுத்து , அதிலிருந்த டயாப்பரென்ற சாதனத்தை எடுத்து வருவதற்குள்,...

அன்னையாகப்பட்டவள், குழந்தையின் பிருஷ்டம் இயற்கையாகவே இப்படித்தான் இருக்கும் என்று அனைவருக்கும் காட்டியபடியே சீட்டுகளிலிருந்து வெளிவருவாள். இவை எப்பவும், நான் லஞ்ச்சோ, ப்ரேக்பாஸ்ட்டோ ஒரு வாய் போடும்போதுதான் நடக்கும்.

கடவுள் இருக்கிறார். இந்தமுறை ஹாங்காங் வரை ஒரு தொந்தரவுமில்லை. மெல்ல எட்டிப்பார்த்தேன். முன்னே ரேஷன் மண்ணெண்ணெய் க்யூ போல ஒன்று.. ஸ்வெட்டர் போட்டு ஆர்த்த்ரிடீஸ் கால்களுடன் நம்ம ஊர் மாமிகள் , பேரன்பேத்திகளுடன் நின்றிருக்க, க்யூ வளைந்து வளைந்து 4ம் எண் போர்டிங் கேட் அருகே பாம்பாய் நீண்டிருந்தது. சில வயோதிக இந்தியர்கள் மட்டும், 1st class, business class பயணிகள் ஏறும் வரிசையில் நின்று, தாங்களும் அதிலேதான் போகவேண்டுமென அடம் பிடித்துக்கொண்டிருந்தனர். மருந்துக்குக் கூட ஒரு அலறும் அசுரன் ஒன்றும் தென்படவில்லை. அப்பாடி.

எனக்கு முன்னே இரு லத்தீனோ ஆண்கள் , ப்ளேனை படம்பிடிப்பதில் மும்முரமாக இருந்தனர். பின்னே ஒல்லியாக ஒரு அமெரிக்கப் பெண், கணவனோடு. அவன் அடிக்கடி அவளது பொன்னிற முடிக்கற்றைகளை விலக்கி விலக்கி ‘ஹனி” என்று எதயோ உளறியபடி அவள் நெற்றியில் முத்தமிட்டுக்கொண்டிருந்தான். சவத்தெளவு , இதத்தான் ப்ளேன்லயும் படமாக் காட்டறானே? 3D ல வேணும்னு கேட்டேனா? என நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவள் ’ஞ’ என்ற மூக்கால் பேசும் அமெரிக்கன் ஆக்ஸெண்ட்டில் சொன்னாள்.
”Honey, I wanna pee" “ அன்பே, எனக்கு மூத்திரம் போகவேண்டும் (இந்த மொழிபெயர்ப்பு அவசியம்தானா எனச் சுளிப்பவர்கள் மேலே படிக்கவும்).

“ஹோல்ட் ஆன் பேபி. இந்த செக்யூரிடி பரிசோதனை ரெண்டே நிமிடம்தான். நமது பைகளைப் பார்த்ததும் உள்ளே போயிருவோம். என்னோட பைக்குள்ள தான் வைச்சிருக்கேன். “மீண்டும் முத்தமிட வந்தவனைத் தடுத்தாள்.
“No , I wanna go NOW." அவள் குரல் சற்றே உயர்ந்தது. என்னடா இது, இவளை பேபி என்கிறான்..இவளுக்கும் டயாப்பர் மாட்டிவிடுவானோ? என பீதியில் நான் உறைந்த பொழுது, அவள் க்யூவிலிருந்து விலக அவன் தோள் பையைத் திறந்ந்து, அவளது ஒப்பனைப் பையை எடுத்துக் கொடுத்தான்.

க்யூ நகர்ந்து நகர்ந்து முன்னேற, பாஸ்போர்ட் சமாச்சாரங்களை நூற்றி ஓராவது தடவை அமெரிக்க முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள் பரிசோதித்து அனுப்பும்போது, முன்னே இருந்த லத்தீனோ ஆள் திரும்பி பெரிதாகப் புன்னகைத்தான். க்யூவை விட்டு விலகி டாய்லெட் எங்கே எனக் கேட்டு, பாதுகாப்புப் பரிசோதனை முடிந்துவிட்டால் மூத்திரம் போகக்கூடாது என்ற அமெரிக்க ஆணையை மதிக்காமல் , தடுப்புப் பட்டையை விலக்கி வெளியேறினான். அவன் பின்னே இரு காவலர்கள் ஓடினார்கள். க்யூ நகர்வது இரு நிமிடங்களுக்கு நின்று போனது.

நமக்கும் இந்த டாய்லெட் சமாச்சாரங்களுக்கும் என்ன கொடுப்பினையோ? 

Saturday, January 11, 2014

ராதா அக்காவின் நீலப்புடவையும், பள்ளிக்கூடமும்.


 மும்பை 13 டிகிரி ஸி-யில் குளிர்ந்திருந்த மாலையை சுகித்திருந்த போது, நண்பரின் போன் வந்தது. “ அர்ரே, பெரிய ப்ராப்ளம்” என்று பீடிகையோடு தொடங்கினார். வியந்தேன் , இப்படியெல்லாம் பேசுகிற ஆளில்லை அவர். கடமையே கண்ணானவர் - சிறந்த விற்பனையாளர் என்ற பட்டத்தை அவர் பணிசெய்யும் கம்பெனியில் நாலு வருடங்களாகத் தட்டிச்சென்றவர். 

“இந்த வருஷம் பின் தங்கிவிடுவேன் போலிருக்கிறது. மார்க்கெட் தேக்கநிலை இல்லை. இந்த xxx வந்து சேர்ந்திருக்கிறான்”

திரு.xxx நண்பரின் இதற்கு முந்திய கம்பெனியில் அவருக்கு பாஸ் ஆக இருந்தவர். இருவருக்கும் கருத்து வேற்றுமையில், இவர் வேலையை விட்டு, இப்போது இருக்கும் கம்பெனியில் சேர்ந்தார். இந்த வார்த்தை எப்பொழுதும் சத்தியம். You join a company and leave a manager"

’இப்ப என் கம்பெனியில சேர்ந்திருக்கிறான். நேரடி பாஸ் இல்லை. ஆனா நச் நச என தொல்லைகள் தொடங்கும் பாரு. இவன் அந்த கம்பெனியில இருந்தவரைக்கும் என்னால அங்க ஒழுங்கா செயல்பட முடியலை. இப்ப இங்கயும்...இந்த வருஷம் இலககை எட்ட முடியாது”

ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே அவர் சொல்வ்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு பெண்மணி , நீல நிறச் சேலையில் தெரு முனையில் திரும்பிக் கொண்டிருந்தாள், அடம்பிடித்துக் கொண்டிருந்த  ஒரு குழந்தையை ஒரு கையில் பற்றி தரதரவென இழுத்தபடி. நீலப்புடவை...

இன்றும் நினைவிருக்கிறது,வொளரவ நரகத்தைவிடக் கொடிய ஒரு இடம். பள்ளிக்கூடம் . ஒன்னாம் கிளாஸொ, நர்சரியா தெரியவில்லை. அக்காதான் கொண்டுபோய் ஸ்கூலில் விட்டு வருவாள். கதவிடுக்கில் , துணிஸ்டாண்டின் பின், பீரோவின் பின் .. எங்கு ஒளிந்து நின்றாலும் கண்டுபிடித்துவிடுவாள். எத்தனை அழுதாலும், தரதரவென இழுத்டுக்கொண்டு போய் , அந்த முண்டக்கண்ணி டீச்சரின் வகுப்பில் உட்கார வைத்து விடுவாள். ஒண்ணாம் வாய்ப்பாடு சொல்லணும். பட்டுப்பூச்சி எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு தீப்பெட்டியில் கொண்டு போகக்கூடாது. என்ன உலகம் இது?

 ராதா அக்காவிடம் அப்போது ஒரேயொரு நல்ல சேலைதான் உண்டு. நீல நிறச் சேலை. அதைக் கட்டிக்கொள்கிறாள் என்றால் எனக்கு உதறல் தொடங்கும்.அதுவரை எனது அச்சங்கள் தொடங்காது.சுத்தமாக பள்ளிக்கூடத்தை மற்ந்திருப்பேன். நீலச்சேலை + ராதா அக்கா = நான் ஸ்கூல். அவள் அந்த்ப் புடவை கட்டினால்தான் எனக்கு ஸ்கூல் அந்த இடத்தில்  முளைக்கிறது என்றும் டீச்சர்கள் தோன்றுகிறார்கள் என்றும் நம்பினேன். அக்காவின் பெண் கல்யாணத்தில் அவள் நீலச்சேலை கட்டியபோதும் “ஆ,ப்ளூ  புடவையா? ஸ்கூல் வேண்டாம்” என்றேன். அடிக்க வந்தாள்.

அக்கா நீலச்சேலை கட்டுவதற்கும் எனது கஷ்டகாலங்கள் தொடங்குவதற்கும் என்ன தொடர்பு உண்டோ அதுதான் வாழ்வில் சில நிகழ்வுகளுக்கு நாம் பல நிகழ்வுகளுடன் தொடர்பு ஏற்படுத்துவது. அக்கா திருமணமாகிப் போனபின்பு, பள்ளியிலிருந்து கல்லூரிக்கு நான் போனபிறகு வெகு காலம் கழித்தே இந்த ஞானோதயம் வந்தது. 

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். ஹலோ?” என்றார் நண்பர். நனவுலகிற்கு மீண்டேன்.
“உங் கம்பெனியில வேலை இருக்கா? பயோ டேட்டா அனுப்பறேன். இமெயில் ஐ.டி சொல்லு” 

“ஒரு நீலப்புடவைக்காக  ஸ்கூலுக்குப் பயப்படாதே”

“வாட்? கம் அகெய்ன்?”

“ஒன்றுமில்லை”