Saturday, January 25, 2014

பாரதியின் “என் சேவகனும்” ஆழ்வாரின் “ நம் சேவகனாரும்”

”எல்லாக்கவிஞர்களும் கடவுளை தாயா, தந்தையா, தோழனா, காதலனா வைச்சுத்தான் பார்த்திருப்பாங்க. ஆனா நம்ம பாரதிதான் கண்ணன் என் சேவகந்ன்னு அவனை ஒரு சேவகனா நினைச்சு எழுதியிருக்கான்” பல இடங்களில் சிறுவனாக இருந்தப்போது கேட்டது. “ஏ” என்று பெருமிதத்தில் குதித்த அந்த நாட்களில், ஒரு முதியவர் என் பலூனில் ஊசி குத்தினார் “டேய், அதுக்கு முன்னாடி தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையிலே ,ஸ்ரீரங்கதுப் பெரிய பெருமாளை நம் சேவகனார் -ன்னு சொல்லியிருக்கார் தெரியுமா?”
திருமாலையும் தெரியாது, ஆழ்வார் பாடலும் புரியாது கொஞ்சம் குழம்பியிருந்தேன். ஒரு வைணவ சீலரிடம் அந்தப் பாசுரத்தைப் பற்றிக் கேட்டேன். புருவத்தை வியப்பில் உயரத் தூக்கினார். “டேய். அப்படியெல்லாம், ஆழ்வார் பாடல் புரியாம அதச் சொன்னார், இதச்சொன்னார்னு சொல்லிண்டு திரியாதே. குறைகுடமாக் கூத்தாடப்படாது, தெரிஞ்சுதா?”

ஆக, பாடலின் பொருள் புரியாமல்,பாரதியையும் பற்றி ஒழுங்காகப் புரியாமல் தவித்துக்கொண்டிருக்கையில்தான் ‘திருமாலை, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் , சுதர்சனம் ஆசிரியரின் விரிவுரையுடன் கூடியது” என்ற புத்தகம் கிடைத்தது. ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, திருவரங்கத்தின் வெளியீடு.
பாசுரம் இதுதான்
ஒருவில்லால் ஓங்கு முந்நீரடைத்து உலகங்களுய்ய
செருவிலே அரக்கர்கோனைச்செற்ற நம் சேவகனார்
மருவிய பெரியகோயில் மதிள்திருவரஙகம் என்னா
கருவிலே திருவிலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே

இந்த “நம் சேவகனார்” தான் படுத்திய சொல். வியாக்கியானத்தில் “சேவகன்” என்பதற்கு  அதன் முன்னிருந்த சொற்களைச்சேர்த்துப் படிக்கவேண்டும். செருவிலே அரக்கர்கோனைச் செற்ற நம் சேவகனார் - போரில் ராவணனை வென்ற நமது வீரன் என்ற பொருளில் அவன் சேவகன்  என்று கண்டேன். சரி சேவக் என்று வீரர்களை டி.வி சீரியலில் அழைப்பதில்லையா? என்று கரடுமுரடாகத் தெளிந்தபோதுதான் மற்றும் சில விஷயங்களைக் கண்டேன்.

நஞ்சீயர் என்ற ஆச்சாரியார், பட்டர் ( அவரின் ஆச்சாரியர்) இடத்தில் இதன் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, சிந்தனை வயப்பட்டு தெருவில் சென்றார். அங்கே ஒரு ராஜ சேவகன் ஒரு பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்தான் “ நான் ராஜாவின் ஊழியன்” என்றபோது அவள் எதிர்க்கிறாள் “ உன்னால் என்னை என்ன செய்ய முடியும்.? என்னைப் போன்ற ஏழைகளைக் காக்கத்தான் ராஜா முடிசூட்டிக் கொண்டிருக்கிறார்”. நஞ்சீயர் இதைக்கேட்டு ஆச்சரியப்படுகிறார்.  நமது சேவகனார் என்பதை ஒரு பெண் எளிதாக விளக்கிவிட்டாளே?

சீதை, தாயார் என்றும் நாம் அவளின் குழந்தைகள் என்றும் கொண்டால், ராமன் அவளைக் காத்த சேவகனார் என்றால், அவன் நம்மையும் காக்கின்ற சேவகன் ஆகிறான். எனவே’  நம் சேவகனார் ‘ -எப்படியெல்லாம் உரிமை கொண்டாடிவிடுகிறோம் சட்டென்று?

பட்டர் , மற்றொரு முறை இதைத் தெளிவிக்கும்போது “ கடற்கரை வெளியைக் கண்டு இரும்” என்றாராம். கடற்கரை வெளியில் அன்று குரங்குகள் ராமனுக்கு பாலம் கட்ட முனைந்தபோது, அவற்றைக் காத்து நின்ற சேவகனார் ராமன் என்ற பொருளில் ராமாயணத்தில் வரும் சுலோகத்தை உணர்த்துகிறார்.
இதில் சேவகனார் என்ற ஆர் - ஒரு பெரியவருக்கான மரியாதை விளி இல்லை எனவும். சேவகம் உறையும் இடம் என்பதால் சேவகம் ஆர் என்றும் விரிவு கண்டேன்.

சரி, முண்டாசுக் கவிஞன் சொன்ன சேவகன்?
அவன் சேவகன் - ஊழியன் என்ற அளவிலேயே வைத்து அதிகாரத்துடன் புனைந்த கவிதையல்லவா அது? ஆழ்வார் சொன்ன நம் சேவகனாருக்கும், பாரதி சொன்ன சேவகனுக்கும் எத்தனை வித்தியாசம்.?  கடவுளை ஊழிய சேவகனாக் காட்டியது பாரதி மட்டும்தான். மட்டும்தான்.

நெஞ்சு விரிகிறது இன்று இரட்டிப்பு சந்தோஷம். 

No comments:

Post a Comment