Saturday, March 01, 2014

வீடு - சிறுகதை

வீடு

குட்டி என்னேடு எப்போது பேசத் தொடங்கியதென்று நினைவில்லை. அவனை யாரும் பார்த்ததில்லை-நான் உள்பட.. குரல் என்னைப்போல் இருப்பதால் குட்டி ஆணாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அவன் வந்திருக்கும் நேரமெல்லாம் " இவன் என்னல? காக்கா பார்வை வெறிச்சிகிட்டிருக்கான்?" என்று உடனிருந்தவர்களும், "எவன்ட்டல பைத்தியங் கணக்கா தனியா பேசிட்டிருக்க?" என்று நண்பர்களும் சீண்டினார்கள். படித்த, முதிர்ந்த நண்பர்கள், பின்னாளில், நான் 'trance'-ல் இருக்கிறேனென்றும், soliloquy- ஒரு நோயில்லை என்றும் என் மனைவியைத் தேற்றினார்கள். எனக்கு split personality என்று அச்சுறுத்தியவர்களும் உண்டு.

குட்டி என்னைவிட அறிவாளியில்லை. நான் பேசுவதை வேறு கோணத்தில் பார்த்து வாக்குவாதம் செய்யும். அது செய்யும் மிக முக்கியமான வேலை - என்னை தன்னுடன் சில இடங்களூக்கு, சில நேரங்களில் கூட்டிச் செல்லும். பெரும்பாலான இடங்களும், ஆட்களும் பரியச்சமானவர்களாயிருந்தாலும், கூட்டிப் போகும் நேரமும், நிகழ்வுகளும் வித்தியாசமானவையாக இருக்கும். குட்டியுடன் போவதால்  நான் அங்கிருப்பதை யாரும் உணர முடியாது. நானும் சும்மா நடப்பதை பார்த்துக் கொண்டிருக்ககலாம். அவ்வளவுதான்..

குட்டி எப்பத்தான் வருமென்று விவஸ்தையில்லை.நீண்ட பேருந்துப் பிரயாணங்களில், டாய்லெட்டில்,அஜ“ரண இரவுகளில்,ஆஸ்பத்திரி படுக்கையில், உறங்கிய விடுமுறை மாலைகளில் என்று எப்ப வேணுமானாலும் வரும். எங்கு வேண்டுவேண்டுமானாலும் கூட்டிப் போகும்." வால , போல' என்று பேசினாலும்,சில நேரங்களில் ' வாரும்வே, போரும்வே' என்று மரியாதையும் கிடைக்கும். இதையெல்லாம் நான் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
முந்தாநாள் உச்சிவெயிலில்,குட்டி வந்தது.
'வால,... ஒரு விசயம் சொல்லணும்'
' எங்க வரணும்? வெயில் பொரிக்கி.. இங்கனையே பேசுவம்'
'ஆறுமுகம் வீட்டு வரை போயிட்டு வருவம்- வால-ன்னா..'
'எந்த ஆறுமுகம்?'
'தெரியாதாங்கும். அதான்ல.. உன் பழைய ஆளு கலைவாணி அண்ணன்'
'இந்தா... ஆளு அது இது-ன்னா, பேத்துருவேன்.அவளுக்கு கல்யாணம் ஆயிட்டது, தெரியும்லா?'
'சரிய்யா.. சொணங்காதயும்.சும்மானாச்சுக்கும் சொன்னா, இப்படி பேசுதீரே? வாரும்வே, விசயமிருக்கு'
குட்டி விடாது. கிளம்பினேன்.
வெயில் சுள்ளென்று உச்சந்தலையில் இறங்கியது. வடக்கு ரதவீதி தாண்டி, இரண்டாம் குறுக்குத்தெருவில், கடைசி வீட்டுக்கு முன் வீட்டில் நின்றோம்.
வீடு பெரியதில்லை. சுண்ணாம்பு அடித்து வருசமாயிருக்கும்போல. குனிஞ்சுதான் உள்ளே போகமுடியும்.கூடத்தின் உயரமும் குறைவுதான். என்ன வெயிலடிச்சாலும் உள்ளே 'சில்'-லென்று இருக்கும் எப்பவும்.ரொம்பப் பழைய வீடு.

ஆறுமுகத்தின் அம்மா வேலம்மா மட்டும்தான் அங்கு இருக்கிறாள். அவன் திருநெல்வேலியில்      'புராதன அல்வாக்கடை இதுதான்' என்று போர்டு போட்டு மிட்டாய்க்கடை வைத்திருக்கிறான்.கலைவாணி சென்னையில் இருக்கிறாள். அவளும் எதோ டிரவல்ஸ்ஸ’ல் வேலை பார்ப்பதாக ஆறுமுகம் முன்பு சொல்லியிருக்கிறான்.
வேலம்மாளுக்கு மெலிந்த தேகம். சுருக்கம் விழுந்த முகம்.சும்மாவே இருக்கமாட்டாள்.விழுந்த தென்னை மட்டையை உரித்து விளக்குமாறு செய்வாள்.கோழிமுட்டை விற்பாள். இத்தனைக்கும் அவளுக்கு விதவை ஓய்வூதியம் வேறு வருகிறது.
'தெரியுமால. ஒருகாலத்துல இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாகன்னு?' குட்டி கேட்டது
'ம்ம்ம். பத்துபேருக்கும் மேல இருந்தாக-நான் பார்த்து.. ஆறுமுகம் சித்தப்பு கூட இங்கதான இருந்துச்சு?'
"எல்லாரையும் வேலம்மாக்கிழவிதான் வளர்த்துச்சு. இப்ப தனி மரமா நிக்கி"
"இதச் சொல்லத்தான் இஙக கூட்டியாந்தியாக்கும்?"

"கோவப்படாதவே. கொஞ்சம் பொறும்"

எனக்கு ஞாபகமிருக்கிறது. ஆறுமுகம் என் வீட்டில் சும்மா கிடந்த டேபிள்ஃபேனை இரண்டு மாதம் வேணும்னு எடுத்துப் போனான்;கலைவாணி குழந்தையுடன் வருகிறாளென்று. அவர்கள் வீட்டில் மின்விசிறி கிடையாது- வேலம்மா வாங்க விடவில்லை.

'உத்தரத்துல மாட்டற விசிறியெல்லாம் வேண்டாம்யா. உங்க சித்தப்பு நிக்கான் -அரைப்பனை உசரத்துக்கு.பனியன் மாட்ட கைதூக்கினா, வெட்டிறும்'

சென்னையில் பிறந்த கலைவாணியின் குழந்தை, ஃபேனில்லாமல் தூங்காது என்றும், அதற்கு சுவாசமுட்டு வருமென்றும் பயமுறுத்தியபின், அரைமனதாக டேபிள் ஃபேனுக்கு சம்மதித்தாள். அதுவும் நற்காலி மேல வைத்து, இறுகக் கட்டியபின்.."தவழ்ற புள்ள தம்பி, புடிச்சு எந்திக்கப் பாக்கும். கரண்டு அடிச்சுட்டா?'

மறுநாள், நாற்காலியும் தூணோடு கட்டப்பட்டிருந்தது" மேல விழுந்துட்டுன்னா?'

வீட்டிற்குள் யார் நுழைந்தாலும் சொல்லுவாள்.."நிலை பாத்து வா ராசா. இடிச்சுறப்போவுது"

"சரி, போகலாம். வேலையத்துக் கிடக்கேன்னு நினைச்சியா?" குட்டியிடம் சீறீனேன்.
"ஷ்.. இந்தா பாரு, வந்துட்டாங்க"

கேட் திறக்கும் சப்தம் கேட்டு, ஊஞ்சலில் இருந்தபடியே கேட்டாள்,"யாரு?"
"நாந்தாம்மா, மணிவண்ணன்"

கூடவந்தவர் அடிக்குரலில் உறுமினார்."மூதி,உம்பேரு கிழவிக்கு ரொம்பத்தெரியும் பாரு"

குரலை உயர்த்தினார்."யம்மா, நான் செல்லமுத்து நாடான் வந்திருக்கேன். ஆறுமுகம் வரச்சொல்லிச்சு"

வேலம்ம்மாள் வாசலுக்கு வந்தாள்"வாங்க நாடாரைய்யா.ஒங்க பையனா? பேரு தெரியலை. அதான். வா தம்பி"

செல்லமுத்து பணிவாய்க்கேட்டார்."தூங்குறவகளை எழுப்பிட்டமோ?"
"இல்ல, இல்ல, இப்பத்தான் உக்காந்தேன்"

வந்த இருவரும் கீழே பாயில் உட்கார்ந்தனர். ஓட்டுக்கூரையில் பதித்திருந்த கண்ணாடி வழியே வந்த ஒளிக்கற்றையில் தூசிப்படலம் சோம்பலாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. கீழே, பச்சைத்துண்டில் பருப்பு உலர்த்தியிருந்தது.

"வாசல்ல காக்கா தொல்லை ஜாஸ்தி. எல்லாத்தையும் கொத்திப் போடுது.அதான் உள்ளாறவே.. சொல்லுங்க. ஆறுமுகம் இன்னிக்கு வாறேன்னானா? இன்னும் வரலையே?"

"மத்தியானம் வாரன்னான்"

"அப்ப வருவானாயிருக்கும். என்ன விசேஷம் நாடாரைய்யா?"

செல்லமுத்து தயங்கினர். சில விஷயங்களை தொடங்குவதுதான் கடினம். வெற்றி தோல்வி அதில்தான் இருக்கிறது. மணிவண்ணன் முந்தினான்."நாங்க இப்போ கட்டுமனை வித்து, வீடும் கட்டித்தறோம்மா. கிழக்கால இந்து ஆரம்பப்பாடசாலைல இருந்து மேல்ரோடு வரை இப்ப .." அவன் முடிக்கவில்லை. வேலம்மா சொல்லமுத்துவைப் பார்த்துக் கேட்டாள்,"ரத்னா நல்லாயிருக்காய்யா?"

"வந்திருக்கும்மா. அஞ்சு மாசம் இப்ப.இந்த தடவையாச்சும் புள்ள தங்கணும்"

"அதான.. செல்லாத்தா போன வாரம் சொன்னா,'நாடார் வீட்டம்மாவை பஸ்ஸ்டாண்டுல பாத்தேன்- திருச்சிக்குப்      போறேன்னாவ-ன்னு’ இதானா?  கவலைப்படாதீய. எல்லாம் நல்லா நடக்கும். நீ என்ன       சொல்லிட்டிருந்த ராசா? வீட்டு விசயம் கேட்டதுல நீ சொன்னது கவனிக்கல"

செல்லமுத்து தொடரவேண்டாமொன்று சைகை காட்டினார். வாசலில் நிழல் தெரிந்தது."ஆறுமுகம்தான். வந்துட்டான்"

உள்ளே வந்தவன் சிரித்தபடி"வாங்க"என்றான்."கொஞ்சம் லேட்டாயிருச்சு.கடைப்பையன் வரலை.அப்பவே வந்துட்டீங்களோ?"

"சாப்புடுதியா ராசா? நீங்களும் உக்காருங்கய்யா.அஞ்சே நிமிசந்தான்" கிழவி பரபரத்தாள்.

"இப்ப பசியில்ல. பொறவு பாத்துக்கலாம்.அம்மாகிட்ட சொல்லிட்டீங்களா, மணிவண்ணணன்?"

"இல்ல. நீ வரட்டும்னு காத்துகிட்டிருந்தோம்"

"அம்மா, இவங்க மனை வாங்கி வீடு கட்டித்தாராங்களாம்.இந்தத் தெருவுல
மத்த வீட்டையெல்லாம் விலை பேசியாச்சாம்.இப்ப, நம்ம வீட்ட  பேச வந்திருக்காங்க"

கிழவி மௌனமாயிருந்தாள். ஆறுமுகம் கேட்டான் "எவ்வளவு கிடைக்கும் சார்?"

"ஒரு லட்சம் போவும்"

மீண்டும் மௌனம்..

செல்லமுத்து மொதுவாய் தொடங்கினார்'அம்மா, உங்களுக்கும் வயசாயிட்டு வருது. உங்க வீட்டு விசயத்துல பேசறேன்னு நினைக்க வேண்டாம்.பேசாம இந்தப் பழைய வீட்டை வித்துட்டு, ஆறுமுகம் கூட நெல்லைல போயிருக்கறது உங்களுக்கும் நல்லது.அவனுக்கும் ஆத்தாகூட இருக்கான்னு சந்தோசமாயிருக்கும்"

வேலம்ம்மா குனிந்திருந்து கொண்டே கேட்டாள்."வீட்டை என்ன செய்வீங்க நாடாரே?"

மணிவண்ணன் முந்தினான்,"இடிச்சிருவோம்.புதுசா அஸ்திவாரம் போட்டுருவோம்"

செல்லமுத்து நறநறத்தார்.'இந்தப் பயலுக்கு இன்னமும் தொழில் சுழுவு தொரியவில்லை.வீட்டுக்குப் போயித்தான் திருத்தணும்' மீண்டும் மௌனம் நிலவியது.

ஆறுமுகம்,"வித்தறலாம்மா.ஒரு லட்சம்னா லாபம்தான்"

வேலம்மா ஒன்றும் பேசவில்லை.பச்சைத்துண்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அப்போ, உங்களுக்கு சம்மதம்னா, பத்தரத்தை நாளைக்கே முடிச்சறலாம்.நாளைக்கு அமாவாசை.நிறைஞ்ச நாளு."செல்லமுத்து முடிக்கவில்லை;

வேலம்மாள் கூர்மையாக செல்லமுத்துவைப் பார்த்தாள்.

"அப்போ, நாளைக்கே நான் செத்தும்போவணும்-கறீங்க"

செல்லமுத்துவின் முகத்தில் வலி தெரிந்தது."நான் அப்படியாம்மா சொன்னேன்?"

வேலம்மாவின் குரல் உயர்ந்தது. "நாடாரே, கேட்டுக்கோரும்.இந்த வீட்டுல நான் மருமவளா வரும்போது, எனக்கு புரட்டாசி புறந்தா எட்டு வயசு.எத்தனை வருசமாச்சுன்னெல்லாம் தெரியாது எனக்கு. இவனை மட்டுமில்லையா.. இவன் சித்தப்பனுக்கும் நாந்தான் பால் குடுத்து வளர்த்தேன்.வாழ்ந்து வந்த வீடுய்யா.இடிக்கணும்கீயளே? உமக்கும் பேரன்,பேத்தி பொறக்கணும் - பாத்துக்கோரும்"

"யம்மா" ஆறுமுகம் அதட்டினான்."என்ன பேசற?"

"நீ சும்மாயிருல" வேலம்மாவின் குரல் இன்னும் உயர்ந்தது.செல்லமுத்து வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

"நல்லா யோசிச்சு முடிவெடுங்கம்மா. எத்தனை நாளைக்கு இப்படி தனியா இந்த வீட்டுல இருக்கப் போறீங்க? பிள்ளைங்க எல்லாம் வெளியூருகுப்போயிட்டது. அவனவன் குடும்பம்னு யாயிறுச்சு"

"குஞ்செல்லாம் சிறகு முளைச்சுப் பறந்துட்டது. குருவிக்கூட்டுக்கு இனியென்ன வேலை? கலைச்சுறு-ங்கறீங்க"

"அதில்லம்மா" செல்லமுத்து திணறினார். இது உணர்ச்சி கலந்த விஷயம்.தவறாக வாய் விட்டால் தொலைந்தது.தர்மசங்கடமான மௌனம் மீண்டும்.

"அப்போ நாங்க வர்றோம்மா.வறோம்பா ஆறுமுகம்"

"கை நனைக்காம போறீயளே? ஒரு வாய் சாப்டுட்டுப் போவலாம்"

"காரியம் கிடக்கும்மா. இன்னொரு நாள் ஆவட்டும்"

வெளியே போகும்போது, செல்லமுத்து ஆறுமுகதை அழைத்தார்.
"கஷ்டம்தான் தம்பி.அம்மா புரிஞ்சுக்க மாட்டேங்குது. நீதான் எடுத்துச் சொல்லணும். வரட்டா?"

அவர்கள் போனதும் , உள்ளே வந்தவன் கத்தினான் "சே! நல்ல விலை வந்தது. வேண்டாம்னுட்டியே"

"இந்த வீட்டை விக்கச் சொல்லறியா?. நான் போன பிறவு நீயும் உன் சித்தப்பனும் என்ன வேணும்னாலும் செய்யுங்க.. நான் விக்க மாட்டேன்"

"புரியாம் பேசறியேம்மா. எனக்கு நாப்பதாயிரம் இருந்தா, பக்கத்துக்கடைய வாங்கிப்போட்டுறுவேன்.சித்தப்பு கூட 'பணமுடை. அம்பதாயிரம் வேணும்'னுச்சு"

"அதான் சொல்லிட்டேன்லா. நான் விக்கமாட்டேன்"

"நாளைக்கே பத்திரம் எழுதக் கொண்டு வர்றேன். எப்படி விக்க மாட்டேன்னு சொல்லறே-ன்னு பாத்திருதேன்"

"பத்திரம் எழுது..எம் பாடையை எடுத்தப்புறம்"

திடீரென்று வேலம்மா அழத்தொடங்கினாள்

நான் குட்டியை முறைத்தேன்." இந்த அழுவாச்சியப் பாக்கத்தான் கூட்டியாந்தியா? நான் போறேன். வேலையத்த பயலுக சகவாசமெல்லாம் இப்படித்தான்" எழுந்து நடந்தேன்.

"ஏல.நில்லு.நாஞ் சொல்லறதக் கேளு.."

ராத்திரி நாலு மணியிருக்கும். குட்டி அவசரமாய் எழுப்பியது.
"எந்திரிலா..முக்கியமான விசயம்"

"போல.. என்ன தலைபோற வேலை இப்ப? காலைல பாத்துக்கலாம்"
"தலை போற வேலைதாம்-ல. வான்னா வரணும்"

வேலம்மா வீட்டுப் பின்புறம் கிணற்றடிக்குக் கூட்டிப் போனது குட்டி. வேலம்மா விழுந்து கிடந்தாள்- வலப்பக்கம் தலை சரிந்து கிடக்க, கைகால்கள் பரத்தி. தலைப்பக்கம் கிணற்றுக் கயிற்றிலிருந்து ஒரு பித்தளைக்குடம் வெளிவந்து நசுங்கிக் கிடந்தது. கால்பக்கம் அரணை ஒன்று ஓடியது. இன்னமும் விடியவில்லையாதலால் சுவர்க்கோழிகளின் சப்தம் அதிகமாயிருந்தது.

"மயங்கிக் கிடக்காளோ?" பரபரத்தேன்

" நீ வேற. உசிரு போயி ரெண்டு நிமிசமாச்சி"

"அரணை நக்கியிருக்குமோ?"

"அரணையுமில்ல, அரவுமில்ல.தலைப்பக்கம் பாருவே. குடம் கிடக்கு நசுங்கிப் போயி"

"தண்ணி மொண்டு விடும்போது, வழுக்கித் தலைமேல குடம் இடிச்சிருக்கும்போல"

"குடம் இடிச்சிருச்சோ, இடிச்சாங்களோ என்னவோ - என்னைய இதுக்கு மேல ஒண்ணும் கேக்காத.புடதில புத்தியிருந்தாப் புரிஞ்சுக்கோரும். ஒண்ணு மட்டும் நிச்சயம்வே. கிழவிக்கு துர்மரணம்னாலும் கபால மோட்சம். உச்சந்தலை பிளந்து உசிர் போறத நான் பார்த்தேன்"

என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள்."ராத்திரி தூங்கப் போகும்போது நல்லாத்தான் இருந்தாரு டாக்டர். அஞ்சு மணிக்கு முனகற சப்தம் கேட்டுப் பார்த்தேன். உடம்பு அனலாய்க் கொதிச்சுக்கிட்டிருந்தது.

' வீட்டை இடிக்கறாங்க, வீட்டை இடிக்கறாங்க"-னு புலம்பறாரு.பயமாயிருக்கு டாக்டர். டவுன் ஆஸ்பத்திரில கொண்டு போயிரலாமா?"

"வேண்டாம்மா. ஊசி போட்டிருக்கேன்.கொஞ்சம் பார்ப்போம்"





1 comment:

  1. வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின் வலி நெல்லைத் தமிழில் அழகாகக் கோர்த்துள்ளீர்கள்!! வலியின் வீச்சம் போக செத்த நாளாகுந்தேன்!!

    ReplyDelete