Friday, March 28, 2014

பொறுப்பு - உணர்வு

Daniel Goleman ன் Focus   படித்துக் கொண்டிருந்தேன். சிந்தனையை நிறுத்திப் பிடித்தது ஒரு வரி
“The brain's right hemisphere recognizes the feeling depicted , while the left understands the name and what it means"

சுருக்கமாக - மூளையின் வலது பகுதி, வெளியுலகிலிருந்து கிடைக்கும் தூண்டல்களிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொள்கிறது. இடது பகுதி அது எந்த உணர்வு என்பதை வார்த்தைகள் மூலம்,முன்பு புரிந்து கொண்டதை தனது தகவல் கிடங்கில் கிடக்கும் சொற்களோடு இணைத்து முழுமையாகப் புரிந்து கொள்கிறது.

 கவனிக்கவும் முழுமையாக மட்டுமே - 'சரி'-யாக இல்லை.

ஏன் 'சரி'-யாக என்று சொல்லவில்லை? என்றால், எனது இந்தப் புரிதல் ஒரு அனுபவத்தில் நிகழ்ந்தது.

இரு வருடங்கள் முன்பு , டெல்லி விமான நிலையத்தில் மும்பை செல்ல அழைப்பிற்காகக் காத்திருந்தேன். அருகே ஒரு வயதான பெண்மணி. சற்றே தளர்ந்த விழிகள், முன்புறம் நரைத்த முடி. 60- 65 வயது மதிக்கத் தக்கவர். இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அவருக்கு மறுபுறம், ஒரு நவ நாகரிக யுவதி. படு ஸ்லிம்மாக, உடலை ஒட்டிய பேண்ட், சிறிய டீ ஷர்ட். இடுப்புப் பகுதியில் டீ ஷர்ட்டை அடிக்கடி இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள் . இப்படி குட்டையாக போடுவானேன்? இழுத்து விடுவானேன்?

விடுங்கள் அது முக்கியமில்லை. ஏனெனில்  அவளது சிறு குழந்தை அங்குமிங்கும் தத்தக்கா பித்தக்கா என ஓடிக்கொண்டிருந்தது. அதை சற்றே உயர்ந்த குரலில் அதட்டுவதும், அதனை ஓடவிட்டுப் பின் ஓடிப்போய்ப் பிடித்து எடுத்து வருவதுமாக அப்பெண் அலட்டிக் கொண்டிருந்தாள். டிபிகல் டெல்லி கலாச்சாரம். உரத்த குரலில் கொஞ்சுதல், பின் திட்டுதல் என நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது.

குழந்தை எதையோ கொட்டி விட்டது என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. இந்தப் பெண் இடுப்பில் கை வைத்தவாறு “ look at me. what have you done? haan?" என்று அனைவரும் பார்க்க, அதட்டினாள். குழந்தை அவளை ஏறிட்டு சில நொடிகள் உற்றுப் பார்த்து , சர்வ சாதாரணமாக மீண்டும் ஓடத் தொடங்கியது. அவள் , அருகிலிருந்த பெண்மணியைப் பார்த்து போலி அலுப்புடன் சொன்னாள் “ Not at all having fear. He does not know fear. I am sooo tired , you know".

அந்தப் பெண்மணி ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தார். அந்தப் பெண் , குழந்தையுடன் விமான அழைப்பு வர எழுந்து சென்றதும் என்னை நோக்கி சரிந்தார். மிக மெல்லிய குரலில்
“She is blessed with motherhood. But she is not a mother yet" என்றார்.

வியப்புடன் அவரை ஏறிட்டேன். பின் பேசியதில் அவர் டெல்லியில் ஒருகல்லுரி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் இந்தூர் செல்கிறார் என்றும் தெரிந்தது. எனது விமானத்தில் , அதுவும் எனது அருகிலிருந்த இருக்கையில்தான் வருகிறார் என்றும் தெரிந்ததும் இருக்கையில் அமர்ந்த பின்னும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“ புரிதல் என்பது இரண்டின் சேர்க்கை. தூண்டுதல்களின் மூலம் கிடைக்கும் உணர்வுகள் மற்றும் அதனைப் பற்றிய முன் அனுப்வங்கள், தகவல்கள். உணர்வுகளுக்கும், முன்னறியும் தகவல்களுக்கும் ஒரு தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம். குழந்தைப் பருவத்தில் இத் தொடர்பு தவறாக ஏற்பட்டு விட  வாய்ப்பு அதிகம். அந்தப் பெண்ணின் குழந்தைக்கு, கோபம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வார்த்தைத் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது கோபம் என்பது இன்ன வகையான முக பாவம், குரல் ஏற்றத் தாழ்வு என்று தெரியாமல் போயிருக்கலாம். இதனைச் சொல்லித் தரவேண்டியது பெற்றோரின் கடமை. இவள் அதையெல்லாம் செய்யாமல், ஒரு தாயாக செய்ய வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு, தனது தாய்மையை மட்டும் கொண்டாடுகிறாள். இது பொறுப்பற்ற சுயநலம்”

அசந்து போனேன்.

“ நீயெல்லாம் சிறுவனாக இருக்கும்போது ராமாயணம், மஹாபாரதம் கேட்டிருப்பாய். காமிக்ஸ் புத்தகம் படித்திருப்பாய். அதுல கோபம்னா, கடுங்கோபம், வெகுளி, ஆத்திரம், சினம் -னு நிறைய வார்த்தை வரும். அதோட, கதை சொல்றவங்க முகத்தில, குரல் மாடுலேஷன்ல ஒரு உணர்வு தெறிக்கும். உன்னை அறியாம, இந்த வார்த்தைக்கு இன்ன உணர்வு, இன்ன குரல் மாடுலேஷன்னு உன் மூளை பொருத்திக்கும். இப்ப? கார்ட்டூன் விட்டா குழந்தைகள் எதிலிருந்து கத்துக்கும்? ஒரு 2 D சித்திரம், கார்ட்டூன் என்ன உணர்வைப் பெரிசாக் கத்துக் கொடுத்து விடும்.? ”சின்சென்...” என்று அலறும் ஒரு விகார ஜப்பானிய முகம்.. அதுவா ரொளத்திரம், கோபம்? இதுக்குத்தான் கதை கேக்கணும், நல்லா கதை சொல்ற்வங்க வீட்டுல வேணும்-ங்கறது. "

" கூட்டுக் குடும்பம் அவசியம்னு சொல்றீங்க?”

“ அப்படி இல்ல. கூட்டுக் குடும்பமா இருந்துட்டா மட்டும் போதாது. ஆட்களுக்கு கதை சொல்லத் தெரியணும். கூட்டுல இருந்துட்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. பெற்றோர் கதை சொல்லணும். அதுல ஆர்வம் இருக்கணும்.குழந்தை வளர்ப்பு , ஒரு தார்மீகப் பொறுப்பு, ஒவ்வொரு அப்பனுக்கும், அம்மாவுக்கும்.”

அவர் இந்தூரில் இறங்கிப் போனபின்பும் நான் இதனை சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று மீண்டும் என் நினைவுகளில். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை?

No comments:

Post a Comment