Saturday, January 11, 2014

ராதா அக்காவின் நீலப்புடவையும், பள்ளிக்கூடமும்.


 மும்பை 13 டிகிரி ஸி-யில் குளிர்ந்திருந்த மாலையை சுகித்திருந்த போது, நண்பரின் போன் வந்தது. “ அர்ரே, பெரிய ப்ராப்ளம்” என்று பீடிகையோடு தொடங்கினார். வியந்தேன் , இப்படியெல்லாம் பேசுகிற ஆளில்லை அவர். கடமையே கண்ணானவர் - சிறந்த விற்பனையாளர் என்ற பட்டத்தை அவர் பணிசெய்யும் கம்பெனியில் நாலு வருடங்களாகத் தட்டிச்சென்றவர். 

“இந்த வருஷம் பின் தங்கிவிடுவேன் போலிருக்கிறது. மார்க்கெட் தேக்கநிலை இல்லை. இந்த xxx வந்து சேர்ந்திருக்கிறான்”

திரு.xxx நண்பரின் இதற்கு முந்திய கம்பெனியில் அவருக்கு பாஸ் ஆக இருந்தவர். இருவருக்கும் கருத்து வேற்றுமையில், இவர் வேலையை விட்டு, இப்போது இருக்கும் கம்பெனியில் சேர்ந்தார். இந்த வார்த்தை எப்பொழுதும் சத்தியம். You join a company and leave a manager"

’இப்ப என் கம்பெனியில சேர்ந்திருக்கிறான். நேரடி பாஸ் இல்லை. ஆனா நச் நச என தொல்லைகள் தொடங்கும் பாரு. இவன் அந்த கம்பெனியில இருந்தவரைக்கும் என்னால அங்க ஒழுங்கா செயல்பட முடியலை. இப்ப இங்கயும்...இந்த வருஷம் இலககை எட்ட முடியாது”

ஜன்னல் வழியே வெளியே பார்த்துக்கொண்டே அவர் சொல்வ்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு பெண்மணி , நீல நிறச் சேலையில் தெரு முனையில் திரும்பிக் கொண்டிருந்தாள், அடம்பிடித்துக் கொண்டிருந்த  ஒரு குழந்தையை ஒரு கையில் பற்றி தரதரவென இழுத்தபடி. நீலப்புடவை...

இன்றும் நினைவிருக்கிறது,வொளரவ நரகத்தைவிடக் கொடிய ஒரு இடம். பள்ளிக்கூடம் . ஒன்னாம் கிளாஸொ, நர்சரியா தெரியவில்லை. அக்காதான் கொண்டுபோய் ஸ்கூலில் விட்டு வருவாள். கதவிடுக்கில் , துணிஸ்டாண்டின் பின், பீரோவின் பின் .. எங்கு ஒளிந்து நின்றாலும் கண்டுபிடித்துவிடுவாள். எத்தனை அழுதாலும், தரதரவென இழுத்டுக்கொண்டு போய் , அந்த முண்டக்கண்ணி டீச்சரின் வகுப்பில் உட்கார வைத்து விடுவாள். ஒண்ணாம் வாய்ப்பாடு சொல்லணும். பட்டுப்பூச்சி எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு தீப்பெட்டியில் கொண்டு போகக்கூடாது. என்ன உலகம் இது?

 ராதா அக்காவிடம் அப்போது ஒரேயொரு நல்ல சேலைதான் உண்டு. நீல நிறச் சேலை. அதைக் கட்டிக்கொள்கிறாள் என்றால் எனக்கு உதறல் தொடங்கும்.அதுவரை எனது அச்சங்கள் தொடங்காது.சுத்தமாக பள்ளிக்கூடத்தை மற்ந்திருப்பேன். நீலச்சேலை + ராதா அக்கா = நான் ஸ்கூல். அவள் அந்த்ப் புடவை கட்டினால்தான் எனக்கு ஸ்கூல் அந்த இடத்தில்  முளைக்கிறது என்றும் டீச்சர்கள் தோன்றுகிறார்கள் என்றும் நம்பினேன். அக்காவின் பெண் கல்யாணத்தில் அவள் நீலச்சேலை கட்டியபோதும் “ஆ,ப்ளூ  புடவையா? ஸ்கூல் வேண்டாம்” என்றேன். அடிக்க வந்தாள்.

அக்கா நீலச்சேலை கட்டுவதற்கும் எனது கஷ்டகாலங்கள் தொடங்குவதற்கும் என்ன தொடர்பு உண்டோ அதுதான் வாழ்வில் சில நிகழ்வுகளுக்கு நாம் பல நிகழ்வுகளுடன் தொடர்பு ஏற்படுத்துவது. அக்கா திருமணமாகிப் போனபின்பு, பள்ளியிலிருந்து கல்லூரிக்கு நான் போனபிறகு வெகு காலம் கழித்தே இந்த ஞானோதயம் வந்தது. 

“நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். ஹலோ?” என்றார் நண்பர். நனவுலகிற்கு மீண்டேன்.
“உங் கம்பெனியில வேலை இருக்கா? பயோ டேட்டா அனுப்பறேன். இமெயில் ஐ.டி சொல்லு” 

“ஒரு நீலப்புடவைக்காக  ஸ்கூலுக்குப் பயப்படாதே”

“வாட்? கம் அகெய்ன்?”

“ஒன்றுமில்லை” 

No comments:

Post a Comment