Saturday, January 17, 2015

மகாபாரதம் - பல்லாண் மணமும், புணர்வும்

பலர் எழுதும் பதிவுகளைப் பார்க்கின்றேன். பாஞ்சாலியையும் சத்யவதியையும் இப்போதைய ப்ரச்சனைக்கு முன் உதாரணமாக வைக்கிறார்கள்.

பல்லாண் புணர்வு ( polykoity) என்பதற்கும் பல்லாண் மணம் ( polyandry) என்பதற்கும் வித்தியாசமிருக்கிறது. புணர்வு, மகப்பேறு என்பது மட்டுமே குறிக்கோளல்ல மணம் என்பதற்கு. இது  பல சமூகங்களிலும் இருந்திருக்கிறது. சமீபத்தில் 19050கள் வரை ஒரு பெருந்தட்ட சமூகத்தில் பரவலாக இருந்திருக்கிறது.

சத்யவதி , விசித்ரவீர்யனுக்குப் பிள்ளைகள் இல்லாதபோது, பீஷ்மனை அழைத்துத் தனக்கு வியாஸன், திருமணத்திற்கு முன்பே பராசரரால் பிறந்ததைச் சொல்கிறாள். மீனவ்ப்பெண்ணான சத்யவதியின் மகன் வியாஸன், தவசியாக வாழ்ந்ததை குறிப்பிட்டு, அவரை அழைத்து வந்து, அவரது தம்பியான விசித்ரவீர்யனுக்கு பிள்ளைகள் பிறக்க வைக்க பீஷ்மரிடம் சொல்கிறாள். பீஷ்மர் ஆமோதித்து, வியாசரை அழைக்கிறார்.
ஒரு பெண் கடவுளருக்கும், மனிதருக்குமாக மணம் செய்யவிக்கப் படுகிறாள் என்பது அடித்தளத்தில் இருக்கும் தத்துவம். அப்படி பங்கு போடும் அண்ணன் தம்பிகளை தேவர்கள் -கடவுளர்கள் என்னும் வகையில் , (இன்றும் மைத்துனர்களை தேவர்கள்  என்றே வட இந்தியாவில் அழைக்கிறார்கள்.)
சத்யவதி, வியாசரிடம் சொல்கிறாள் “ எப்படி பீஷ்மர் , விசித்ரவீர்யனுக்கு தந்தை வழி அண்ணனோ, அது போல நீயும் அவனுக்கு தாய் வழியில் அண்ணன். எனவே நீ இந்த வம்ஸத்தை வளர்க்கக் கடமைப்பட்டுள்ளாய்”

Yathaiva pitro bhishmasthtathaa tvamapi matraha
bhrata vichitraveeryasya va putra manyase

Mahabaratham I, 99, 20ff. Verse 30  ( courtesy Polyandry in Ancient India - Sarva Daman Singh).
இது குடும்பத்தில் மட்டுமே நிகழ்ந்த பல்லாண் புணர்வு, குரு பரம்பரையில் அனுமதிக்கப்பட்ட ஒன்று.
பாஞ்சாலியின் மணம் இதுபோன்று அண்ணன் தம்பியரால் ஒரு குடும்பத்தில் நடந்த பல்லாண் மணம்.

பல்லாண் புணர்வு என்பது வேறு.  நியோகத்தின் மூலம் பிறந்த கர்ணனே , நெறிகெட்ட பல்லாண் புணர்வை எதிர்க்கிறான்.

பலரும் ஆதாரம் காட்டும் அதே மகாபாரதத்தில் கர்ணன் சிந்துதேசத்திற்கு மேற்பட்ட தேசத்து மன்னனான சால்யனை  இழித்துப் பேசுகிறான் ” உங்கள் நாட்டில், தகப்பன், மகன், அண்ணன் , தம்பி , உற்றான் உறவினன், அந்நியன் என்று பாகுபாடில்லாமல்  பெண்கள் பலரையும் புணர்ந்து திரியும் அற்பர்கள். அளவின்றி மது அருந்தி, இறைச்சி உண்டு, கிறக்கத்தில் , காமத்தில் கிளுகிளுத்து, மிருகங்கள் போல் புணர்ந்து திரியும்  நாட்டினரின் மகன், ஒரு மத்ரிகன், நீயா நீதி பற்றிப் பேசத் தகுந்தவன்?”

//Pita mata ca putrascha svas rus asruamatulah
Jamata dhuhita brata napita te te ca banhavah
vayasyabhyagatas canye dasi dasam ca samgatam
punbhirvimisra naryascha jnatajnatah svaechchaya//
மஹா பாரதம்  VII, 27,75-78. ( courtesy Polyandry in Ancient India Page 79)

அட  ,எனக்குக் கூட சம்ஸ்க்ருதம் வருதே?

அதே மகாபாரதம். அதே ஹீரோக்கள், ஹீரோயின்கள். இடம், காலம், சமூகம் மாற்றம். எத்தனை வேறுபாடுகள்? அவரவர் சமூக, குழு நெறிப்படி, கொண்டொழுகும் நெறிப்படி ( ஆபஸ்தம்பர், மனு வேறு வேறு முறையில் சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) தங்கள் வாழ்வில் நடந்திருக்கிறார்கள்.

திருச்செங்கோட்டில் நடந்ததாக சித்திகரிக்கப்பட்ட  விசயம் இந்த ரெண்டிலும் உட்பட்டதல்ல.

மகாபாரதம் படி என்று சொல்பவர்கள், முதலில் பாரதம் படிக்கட்டும். பின் பேசட்டும்.

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எறிதல்... நல்ல பழக்கமல்ல.நம் மீதே கண்ணாடி விழும். காயம் படும்.

No comments:

Post a Comment