Saturday, July 18, 2015

நட்பின் மொழி


மதியம் ஒரு மணியளவில் தெரியாத நம்பரிலிருந்து போன்.
“டே, அய்யாத்துரை பேசறேன்”
தூத்துக்குடி காலேஜ் நண்பர்கள் அழைத்தால் என் குரல் தானாக உற்சாகத்தில் உயரும்.
“லே, இன்னிக்கு நம்ம காலேஜ்ல பழைய மாணவர்கள் கூட்டம். எல்லாரும் வந்திருக்கம். உன்னை போன்ல பிடிக்கலாம்னு ஃப்ரெடி சொன்னான். பேசலாம்லா?”
“அட பாவிகளா, ஒருத்தனும் ஒரு வார்த்த சொல்லலியே? எங்கிட்டு இருக்கீய எல்லாரும்?”
“பார்ல இருக்கம். இரி. ஒருத்தர் உங்கிட்ட பேசணும்னு நிக்கான். பேசுதியா?”
யாராயிருக்கும்?ஃப்ரெடி, துரை ராஜ்,ராஜசேகர்? எல்லாவனும்தான் பேசியிருக்கானே?
போனில் “லே, கூ*****யானே. யாருன்னு தெரிதா?”
(விடுங்க. சகவாசம் அப்படி. ஊரும் அப்படி. பாசம் பொழிந்தாலும், பொங்கிக்கொண்டு கோபம் வந்தாலும், கெட்ட வார்த்தைகள்தான் எங்கூர்க்காரனுவளுக்கு வரும். அது தாமிரபரணி மாதிரி. இடம் காலம் பொருள் பார்க்காமல் பொங்கும்)
நாலு வசைகளுடன் அவன் மீண்டும் அய்யாத்துரையிடம் போனைக் கொடுத்ததும் அவன் சொன்னான் “ லே, அவன் ரோகேஷ். இப்ப அவன் ஸ்கூல் வாத்தியான் தெரியுமில்லா? ”
“யாரு இவனா?” என்ற எனது ஆச்சரியத்தில் ஒரு கெட்ட வார்த்தை உதிர்ந்தது.
“இந்த தா****  கிளாஸ் எடுத்தா பிள்ளைங்க உருப்படுமாலே? வெளங்கும்”
“என்ன இதுக்கே அசந்துட்ட? அவன் பிஸிக்க்ஸ் எடுக்கான். ப்ளஸ் டூ-க்கு”
“அய்யோ”
“அதுவும் இங்க்லீஸ்ல.. மக்கா, இப்ப சொல்லு”
“லே. அவங்கிட்ட போனைக் கொடு” என்றேன்.
இரண்டு நிமிட இடைவிடாத வசவை வாங்கிக்கட்டிக்கொண்ட பின், சிரித்துக்கொண்டே “ லே , உன்னப் பாக்கணும்னு இருக்குடா. இங்கிட்டு வர்றதே இல்லையோ?”
24 அரியேர்ஸ் வைத்து பாஸ் செய்தவன், பானுமதி தியேட்டரில் மதியம் ஷோவில் எப்ப பிட்டு காட்டுவாங்க என்பதெல்லாம் தெரிந்து வைத்திருந்தவன், ஓஸி டீ அடித்தே மூணு வருசம் ஓட்டினவன், அனைத்து ப்ரொபஸர்களிடமும் திட்டு வாங்கினவன்.. இன்று நெஞ்சு நிறைய அதே நேசத்துடன், அதே கெட்ட வார்த்தை விளிகளுடன்...

அதன் பின் ஃப்ரெடி “ லே, நம்ம வாத்தியார்கள்ல சொக்கலிங்கம் சார் மட்டும்தாண்டே இருக்காரு. பாத்துட்டு வந்தம். மனசு கனமாயிருச்சு. அதான் நேரா பார்ல...”
“சரி, இந்த பீர்-க்கு ரோகேஷ் பணம் கட்டினானா?”
“எளவு என்னிக்கு காசு கொடுத்திருக்கு? இப்பவும் நானும் அய்யாத்துரையும்தான்.. கெட்ட கேட்டுக்கு குத்தாலம் போணுமாம். அதுவும் நாந்தான் டிரைவராம்... என்ன திமிரு பாரு? அது போவட்டு. இப்பத்தான் கிச்சான் பேசினாண்டே...”
பயல்கள் எவனும் மாறவில்லை. மாறாமல் இருப்பதுதான் இன்றும் அட்ரிலனினை லிட்டர் லிட்டராக ஊற வைக்கிறது.
அய்யாத்துரை .” லே , நீ கதையெல்லாம் எழுதியிருக்கியாம்லா? பேஸ்புக்ல பாக்கேன். அதும் தமிழ்ல திருவாசகம், ராமாயணம்னு எழுதற பாரு, பெருமையா இருக்குடே. கடைல ஏலா, இவன் என் ப்ரெண்டுன்னு சொல்லிக்கிடுதேன். இன்னும் எழுது என்னா? சரி, எப்ப வாற இங்கிட்டு?”

லிஃப்டு பட்டன்கள் தெரியாமல் கண்ணீர்ப்படலம். காலத்தில் உறைந்து மேலே போகாமல் , தரையிலேயே நின்றேன்.
தரைதான் இயல்பு. நிஜம். அங்கிருந்து மேலே எங்கோ போனாலும், தரைக்கு வரும்போது கிடைக்கும் தெம்பு, வ.உ.சி கல்லூரி வளாகத்தினுள் நுழையும் நேரம்  போல  ஒரு நிறைவு.
கூ*.... மக்களா, நல்லாயிருங்கடே.

No comments:

Post a Comment