Sunday, July 19, 2015

அச்சம் தவிர்

”so, wrapping up, don't instill fear in children. Fearful kids are not disciplined kids. They only grow to be cowards for the rest of their lives. For your short term momentary peace at home and at school, seeding fear among children is deleterious"
அவர் முடிக்குமுன்னே மெதுவே எழுந்து ஓரமாய் பல்லி போல் சுவற்றில் ஒட்டி நடந்து வெளியேறினேன். கதவு பின்னால் சாத்தப்படுமுன் சன்னமான கைதட்டல் ஒலி கேட்டது.

குழந்தைகள் மனநிலை விற்பன்னர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என குழுமியிருந்த அந்த அவைக்கும் எனக்கும் ஒரு தொடர்புமில்லைதான். தெரியாத்தனமாக கருத்தரங்கு அறை  நம்பர் 2 என்பதற்குப் பதிலாக இரண்டாம் மாடியில் இருந்த கருத்தரங்கு அவையில் நுழைந்துவிட்டேன். உன்னிப்பாக பலரும் கேட்டுக்கொண்டிருந்த சொற்பொழிவில் திடீரென கதவைத் திறந்து வெளியேற முயன்று இடையூறாக இருக்க விரும்பாமல்,சற்று இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து வெளியேறியபோது கேட்ட வரிகள்தான் இவை.

யாருமற்ற காரிடாரில் நடந்த போது, இந்த வரிகள் எங்கோ முன்பு கேட்டதாக மனதில் ஓடியது. எங்கே? எனக்கும் குழந்தைகளுக்கும் ஆகவே ஆகாது. அவற்றைப் பற்றி அதிகம் படிப்பதில்லை, கேட்பதில்லை. அப்படியிருக்க இது எப்படி....? சட்டென ஒரு பெயர் மனதில் மின்னலாடியது.

தளவாய்த் தேவர்.

தூத்துக்குடியில் நாங்கள் இருந்த பிள்ளையார் கோவில்தெருவில் மூன்று வீடு தள்ளி இருந்தது தளவாய்த் தேவரின் வீடு. குட்டையாக, குண்டாக, கருப்பாக இருப்பார் தேவர். இடுப்பில் பச்சைகலரில் மிக அகலமான பெல்ட், பாக்கெட்டுகளுடன் ஒளிர, அவர் கண்கள் எப்போதும் சிவந்து பெரிதாக விரிந்திருக்கும். தெருவில் கத்தி விளையாடி அட்டகாசம் செய்யும் பயல்களையெல்லாம் “தளவாய்த் தேவர் தாத்தாகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்” என்று வீடுகளில் பயமுறுத்தி வைப்பார்கள்.

தேவர் எந்த குழந்தையையும் திட்டியோ, அடித்தோ நாங்கள் பார்த்ததில்லை. என் நண்பர்களும் நானும் அரை டவுசராகத் திரிந்த காலம் அது. உடைந்த கண்ணாடியில் சூரிய ஒளியை எதிரொளித்து, ஒரு நோட்டு அட்டையில் செவ்வகமாக ஓட்டை போட்டு அஞ்சு பைசாவுக்கு கிடைக்கும் ‘குடியிருந்த கோயில்’ எம் ஜியார் பிலிம் வெட்டு ஒன்றினை சொருகி, லென்ஸ் வைத்து பிலிமில்  ஒளிக்குவியம் ,பெருக்கம் செய்து, வீட்டினுள் வேட்டியை தொங்கவிட்டு, அதில் படம் பார்த்து பரவசமடைந்த 70களின் பொற்காலம் அது.

தளவாய்த்தேவருக்கு இரு மனைவிகள். பெரிய குடும்பம். திடீர் திடீரென சண்டைகள் வெடிக்கும். தெருவில் அடி தடி. வீடுகள் அவசரமாகக் கதவுகளை தாழிட்டுக்கொள்வார்கள். சில நாட்களில் போலீஸ் ரெய்டு நடக்கும். அதன்பின்னர்தான், தேவர் அவர்கள்  கள்ளச்சாராய்ம் காய்ச்சி வீட்டில் பதுக்கி வைப்பதாக அறிந்தோம். தூத்துக்குடிக்கு வெளியே பனங்காடுகளில் பால் இறக்கி, கள்ளூ  தயாரிப்பார் என்பது அறிந்ந்திருந்தோம் என்றாலும், போலீஸ் ரெய்டு என்பதெல்லாம் தெருவை கலங்க வைத்திருந்தது. தேவரைப் பார்க்கவே பயந்தனர் அங்கிருந்தவர்கள்.

தீபாவளி விடுமுறையின்போது கணேஷ் ஒருவர் தெருவில் கணக்காய் காலை பதினோரு மணிக்கு நடந்து போவதைக் கவனித்தான். அவர் வேட்டியை முன்னே தூக்கிப் பிடித்தபடி இரண்டு அடி எடுத்து வைத்து, நின்று, மீண்டும் ஆடி நடந்து நின்று செல்வார் என்பதையும் கவனித்திருந்தான். உள்ளாடை ஒன்றும் அணியாது அவர் வேட்டியை முன்னே பிடித்து நடப்ப்தை  காற்றடித்த ஒரு துரதிருஷ்ட நாளில் நாங்கள் பார்த்துவிட்டோம். அதைக்கேட்டு  “ ஜட்டி போடத மாமா, வேட்டி தூக்கிப் போனாராம். காத்து அடிச்சு கலைச்சுதாம், காக்கா கொத்திப் போச்சுதாம்”  என்று எவனது அண்ணனோ பாட்டு எழுதித்தர, அந்தப் பாட்டை ரோட்டில் அவர் வரும்போதெல்லாம் பாடி  வெறுப்பேத்தினோம்.

ஒருநாள் அவர் வருவதை அறியாமல் கணேஷ் கோலி விளையாடிக்கொண்டிருந்தபோது, பிடிபட்டான். அவனுடன் இருந்த நாங்கள் நால்வர் விக்கித்துப் போய் நின்றிருக்க, அவர் “ லே, எவனாச்சும் இனிமே இப்படி பாடினீங்க, ராத்திரி பேயா வந்து, உங்க குஞ்சை வெட்டிருவேன்” என்றார் , அன்றிலிருந்து எங்கள் பாட்டு நின்றது. அவர் போவதை பீதியுடன் பார்த்து நின்றோம்.

தளவாய்த்தேவர் , அவர் வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். கலகலவென பேசி விளையாடிக்கொண்டிருந்த பயல்கள் திடீரென அடங்கி நிற்பதையும், பெருமை பொங்க ஒருவர் வேட்டி நீட்டிப் பிடித்துப் போவதையும் கவனித்தார். “லே , இங்கிட்டு வா” என்றார் கணேஷை.
“என்னலா? எல்லாரும் டவுசரை முன்னாடி பொத்திகிட்டு நிக்கீங்க? என்ன விசயம்?”
“இல்ல தாத்தா” மிடறு விழுங்கினான் கணேஷ். “அந்தா போறார்லா, அந்த மாமா, பேயா வந்து எங்களுக்கு நறுக்கிவிட்டுருவேன்னு சொன்னாரு.”
தளவாய்த் தேவர் சிரிக்கவில்லை. “யாருல சொன்னா? அந்தாளா?”
“ஆமா”என்று கணேஷ் காட்ட, தேவர் , அவரை உரக்க அழைத்தார் “ இங்கிட்டு வாரும்வே.”
“இந்த பயலுவளுக்கு சு** நறுக்கிறுவேன்னு சொன்னீரோ? “
“ஹி.ஹி” என்றார் அவர் சிரித்தவாறே “  எனக்கு ஓதம் தள்ளிட்டு. டாக்டர் வீட்டுக்குப் போயிட்டு வர்ர வழில சும்மா தொந்தரவு பண்ணிட்டிருந்தானுவ தேவரே. அதான் மிரட்டி வைப்பம்னு...”
“பொடதில புத்தியிருக்காவே உமக்கு? “ தேவர் சீறினார்.
“பயமுறுத்தி வைக்கீரே? ஆம்பளப் பயலுவ பயப்படலாமாவே? இளங்கன்னு பயமறியாதும்பாவ. பயம் தெரியாம வளர்ற கன்னுதான்வே நாளைக்கு காளையா தைரியமா பாயும். அதை எதுத்து நிக்க இந்தப் பயலுவ நிக்க வேண்டாமாவே? இவனுவ நாளைக்கு ஒரு ஆபத்துன்னா வேட்டிலேயே பேண்டுருவானுவ, இப்படியா பயலுவள வளக்கணும்? விவரம் கெட்ட மனுசன்வே நீரு. எந்தத் தெரு உமக்கு””
அவர் சிரிப்பு மறைந்து ஏதோ தெருப்பெயரை முணுமுணுத்தார் “ இனிமே எந்தப் பயலையாச்சும் பயமுறுத்தினீர்னு தெரிஞ்சுது, ஒம்ம வேட்டில மோள வைச்சுருவேன். தெரிஞ்சுக்கோரும். பயலுவ பயமில்லாம வளரணும். அப்பத்தான் காப்பு உறுதியாயிருக்கும். வீட்டுக்கும் சரி,ஊருக்கும் சரி”

தளவாய்த் தேவர் சொன்னபோது, ஏஸி அறையில்லை.பட்டுப் புடவை அணிந்த,  கோட்டு ,டை கட்டிய அறிஞர்கள் கைதட்டவில்லை.

No comments:

Post a Comment