Sunday, July 26, 2015

அறங்காவலன்




”யாரு வந்திருக்காங்க சொல்லுங்க பாப்போம்” உள்ளே நுழைந்த என்னை , மனைவியின் சீண்டல் கேள்வி ஒரு கணம் வந்திருப்பவரை கூர்மையாக நோக்க வைத்தது. ஒரே கணம்தான்.

“வித்வான்ஸ் ஸார் தானே?”

ஹா ஹா என்று பெரிதாகச் சிரித்தபடி, மிகுந்த மகிழ்ச்சியுடன் கை குலுக்கினார். அவரது வெண்ணிறக் குறுந்தாடியுள் சற்றே மறைந்திருந்த முகத்தில் தளர்ச்சி ஒரு கணம் நீங்கியதாகப் பட்டது எனக்கு.

வித்வான்ஸ் என்றால் ஏதோ சங்கீத வித்வான் என்று நினைத்துவிடாதீர்கள்.  பல்கலைக்கழகத்தில் ஒரு க்ளர்க்காகச் சேர்ந்து  படிப்படியாக உயர்ந்து , ரிடையர் ஆகும் தறுவாயில் அசிஸ்டெண்ட் ரிஜிஸ்ட்ரார் என்ற அளவுக்கு வளர்ந்திருந்தார்.  என் மனைவி மங்கையின் டிபார்ட்மெண்ட்டுக்கு கீழே அவர் வேலைசெய்யும் தொலைதூரக் கல்வித் துறை இருந்ததாலும், மனிதர் தனது அனுபவத்தால் செய்யும் அலுவலக உதவிகளாலும் மற்ற துறைகளின் ப்ரொபசர்களிடம் மிகுந்த மரியாதை பெற்றிருந்தார்.

முன்பெல்லாம், தினமும் அவர் குறித்து எதாவது ஒரு கதை இருக்கும்.
“இன்னிக்கு ஒரு கேஸு, கேட்டீங்களா? பர்ஸ்ட் இயர்ல சேர்ந்த  ஒரு பையன் தாழ்த்தப்பட்ட இனத்துக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கான். எங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க, அதப்பாக்காமலேயே விட்டிருக்காங்க.  பீஸ் கட்டலைன்னு ஹால் டிக்கட் நிறுத்தி வைச்சிருந்தப்புறம்தான் கேஸ் எங்கிட்ட வருது. அதுக்குள்ள நாலு அரசியல் கட்சி ஆளுங்க, யூனிவர்சிடி கமிட்டீ... “

”அப்புறம்” என்பேன் அசுவாரஸ்யமாக. இது போல தினமும் ஏதாவது கேட்கவேண்டியிருக்கும், மனைவி ஆபீஸ் விஷயங்களைக் கேட்டும் பொறுமையாக இருப்பது  கணவர்களின் கடமை.

“வித்வான்ஸ் வந்தாரு. பேப்பர் எல்லாம் பாத்துட்டு, யார் யார்கிட்ட எப்படி பேசணும்னு சொல்லிட்டுப் போனாரோ பிழைச்சேனோ?, இல்ல, எங்க டிபார்ட்மெண்ட் அவ்வளவுதான். இத மாதிரி, டாக்டர். மாதுரி ரானடே இருக்காங்களே, அவங்களுக்கு போனவாரம்....”

வித்வான்ஸ் பெயர் கேட்காத நாள் இருக்காது எனக்கு. மனைவிக்கு யூனிவர்சிடியின் அரசியலும், அதன் நடைமுறை படிகளும் புரியும்வரை வித்வான்ஸ் ஒரு ரட்சகர். பரத்திலிருந்து வந்த மீட்பர்.
இத்தனைக்கும் வித்வான்ஸுக்கு நல்ல பெயர் கிடையாது. ஒரு பைசா லஞ்சம் வாங்கமாட்டார். அதைவிட மோசம், பிறரைக் கொடுக்கவும் விடமாட்டார். சில ஊழியர்கள் இதனாலேயே அவர்மீது கடும் கோபத்தில் இருந்தனர்.

“எதுக்கு பைசா வாங்கணும், சார்? கவர்மெண்டு சம்பளம் கொடுக்கறான். யூனிவர்சிடி அதை தாமதப்படுத்தினா, வி.ஸியைப் பிடிச்சு உலுக்குவேன். எவங்கிட்டயும் எனக்கு பயம் கிடையாது. போன வைஸ் சான்ஸ்லர், எதாவது விதிமுறைப்படி சிக்கல்னா, எனக்கு ப்ரைவேட்டா போன் பண்ணுவார். வித்வான்ஸ், ஒரு ஹெல்ப்.. யார்கிட்டயும் நான் கேட்டேன்னு சொல்லாதேன்ன்னு கூடவே சேத்து சொல்லுவார்” என்றார் வித்வான்ஸ் உடல்குலுங்க சிரித்தபடி.

 அவர் குரல் மிக உயர்ந்த தொனியில் இருக்கும்.
உண்மையே எப்போதும் பேசுபவர்கள், உள்ளத்தில் கபடமில்லாதவர்கள் குரல் ஒரு கட்டை உயர்ந்துதான் இருக்குமாம். யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.

”மங்கைஜீ, ஒரு டீ போடுங்க” என்றார் உரிமையாக. “ சவுத் இண்டியன் வீட்டில் காபி குடிக்கவேண்டும் என்பார்கள். நீங்கள் மும்பையில் ஒரு ரெண்டும் கெட்டான். எனவே டீ யும் சுமாராக இருக்கும் என நினைக்கிறேன்”  இப்படி ஒரு வீட்டில் சொல்ல ஒரு தைரியம் வேண்டும்.

”என்னைப் பத்திச் சொல்ல பெரிசா ஒண்ணுமில்ல சுதாகர்ஜி. ரெண்டு பையன். ஒருத்தன் பி.எஸ்ஸி ஐ.டி முடிச்சிட்டு வேலைக்குப் போறான் ஒரு மாசமா. பொண்டாட்டிக்கு மன நோய் உண்டு. அதோட நரம்புத்தளர்ச்சி வேற. திடீர்னு வுழுந்துடுவா. நான் அன்னிக்கு பூரா வீட்டுல இருந்துதான் ஆகணும். இப்ப..” டீயை உறிஞ்சினார். முகத்தில் வாழ்வில் உழைத்ததன் கோடுகள் வரிவரியாக.. நெற்றியில் வழுக்கையில் ஒரு பெரிய தழும்பு அல்லது பழுப்பு மச்சம், கோர்பச்சேவ் போல.

“இப்ப, பசங்க பெரிசாயிட்டாங்க. மூத்தவன், இல்ல இளையவன் பாத்துக்கறான். எனக்கும் நிறைய லீவு போடமுடியாதுல்லியா? அதோட ஆபீஸ் பாலிடிக்ஸ் வேற.மங்கை சொல்லியிருப்பாங்களே?”

“ஆமா, சொன்னா” என்றேன் சுருக்கமாக.
“என் கேட்டகரி வேற அதுக்கு சாதகமாயில்ல பாருங்க. அதுனால பல தடைகள். ஆறு வருஷம் முன்னாலயே ஏ.ஆர் ஆகியிருக்க வேண்டியது. எவனோ எம்பேருல ஒரு கேஸ் ஜோடிச்சு போட்டு... என் பேர்ல குத்தம் இல்லைன்னு வந்தாச்சு, இருந்தாலும் ஆறு வருசம் போனது போனதுதானே?  என்னமோ அரியேர்ஸ் வரும்கறாங்க, பாப்போம்”

சட்டென அவர்மீது ஒரு பச்சாதாபம் எழுந்தது.

“சொல்றேன்னு நினைக்காதீங்க வித்வான்ஸ்ஜி. உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? உங்க வேலையை மட்டும் பாத்துட்டுப் போங்க. சர்வீஸ் இன்னும் ரெண்டு வருஷம் இருக்கா?”

“ஒரு வருசம் ரெண்டு மாசம்” என்றார் வித்வான்ஸ் புன்னகைத்து “ என்னால சும்மா இருக்கமுடியலை சுதாகர். ஒரு அப்பாவி பையன்கிட்ட “ சீட் நான் வாங்கித்தர்றேன்’ன்னு சொல்லி ஒரு கிளார்க் பத்தாயிரம் வாங்கியிருக்கான். அந்த பையனோட அப்பா, குப்பை அள்றவரு. காண்ட்ராக்ட் வேலை வேற. ஏமாத்தறதுன்னு வந்தா ஒரு லெவல் இல்லையா? “

“இந்த கேஸைப் பிடிச்சு வித்வான்ஸ் புகார் கொடுத்திருக்கார் இப்ப. அந்தாளு அரசியல் பலம் இருக்கறவன். “என்றாள் மங்கை.
“இது வேணுமா சார்?” என்றேன்.

“வேணும் சார். நாம விட்டுடோம்னா எவன் இந்தப் பசங்களுக்கு துணை நிப்பான் சொல்லுங்க? எனக்கு விதிமுறைகள் தெரியும். கண் முன்னாடி ஒரு அநியாயம் நடக்குது. தட்டிக்கேக்க வேணாமா?”


இரு நாட்கள் கழித்து, வீட்டுக்கு வந்திருந்தார். முகத்தில் ஒரு சோகம் நிழலாடியதைக் கண்டேன்.
“பையனுக்கு காக்காய்வலிப்பு மாதிரி வந்திருச்சு. ஸ்டேஷன்ல விழுந்திருக்கான். நல்லவேளை, ரயில் வரலை. யாரோ அவன் பையில என் நம்பரைப்பாத்து கூப்பிட்டிருக்காங்க. இப்பத்தான் டாக்ஸியில அவனை வீட்டுக்குக் கொண்டுபோயிருக்காங்க.கிளம்பிட்டேயிருக்கேன்.”
’அடடா” என்றேன்.” முதல் தடவையா இது?”
“இல்ல” என்றவர் தயங்கினார் “ முந்தியே வரும். கஷ்டப்பட்டு படிச்சான். வேலை கிடைச்சதேன்னு நிம்மதியானேன். இப்ப திடீர்னு திருப்பி வந்திருக்கு. மூளைக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்றாரு. இவன் பாக்கற வேலையில அழுத்தம் இல்லாம இருக்குமா. சொல்லுங்க”

தாடியை வருடிக்கொண்டே மீண்டும் தொடர்ந்தார் “ கம்பெனியில தெரிஞ்சுதுன்னா வேலைலேர்ந்து நீக்கிடுவானோன்னு பயப்படறோம். சொல்லாம இருக்க எனக்கு முடியலை. ஏன் மறைக்கணும்னு தோணுது”

“வித்வான்ஸ்ஜி” என்றேன் திடமாக “ உங்களோட விதிமுறைகளையெல்லாம் ஒரு நிமிசம் ஒதுக்கி வைங்க. அவன் வாழ்க்கை அது. அவனைப்பத்தி ஒரு குறை சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. வேணும்னா அவனே போய்ச் சொல்லட்டும்”
“அதுவும் சரிதான்” என்றார் தீனமாக.

“இந்த ஆளு மேல எனக்கு நம்பிக்கை இல்லை” என்றேன் மனைவியிடம், அவர் போனபின்பு.

அடுத்த நாள் “ வித்வான்ஸை இன்னிக்கு ஒரு கமிட்டி விசாரிச்சிட்டிருந்தாங்க. பாவம்” என்றாள் மனைவி.

“அவர் கூட வேலை செய்யற ஒருத்தி சிபாரிசுல ஒரு   பையனுக்கு டிபார்ட்மெண்ட்ல சீட் வேணும்னு ஒரு பார்ட்டி கேட்டிருக்காங்க. இவர் ‘ மெரிட் லிஸ்ட்படிதான் பேரு வரும்”ன்னுட்டாரு. அந்தாளு அம்பதாயிரம் தர்றேன்னானாம். இவர் மாட்டேன்னிருக்காரு. அந்த அதிகாரி கோபமாபேச, இவர் பேச , அவ ஹராஸ்மெண்ட்டோ, என்னமோ ஒரு புகார் கொடுத்திருக்கா.”

“என்ன ஆச்சு” என்றேன் முதல்முறையாக ஒரு கலவரத்துடன்.

”தெரியலை. நான் கிளம்பறவரை விசாரணை நடந்துகிட்டிருந்தது”

இரவு நானே அவரை அழைத்தேன் ”  நாலு பேரு கமிட்டி சார். ஒரு ரவுண்டு முடிஞ்சாச்சு. நாளைக்கு. மேலிடத்துல கூப்பிடிருக்காங்க.  போணும்.”

“தனியா எப்படி போராடமுடியும், வித்வான்ஸ்? நீங்களும் உங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க, எதாவது அரசியல் பார்ட்டி, அசோசியேஷன்னு அழுத்தம் கொடுங்க. அப்பத்தான் வேலை நடக்கும்”

“தனியாத்தான் சார் எப்பவும் உண்மை போராடும். ராமன் பக்கம் எத்தனை மனுசன் நின்னு போராடினான். விலங்குகள்தான் நின்னுச்சு. மகாபாரதம்? துரியோதனன் பக்கம் படிச்சவன் அத்தனை பேரும் நின்னான். அறம் தனியாத்தான் நிக்கும் ஜெயிக்கும்”

அவர் போனை வைத்ததும் மனைவி “ அவருக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்துருவாங்க போலிருக்கு, கேள்விப்பட்டேன்” என்றாள்.

எனக்கு உறக்கம் வரவில்லை. அறம் எப்போதும் தனியாகத்தான் நிற்கும். அதற்குத் துணையும் வித்வான்ஸ் போல தனியர்கள்தான்,  பெரிய விசாரனைக் குழுவில் தனியாக வயதான ஒரு ஒல்லி உருவம் நிற்பதாகத் தோன்றியது. தனக்கென இல்லாமல், தனது விதிமுறைகளுக்கு வாதாட அது வந்திருப்பதாகத் தோன்றியது.

மனது அலைபாய, கம்பராமாயணத்தைப் புரட்டினேன்.

 ப்ரம்மாஸ்திரத்தில் கட்டுண்ட அனுமன் இராவணன் அவையில் நிற்கிறான். 

“கறுத்த மாசுணம் கனகமாமேனியைக் கட்ட ,
அறத்துக்கு ஆங்கோர் தனித்துணையாய் நின்ற அனுமன்”

அறத்திற்கு தனியான ஒரேயொரு துணை அனுமன்.. அங்கு ராவண அவையில் அன்று நின்றான். அறத்தை எடுத்துச் சொன்னான். வாலில் தீ வைக்கப்பட்டான்.

வித்வான்ஸ் வாழ்க்கையில், வருங்காலத்தில் தீ வைக்கப்படுகிறது. அவர் காக்கும் அறம் அவரைக் காக்குமா?

”அவர் பையனுக்கு நீங்க வேலைக்கு சிபாரிசு செய்ய முடியுமா? அவருக்குக் கேட்க ஒரு தயக்கம். எனக்குப் புரிஞ்சுது” என்றாள் மங்கை.

“சொல்லிவைக்கறேன். அவன் வேலையில இருந்தாத்தான் சான்ஸ் அதிகம். ஆனா, இந்த ஆளு அந்தக் கம்பெனியில போயி, அவனைப் பத்தி எதாச்சும் உண்மையை உளறி வைக்கக்கூடாதே? நீங்க எல்லாரும்  சொன்னா கேப்பாரா?”

மறுதலிப்பாகத் தலையசைத்து “எங்க?” என்றாள்.

No comments:

Post a Comment