Monday, November 30, 2015

கம்பனை ரசித்தல் -3

  "ஒரு ஆபத்து வர்றதுன்னு வைச்சுக்கோ, மனுசன் உலகத்துல எல்லா இடத்துலயும் ஒரே மாதிரிதான் எதிர்வினை செய்வான்.” ஞாயிறு காலை இப்படி உதயமானால், காமர்ஸ் படிக்கும் இளைஞர்கள் “குவாண்டம் மெக்கானிக்ஸ் எக்ஸ்ட்ரா லெக்சர் இருக்கு” என்று எதாவது சொல்லி ஓடிப்போவார்கள். அபிஜீத்க்கு இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் போறாது.

“ஏம்ப்பா? கல்ச்சர் மாறுகிறப்போ, நம்ம ரியாக்‌ஷன் மாறாது?” என்றான்.

“மாறும். ஆனா அந்தப் படிநிலைகள் மாறாதிருக்கு”
“அதெப்படி? ஒரு வீட்டுல யாரோ செத்துட்டாங்கன்னு வைங்க, நம்ம ஊர்ல ஆ ஊன்னு அழறோம். வலிக்க வலிக்க ஒப்பாரி பாட்டெல்லாம் கூட இருக்கு. . நார்த் இந்தியாவுல வெள்ளை வெள்ளையா ஜிப்பா, பைஜாமா போட்டுக்கறாங்க. வெளி நாட்டுல ஒருத்தன் அழறது கிடையாது. கறுப்பு கோட்டு... நிறையவே வித்தியாசம் இருக்கே?”

“நீ சொல்றது சடங்குகளின், சமூக விதியின் வகையில். நான் சொல்றது உணர்வுகள் ,அவை கொண்டுவரும் எதிர்மறை செயல்பாடுகள்...அது எல்லா இடத்துலயும் ஒண்ணாத்தான் இருக்கு” என்றவன் தொடர்ந்தேன்.

“ திடீர்னு ஒருத்தருக்கு வேலை போச்சுன்னா அவருடைய ரியாக்‌ஷன் இப்படி இருக்கும்.
முதலில் திகைப்பு. அதிர்ச்சி. எனக்கா இது நடந்தது?ன்னு ஒரு கேள்வி. மெல்ல உடல் மற்றும் மன நடுக்கத்தோடு அதனை எதிர்கொள்ளுதல்.
இரண்டாவது - உடல் மன கோளாறுகளின் தொடக்கம். தலைசுற்றி வருதல், குழறுதல், ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக், மன அழுத்தம். தலைமுடி நரைத்துப் போவதும் நடந்திருக்கிறது. அதிர்ச்சி செய்தியை உள்வாங்க நடக்கும் முயற்சியாக அரற்றுதல், ஒப்பாரி வைத்தல். புலம்பிப் பேசுதல், அதீதமான இறுக்கத்துடன் இருத்தல்”

“ரைட்டு இதான் நிறைய சிவாஜி கணேசன் படத்துல பாத்தாச்சே?”
“ஏய். சிவாஜியச் சொன்னே.. இருக்கு ராஸ்கல். இத்ற்கு அப்புறம் ஒரு விதமான அதீதப் பொறுப்புடன் குடும்பப் பாரத்தை கவனிக்கத் தோணும். அதீத ஒழுக்கம் வரும். இது நல்லதுதான். ஆனா ஒரு உணர்வு கொந்தளிப்பு வரும்.”

“எல்லாருக்குமே இதுதான் முடிவா?” என்றான் பயந்துபோய்.

“இல்ல. சிலர் மாறிப்போய் எல்லாம் தெய்வம்னு ஒரு விதமா சடங்குகள் சார்ந்த மதம் அல்லது ஒரு நபர் சார்ந்த குழுமம்னு போவாங்க. சிலர் தத்துவார்த்தமா சிந்தித்து தாடி வளர்த்து போகலாம். சிலர் உத்வேகத்துடன் வேற பயிற்சிகளை எடுத்துகிட்டு தன்னை மேம்படுத்திக்கொண்டு வேறு பாதையில் உற்சாகமாக முழுமூச்சோடு இறங்கலாம். இந்த மூன்றும் சாத்தியம்”

“ஓ. அப்ப எல்லாரும் நடந்துக்கறதை ஒரு மாதிரியாத்தான் guess பண்ணலாமங்கறீங்க,?”

“ம்.. கஷ்டம். மனசு ஒரு குரங்கு. ஆனா ஒரு குரங்கோட மனசு எப்படி தெளிவா இருந்திருக்கு தெரியுமோ, மனுசனை விட அதிக ஆளுமையோட?”

அவன் பேசவில்லை. நான் தூண்டப்பட்டுவிட்டேன் இனி அவன் கேட்காமலேயே சொல்லிவிடுவேன் என்பது அவனுக்குத் தெரியும்.

“வாலி மேல பட்ட அம்பு ராமனோடது என்று தெரிந்தது, அதிர்ந்து போறான்.”

”மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை... ராம என்னும் நாமந்தனை கண்களில் தெரியக் கண்டான்’- இது கம்பன் பாடல்.

அதென்ன கண்களில் தெரிய? இல்லூஷன்-காட்சிப்பிழை இல்லைங்கறான் கம்பன். அதோட வாலிக்கு ஒரு டெலூஷனும்(கருத்துப்பிழை) இல்லை. இதைச்சொல்ல ஒரு காரணம் இருக்கு. அவன் போருக்கு புறப்படறதுக்கு முன்னாடி தாரை சொல்றா ‘ சுக்ரீவனுக்குத் துணையா அந்த ராமன் வந்திருக்கான். அவன் அம்பு விட்டுறப்போறான், பாத்து” . வாலி சொல்றான் “ போடி, அவன் எம்புட்டு பெரிய ஆளு.. இப்படி எங்க சண்டைலலெல்லாம் வரமாட்டான். சும்மா அழுத, கொன்னுறுவேன்”. இப்படி, பேச்சு நடந்தப்புறம், ஒரு அம்பு அவனைத் துளைச்சா, இது ராமனா இருக்குமோன்னு சந்தேகக் கண் வந்திருக்கும்பாரு, அது டெலூஷன். இது இல்லாம நிஜமாவே, கண்களில் தெரியக் கண்டான்கறான்.”

“இந்த கம்பன் நிஜமாவே இப்படி சைக்காலஜி எழுதியிருப்பாரா, நீங்க சும்மா ஊத்தறீங்களா?”

“ரெண்டும்தாண்டா. சைக்காலஜி என்னமோ சிக்மண்ட் ப்ராய்டு வந்தப்புறம்தான் வந்ததுன்னு நினைக்காதே. அதுக்கு முன்னாடி மனுசனுக்கு மனசு இருக்கு, அது கேணத்தனமானதுன்னு அம்புட்டு நாகரிகமும் சொல்லியிருக்கு. என்ன, ஒரு ஆராய்ச்சின்னு பண்ணி, டாக்குமெண்ட் பண்ணலை. நடு நடுவே சளபுளன்னு பேசாதே, கதை வேணுமா , வேண்டாமா?”

“ஆங்... வேணும். சொல்லுப்பா”

“ம்.. வாலி முதல்ல நம்பலை. அதுக்கப்புறம் கோபத்துல என்னையா அடிச்சே?ன்னு கத்தறான் ராமன்கிட்ட. இது நியாயமில்ல, தர்மமில்லை, நீ ஒரு அரசனா?ன்னு நாக்கப்புடுங்கற மாதிரி கேக்கறான். ரெண்டு நிலை வந்துடுத்து பாரு”

“ஆ..ஆம்ம்மா! கரெக்ட்டுப்பா! அப்புறம்?”

“அவன் கேக்க,ராமன் பதில் சொல்றான். ராமனே கவுன்சிலிங்க் பண்ணியிருக்கான் பாரு. இப்படி கடவுளே முன்னாடி வந்து, நான் உன்ன ஏன் கொன்னேன்னா... ந்ன்னு பெருசா விளக்கம் கொடுக்கறது கம்பராமாயணத்துலதான் பாக்கமுடியும். வால்மீகி சொல்றார். ஆனா பட்டுன்னு முடிஞ்சுடும். கம்பன்ல இது பெரிசா விரிவாப் போகும்.

“அப்புறம்?” என்றான் ஆவலுடன்.

“நான் உன்னைக் கோவத்துல சொல்லிட்டேன்ல? பொறுத்தி-ங்கறான் வாலி. ‘எந்தம்பி ஒரு கொரங்குப்பய. மதுவருந்தி, எதாச்சும் தப்பு பண்ணினான்னா, எம்மேல விட்ட பார்,அந்த பாணத்தை அவன் மேல விட்டுராத”ங்கறான்”

அபிஜீத்தின் தொண்டை ஏறி இறங்கியது. ”சே, such a nice fellow"

“என் தம்பியப் பத்தி உன் தம்பியெல்லாம் ‘அண்ணனைக் கொன்னுட்டு பதவியில வந்தாம்பாரு”ன்னு கேலி செஞ்சா, தடுக்கணும்ங்கறான். என்ன பரந்தமனசு பாரு இவனுக்கு?

மெய்நிலை கண்டவனா,தன்னைக் கொன்னதுக்கு நன்றின்னு ராமனைப் புகழ்றான்” ஆவிபோம் வேலைவாய்ந்துருள் செய்தருளினாய், மூவர்நீ, முதல்வநீ, முற்றுநீமற்றுநீ, பாவநீ, தருமநீ,பகையுநீ உறவுநீ”-ங்கறான்.

அப்புறம் , நல்ல அண்ணனா, எப்படி அரசு நடத்தணும்னு சுக்ரீவனுக்குச் சொல்றான். இப்படி திடீர்னு நல்லவனா மனசு போகும்னு சொன்னேனா?”

“அங்!எக்ஸாக்ட்லி! அப்புறம்?”

“பையனைக் கூப்பிடறான். ‘அங்கதா, சின்னப் புள்ள மாதிரி அடம்பிடிக்காம, நான் சொல்றதக் கேளு”
‘நீங்க அட்வைஸ் பண்ற மாதிரி போர் அடிச்சானா?”
“ஏய். கிண்டலா? சொல்றான் கேளு “ என்சொல் பற்றுதையாயின், தன் மேற்பொருளுமொன்றில்லா மெய்ப்பொருள் வில்லும்தாங்கி கால் தரை தோய நின்று, கட்புலனுக்குற்றதம்மா” - இவன் அந்த பெரும்கடவுள். வணங்குடா’ங்கறான்”
நல்ல தந்தையா, பையனுக்கு அட்வைஸ் பண்ணி, தகப்பன் நிலையைத் தாண்டி, ஒரு யோக நிலைக்குப் போறான். அப்படியே போயிடறான்”

” ச்ச்ச். so sad... வருத்தமா இருக்குப்பா”

“நாம சொன்ன எல்லா நிலையும் அவனுக்கு வந்துருத்து பாரு. இதான் characterizationங்கறது. கம்பன் பிச்சு வாங்கியிருக்கான்”

”எங்கப்பா படிச்சீங்க இதை?”என்றான் வியப்புடன்.
”கம்ப ராமாயணம் விரிவுரை, அப்புறம் அற்புதமா இதைப்பத்தி “ சிறியன சிந்தியாதான்’ன்ன்னு ஒரு புக், அந்தக்காலப் பெரும் அறிஞர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருக்கார்.”

“அந்த நீலக்கலர் குட்டி புக்கு, அதுவா?”

“அதுதான். ரொம்ப வருஷம் கழிச்சு இப்பத்தான் கிடைச்சது சிறியன சிந்தியாதான் -ன்னு வாலியை கம்பன் சொல்றான். சின்ன அல்பமான விசயமெல்லாம் அவனுக்கு சிந்தனைல வரவே வராதாம். பரந்த அறிவு, மனசு வாலிக்கு, ஆனா, அவனுக்கே , ஒரு அதிர்ச்சின்னா, வருகிற எதிர்வினைப்படிகள் நமக்கு வர்ற மாதிரிதான்.”

அவன் அந்த புத்தகத்தை எடுத்து வந்து மேசையில் வைத்தான். இன்னும் முழுதுமாக ஒரு தமிழ்ப்புத்தகத்தைப் படிக்கும் நிலை அவனுக்கு வரவில்லை. பெரிய யானையொன்றை , விலங்குகள் காட்சிச்சாலையில் கண்டு மிரண்டு மகிழும் குழந்தையைப் போல அவன் பார்ப்பது இருந்தது.

சில வருடங்களில் பெரும் விலங்குகள் நட்புகளாகிவிடும்.

1 comment:

  1. valli really great sir raman will feel after this incident after vali death kambar explained very nice still i recollect my school days memories teached by tamil teacher

    ReplyDelete