Thursday, January 14, 2016

மற்றையெம் காமங்கள் மாற்று

“ அண்ணே, இவருக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க. மனுசன்னா ஒரு அன்பு வேணும். பையன் இப்ப காலேஜ்ல இருக்கான். அப்பா மாரி நான் ஆயிடக்கூடாதும்மா-ங்கறான். பொண்ணு பேசறதுக்கே பயப்படுது.” சேகரின் மனைவி கலங்கிய கண்களோடு எங்களிடம் சொல்வாள் என நானும் நண்பர்களும் எதிர்பார்க்கவில்லை.

சேகர் நல்லாத்தான் எங்ககிட்ட பேசுவார். வேலையில் சுத்தம். ஆனால் அலுவலகத்தில் சில மேலதிகாரிகளிடமும்,அவர் தம்பி, தங்கைகளிடமும், வீட்டிலும் வேறொரு முகம். சமீபத்தில் எங்கள் வட்டத்தில் ஒருவர் பதவி உயர்வு பெற்ற விருந்துக்கு அவர் வரவில்லை. அழைத்ததற்கு தட்டிக்கழித்துவிட்டார். அதே நேரத்தில், வேறொரு நண்பருடன் ஏதோவொரு உடுப்பி ஓட்டலில் இட்லி தின்றார். 

சமீபத்தில் பெங்களூரில் அடுத்த ஓட்டலில் தங்கியிருப்பதை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். ரூமிலிருந்து வெளியே போய்விட்டிருந்தார். திரும்பிவரும் வழியில், ஜனார்த்தன் ஹோட்டல் வாசலில் அவரைப் பிடித்தேன். ”ரூமுக்கு வரச்சொல்லிட்டு எங்க போனீங்க? செல்லுல அடிச்சடிச்சுப் பாக்கறேன். எடுக்கவேயில்ல?”

“ம்ம்”என்றார் ஒரு தர்மசங்கடத்துடன். அவர் முகத்தில் ஏதோவொரு தட்டிக்கழிப்பு தெரிந்தது.

“சேகர்... என்ன ப்ரச்சனை? உங்க மனைவி கிட்டத்தட்ட அழற நிலையில உங்களைப் பத்திச் சொல்றா. கலியாணமானப்போ நீங்க ரெண்டுபேரும் இருந்த அன்னியோன்னியமென்ன.. இப்ப ..”


‘அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா எதையோ நினைச்சுகிட்டு சொல்றா. மெனோபாஸ் நேரம்.. அதான்”

இருவரும் , வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களின் ஓரமாக நடந்தோம். “ஊராய்யா இது? கொஞ்ச வருசமுன்னால, ரோட்ல நடக்க முடிஞ்சது. இப்ப ப்ளாட்பாரத்துலயும் டூ வீலர் நிறுத்திவச்சிருக்கான். இங்க பாரு.” பேச்சை மாற்ற முயல்கிறார் என்பது புரிந்தது.


“என்ன ப்ரச்சனை சேகர்? நல்லா இருந்த வாழ்க்கையை ஏன் கெடுத்துக்கிறீங்க? உங்க தம்பி, தங்கையெல்லாம் உங்கமேல உயிரையே வச்சிருக்காங்க”

“ஏறிப்போன எவனும், ஏணிக்கு மரியாத செய்வானா? நான் அப்பிடியேதான இருக்கேன்?” 

திகைத்தேன். “ யார் என்ன சொன்னாங்க இப்ப?”

“ஒண்ணா ரெண்டா?நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர இருந்த பைசாவுல, தம்பியச் சேத்துவிட்டேன். அவன் இப்ப யு.எஸ்ல இருக்கான். தங்கச்சிக்கு, அமுதாவோட ரெண்டு சங்கிலியப் போட்டுத்தான் கலியாணம் செஞ்சு வச்சேன். அவ இப்ப அபுதாபில. எப்பவாச்சும் எங்கிட்ட’யும்’ பேசுவாங்க. நன்றிகெட்ட உலகம் சார் இது. பேசாம, அப்பாகிட்ட ‘நீங்க உங்க பிள்ளகளைப் பாத்துக்கோங்க. என்னை எப்படி கொஞ்சமா படிக்க வைச்சீங்களோ, எப்படி என் ஸ்காலர்ஷிப் பணத்துல தீபாவளிக்கு துணி எடுத்தீங்களோ, அந்தமாதிரி இவங்களையும் நடத்துங்க”ன்னு சொல்லியிருக்கணும். இப்ப நான் கீழ இருக்கேன். அவங்க எல்லாம் மேல போயாச்சி. அண்ணன் எல்லாம் ரெண்டாம் பட்சம்தான்”

“அப்படியெல்லாம் இருக்காது சேகர். வேற உலகம். வேற முக்கியங்கள். ”அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. தனது உக்கிரமான சிந்தனைகளில் முழுகியிருந்தார். 

திடீரென “ இஸ்க்கான் கோவில் போலாமா?” என்றார். “இப்பவா?” தயங்கினேன். திரும்பி வர நேரமாயிடுமே? நான் எதுவும் சொல்லுமுன்னே ஒரு பச்சைக்கலர் ஆட்டோவை அழைத்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் ,ஆட்டோவின் ஒலியை மீறி சத்தமாக தனது ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டு வந்தார். 

“.... இப்படி மச்சினன் சொல்றான். அங்? இவன் படிப்புக்கு எம்புட்டு செலவு பண்ணியிருப்பேன்? அமுதா அழுதான்னு, என் ம்யூச்சுவல் ஃபண்டு பைசாவெல்லாம் எடுத்து மூணே நாள்ல அவனுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன். படிடா-ன்னு. இப்ப ? அவன் கொழுந்தியா கலியாணத்துல “வாங்க”ன்னு சுருக்கமா ஒரு வார்த்தை சொல்லிட்டு என் தம்பி தங்கச்சிகிட்ட பேசப்போறான். ஸ்டேட்டஸ் வேண்டியிருக்கு ஆட்களுக்கு”

“சேகர்” என்றேன் பொறுக்க முடியாமல். “இதுல பலதும் நீங்க சித்தரிச்சுகிட்டதுதான் இருக்கும். அவங்க செஞ்சிருக்கலாம். மறுக்கலை. வெளிப்படையா அவங்ககிட்ட பேசிடறது நல்லது. மனசுல வைச்சு மறுகாதீங்க”

“என்ன மறுக? என் பையன்கிட்டயும் அதான் தள்ளி நிக்கறேன். இவனாச்சும் புத்திசாலித்தனமா பிழைச்சுகிடட்டும்”

“ஆனா, அவன் உங்களை தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கான். தெரியுமா உங்களுக்கு?” அவர் ஒன்றும் சொல்லவில்லை.

“ஒரு விதமான பொறாமையும், தாழ்வு மனப்பான்மையும் உங்ககிட்ட வந்திருக்கு. தவறுன்னு சொல்லலை. இயல்புதான். நாம வளத்தது மேல போய், கண்டுக்க மாட்டேங்கறது, அவங்களோட குறைபாடு. உங்களோடது இல்ல.”

“எவன் எவனெல்லோமோ ஜி.எம் ஆறான்...”

“ உங்களுக்கு ஆகணும்னா நீங்க இந்த வெறியை வேலைல காட்டுங்க. வீட்டுல நல்லாயிருங்க. .”

மெல்ல மெல்ல நூற்று எட்டுப் படிகள் ஏறத்தொடங்கினோம். ஒரு பேச்சு பேசாமல் ஏறுவது நல்லது என்பதால் அமைதியாக இருந்தோம்.
ஆரத்தி தொடங்கியிருந்தது. சேகர் இறுகி நின்றிருந்தார். துளசிமணி மாலையை யாரோ கொடுக்க, சப்பளமிட்டு அமர்ந்தோம். 

“அவன் கிட்ட விட்டிறுங்க. பழையசோறு தின்னு காலேஜுக்குப் போன நம்மள இன்னிக்கு சுடுசோறு திங்க வச்சதும் அவந்தான். நடந்து போன நம்மை கார்ல போகவச்சவனும் அவந்தான். நீங்களும், அவனுமான உறவுமட்டுமே நிஜம். “
“அப்ப மற்றெதெல்லாம்?” என்றார் கிண்டலான வறண்ட குரலில்.

“காமங்கள்.. ஆசைகள். எதிர்பார்ப்புகள்..”

“இதை என்ன செய்யணும்ங்கறீங்க? மனுசன்னா எதிர்பார்ப்புகள் இருக்கும். உங்களுக்கும் இருக்கு. “

“ஆமா இருக்கு” என்றேன் திடமாக “எல்லாருக்கும் இருக்கு. இங்க ஒன்றேயொன்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளுங்கள். இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றமேயாவோம், உமக்கேநாம் ஆட்செய்வோம்” வேறெந்த உறவும் உற்றமும் நிஜமல்ல. அதுல வர்ற கஷ்டங்களை ஏன் நினைக்கணும்? “

“இந்த எதிர்ப்பார்ப்புகள் தப்புங்கறீங்களா?”

“இல்ல. ஆனா இவை மாறணும்..அவன் மாற்றுவான்.. மற்றையெம் காமங்கள் மாற்றேலோரெம்பாவாய்”

“போகலையே சுதாகர்? நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்குது. என்ன உறவுன்னு தோணுது. நன்றிகெட்ட ஜென்மங்க:”

“விடுங்க. ” என்றேன். “ இந்த எண்ணங்களையும், இனிமே வர்றதையும் அவன் அழிச்சுப்பான். அதான் “போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினிற் தூசாகும்” அவங்கிட்ட உங்களுக்கு இருக்கிற பக்தியென்னும் தீ அதையெல்லாம் அழிச்சிறும். “

அவர் தொண்டைக்குழி ஏறியிறங்கியது. “ஏன் திடீர்னு இங்க வரணும்னு கேட்டேன்னு தெரியலை. என்னமோ தோணிச்சு. நான் ஒண்ணும் சாமியை வேரோடு புடுங்கற ரகம் இல்லை. அப்படியும்..ஏன்?”

நான் ஏதோ சொல்லுமுன் அவரே தழுதழுத்த குரலில் சொன்னார். 


“இன்றுயாம் வந்தோம் இரங்கேலோரெம்பாவாய்” 

சில நிமிடங்கள் கழித்து ஓரக்கண்ணால் பக்கத்தில் பார்த்தேன். அவர் கண்கள் மூடியிருந்தன.

3 comments:

  1. Anonymous11:38 AM

    super

    ReplyDelete
  2. bril sir. those who have even a grain of bakthi in them will shiver and shed tears at this writing, (as much as reading Manickavasagar) i guess. As I have imagined you as a scientist and a social scientist, i did not expect this.

    பல்லாண்டு பல்லாண்டு உன் தொண்டே சிறக்க
    ஏழேழ் பிறவியிலும் எழுத்துரைப்பாய் எம்பாவாய் !

    ReplyDelete
  3. நன்றி yen Kumaran. பிழையைத் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

    ReplyDelete