Friday, January 29, 2016

காரோட்டும் பெண்

”பொம்பளைங்க கோயில்ல அபிஷேகம் பண்ணக் கூடாதாம். எந்த காலத்துல இருக்கோம்?” எங்கள் கார் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. ஆரே மேம்பாலத்தில் எதோ லாரி பழுதடைந்து நின்றிருக்கிறது. பாலத்தின் கீழே சிக்னலில் பெரும் நெரிசல்.
“அங்?” என்றார் கண்ணன் ஐயர். ஓட்டுநரின் கவனமென்பது காரில் பேசுபவரின் சொற்களில் இருக்க வேண்டுமென்பதில்லை.
“அதென்ன பொம்பளைங்க கோயிலுக்குள்ள அபிஷேகம் பண்ணக்கூடாதுன்னு பேச்சு? சிந்தனை முறைகள்ல மாற்றம் வரணும். இல்லன்னா நாம வளரவேயில்லன்ன்னு அர்த்தம்.” ஷரத் சவாண் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை மடித்தார்.
“யாரு சொல்றாங்க?” என்றார் அன்வர்.அவர் எப்பவுமே இடையில் புகுந்து முதல்லேர்ந்து வாங்க-ன்னுவார்.
“யோவ். ஷீர்டி பக்கம் சிங்னாப்பூர் சனீஸ்வரர் கோயில்ல பெண்கள் அபிஷேகம் பண்ண 175 வருஷமா தடைன்னு இருக்கு. இப்ப திடீர்னு சில பெண்கள் பூஜை பண்ணப்போக, ஊர்க்காரங்க தடுத்து, அதுக்கு பரிகாரமா இன்னொரு அபிஷேகம் பண்ணினாங்க. அங்க பிடிச்சது வினை. சில பெண்கள் போராட்டத்துல குதிக்க, பகுத்தறிவுவாதிகள் கூட்டம் நேத்திக்கு, போராடும் பெண்களுக்கு ஆதரவா அறிக்கை விட்டிருக்காங்க. அவங்க வேண்டி வந்தா, ஹெலிகாப்டர் வச்சி சிங்னாகாப்பூர் போய் இறங்கப் போறாங்களாம். ஊர்க்காரங்க எதிர்க்கறாங்க. ”
”ஆங்!” என்றார் அன்வர் வியந்து. “ஹாஜி அலி தர்காவுல பெண்கள் நுழைய அனுமதி வேணும்னு நேத்திக்கு போராட்டம்னு பேப்பர்ல படிச்சேன். என்ன திடீர்னு?”
“எவன் கண்டான்?”என்றார் கண்ணன், மேம்பாலத்தில் மெல்ல கார் ஏறிக்கொண்டிருந்தது. போலீஸ்காரர்கள் வாகனங்களை நின்றுபோயிருந்த லாரியிலிருந்து விலகிச் செல்லக் கைகாட்டிக்கொண்டிருந்தனர்.
“பகுத்தறிவுவாதிகளூக்குத்தான் தெய்வ நம்பிக்கை கிடையாதே? அப்புறம் கோயில்லயும், தர்காவுலயும் இவங்களுக்கு என்ன வேலை?”
”அன்வர்,இவர்கள் கேள்வி பெண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான். அது கோயிலோ மசூதியோ சர்ச்சோ இல்லை”
“பகுத்தறிவுவாதிகள் ஹாஜிஅலி போராட்டம் பத்திப் பேசவில்லை. ஒன்லி சனீஸ்வரன் கோயில்” என்றார் கண்ணன் சிரித்தவாறே.
“அதெப்படி பேசுவாங்க? இந்து மதம் மட்டும்தானே அவங்களோட இலக்கு?” என்றார் சவாண்.
திடீரென வண்டி குலுங்கியது. ஹார்ன்கள் இங்குமங்குமாக அலறத்தொடங்கின. வலது பக்கமாக , ஒரு ஹோண்டா சிட்டி கார் , பெரிதாக உறுமி, மெல்ல மேலும் வலது புறமாக நகர்ந்தது. அருகிலிருந்த ஆட்டோ டிரைவர்கள், பைக் ஓட்டுபவர்கள் காரை நோக்கி கை காட்டி திட்டிக்கொண்டிருந்தனர்.
ஹோண்டா சிடி மெல்ல உறுமி, மேலும் விலகி, சீராகி பாலத்தில் ஏறியது. கண்ணன் கண்ணாடியை இறக்கிவிட, அனைவரும் கவனித்தோம். நடுத்தர வயதினரான ஒரு பெண்மணி காரை டென்ஷனில் ஓட்டிக்கொண்டிருந்தார். இருபுறமும் வந்த வண்டிகளில் இருந்தவர்கள், அவரை நோக்கி கன்னாபின்னாவெனத் திட்டிக்கொண்டிருந்தனர்.
”அவ மேல தப்பில்ல. சரியாத்தான் ஓட்டியிருக்கா. பாருங்க, முன்னாடி பைக்ல ஒருத்தன் வழுக்கி விழுந்திருக்கான். இவ ப்ரேக்போட்டு, வலதுபக்கமா வண்டிய ஒடிக்கலைன்னா, அவன் காலி”
“அப்ப ஏன் மத்தவங்க கத்தறாங்க?” இந்த கேள்வி அன்வருக்கு மட்டுமே வரும்.
“ஏன்னா, அவ பொம்பள” என்றார் கண்ணன் உரக்க, எரிச்சலில் கிண்டலாக.
அன்வர் தன் கேள்வியைத் தொடர்ந்தார் “அட, பகுத்தறிவுவாதிங்களுக்கு இறை நம்பிக்கைன்னு ஒரு தொடர்பே இல்லைன்னா, சம்பந்தமேயில்லாம ஏன் இப்படி குதிக்கணும்? லாஜிக்காவே இல்லையே?”
“அன்வர், அவங்க ரேஷனலிஸ்ட் மட்டும்தான். லாஜிக் உள்ளவங்கன்னு சொன்னாங்களா?”
காரின் மிக அருகே ஒரு ஆட்டோ வந்தது. அதன் டிரைவர், ரோட்டில் சிவப்பாக வெற்றிலைச்சாற்றை உமிழ்ந்துவிட்டு “ பொம்பளை கார் ஓட்டறா சாப். அதான் இப்படி ஆகுது” என்று ஏளனமாகச் சிரித்து, விரைந்தார்.
“ஒரு பெண் வண்டியோட்டறதை இன்னும் நம்ம ஆட்களால பொறுத்துக்க முடியலை. இதுல மும்பை ஒரு மெட்ரோபொலிட்டன் சிட்டின்னு பேரு வேற” என்றார் கண்ணன் கொதித்து. “என் மனைவி சொல்றா. அப்பப்ப, இப்படி எவனாவது பக்கத்துல வந்து “நீயெல்லாம் ஆக்டிவா ஓட்டணுமா? பாத்துப்போ”ன்னு கத்திட்டுப் போவனாம். ரொம்ப டென்ஷனாயிருவா.”
ஜோகேஷ்வரி சிக்னலில் அந்த ஹோண்டா சிடி அருகில் நின்றிருந்தது. அந்தப்பெண்ணிற்கு நாற்பது வயதிருக்கலாம். இன்னும் படபடப்பில் இருந்தார். சட்டென ஒரு இரக்கம் தோன்றியது. என்ன அவசரமோ, அவருக்கு? சரியாக சாலை விதிகளை மதித்து ஓட்டுவதற்கே , அவர் ஒரு பெண் என்பதால் திட்டுகிற, ஏளனம் செய்கிற இந்த சமூகத்தை என்ன சொல்ல?
அன்வர் சொன்னார் “ மொதல்ல இந்த பகுத்தறிவுவாதிங்க, எல்லாருக்கும் பொதுவான இந்த சமூக இடர்களையெல்லாம் நீக்கறதுக்கு குதிக்கட்டும். அப்புறம் ஹாஜியலிக்கும், சிங்க்னாப்புர் கோயிலுக்கும் ஹெலிகாப்டர்ல்ல போயி குதிக்கலாம். வந்துட்டாங்க”
எங்களுக்கு பச்சை விளக்கு ஒளிர, எட்டிப்பார்த்தேன். அந்தப் பெண்ணின் கார் நின்றுகொண்டிந்தது. அவருக்கு இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment