Thursday, February 11, 2016

கர்ம யோகி



யா யா ஸாஹேப்,” வாஙக, வாங்க,”
இது ஏதோ  டை கட்டின , கோட் போட்ட மராட்டிய சேஸ்ல் மேனேஜரோ, லிப்ஸ்டிக் மிளிரும் ரிசப்ஷனிஸ்ட்டோ இல்லை..
கோகுல்தாம் மெடிக்கல் செண்ட்டர் என்ற பகல்வேளை மருத்துவமனையில்,வருபவர்களின் செருப்புகளை கூண்டுகளில் எடுத்து வைத்து, டோக்கன் தருகின்ற சந்திரகாந்த் கோட்டியன் என்கிற மனிதர்.
பலவருடங்களாக நான் வியந்ததுண்டு. இத்தொழிலில் என்ன உற்சாகம் இருப்பதாக இவர் இப்படி புன்னகையுடன் கூடிய முகத்தோடு அனைவரையும் வரவேற்கிறார்? அதுவும் வருபவர்கள் முக்காவாசிப் பேர், வலியில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவர் சொல்வதைக் கேட்காமலேயே, பதிலுக்கு முகமன் கூறாமலேயே செருப்பைக் கழட்டிப் போட்டுவிட்டு படியேறுவார்கள். கோட்டியன், ஒரு வார்த்தை முணுமுணுக்காமல், பொறுமையாக அவற்றை கூண்டுகளில் எடுத்துவைத்து, அவர்களுக்கு டோக்கனை கொடுப்பார்.

முந்தாநாள்தான் , இத்தனை வருடங்கள் கழித்து, அவரிடம் பெயர் கேட்கத் துணிந்தேன். பெயரைச் சொல்லிவிட்டு, சட்டென ஒதுங்கிவிட்டார். பேச விருப்பமில்லாதவரைப் போல. எனக்கு அது புதிராக இருந்தது.. மருத்துவரின் அறைக்கு வெளியே, நீண்ட வரிசை... காத்திருக்கும் வேளையில், மெல்ல வாசலுக்கு வந்து, அவரை , அவர் அறியாமல் கவனித்தேன்.
இந்த உபசரிப்பு செயற்கையாக இருக்குமானால், அவரது முகபாவங்கள் , ஆட்கள் வராத போது மாறவேண்டும். மருத்துவமனையின் பிற தொழிலாளிகளிடமும், சிரித்த முகத்தோடே பேசினார். சிறு குழ்ந்தைகள் வீறிட்டு அலற அலற , விரைந்து கொண்டுவருபவர்களை முதலில் அனுப்பினார். “செருப்பை கீழே போட்டுட்டுப் போங்க.. வர்றப்போ நான் பாத்துக்கறேன்”.
பின்னஃபோர் யூனிஃபார்மில், அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு  அழுதபடி வந்த குண்டு சிறுமியைப் பார்த்து,
“அட்டே, பேட்டியா, எதுக்கு அழறே? நல்ல பிள்ளையில்ல நீ?” என்றவர், அதன் அம்மாவைப்பார்த்து “காய் ஜாலா?( என்ன ஆச்சு?)” என்றார்.
“புக்கார்...( காய்ச்சல்)” என்றபடி அந்தம்மா உள்ளே விரைந்தாள். அடுத்து வந்த ஒரு பணக்காரக் கிழவர், சிடுசிசு முகத்தோடு, செருப்பை உதறி, ஒரு வார்த்தை கேட்காமல் மேலே படியேறினார். சந்திரகாந்த் , புன்னகையுடன் செருப்பை ஒரு கூண்டில் வைத்துவிட்டு “ ஓ சாகேப், 74 டோக்கன். ஞாபகம் வச்சுக்குங்க” என்றார். அவரும் கேட்டதாகத் தெரியவில்லை, இவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்து வந்த இளம் தம்பதியினரின் கையில் சிறு குழந்தை டவலில் புதைந்து வைத்திருந்ததைக் கண்டு,
 செருப்பை விட்டுட்டுப் போங்க. நான் பாத்து எடுத்து வச்சுக்கறேன்”..

என் மகன் பலமுறை வியந்து போய் அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். ஸ்கூலில் ‘நான் கண்ட நல்ல மனிதர்‘ என்பதாக அவரைப் பற்றிச் சொன்னதாக ஒரு முறை சொன்னான்.

மருந்துகளை வாங்கி வரும்வழியில் சாலையோரம் இஸ்க்கான் மக்கள் ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா என்று டேப் ஒலித்துக்கொண்டிருக்க, சிறு டேபிளில் பகவத் கீதையை மலிவு விலையில் கொடுத்துக்கொண்டிருந்தனர். மகனுக்கு ‘கீதை ஒரு அறிமுகம்’ என்ற புத்தகத்தை வாங்கிக்கொடுத்தேன். அவன் படித்திருக்கிறான் என்றாலும், பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் செறிவை உண்டாக்கும்.
அங்கிருந்த மூதாட்டி ஒருவர் அவனிடம் ‘கர்ம யோகம், கர்ம யோகி ‘ பற்றி சிறிது விரித்துரைத்தார்.

"வலி, இன்பம், லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி இவை அனைத்தையும் சமமாக வைத்து, போரினில், போரின் நிமித்தம் மட்டும் கருதிப் போரிடுவாய். இவ்வாறு செய்தால் பாபம் ஏற்படாது”

 நன்றி சொல்லி மீண்டும் நடந்தபோது அவன் கேட்டான் “ கர்ம யோகி-ன்னு நாம யாரைச் சொல்லலாம்பா?”

இருவரின் மனதிலும் இருந்த பெயர் ஒன்றுதான்.

No comments:

Post a Comment