Sunday, February 21, 2016

தெளிதேனும் சர்க்கரையும்

”தேன் சுத்தமா இருக்கா, கலப்படமா இருக்கான்னு எப்படி கண்டுபிடிப்பீங்க?”

ஒரு திருமண வரவேற்பு நிகழ்வு. இதில் வெட்டியாகப் பேசுவதற்கு ரியல் எஸ்டேட், மோடி, ஜெயலலிதா, ஜோக் என ராகுல் காந்தி, மன்மோஹன் எனப் போய்க்கொண்டிருந்த இடத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இப்படி ஒன்று.
கொஞ்சம் மவுனமாக இருந்தேன். அறிவியல் ரீதியாகப் பார்ப்பதை சொல்லத் தொடங்கினால், மெல்ல ஆட்கள் காபி வைச்சிருக்கிற இடமாகப் பார்த்து நழுவுவார்கள்.


“தண்ணியில சில சொட்டுகளை விட்டுப் பார்க்கணும். கலந்திருச்சுன்னு வைங்க- கலப்படம், அப்படியே இருந்ததுன்னா சுத்தமான தேன். ”

“அட அதெல்லாம் வேணாம். நாய்க்கு வைங்க. சுத்தமா இருந்தா வாயை வைக்காது”

தேனில் சர்க்கரைப் பாகைக் கலப்பதைக் கண்டுபிடிப்பதை ஒரு நாய் நக்கிச் சொல்லிவிடுமென்றால், FSSAI எதுக்கு, விலையுயர்ந்த அறிவியல் கருவிகள் எல்லாம் எதுக்கு?


சர்க்கரை என்பது ஒரு மூலக்கூறு மட்டுமல்ல. அதில் பல வகையுண்டு. ஐஸோமர்கள் உண்டு. சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ் ,க்ளூக்கோஸ் என்றெல்லாம் படித்திருப்போம். அவற்றின் மூலக்கூறு எடை ஒன்றாக இருந்தாலும், வடிவம் மாறியிருக்கும். எனவே அதனுள் போகும் ஒளியை ஒன்று இடது புறமாக, மற்றது வலது புறமாகத் திருப்பும் என்றெல்லாம் படித்த நினைவிருக்கலாம்.
தேன் ஒரு கலவை. கொஞ்சம் சிக்கலான சர்க்கரைக் கலவை. இதில் சுக்ரோஸ், க்ளுக்கோஸ் எனச் சேர்த்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது.
நம்ம ஆட்கள் ஜோராக தேனீக்களையே ஏமாற்றுவார்கள்.

தேனீ,  தான் குடிப்பதற்காக வைத்திருக்கும் தேனையும் பேராசையில் இவர்கள் முதிர்வற்ற தேனாக இருக்கும்போதே எடுத்துவிடுவார்கள். தேனீக்களுக்கு உணவாக, சர்க்கரைப் பாகை தேன் கூட்டின் உட்புறம் ஊசி மூலம் செலுத்துவார்கள். இது மனிதப் பேராசையின் ஒரு விகார முகம்.
இப்படி முதிர்வற்ற தேன் எடுக்கப்பட்டால் அதில் நீர் அதிகம் இருக்கும் ( 25%) . தேன் கூட்டில், தேனீக்கள் இந்த அதிக நீரை தனது சிறகடிப்பால் மட்டுமே உலர வைக்கும். அதன்பின் கிடைக்கும் தேன் நெகிழ்வாக இல்லாமல், நல்ல தரமாக இருக்கும்.


ரைட்டு. சர்க்கரைப்பாகு கலந்த தேனை எப்படி அறிகிறார்கள்? தனிமங்களின் ஐசோடோப்பை வைத்து மட்டுமே ஓரளவு உறுதியாகக் கண்டுபிடிக்க முடியும். இதற்கென ஐசோடோப் ரேஷியோ மாஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் ( isotope Ratio Mass Spectrometer -IRMS) என்ற விலையுயர்ந்த கருவியை பயன்படுத்துவார்கள்.

கார்பனினின் ஒரு ஐசோடோப் C13. பொதுவாக கார்பன் 12ல்தான் காணப்படு. இந்த இரண்டிற்கும் உள்ள விகிதாசாரம், பொருட்களில் கார்பன் 13 இருக்கும் அளவினால் மாறும். தேனீ, சென்று தேன் எடுக்கும் செடிகளில் பொதுவாக கார்பன் 13/கார்பன்12 விகிதத்தில் மிகக் குறைவாக இருக்கும். நம்ம கரும்பு, பீட்ரூட் என்ற சர்க்கரை தயாரிப்பில் உதவும் தாவரங்களில் இந்த விகிதம் அதிகமாக இருக்கும். எனவே சுத்தமான தேனில் கார்பன் 13/கார்பன் 12ன் விகிதம் மிகக் குறைவாக இருக்கவேண்டும்.




இப்ப, சர்க்கரையை சேர்த்திருந்தால் கார்பன் 13/12 விகிதம், டபாயடீஸ் ஆளு,ரெண்டு ப்ளேட் கேசரி சாப்டப்புறம் சுகர் எவ்வளவு இருக்குன்னு பார்க்கறதைப் போல , எக்கச்சக்கமா எகிறியிருக்கும். ( கொஞ்சம் அதிகமாச் சொல்றேன். கலப்படம் செய்யறவங்க மஹா கில்லாடிகள். அவங்ககிட்டயும் இந்த கருவிகள் இருக்கு!).

மிக நுண்ணிய அளவில் இந்த விகிதங்களை அளந்துதான் சர்க்கரை கலப்படம் இருக்கா இல்லையான்னு பார்க்க முடியும். நாயெல்லாம் நக்கிச் சொல்லிட முடியாது”


இதைச் சொன்னேனா? பக்கத்தில் இருந்த மஹேஷ் முகம் மாறிப்போச்சு.
“ஏண்டா?ன்னேன்.


“ஊருக்குப் போறப்பல்லாம் , மாமியார் ”மாப்ள, மலைத்தேனு வாங்கியிருக்கம். நல்லாருக்கான்னு சாட்டுப் பாத்துச் சொல்லுங்க”ன்னுவாங்க. இப்பல்லா தெரியுது?, நான் யாருன்னு நினைச்சிருக்காங்கன்னு”

No comments:

Post a Comment