Tuesday, July 05, 2016

நிஜ வரலாறும் நாம் கற்ற வரலாறும்



திருநெல்வேலி எழுச்சி (Tinneveli uprising) பற்றி சில கேள்விகளும், எதிர்வினைகளும் வந்தன. பலரும் சொன்னது”இப்படி ஒன்று நடந்ததே தெரியாது”. அது ஆச்சரியமல்ல. நமது கல்வித்துறைகளின் பாடத்திட்டம் அப்படி.

’கானிங் பிரபு ஏன் கருணையுள்ள கானிங் என்று அழைக்கப்படுகிறார்? துருக்கியின் கிலாஃபத் இயக்கத்தில் காந்தியடிகளின் கருத்து யாது?’ என்பது போன்றவற்றை மட்டுமே அவை கற்றுக்கொடுத்தன. சந்திரசேகர் ஆஸாத், திங்க்ரா, சவர்க்கர், சிட்டகாங் புரட்சி என்பது பற்றி அவை பேசுவதே கிடையாது என்பது கசப்பான உண்மை.

நமது சுதந்திரப் போராட்டம் பல கட்டங்களில் (Phase) நிகழ்ந்த ஒன்று. ஒரே சீராக ஒரே தலைவரின் ஆணையில் நடந்த போரல்ல. 1857, 1882-1918, 1918-1947 எனப் பெருவாரியாக இக்கட்டங்களை வகுக்கலாம். இதுவும் ஒரு தன்னிலைப் பார்வை (subjective view) யாகவே கொள்ளமுடியும். வரலாற்றிஞர்கள் இன்னும் சிறப்பாக, சுதந்திரக் கிளர்ச்சியின் காரண, காரணிகளையும், அணுகுமுறையையும் கொண்டு பிரிப்பார்கள். 

அன்னிய ஆடை தயாரிப்புகள் புறக்கணிப்பு, சுதேசி பொருட்களை பயன்படுத்தல், காதியை ஆதரித்தல் என்பது 1918ன்பின் காந்தியின் வருகையின் பின்னான கட்டத்தில் என்று பொதுவாகக் கருத்து இருக்கிறது. அது 1900களில் உதித்த சிந்தனை. அந்நிய பொருட்களை புறக்கணிப்பதை ஒரு அடையள நிமித்தமாக  அந்நிய நாட்டுத்துணிகளை 1905ல் சவர்க்கர் பூனாவில் எரித்தார். முதலில் அத்திட்டத்தை  ஆதரிக்காத திலகர், அன்று அங்கு வந்து பாராட்டி வாழ்த்திய  ஒரு செயல். காதியை அணியவேண்டும் என்பதை 1900களில் நமது சுதேசி தலைவர்கள் முன்னிறுத்தினர். 

இதெல்லாம் கண்டவர் காந்தி. அதன் உள்ளிருந்த நாட்டுப்பற்றையும், நாட்டில் அனைவரையும் சென்றடையக்க்கூடிய தீவிரத்தையும் அறிந்தார் அவர். இதனை தன் போராட்டத்தில் முன்வைத்தார். அதில்  தனக்கு முன்னிருந்தவர்களின் செயலைத் தனதாக்கும் முயற்சி எதுவுமில்லை.

ஆனால் பின்னாளில் வந்த அரசியல்வாதிகள், அவர்கள் ஆதரித்த வரலாறு புனையும் அறிஞர்கள், காந்திக்கு முன்பிருந்தவற்றை படுபுத்திசாலித்தனமாக இருட்டடிப்பு செய்ததன் விளைவுதான் நமது கோணலாக வளர்ந்து நின்ற பாடத்திட்டங்கள். 

தென்னிந்தியாவில் ஏதோ ஒன்றுமே நிகழாததுபோல ஒரு கருத்து அதில் காணலாம். அதுவும் இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே போராடியது போன்ற ஒரு கணிப்பை நம்மில் ஏற்படுத்தியதும் கண்கூடு. உண்மையில், பொலிகர் புரட்சி, வேலுத்தம்பி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதி, மாடசாமிபிள்ளை, நீலகண்ட ப்ரம்மச்சாரி, அரவிந்தர், வ.வே.சு ஐயர் என்பவர்களின் தியாகத்தை தமிழக பாடநூல்கள் முன்வைக்கவே இல்லை. வாஞ்சிநாதனின் தியாகம்,  ஜாதிய வெறியால் விளைந்த ஒன்று என்பதாகக் காட்டும் அவலம்தான் இப்போது நடக்கிறது. நாம் அதிகம் அறியாத சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் சிலரைப்பற்றி இங்கு வாசிக்க இயலும்.

http://www.thebetterindia.com/…/unsung-heroes-freedom-figh…/


உண்மையில் அன்று இருந்த தலைவர்கள் ‘இந்திய அளவில்,உலக அளவில்’ நிகழ்வுகளைத் தெளிவாக அறிந்திருந்தனர். அதனை மக்களிடம் அடையாளங்கள் மூலம் பரப்பவும் முயற்சித்தனர். பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்கண் பார்வை வைத்தாள்” என்று தொடங்குவதும் “ கரும்புத்தோட்டத்திலே” என்று வெளிநாட்டில் அடிமைகளாக வாழ்பவர்களுக்கு வெம்புவதும் இதன் வெளிப்பாடுதான். 

இந்த திருநெல்வேலி எழுச்சி , பிப்பின் சந்திரபால் (B.C.Pal) விடுதலையானதைக் கொண்டாடுவதாக, மக்களிடம் சுதந்திர உணர்வைப் பரப்ப வ.உ.சியும், சிவாவும், பத்மனாப ஐயங்காரும் திட்டமிட்ட ஓரு பேச்சுக்கூட்டத்தின் எதிர்விளைவால் வந்த எதிர்ப்புதான். இக்கூட்டத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக மக்களைத்தூண்டினார்கள் என்பதாகத்தான் வ.உ.சி பிள்ளை, சுப்பிரமணிய சிவா கடும் சிறை தண்டனை பெற்றனர். வ.உ.சி பெற்றது இரட்டைத் தீவாந்தரத் தண்டனை - 40 ஆண்டுகள். அந்தமான் சிறையில் இடம் இல்லாததால், கோயமுத்தூர் சிறையில் வைக்கப்பட்டார். செக்கிழுத்தார். இன்னலுற்றார்.

சவர்க்கர்  பெற்றது 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை. இந்திய சுதந்திர வரலாற்றிலேயே அதிகபட்சமான தண்டனை பெற்றவர் சவர்கர்.( நாகலாந்து ராணி கைடின்லியு ஆயுள்தண்டனை பெற்றார். அதுதான் அதிகபட்ச தண்டனை என்றும் கருத்து நிலவுகிறது. இவர்களது உயர்ந்த லட்சியத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். யார் அதிக தண்டனை பெற்றவர்? என்பதல்ல இங்கு பேச்சு). அந்தமான் சிறையில் 11 வருடங்கள் அவர் சிறு அறையில் அடைக்கப்பட்டார். அவர் கண்ணெதிரே, தியாகிகள் தூக்கிலிடப்படுவார்கள். இது அவர் பெற்ற சித்திரவதைகளில் ஒன்று.

இதையெல்லாம் நாம் பள்ளியில் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோமா? இல்லை. விளைவு? இன்று பேஸ்புக் பதிவுகளில் “ சவர்க்கர் யாரு?” என்ற கேள்விகள் வருகின்றன. மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்விகளில் ஒன்று அது. 

தலைவர்களை மட்டுமே சொல்லமுடியும் என்பது சரியான வாதமல்ல. ஒரு தலைவர் கீழ் இந்நாடு விடுதலையடையவில்லை. அப்படிப்பேசுவது என்னமோ ஒரு வலிமையான படைத்தலைவனின் கீழ் போரிட்டு நாடு விடுதலைபெற்றது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. நமது ஜனநாயகத்தைப் போலவே, பல தலைவர்கள் பல கட்டங்களில் பல காரணங்களுக்காக உரிமைப்போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதனை முறையாக மதித்து, அடுத்த தலைமுறையிடம் உண்மையாகச் சேர்ப்பதே நமது தலையாய கடமை. 

இனியாவது இக்கல்வித்திட்டங்கள் சரிசெய்யப்படவேண்டும். அரசியல் காரணமாக, ஓட்டுகள் சேகரிக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்ட போலித்தனமான வரலாறுகள் திருத்தப்படவேண்டும். அரசு மட்டுமல்ல, தனியார் ஊடகங்கள் இதில் ஈடுபட்டால்தான் முடியும்.

2 comments:

  1. பக்கம் ஸ்க்ரீனுக்குள் வராததால் படிக்க சிரமமாக இருக்கிறது சார்

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்திற்கு நன்றி சார். திருத்த முயற்சிக்கிறேன்.

      Delete