Friday, March 02, 2018

விருப்பமும் முன் முடிவுகளும்



நண்பர் ஒருவரின் விருந்திற்கு நானும் என் மனைவியும், மும்பையின் நெரிசலான வெஸ்டர்ன் எக்ஸ்ப்ரஸ் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தோம். ”மாருதி டிஸைர் தான் மிக அதிகமாக விக்கிற காரோ?” என்றார் என் மனைவி.

சற்றே குழம்பினேன். அன்றையப் புள்ளி விவரப்படி,  அது, ரெண்டாவதாக அதிக விற்பனையாகும் கார். முதல் இடம் அல்டோ. ப்ரச்சனை அதுவல்ல. பல விதமான கார்கள் தெரிந்தன. ஓபராய் மால் அருகே சென்றுகொண்டிருந்தோம்  என்பதால், விலையுயர்ந்த , ஆடி, பி.எம்.டபுள்யூ, பென்ஸ் எனப் பலதரப்ப்பட்ட படகுக்கார்கள் இருக்கையில், எங்கிருந்து டிஸைர் வந்தது?

”அங்க பாருங்க, ரெண்டு போகுது. இதோ, நமக்குப் பின்னால, ரெட் கலர்..”  இருபது கார்கள் செல்லுமிடத்தில் நான்கு கார்கள் டிஸைர். அது அவருக்குத் தெரிந்திருக்கிறது.

அதாவது அந்தக்கார் கவனத்தில் வந்திருக்கிறது. மற்ற கார்கள் கண்ணில் பட்டாலும் கவனத்தில் இடம்பெறவில்லை. இது ஏன்?

பின்னரே எனக்கு நினைவு வந்தது. ஒரு நாள் முன்புதான் புதிய கார் வாங்குவதற்குச் சென்று, டிசைர் ஒன்றைப் பதிவு செய்துவிட்டு வந்திருந்தோம். அவரது கவனத்தில் டிஸைரின் தாக்கம் இருந்த்தால், ரோடெல்ல்லாம் டிஸையர் காரே தெரிந்திருக்கிறது.

 நமக்குப் பிடித்த ஒன்றை உலகமே விரும்புவதாகத் தோன்றும் கவனப்பிழை, பலவற்றிலும் பார்க்கலாம்.  நான் வாங்கிய கம்பெனியின் பங்குகள் ஒரு ரூபாய் உயர்ந்தாலும், மார்க்கெட் உயர்ந்த்தாக நினைப்பது. நமக்குப் பிடித்த நடிகர் என்பதால் படம் குப்பையாக இருந்தாலும், நல்லா இருக்கு என்பது. டீச்சர்களிடமே இந்தக் கவனப்பிழை இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தனது வகுப்பில் தனக்குப் பிடித்த மாணவனை அனைவருக்கும் பிடித்திருக்குமென நினைப்பது அதன் நீட்சி.
சுருக்கமாகச் சொன்னால் ‘ நாம் எதிலும், எதைப் பார்க்க விரும்புகிறோமோ, அதையே பார்க்கிறோம்”  இதில் முக்கியமான சொல் “ பார்க்க விரும்புகிறோமோ”. ஒரு நிகழ்வு, காட்சி புலப்படுமுன்னரே, அதைக் குறித்தான கவனத்தில் ஒரு சாய்வு ஏற்பட்டு விடுகிறது.

இதன் பிரச்சனை, தனக்குப் பிடித்திருக்கும் ஆள் அல்லது பொருளில் இருக்கும் குறையை நம் கவனத்தில் கொண்டுவராமல் செய்துவிடுவது. நாம் முதலீடு செய்திருக்கும் ம்யூச்சுவல் ஃபண்ட், கம்பெனிப் பங்கு பலரிடமும் இருப்பதாகத் தேடி , அது உண்மையென நம்பி, கவனியாமல் விட்டுவிட்டு, நிதியை இழப்பது ஒரு உதாரணம்.

முதலில் ஒன்றை முடிவெடுத்துவிடுகிறோம். அதன்பின் நம் முடிவு சரியாக இருப்பதாக உறுதிப்படுத்த, பலர் நம்மைப்போலவே இருப்பதாக நினைத்துவிடுகிறோம். அதன் எடுத்துக்காட்டாக, நம் கவனத்தை , நம் முடிவுக்குச் சாதகமாக இருக்கும் நிகழ்வுகளில் செலுத்தி நம்மை மீண்டும் நம்ப வைத்துக் கொள்கிறோம். இது பொய்யான ஆறுதல் என்பதை நம் சிந்தனை சொல்லுவதே இல்லை.

பதின்மவயதில் தான் விரும்பும் ஒருவனை தன் தோழிகள் “நல்லவனா இருக்காண்டி” என்று சொல்வதில் , தன் விருப்பத்திற்குச் சாதகமாகப் பலர் சொல்வதாக மயங்கி, வீணே காதலில் வீழ்ந்து அழிந்தவர் பலருண்டு. “அவன் என்னையும் ஒரு மாதிரிப் பாக்கறான். சரீயில்ல” என்று சொல்லும் தோழியை “பொறாமையில சாகறா” என்று விலக்கவே தோன்றும்.

அம்பாஸடர் கார் கிட்டத்தட்ட அதன் முடிவு நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில் ஒரு முதிய நண்பர் “வெள்ளை அம்பாஸடர் , நாலு லட்சம் சொல்றான். வாங்கலாம்னு இருக்கேன்” என்ற போது “ அது என்னிக்குமே ஓடும் சார். க்ளாஸிக் காராச்சே அது?” என்று சொன்ன நண்பர்கள் , அவர் , காருக்கு உதிரி பாகமில்லாமல் திண்டாடும்போது  “ அப்பவே நினைச்சேன்… கொஞ்சம் நிதானிச்சிருக்கலாம்” என்றார்கள். இதை ஏன் அப்பவே சொல்ல்லை? என்றால் “ வாங்கணும்கறாரு. அதுக்கு ஏன் நாம முட்டுக்கட்டை போடணும்? நல்லதாச் சொல்லணும். இல்ல,  ஒண்ணுமே சொல்லக்கூடாதுன்னு ஒரு பாலிஸி” என்றார்கள். தாங்கள் அறியாமலே, சமூக ஒத்துணர்வுப் பிழை ஒன்றினைச் செய்திருக்கிறோம் என்பதை அவர்களும், அவரும் அறியவில்லை.

இதனாலேயே, திருக்குறள் போன்ற  பதினெண்கீழ்க் கணக்கு அறிவுரை நூல்கள், தோழமை பற்றிச் சொல்லும்போது “ இடித்துரைப்பவன் தோழன்” என்றன. நாம் சமூக ஒத்துணர்வுப்பிழையில் அழுந்தும்போது, அதனை நீக்கும்விதமான பின்னூட்ட்த்தைத் தருபவர்கள் உண்மையான நலம் விரும்பிகள். ஆனால், அவர்களை அந்த நேரத்தில் பிடிக்கவே பிடிக்காது.

சமூக ஊடகங்கள் ஒரு சாய்வு நிலையிலேயே செய்திகளை வெளியிடுவதில் இந்த சமூக ஒத்துணர்வுப் பிழையை வளர்க்கிறது. நமக்கு ஒரு அரசியல்வாதியைப் பிடிக்கவில்லை என வைத்துக்கொள்வோம். அவருக்கு எதிராக வரும் செய்திகள்தாம் நம் கவனத்தில் அதிகம் படும். நமது சிந்தனை “ நிஜமாகவே அந்தாளு ரொம்ப மோசம்தான்.நாம நினைச்சது சரியாத்தான் இருக்கு. நல்லதே நடக்கல, இந்தாளு ஆட்சியில” என்றே செல்லும். அதே ஊடகத்திலோ, அல்லது பிற ஊடகங்களிலோ, அவர் செய்த நிஜமான நற்பணி பற்றி வந்திருந்தாலும், நாம் அதனைப் பார்த்திருந்தாலும், கவனத்தில் பதிக்க மாட்டோம்.

ஒரு கருத்து பற்றி அடிக்கடி, அதற்குச் சாதகமாகவே செய்திகள் வந்தவண்ணமிருந்தால், சட்டென ஒரு கணம் நாம் பின்வாங்கவேண்டும். உலகத்தில் ஒரு நிகழ்வுக்கு எதிர் நிகழ்வுகள் நிகழப் பல சாத்தியங்கள் உண்டு. எனக்கு மட்டும் ஏன் ஒரே சாத்தியம் தென்படுகிறது?

அந்தச் சிந்தனையிலிருந்து சற்றே விலகி சில நாட்கள் இருந்தால், பிற நிகழ்வுகள் கவனத்தில் வரும். நாம் சாய்வற்று சிந்திக்க சாதகமான சூழ்நிலை ஏற்படுகிறது. சில மணி நேர அவகாசம் போதாது என்கின்றனர் ஆய்வாளர்கள். சில வேளைகளில், சூழ்நிலையை மாற்றுவதும் சாதகமாக இருக்கிறது. கொதிப்படைந்து வீட்டில் சண்டை போட்டுக்கொண்டு இருப்பவர்கள், அந்த இடத்தை விட்டுத் தற்காலிகமாக விலகுவது விவாதங்களைத் தவிர்க்கும்.

நேராக யோசிப்பதில் ஒரு முக்கிய உணர்வு நிலை, நாம் சிந்திப்பதைக் குறித்து சிந்திப்பது. நான் சிந்திப்பதன் தூண்டுதல்கள் என்ன? என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டுமென்றால், நமது சிந்தனை பற்றிய தன்னிலை விமர்சனம் தோன்ற வேண்டும். இதற்குத் தனியாகப் பயிற்சி தேவை. எவ்வாறு பயிற்சி செய்யவேண்டுமென்பது அவரவர் தன்னிலை உணர்வு பொறுத்த்து என்றாலும், ஒரு நாளில் ஒரு முறையேனும் தன் சிந்தனை குறித்தான விமர்சனம் செய்வது உகந்தது.


3/3.2018ல் தினமணி.காம் -ல்  வந்திருக்கும் ”நேரா யோசி” தொடரின் 10-வது அத்தியாயம் “ விருப்பமும் முன் முடிவுகளும்”
http://bit.ly/2FLQDP1

1 comment:

  1. சிறப்பான விளக்கம் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் தனக்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க தம் கருத்தை மெய்ப்பிக்க இயல்பினை திரித்து எடுத்துக் கொள்ளும் செயல் கவனித்து உணர்தல் நலம் இதற்கு பின்...விழிப்படைய செய்யும் கட்டுரை...நன்றி

    ReplyDelete