Saturday, August 27, 2016

பேசாதே..வாயுள்ள ஊமை நீ...

ஒழுங்காகப் பேசுவதாக நினைத்து எசகுபிசகாக உளறி விட்டு, பேந்தப்பேந்த விழிப்பதென்பது சிலருக்கு வாழ்வியல் விதி. பெரும்பாலும் இதில் ஆண்களே மாட்டுவார்கள். மறதியோடு, விபரீதமாக வேறொரு நினைவைத் தொடர்புபடுத்திக் கொள்பவர்களுக்கு “ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”.

ஊர்ப்பக்கம் போனால் மிக ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏதோ உளறி மாட்டிக்கொள்வேன். மறதி அதிகமானதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க ஒருபோலி தன்னம்பிக்கையுடன் ”அங்! நீங்க செல்லமுத்துதானே?” என்பேன். கேட்கப்பட்ட அன்வர் பாய் என்னை அடிக்க யாரை அழைக்கலாம்? என்று தீவிரமாகச் சிந்தித்து அங்கிருந்து நகர்வார். அதன்பின் நிஜமான செல்லமுத்துவிற்கு ஞானஸ்நானம் அளித்து ’ டே, தொம்மையோட தம்பிதானே நீயி?’ என்றிருப்பேன். விடுங்கள், இதெல்லாம் அதிகம் பாதிப்பில்லாதவை.

சிலவருடங்கள் முன்பு ஒரு கலியாண மண்டபத்தில் வாயெல்லாம் சிரிப்பாய் வரவேற்ற ஒருவரிடம் “கங்க்ராஜுலேஷன்ஸ்! பொண்ணுக்கு சீமந்தமாமே?! எப்ப டெலிவரி?” என்றேன். அவர் , ஜாங்கிரியை வாயில் அடைக்கும்போது எதிரே வந்த மனைவியைக் கண்டு விழி பிதுங்கும் டயாபடீஸ்காரனைப் போல ஒரு முகபாவம் வைத்துக்கொண்டு அங்கிருந்து அவசரமாய் நகர்ந்தார்.

 இருநிமிடங்களில் அங்கு விரைந்து வந்த மங்கை “ அவர்கிட்ட என்ன கேட்டுத் தொலைச்சீங்க?” என்றாள்.

”பொண்ணுக்கு எப்ப டெலிவரி?ன்னேன். போன மாசம் சீமந்தத்துக்குப் பத்திரிகை வந்ததே?”

“நாசமாப் போச்சு. அது இவர் அண்ணன் பொண்ணுக்கு..”

“அப்ப இவர் பொண்ணுக்கு எப்ப டெலிவரி?” நான் விடவில்லை.

“வாயை மூடுங்க. அதுக்கு இன்னும் கலியாணமே ஆகலை”

”அண்ணன் தம்பிகளெல்லாம் பொண்களுக்கு ஒரே நேரத்தில் கலியாணம் செய்துவைக்க மாட்டார்களோ? அல்லது இந்தப் பெண்கள்தான் ஒரே நேரத்தில் டெலிவரி வைச்சுக்கொள்ளாதுகளோ?” என்று லாஜிக்கே இல்லாமல் உளறி, மேற்கொண்டு அவள் எதுவும் சொல்லுமுன் நகர்ந்துவிட்டேன்.

உறவுகள், ஒரே மாதிரியாக இருத்தல் என்பதில் வரும் சிக்கல்,. பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பதில்லை. யாருடைய அத்தைபெண்ணை யாருடைய மூன்றாவது தம்பிக்கு எங்கே கலியாணம் செய்து கொடுத்தார்கள் என்பதிலிருந்து, இப்ப பிறந்த சிசுவரை கணக்கு கரெக்டாய் வைத்திருப்பார்கள்.
இந்த உறவுகள், உட்கணங்கள், சார்புகள் எளிதில் அவர்கள் அறிவதால்தான், கம்ப்யூட்டர் பொறியியல், கணக்கியல் போன்றவை அவர்களுக்கு எளிதில் வந்துவிடுகின்றன போலும். பசங்க, முட்டி முட்டிப் படிச்சுதான்  ஜாவா, .நெட் , பைதான் கோட் எழுதுவான்கள்.
.
Aravindan Neelakandan பார்க்கும்போதெல்லாம் “ எளமையா இருக்கீங்களே?”ன்னுவார். “தம்பி, எம் ஜி யார் கலர்ல சும்மா செவ செவன்னு இருக்கீங்களே?”என்று கேட்கப்பட்ட வடிவேலு நினைவில் வந்துபோவார்.

முன்பொருமுறை, மிகக்கரிசனமாகக் கேட்பதாக நினைத்து “மாமா,, காடராக்ட் ஆபரேஷன்னு கேள்விப்பட்டேன். அரவிந்த் ஆஸ்பிட்டல்லயா? வலது கண் சிகப்பா இருக்கே?” என்க , மாமா மேலும் கீழும் பார்த்து , தனது எம்.ஜி.ஆர் கூலிங்கிளாஸை எடுத்துவிட்டு, கோபத்தில் மேலும் சிவந்த விழிகளால் , செங்கட் சீயமாய் நோக்கி “ ஆபரேஷன், இடது கண்லடா, அறிவு கெட்டவனே” என்றார்.

கொஞ்சம் சந்தேகமாக இருந்தாலே, இப்போதெல்லாம் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் அமைதியாக இருந்துவிடுகிறேன். “போனமாசம்தான் ஒரு ஹெர்னியா ஆபரேஷன்... அதான் மெதுவா டாக்ஸில வர்றேன். ஆட்டோ குலுங்கறது” என்றவரின் அண்ணன் அடுத்த திருமண மண்டபத்தில் ஆட்டோவில் வந்து இறங்குகையில் “ சார் பாத்து, ஆபரேஷன் ஆன இடம்” என்று ஏகக் கரிசனமாகச் சொல்லி , அவரிடம் இருப்பதை இல்லாமல் போக வைக்க விருப்பமில்லை.

இது புரியாமல் இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் நானும் ஜாதவ் என்பவரும் , எங்களது முந்திய கம்பெனி சக ஊழியரைச் சந்திக்க அவர் வீட்டிற்குப் போயிருந்தோம். ”பிள்ளைகளுக்கு வரன் பாத்துகிட்டிருக்கோம், இன்னும் அமையலை” என்றார் அவரது மனைவி மிகக்கவலையாக. உள்ளேயிருந்து வந்த ஆஜானுபாகுவான இளைய உருவம் ,குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு, எங்களை கால் தொட்டு வணங்கி, தலைமுடி சிலுப்பி, “பை அங்கிள்” என்று கனத்த தொண்டையில் சொல்லிவிட்டு வாசலில் விரைந்தது.
“அட, இவ்வளவு ஹாண்ட்ஸம் ஆன, அடக்கமான பையனுக்கு பொண்ணு வரிசையில நிப்பாங்க. கவலையே படாதீங்க” என்றார் ஜாதவ், மிகக் கரிசனத்துடன். நண்பரின் மனைவி முகத்தில் ஒரு இறுக்கம்.. உள்ளே சென்றுவிட்டார்.

காரைக் கிளப்ப்பும்போது ”ஜாதவ்ஜி, என்ன சொன்னீங்க?” என்றேன்
.
“நல்ல ஹான்ஸம்மான பையன்-ன்னேன் இல்லையா பின்னே?”

“அது அவரோட மூத்த பொண்ணு”

Saturday, August 20, 2016

கம்பனும் அலைகடல் சந்தமும்


கம்பராமாயணத்தில் சந்தம் ஜிங்கு ஜின்கு என்பதாக மட்டுமல்ல, இடத்திற்கும் நிகழ்விற்கும் தகுந்தாற்போல பொருத்தமான இயற்கை ரிதம் கொண்டும் வருவதுண்டு. யுத்தகாண்டத்தில் ஒரு இடத்தைப் பார்க்கலாம்.

அலைகள் எழுந்து ஆராவரிப்பதை நினைவில் கொள்வோம். . முதலில் அகடு (கீழ்நிலை),அதன்பின் முகடு ( மேல் எழும் நிலை), பின் மீண்டும் அகடு, முகடு என்று மாறிமாறி ஒரு சீராக வரும்.

 சொல்லின் அசையில், அகடு - நிரை , முகடு - நேர்.   டட -டா -டட- டட-டா-டட _/\_ _/\_   நிரை நேர் நிரை, நிரை நேர் நிரை  என்று போவதாக  அலைகள் ஏறி இறங்குவதை கற்பனையில் பொருத்திக்கொள்ளுங்கள்.



இந்திரஜித்திற்கும் , இலக்குவனுக்கும் போர்... இருவரும் கடுமையாக அங்குமிங்கும் இடம் மாறி போர் புரிகிறார்கள். மூன்று இடங்களுக்கு அவர்கள் செல்வதை மற்ற வீரர்கள் பார்க்க முடிகிறது. வீரர்களின் முன்புறம், இரு பக்கங்கள்.  (பின்புறம் வீரர்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் அவர்கள் இருவரும் வேறு இடங்களுக்குள் பெயர்ந்து விடுகிறார்கள்.)..
பாடலை கம்பன் இவ்வாறு அமைக்கிறான்.

இருவீரரும் இவன்- இன்னன் இவன்- இன்னன் இவன் -இன்னனென
பெருவீரரும் அறியா வகை திரிந்தார் , கணை சொரிந்தார்.
ஒருவீரரும் இவர் ஒக்கிலை எனவானவர் உகந்தார் .
பெருவீரையும் பெருவீரையும் பொருதால் எனப் பொருதார்.

இரு-வீ -ரரும் இவ-னின் -னனி வனி-ன்
தட-தா-தட தட-தா-தட தட-தா-தட .... 
முழுப்பாடலுக்கும் இந்த ஏறி இறங்கும் சந்தம் அமையும்.

வீரை - கடல். 
நான்காம் அடியில் இரு பெருங்கடல்கள் போர்செய்வதைப் போல போர்செய்கிறார்கள் என்கிறார் கம்பர்.

இருகடல்கள் அலைகள் ஆர்ப்பரிக்க மோதுவதாக அமைந்த இப்பாடல் அந்த அலைச்சந்தத்தில் அமைந்திருப்பது எவ்வளவு பொருத்தம்?!

கம்பன் பல நேரங்களில் திணற அடித்துவிடுகிறான்.

Saturday, August 06, 2016

வட்டம்.



  
’சாமுவேல் பலசரக்குக் கடை, தூத்துக்குடி 2’ என்ற போர்டு துருப்பிடித்துப் போய் ’வேல் பலசரக்கு’ என்று தெரிந்ததை யாரும் பொருட்படுத்தியதில்லை. அண்ணாச்சி கடை என்பது மட்டுமே அவரது ப்ராண்டாக இருந்தது.
” 70களில் ஒரு குடிசைவாசலில் நாலு டப்பா வைத்து தொடங்கிய கடை கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து , ரெண்டாம் கேட் பக்கம் கடைவீதியில் விரியுமென அவர் மட்டுமே எதிர்பார்த்திருக்க முடியும்.
”ஏட்டி, கிளி டீத்தூளு ரெண்டு பாக்கெட்டு , அந்தா,அங்கன அண்ணாச்சி கடயில வாங்கிட்டு வா. ஓடு ” என்ற குரலுக்கு மெல்ல ஓடிவரும் பெண்ணிடம், “ஏப்பிள்ளே, ஒங்க மாமா வந்திருக்காரோ?” என்பார் அண்ணாச்சி, டீத்தூள் பாக்கெட்டுகளை ஒரு காகிதத்தில் வைத்துக் கட்டியபடி.
“ஆமா, அக்காவும் வந்திருக்கா.”
“ஆங்? அம்மா அதுக்குத்தான் போயிருந்தாங்களோ? முந்தாநா, பஸ் ஸடாண்டுல வச்சிப் பாத்தன்”
“அம்மாதான் கூட்டியாந்துச்சு”
அந்த வீட்டுப் பெண்மணி தெருவில் போகும்போது ,“வாங்கம்மா” என்பார், கடையிலிருந்தே கை கூப்பியபடி “ பொண்ணுக்கு ப்ரசவமாங்கும்? நல்லா நடக்கட்டும். நம்ம கடையிலயே பொறந்த பிள்ளைக்கு வேணும்கறத வாங்கிரலாம், பாத்துகிடுங்க. சின்னபொண்ணுட்ட சொல்லிவிடுங்க, கொடுத்துவிட்ரலாம்”
மசாலா பொடி, நயம் மாசி என கடை கமகமக்கிறதே என்றால் “லே, ரெண்டு வாரத்துல ஆடி மாசம் வருதுல்லா? புதுசா கலியாணமான பொண்ணுகள அம்மா வீட்டுல கொண்டு வந்து விடுற  காலம் பாத்துக்க. அந்தப் பய ஒன்னு ரெண்டு மாசம் என்ன செய்வான்? சரி, போவுதுன்னு, மாப்பிளைக்கு , மாமியா வீட்டுல நல்லா சாப்பாடு போட்டு அனுப்புவாங்க. மட்டன் என்னா, கோழி என்னா..மாசி என்னா? அங்? அப்பம் நம்ம கடைல மசாலா, மாசி இருந்துச்சின்னா...”
ஆவணியிலிருந்து எட்டாவது மாதத்தில் கடை ,பிறக்கும் குழந்தைகளுக்கான துணிகளுடன்  ஃபீடிங் பாட்டில் கழுவும் ப்ளாஸ்டிக் ப்ரஷ், ஜான்ஸன் சோப்பு, பவுடர் லாக்டோஜன் என தோற்றமே மாறியிருக்கும்.
“நம்ம பயலுவளத் தெரியாதாடே?” என்பார் சிரித்தபடி “காஞ்சமாடு கம்பம்புல்ல விழுந்தா மாரி, ஆவணி வந்திச்சின்னா...”
அண்ணாச்சியின் மகன் பி.ஈ படிக்கப்போனது அவருக்கு வள்ளிசாகப் பிடிக்கவில்லை. ”எந்த *** பயலோ இவம் மனச மாத்தியிருக்கான் கேட்டியா? கடையில ரெண்டு மாசம் ஒக்காருல, நெளிவுசுளிவு கத்துக்க, திரேஸ்புரம் வீட்ட ஒத்திக்கு வச்சி, பணம்தாரன். வி.ஈ ரோடுல புதுசா கடை போடுங்கேன்.. எஞ்சினீயரிங்கு படிக்கணுங்கான். என்ன கிழிக்கப்போறான்? இந்தா, ஸ்பிக் நகர்லேர்ந்து  வாராரே, தொரசாமி.. அவருகூட ஏதோ ஏ.ஈங்காரு. கடலப் பருப்புக்கும், கடலைக்கும் வித்தியாசம் தெரியாது. ஒரு வார்த்தைக்கு சொல்லுதேன்.. என்ன படிச்சு என்ன கிழிச்சாருங்கேன்? இதுக்கு நாலு பொட்டலம் போட்டா, அதே சம்பளம் வந்திட்டுப் போவுது”
ஜெபராஜ் பி.ஈ முடித்து, அன்று வந்த அலையில் அமெரிக்கா அடித்துப் போகப்பட்டான். சாமுவேல் அண்ணாச்சி கடை, சூப்பர் மார்கெட்களில், மால்களில் பொலிவிழந்தது. ஐந்து வருடமுன்பு பார்த்தபோது மிகவும் மெலிந்திருந்தார். கடை இருளடித்துக் கிடந்தது.
“என்ணண்ணாச்சி, திருநவேலி இருட்டுக்கட கணக்கா வச்சிருக்கீயளே?அல்வா விக்கீங்களோ?”
அவருக்கு அந்த நையாண்டி சுகப்படவில்லை என அறிந்ததும் பேச்சை மாற்றினேன்.
“பையன் கூட்டிட்டிருந்தானே? அமெரிக்கா போவலியா அண்ணாச்சி?”
“எளவு அந்தூருக்கு எவம் போவான்?” என்றார் சலிப்புடன் ”லே , அவன் இருக்கற ஊர்ல , அக்கினி நட்சத்திரத்துலயும் இழுத்து மூடி கிடக்க வேண்டியிருக்கு. நமக்கு குளிர்காலம்னா பனியன் போடணும், கோடை வந்திச்சின்னா, அதக் கழட்டணும், இதுதான் உடுப்பு. அங்கிட்டு, எல்லாம் போட்டுட்டு ஒரு மாசம் இருந்தேன், இருப்பு கொள்ளல. வந்துட்டேன். கடை சும்மா அடைச்சு கிடந்துச்சின்னா, எலி வந்துரும் பாத்துக்க”
“இப்படி கடை கிடக்கறதுக்கு, எலி தின்னா என்னா அண்ணாச்சி.? இனிமே என்ன சம்பாரிக்க வேண்டியிருக்கு? இப்பத்தான் பெங்களூர் வந்துட்டாம்லா? பையன் கிட்ட இரிங்க”
அண்ணாச்சி அருகில் வருமாறு சைகை செய்தார் “ ஏலா.” என்றார் அன்பாக “ இந்தாரு,( இங்க பாரு), ஒலகம் ஒரு வட்டம் பாத்துக்க. மேல கீழன்னு ஒண்ணுமேயில்ல. அங்கிட்டிருந்து பாக்கச்சே, மேல போற மாரித்தெரியறது, இங்கிட்டு இருந்து பாக்கச்ச, கீழ வர்ற மாரித்தெரியும். ஆனா, எதுவும் மேல கீழ போவல்ல. எப்படிப் போனாலும், ஒரே எளவுதான். ஒரே எடத்துலதான் கிளம்பறோன், அதே எடத்துக்குத்தான் வாறோம். நீ டாலர்ல சம்பாரிச்சாலும், அணாவுல சம்பாரிச்சாலும் ஒண்ணுதான். “
“இதெல்லாம் ஏட்டுச் சொரக்கா அண்ணாச்சி. கூட்டுக்கு ஒதவாது”
“எவஞ்சொன்னான்?” என்றார் விழி சிவந்து “ டே, நீ யோசிக்கியே, அதுகூட முந்தியே யோசிச்சதுதான். புதுசுன்னு நினைக்கியே அது அதரப்பழசு. எல்லாம் வட்டம்தாம்டே, புரிஞ்சிக்க, மண்ணுல வர்றோம். மண்ணுல போறம். இதுல எது பெரிசு , எது சிறுசு,? போல, போக்கத்தவனே”
"கடைய யாரு பாப்பா? அண்ணாச்சி, சொல்றதக் கேளுங்க. பேசாம அடைச்சுப் போட்டுட்டு, மவங்கிட்ட இரிங்க. கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். பொறவு பழகிப் போவும்”
“தம்பி” என்றார் சிரித்தபடி “ ஒனக்கு ஒண்ணு புரியல. கடைங்கறது என்னன்னு நினைச்சே? அது இந்த பத்துக்கு அஞ்சு இடமோ, பின்னாடி இருக்கற சரக்கு ரூமோ இல்ல. எங்கப்பா, தலையில ஒரு பெட்டியில பனங்கற்கண்டு, கருப்பட்டி வச்சி வித்தாரு. அவரு கடை தலையில இருந்துச்சு. எந் தாத்தா பனையோலை விசிறி செஞ்சாரு. கடை அவருக்கு கையில இருந்திச்சி.
கடைங்கறது மனசுல இருக்கு தம்பி வெளங்கா? சிலருக்கு வாயில இருக்கும், சிலருக்கு கையில இருக்கும். ஆனா, அது நெஞ்சுல, மூளையில இருக்கணும். இருக்கும். இது வட்டம். எங்கிட்டு போனாலும், வெசயம் ஒண்ணுதான்”
அடுத்த வருடம் , நெடிய விடுமுறையில் ஊரில் இருக்கும்போது சாமுவேல் அண்ணாச்சி இறந்துபோனார். “துஸ்டி கேட்டிட்டு வாரன்”என்று வீட்டில் சொல்லிவிட்டு, அவர் வீட்டிற்குப் போனேன். வழியில் அவர் கடையின் முன்னே ஒரு லாரி நின்றுகொண்டிருக்க, கடையின் கதவுகள் அகற்றப்பட்டுக் கொண்டிருந்தன. உள்ளிருந்த பொருட்களை மலிவு விலையில் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
“கடையை அடைக்கோம்” என்றான் ஜெபராஜ். அரை டவுசர் போன்று ஒன்றும், டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான். அருகே நெடிய , ஒல்லியாக ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
“ஏ, ஜெபா, அப்பா போயிட்டாரே” என்று துக்கம் விசாரித்துவிட்டு, “இவன் யாருடே?, ஒஞ்சாடையில இருக்கானே?” என்றேன்.
“எம் மூத்த மவன். தாத்தாவப் பாக்கணும்னான்.சே.ரின்னு கூட்டியாந்தேன். மேரியும், பொண்ணும் வரல”
“என்னடே செய்யுத?” என்று கேட்டேன் அவனைப் பார்த்தபடி.
“அம். அங்கிள். ஐ யாம் இன் அன் இண்டெர்ன்ஷிப்”
" என்ன படிக்கே? ” புரியாமல், சும்மா கேட்கவேண்டுமே என்றுதான் கேட்டேன்.
“வெல்.. ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் வைச்சு, மக்களோட சைக்காலஜி அல்கோரிதம் எழுதறோம். பையிங் பேட்டர்ன், நாம கடையில வாங்கற முறையில எதாவது ஒரு வடிவம் இருக்கும், யாரு, என்ன வயசு, எங்க இருக்காங்க, என்ன வாங்கறாங்கன்னு பாத்து, அதுக்கு ஏத்தமாதிரி, கடையில எந்த மாதிரி பொருட்களை, எப்ப வாங்கி வைக்க்றதுன்னு , ரியல் டைம்ல , கடைகளுக்கு. அவங்க மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட்டுக்கு, டிஸ்ப்ளே யூனிட்களுக்கு சொல்ற ஒரு க்ளவுட் பேஸ்டு சாஃப்ட்வேர். எந்த கடையில யாரு, எங்க வாங்கினாலும், டேட்டா எங்களுக்கு வந்துரும்.. எங்க சாஃப்ட்வேர் வச்சிருக்கிற அத்தனை கடையிலயும் இது பயன்படும்.ரொம்பவே பெர்சனலைஸ் பண்றோம்.“
யாரோ அருகில் வந்த நிழல் தெரிந்தது. “அண்ணாச்சி போட்டோக்கு ஃப்ரேம் போட்டு கேட்டிருந்தாங்க. யார்ட்ட கொடுக்கணும்?”
செவ்வக சட்டத்துள் நீள் வட்ட போட்டோவில் அண்ணாச்சி சிரித்துக் கொண்டிருந்தார்.

Wednesday, July 27, 2016

நான் பாடும் பாடல் - அண்ணாச்சி உரையாடல்

நேற்றிரவு ஏதோ பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்கையில் வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

“பாடினே கொன்னுருவேன்” என்று மிரட்ட ஐந்தாம் மாடி சர்தார்ஜி வருகிறானோ? என்ற சந்தேகத்தில்தான் திறந்தேன். ச.வ.ச(ச*..ளவு வளர்ப்போர் சங்கம்) காரியதரிசி வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தார்.

“அட” வியந்தேன்”வே, போனவாட்டி “ நீர் பாடினா கழுத வரும்னீரு’.. உம்ம வாக்குப் பொய்க்கலைய்யா ”
சிரிப்பு உறைந்து போக “இந்தாரும், என்னக் கழுதன்னு சொல்ற வேலயெல்லாம் வச்சுக்காதீரும். கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்” என்றார்.
“உள்ளாற வாரும்” என்றேன். எப்படியும் இன்னும் அரைமணி நேரத்துக்கு ஒன்றும் வெட்டி முறிக்கப் போவதில்லை. பாட்டு, விருதுன்னு பொழுதை வீணடிக்கலாம்.

“எங்காளுக்கு விருது கிடைசிச்ருக்கு தெரியும்லா?” என்றார் பெருமையாக.
‘பாட்டுக்கா? அப்ப சரிதான்.”

“அட, பாட்டு எவம்வேணும்னாலும் பாடிறலாம்வே. கணக்கா நேரத்துக்கு பேசத்தெரியணும்லா? எங்காள் கரெக்டா எல்லாரும் அடிக்கற இடத்துல அடிச்சாரு. பொங்கறதா சீன் போட்டாரு. கொடுத்துட்டானுவோ”

”அங். அப்ப திறமைக்கெல்லாம் மதிப்பில்ல”
“அது இருந்தா மட்டும் போறாதுவே.  பாட்டு பத்தி பேசறத விட்டுட்டு பார்ப்பனியம்னு ஏசி எழுதணும்..”
“எழுதினா எவன் போடுவான்?”
“அட,  இத வெளியிடறதுக்குனே எளவு பத்திரிகை நடத்துதோம்லா? நாலு பக்கத்துக்கு போட்டுறுவம். கழுத விட்டை கை நிறையன்னு , எக்கச்சக்கமா பத்திரிகை வைச்சிருக்கம். வாராந்தரி, மாசாந்தரி என்ன வேணும்னு சொல்லுங்க”

”வே, பாடகன்னா பாட்டுதாம்வே பெரிசாத் தெரியும். எழுதினா எவம் படிப்பான்?”

சிரித்தார் “இப்படி இருக்கீயளேன்னு நினைச்சா பாவமா இருக்கு. கலை, இலக்கியம்னு எவம் பாக்கான் சொல்லுங்க? ஜாதியம் பார்க்கும் பார்ப்பனீயர்கள்னு தம் பாட்டைக் கேக்க வர்றவங்களையே ஏசணும். இவங்களுக்கு டிக்கட் கொடுக்கற சபாவுல பாடமாட்டேன்னு வீராப்பா அறிக்கை விடணும்”

“அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா? போயிட்டாங்கன்னா, ரசிகர் குறைஞ்சுருவாங்களேய்யா?”

“வே, அது ஒரு கேடு கெட்ட ஜென்ம கூட்டம் பாத்துகிடும். என்ன அடிச்சாலும் தாங்குவாங்க. என்ன சொன்னா என்னா, அவம் பாட்டு நல்லாயிருக்குன்னு வெக்கமே இல்லாம கேக்கற கூட்டம் அது. இத்தனை நடந்தப்புறமும் பாருங்க, பேஸ்புக்ல, ட்விட்டர்ல “வாழ்த்துக்கள்”ன்னு முதல்ல எழுதறது அந்த கூட்டம்தான்.”

“ஏம்வே அப்படி ஒரு டிசைனு?”

“எங்கள என்ன சொன்னாலும் கேட்டுகிடுவோம், அறிவுசீவியாக்கும் நாங்கன்னு காட்டிக்கிற போலித்தனம் அதுங்களுக்கு. போவட்டு. நீரு என்ன செய்யுதீரு?”

“டல் அடிச்சு கிடக்கு” என்றேன் சோகமாக “ நம்ம புக் எல்லாம் ஒரு பய சீந்த மாட்டக்கானே? வாங்கினவங்க இருக்காங்கன்னாலும் ஒரு பைசா வரலியே இன்னும்?”

“இதான் ப்ரச்சனையா? எண்ட்ட விடும். பாத்துகிடுதேன். விருது வாங்கிக் கொடுக்கறது என் வேல”

”வே” என்றேன் திகைப்புடன் “ வாங்கிக் கொடுக்கீயளா? விருது தானா வரணும்வே. வாங்க- எல்லாம் கூடாது”

“எந்த ஊர்ல இருக்கீய?” என்றார் எரிச்சலுடன். “ விருதுக்கு நீர் விண்ணப்பம் போடணும், பைசா கட்டணும். இடது சாரித்தனம் இருக்கணும். அப்புறம் பெரிய ஆளுங்க சிபாரிசு வேணும்.”

“சரி, அப்ப எதுக்கு மக்கள் கிட்ட இப்படி பீலா விடணும்? சபா இல்லேன்னா பைசா போயிரும்வே”

“ஹஹ்ஹ” என்றார் “ இங்கதான் பாடமாட்டேன்னு சொல்லச்சொன்னேன். அமேரிக்காவுல பாடமாட்டேன்னா சொன்னேன்? இங்க ரூபாய் கொடுத்து வாங்குவீய. அங்க டாலர்லா? அது போதும்வே. பேருக்கு பேர் ஆச்சி, பைசாவுக்கு பைசா”

“ஆஹா” வியந்தேன். ”இந்த அமெரிக்க இடதுசாரித்தனம் இத்தனை நாளா எனக்கு வெளங்கலையே?”

“உடனே நீரும் அறிக்கை விடணும் கேட்டியளா?” என்றார் சீரியசாக. ஒரு காகிதத்தில் மடமடவென்று எழுதி நீட்டினார் . ”இதை உடனே பேஸ்புக்ல போடும்வே.”

படித்துப் பார்த்தேன் “ இனி ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் வீட்டிற்கு செல்லமாட்டேன் . போலித்தனமாக ஒரு பில்டர் காபி, அடை என்று கூடும் நண்பர்களை விட , அமெரிக்காவில் ஒரு குப்பத்தில் சென்று கதை பற்றி பேசலாமென நினைத்திருக்கிறேன்”

“இது விவகாரம் பிடிச்ச வேலைல்லா? கிளம்பும்வே” என்றேன் கறாராக.

“விசயம் தெரியாம நிக்கீரேன்னு மனசுக்கு விசனமா இருக்கி” என்றார் சோகமாக. “என்ன செய்ய. ஒம்ம தலையெழுத்து அறிவியல், அண்ணாச்சின்னு எழுதியே போயிரணூம்னு இருக்கு. சரி, போற வழிக்கு ஒரு திருநவேலி கொலைவெறி வெண்பா சொல்லும். கேட்டுகிடுதேன்”

”மக்களை திட்டிய சொல்லினில் நிச்சயம்
டக்கெனத் கிட்டும் விருது”

Sunday, July 24, 2016

முத்துசாமி

இந்தூரில் நண்பரது அபார்ட்மெண்ட்டிற்குப் போகும்போதெல்லாம், அவரது வீட்டின் அண்டை வீட்டை சற்றே பயத்தோடு கவனிப்பேன். கதவு அடைத்திருந்தால் ஒரு நிம்மதி. பல முறை அப்படி கவனித்து, சற்றே நிம்மதியுடன் விரைவாகத் தாண்டிப் போகும்போது..

“சார், எங்கே பாத்தும் பாக்காம போறேள்?” முத்துசாமி சார் ஜன்ன்னல் வழியே எட்டிப் பார்ப்பார்.

“ஹி.ஹி” வழிவேன்“ சொளக்கியமா சார்? கண்ணன் இருக்கானான்னு பாத்துட்டு உங்களைப் பாக்க வரலாம்னு இருந்தேன்”

“இப்படித்தான் சொல்லுவேள். அப்புறம் நைஸா கிளம்பிப் போயிடவேண்டியது. ஏர்ப்போர்ட்ல வந்து பிடிச்சுறுவேன். ஆமா, பாத்துக்கோங்கோ” கதவை அவர் இன்னும் திறக்கவில்லை என்பதே நிம்மதியாக இருக்கும்.

“ஹ ஹா” “ கண்டிப்பா வர்றேன் சார். கண்ணன்...”

“அவா எல்லாம் மெட்ராஸ் போயிருக்காளே? அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு ரெண்டு நாள் முன்னாடி போன் வந்தது. இவன் மட்டும் ரத்லாம் பக்கம் டூர் போயிருந்தான். அங்கேர்ந்து ராஜ்தானில பாம்பே போயி அங்கேர்ந்து ப்ளைட். நாந்தான் ஐடியா கொடுத்தேன்.உள்ள வாங்கோ”

யப்பா, தொடங்கியாச்சு..

முத்துசாமி ரயில்வேயில் என்ன வேலை பார்த்தார் என்று தெரியாது. கேட்கவில்லை. கேட்டால் அது ரெண்டு நாள் கதை ஓடும்.
“ ராஞ்ச்சியில ரெண்டு வருஷம் தூக்கி அடிச்சான். என் தப்பு என்னன்னு கேளுங்கோ. காண்ட்ராக்டர்ட்ட லஞ்சம் வாங்கினதை போட்டுக் கொடுத்துட்டேன். அப்புறம்னா தெரிஞ்சது, அந்த டிவிஷனல் ஆபீஸருக்கும் அதுல கட் இருக்குன்னு? அவன் பாத்தான். “மிஸ்டர். முத்துஸ்வாமி, வி வாண்ட் ஹானஸ்ட் எம்ப்ளாயீ லைக் யூ இன் ராஞ்ச்சி”னுட்டு...”
இன்னும் முப்பது வருஷக் கதை பாக்கியிருக்கிறது.
முத்துசாமி தனியாக இந்தூரில் இருக்கிறார். பையனும் பெண்ணும் பெங்களூரில். அவளும் சமீபத்தில்தான் லண்டனில் இருந்து வந்தாள் என்று சொன்ன நினைவு.

“லக்‌ஷ்மி போனப்புறம் ஒரு வெறுமை.. யார்ட்டயும் போய் இருக்கவேண்டாம்னு ஒரு நினைப்பு வந்துடுத்து. பொண்ணு “ அப்பா, you talk too much ’ங்கறா. பையனா? அவம் பேசவே மாட்டேங்கறான். மாட்டுப் பொண் அவ வேலையப் பாக்கறதுக்கே சரியா இருக்கு. பேத்தி , தாட் பூட்னு என்னமோ பேசறது. வந்துட்டேன்”

முத்துசாமியின் ப்ரச்சனை, பல முதியவர்களின் ப்ரச்சனைதான். தான் பேசவேண்டும். பிறர் கேட்கவேண்டும்.

“பல்பீர் சிங்னு ஒரு சர்தார்ஜி.. சார், கேக்கறேளா?”

“அங்? சொல்லுங்க” என்பேன் ஏதோ நினைவில். எனது வாடிக்கையாளர் நாளைக்கே சர்வீஸ் எஞ்சினீயர் இந்தூரில் இருக்கவேண்டுமென்கிறான். அதை எப்படி சமாளிக்கப்போகிறேன்?என்று நினைத்துக்கொண்டிருக்கையில், பல்பீர்..

“எங்கயோ பாத்துண்டு இருக்கேள். போரடிக்கறேனோ?”

“இல்ல சார்” சமாளிப்பேன்.. “நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. என்ன சொல்றதுன்னு யோசிச்சிண்டிருக்கேன்”

“ஹா! இதுக்கெல்லாம் கவலைப்படப்படாது. எனக்கு எத்தனை ப்ரஷர் வந்ததுங்கறேள்? ராஞ்ச்சில யூனியன் லீடர், சூப்பிரண்டண்ட், பெரிய அதிகாரியெல்லாம் நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேப்பான்கள். சே, என்ன வேலை விட்டுறலாம்னு தோணும். ரெண்டு கொழந்தைகள், பொண்டாட்டி ஊர்ல இருக்கா. வயசான அம்மா . எப்படி சார் சமாளிப்பேன்?”

“கஷ்டம்தான்”

”எவன் என்ன வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் என் வேலையச் செய்யறேன்னு இருந்துட்டேன். ரெண்டு பேர் கஷ்டம் கொடுத்துண்டே இருந்தான்கள். ராய்ப்பூர்க்கு ட்ரான்ஸ்ஃபர். அப்புறம் ராஞ்ச்சிக்கு ஒரு தடவ போனப்போ, அவன்களே வந்து சொன்னான்கள் “ சர்ஜி, நீங்க போனப்புறம்தான் உங்க அருமை தெரியுது”ன்னான். அதுவும் தலையில ஏறிடப்படாதுன்னுட்டு, வெறுமனே சிரிச்சுட்டு, போன வேலையப் பாத்துட்டு வந்தேன்..”

“ம்ம்”

“எதுக்கு சொல்றேன்னா.. வேலைல வர்ற மாற்றமெல்லாம், உள்மனசுல சலனம் கொண்டு வந்துடப்படாது. ஒரு காபி சாப்படறேளா? இப்பதான் டிகாஷன் இறக்கியிருக்கேன்”

அதன்பின்னும் ராஞ்ச்சி, ராய்ப்பூர், அஸன்ஸோல் என்று அவரது நினைவு ரயில்வண்டி ஓடிக்கொண்டே இருக்கும். இரு மாதங்கள் முன்பு மாட்டினேன்.

”இப்படித்தான் பல்பீர் சிங்குன்னு ஒரு சர்தார்ஜி..”

“சார், தெரியும், போனதடவ சொல்லிட்டீங்க”

“அப்படியா? பல்பீர் வாஸ் எ பெக்கூலியர் மேன்.. ஒரு தடவ”

அந்த சர்தார்ஜியை தேடிப்பிடித்து ஏன்யா இந்தாளுகூட வேலை பாத்தே?ன்னு திட்டிட்டு வரலாமா என்று ஆத்திரம் பொங்கும். சிரமப்பட்டு அடக்கிக்கொள்வேன்.

”ஒரு தடவகூட என் ஹானஸ்டியை விட்டுக் கொடுக்கலை சார். ஸ்கூல்ல பீஸ் கட்டணும், அம்மா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான்னு ஊர்லேந்து போன் வர்றது. அவளால எஸ்.டி.டி.கூட அதிகம் பண்ண முடியாது. ராத்திரி 10 மணிக்கு மேல பண்ணினா பைசா குறையும். ஆனா தெருவுல எப்படி ஒரு பொம்மனாட்டி 10 மணிக்கு மேல தனியா நிக்க முடியும் சொல்லுங்கோ? இப்படித்தான் ஒரு தடவ”

”சார் ஹானஸ்டி பத்தி சொல்லிட்டிருந்தீங்க”

“அங்? யெஸ்! ஆமா, அப்ப ஒரு காண்ட்ராக்டர் பத்தாயிரம் தர்றேன். என் பில்லை பாஸ் பண்ணி விட்டுருன்னான். அது ரெண்டு லெவல்ல பாஸ் பண்ற பில். ரெண்டு நாள்ள சீனியர் ஆபீஸர் ஒருத்தர்ட்டேர்ந்து போன் வர்றது. அந்த பில்லை பாஸ் பண்ணு முத்துஸ்வாமி’ன்னுட்டு. “ஸாரி சார்”ன்னேன் “ ப்ரொசீஜர் படித்தான் போவேன். வேணும்னா என் மேல ஆக்‌ஷன் எடுத்துக்கோ”ன்னுட்டேன். பகவான் இருக்கார் பாத்துக்கோங்கோ. தம்பி வந்து ஸ்கூல் பீஸ் அடைச்சான். அம்மா , பாவம் பரமபதிச்சுட்டா.. நல்ல ஆஸ்பிட்டல் கொண்டுபோயிருக்கலாமே அண்ணா?ன்னு தங்கை அழுதா. கேக்கறப்போ ரம்பமா நெஞ்சு அறுந்தது.” சட்டென கலங்கின கண்களை துடைத்துக்கொண்டார்.

“ஸாரி சார்”

“விடுங்கோ. என்ன செய்யறது. அந்த பைசா வாங்கி, அம்மாவை குணப்படித்தியிருந்தேன்னு வைச்சுக்கோங்கோ, அவளுக்கு தெரிஞ்சிருந்தா, அப்பவே ப்ராணனை விட்டிருப்பா. அவ உடம்பு குணமாயிருக்கும். ஆத்மா ரணமாயிருக்கும். வேணுமா எனக்கு?”

“சார், காபி”

“ஓ. முக்கியமான ஒண்ணை மற்ந்துட்டேன் பாருங்கோ. ஒரு ஹெல்ப் வேணும். என் வாழ்க்கையில பாத்த ரெண்டே ரெண்டு, சாஸ்த்ரம் சொன்ன படி வாழ்றது, அன்பாயிருக்கறது. இத ரெண்டு நோட்டு புஸ்தகத்துல அனுபவமா எழுதி வைச்சிருக்கேன். புக்கா போட முடியுமா? கேட்டுச் சொல்றேளா? கம்ப்யூட்டர்ல டைப் பண்ண முடியலை.”

“பாக்கலாம் சார்” என்று ஏதோ சாக்கு சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
சில நேரங்களில் இந்தூரில் அவருக்கு பயந்தே, ஓட்டல் அறையில் அடைந்தேன்.

சமீபத்தில் அவர் இறந்து போனதாக அறிந்தேன். கண்ணன் வீட்டுக்குப் போகும்போது அடைத்துக்கிடந்த அடுத்த வீட்டுக்கதவு என்னவோ செய்தது. ”என்ன ஆச்சு அவருக்கு?”என்றேன் நண்பனிடம்.

“அப்பா தனியா இருக்க வேண்டாம் என்று பையனும் பொண்ணும் தீர்மானிச்சு அவரை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்க முடிவெடுத்தார்கள். அவர்கிட்ட சொன்னப்போ, சட்டுனு அமைதியாயிட்டார். அதுக்கப்புறம் எங்க கிட்ட கூட அதிகம் பேசலை.”

ஒரு குற்ற உணர்வில் நெளிந்தேன்.

“ஒரு ராத்திரி, கொஞ்சம் காய்ச்சல் மாதிரி இருக்குன்னார். லலிதா, ரசம் சாதம் வைச்சுக் கொடுத்தா. நாங்க ரெண்டுபேரும் அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம். “கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டி விட்டோம்”ன்னார். அடுத்த நாள் காலேல போயிட்டார்”

”எதாவது நோட்டு புக் உங்க கிட்ட கொடுத்தாரா? ”

“இல்லையே? எல்லாத்தையும் பழைய பேப்பர், சாமான் எடுக்கறவன்கிட்ட அப்படியே போட்டுட்டு, வீட்டை வாடகைக்கு கொடுத்தாச்சே? லீவுன்னு அவங்க எல்லாம் ஊருக்கு போயிருக்கா.”

வள்ளலார் பாடல் வரிகள் எப்போதும் மென்மையானவை அல்ல.

Tuesday, July 05, 2016

நிஜ வரலாறும் நாம் கற்ற வரலாறும்



திருநெல்வேலி எழுச்சி (Tinneveli uprising) பற்றி சில கேள்விகளும், எதிர்வினைகளும் வந்தன. பலரும் சொன்னது”இப்படி ஒன்று நடந்ததே தெரியாது”. அது ஆச்சரியமல்ல. நமது கல்வித்துறைகளின் பாடத்திட்டம் அப்படி.

’கானிங் பிரபு ஏன் கருணையுள்ள கானிங் என்று அழைக்கப்படுகிறார்? துருக்கியின் கிலாஃபத் இயக்கத்தில் காந்தியடிகளின் கருத்து யாது?’ என்பது போன்றவற்றை மட்டுமே அவை கற்றுக்கொடுத்தன. சந்திரசேகர் ஆஸாத், திங்க்ரா, சவர்க்கர், சிட்டகாங் புரட்சி என்பது பற்றி அவை பேசுவதே கிடையாது என்பது கசப்பான உண்மை.

நமது சுதந்திரப் போராட்டம் பல கட்டங்களில் (Phase) நிகழ்ந்த ஒன்று. ஒரே சீராக ஒரே தலைவரின் ஆணையில் நடந்த போரல்ல. 1857, 1882-1918, 1918-1947 எனப் பெருவாரியாக இக்கட்டங்களை வகுக்கலாம். இதுவும் ஒரு தன்னிலைப் பார்வை (subjective view) யாகவே கொள்ளமுடியும். வரலாற்றிஞர்கள் இன்னும் சிறப்பாக, சுதந்திரக் கிளர்ச்சியின் காரண, காரணிகளையும், அணுகுமுறையையும் கொண்டு பிரிப்பார்கள். 

அன்னிய ஆடை தயாரிப்புகள் புறக்கணிப்பு, சுதேசி பொருட்களை பயன்படுத்தல், காதியை ஆதரித்தல் என்பது 1918ன்பின் காந்தியின் வருகையின் பின்னான கட்டத்தில் என்று பொதுவாகக் கருத்து இருக்கிறது. அது 1900களில் உதித்த சிந்தனை. அந்நிய பொருட்களை புறக்கணிப்பதை ஒரு அடையள நிமித்தமாக  அந்நிய நாட்டுத்துணிகளை 1905ல் சவர்க்கர் பூனாவில் எரித்தார். முதலில் அத்திட்டத்தை  ஆதரிக்காத திலகர், அன்று அங்கு வந்து பாராட்டி வாழ்த்திய  ஒரு செயல். காதியை அணியவேண்டும் என்பதை 1900களில் நமது சுதேசி தலைவர்கள் முன்னிறுத்தினர். 

இதெல்லாம் கண்டவர் காந்தி. அதன் உள்ளிருந்த நாட்டுப்பற்றையும், நாட்டில் அனைவரையும் சென்றடையக்க்கூடிய தீவிரத்தையும் அறிந்தார் அவர். இதனை தன் போராட்டத்தில் முன்வைத்தார். அதில்  தனக்கு முன்னிருந்தவர்களின் செயலைத் தனதாக்கும் முயற்சி எதுவுமில்லை.

ஆனால் பின்னாளில் வந்த அரசியல்வாதிகள், அவர்கள் ஆதரித்த வரலாறு புனையும் அறிஞர்கள், காந்திக்கு முன்பிருந்தவற்றை படுபுத்திசாலித்தனமாக இருட்டடிப்பு செய்ததன் விளைவுதான் நமது கோணலாக வளர்ந்து நின்ற பாடத்திட்டங்கள். 

தென்னிந்தியாவில் ஏதோ ஒன்றுமே நிகழாததுபோல ஒரு கருத்து அதில் காணலாம். அதுவும் இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே போராடியது போன்ற ஒரு கணிப்பை நம்மில் ஏற்படுத்தியதும் கண்கூடு. உண்மையில், பொலிகர் புரட்சி, வேலுத்தம்பி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதி, மாடசாமிபிள்ளை, நீலகண்ட ப்ரம்மச்சாரி, அரவிந்தர், வ.வே.சு ஐயர் என்பவர்களின் தியாகத்தை தமிழக பாடநூல்கள் முன்வைக்கவே இல்லை. வாஞ்சிநாதனின் தியாகம்,  ஜாதிய வெறியால் விளைந்த ஒன்று என்பதாகக் காட்டும் அவலம்தான் இப்போது நடக்கிறது. நாம் அதிகம் அறியாத சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் சிலரைப்பற்றி இங்கு வாசிக்க இயலும்.

http://www.thebetterindia.com/…/unsung-heroes-freedom-figh…/


உண்மையில் அன்று இருந்த தலைவர்கள் ‘இந்திய அளவில்,உலக அளவில்’ நிகழ்வுகளைத் தெளிவாக அறிந்திருந்தனர். அதனை மக்களிடம் அடையாளங்கள் மூலம் பரப்பவும் முயற்சித்தனர். பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்கண் பார்வை வைத்தாள்” என்று தொடங்குவதும் “ கரும்புத்தோட்டத்திலே” என்று வெளிநாட்டில் அடிமைகளாக வாழ்பவர்களுக்கு வெம்புவதும் இதன் வெளிப்பாடுதான். 

இந்த திருநெல்வேலி எழுச்சி , பிப்பின் சந்திரபால் (B.C.Pal) விடுதலையானதைக் கொண்டாடுவதாக, மக்களிடம் சுதந்திர உணர்வைப் பரப்ப வ.உ.சியும், சிவாவும், பத்மனாப ஐயங்காரும் திட்டமிட்ட ஓரு பேச்சுக்கூட்டத்தின் எதிர்விளைவால் வந்த எதிர்ப்புதான். இக்கூட்டத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக மக்களைத்தூண்டினார்கள் என்பதாகத்தான் வ.உ.சி பிள்ளை, சுப்பிரமணிய சிவா கடும் சிறை தண்டனை பெற்றனர். வ.உ.சி பெற்றது இரட்டைத் தீவாந்தரத் தண்டனை - 40 ஆண்டுகள். அந்தமான் சிறையில் இடம் இல்லாததால், கோயமுத்தூர் சிறையில் வைக்கப்பட்டார். செக்கிழுத்தார். இன்னலுற்றார்.

சவர்க்கர்  பெற்றது 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை. இந்திய சுதந்திர வரலாற்றிலேயே அதிகபட்சமான தண்டனை பெற்றவர் சவர்கர்.( நாகலாந்து ராணி கைடின்லியு ஆயுள்தண்டனை பெற்றார். அதுதான் அதிகபட்ச தண்டனை என்றும் கருத்து நிலவுகிறது. இவர்களது உயர்ந்த லட்சியத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். யார் அதிக தண்டனை பெற்றவர்? என்பதல்ல இங்கு பேச்சு). அந்தமான் சிறையில் 11 வருடங்கள் அவர் சிறு அறையில் அடைக்கப்பட்டார். அவர் கண்ணெதிரே, தியாகிகள் தூக்கிலிடப்படுவார்கள். இது அவர் பெற்ற சித்திரவதைகளில் ஒன்று.

இதையெல்லாம் நாம் பள்ளியில் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோமா? இல்லை. விளைவு? இன்று பேஸ்புக் பதிவுகளில் “ சவர்க்கர் யாரு?” என்ற கேள்விகள் வருகின்றன. மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்விகளில் ஒன்று அது. 

தலைவர்களை மட்டுமே சொல்லமுடியும் என்பது சரியான வாதமல்ல. ஒரு தலைவர் கீழ் இந்நாடு விடுதலையடையவில்லை. அப்படிப்பேசுவது என்னமோ ஒரு வலிமையான படைத்தலைவனின் கீழ் போரிட்டு நாடு விடுதலைபெற்றது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. நமது ஜனநாயகத்தைப் போலவே, பல தலைவர்கள் பல கட்டங்களில் பல காரணங்களுக்காக உரிமைப்போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதனை முறையாக மதித்து, அடுத்த தலைமுறையிடம் உண்மையாகச் சேர்ப்பதே நமது தலையாய கடமை. 

இனியாவது இக்கல்வித்திட்டங்கள் சரிசெய்யப்படவேண்டும். அரசியல் காரணமாக, ஓட்டுகள் சேகரிக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்ட போலித்தனமான வரலாறுகள் திருத்தப்படவேண்டும். அரசு மட்டுமல்ல, தனியார் ஊடகங்கள் இதில் ஈடுபட்டால்தான் முடியும்.

Wednesday, June 29, 2016

சிகரங்களும் நம்பிக்கைகளும்

குவஹாத்தி- தில்லி விமான வழி அற்புதமானது. கௌஹாத்தியிலிருந்து போகும்போது ஜன்னல் வழியாக  கர்ச்சீப் போட்டு F சீட்டுகளைத் தேடி  பிடித்துக்கொள்வேன்.


தில்லியிலிருந்து போகும்போது A சீட்டுகள். கூடவே வந்துகொண்டிருக்கும் இமயமலைத்தொடரும், நடுநடுவே அக்கினிப்பிழம்பாக மின்னும் சிகரங்களும் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. ஒரு மாதமுன்பு, தில்லி- கொளஹாத்தி காலை விமான பயணம்.


”அதோஓஓ.... தெரியறதுபாரு, சின்ன்.....ன்னதா வெள்ளியாட்டம்.. அட,அது இல்லை..கொஞ்சம் இடது பக்கம்.. ஆங்.. அதுதான் எவரெஸ்ட். “ முன் சீட்டில், புதிதாக மணமான இளைஞன் ஒருவன்,கையெல்லாம் வளையல் அடுக்கிய, மெஹந்தி அழியாத புதுக்கருக்கான  மனைவியிடம் தன் கார்ட்டோகிராஃபி அறிவைக் காட்டி இம்ப்ரெஸ் செய்துகொண்டிருந்தான். இந்த ரூட்டில் இது  வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். உள்ளூற புன்னகைத்துக்கொண்டே கேட்காத மாதிரி இருந்துவிடுவேன். எவரெஸ்ட் எப்பவோ போயாச்சு, பயல் இப்பதான் அவள் தோளிலிருந்து தலைஎடுத்து எழுந்திருக்கிறான். ரைட்டு.


”இன்னும் கொஞ்ச நேரத்துல அன்னபூர்ணா தெரியும். அப்புறம் நந்ததேவி. ஆ! அங்க பாரு, பாரு... தங்கமயமா ஜொலிக்கறது இல்லையா?! அதுதான் கஞ்சன் ஜங்கா. கண்ணை மூடிக்கிட்டு வேண்டிக்கோ. நினைச்சது நடக்கும், கஞ்சன் ஜங்காவைப் பார்த்தா.”


எவரெஸ்ட்லேர்ந்து ரெண்டு எட்டு எடுத்து வைச்சா கஞ்சன் ஜங்காவா? என்னமோ தாம்பரத்துலேர்ந்து சேலையூர் ஷேர் ஆட்டோ பிடிச்சுப் போறமாதிரின்னா சொல்றான்?ன்னு தோணினாலும், அவர்களது அறிவு வளர்க்கும் காதலில் கரடியாக நுழைய விருப்பமில்லை.


ஹலோ என்றார் அருகில் இருந்தவர். அவரும் இந்த பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்திருப்பார் போலும். என்னைப்பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார். நானும் சிரித்தேன்.  எதோ கவெர்மெண்ட் உத்தியோகம். கோப்புகளை விரித்து வைத்திருந்தார் “ Project report on *******, Kohima, Nagaland"என்று ஏதோ இருந்தது

.

“இந்த காதல் காட்சிகள் மட்டும்தான் அரசியல் மதம் கலக்காதது. நான் திருமணமானபோது இந்த ப்ளைட்ல போற வசதி இல்லை. என் மனைவிக்கு  சிகரங்களின் போட்டோக்களைக் காட்டி இம்ப்ரெஸ் பண்ணுவேன். சிக்கிம்ல போய் கஞ்சன் ஜங்கா பாத்தப்புறம்தான் என்னை நம்பவே செய்தாள்”


சிகரங்களைக் காட்டினால் மனைவி இம்ப்ரெஸ்ட் ஆயிருவாங்களா? சே தெரியாமப் போச்சே? குத்தாலம் கூட மங்கையைக் கூட்டிப்போனதில்லை.


“மலைப் பகுதி ,சிகரம் என்பது பரந்த ஞானத்தைத் தரும். நாம எவ்வளவு சிறியவர்கள் என்றூ போதிக்கும். இந்த ப்ரமாண்டத்தோடு எனக்கும் தொடர்புண்டு என்று நினைக்கையில் ஒரு பரவசம்.. அதுதான் ரிஷிகளையும் மலையை நாடச் செய்தது” பேசிக்கொண்டு வந்த  அவர் ஒரு நினைவில் ஆழ்ந்திருந்தார்.


“இந்தியா முழுசும் மலையாயிருந்தா, இந்த மதச்சண்டையெல்லாம் வந்திருக்காது இல்லையா சார்?” என்றார் திடீரென்று.

“அப்ப நீங்க போற நாகலாந்துல சண்டையே இருக்கக்கூடாது. அஸ்ஸாம் கொந்தளிக்கக்கூடாது”


“அது மத்தவங்க இடையூறா வந்ததுனால வந்த வினை. நான் அடிக்கடி இந்த மலைப்பகுதிகளில் செல்வதால் எனக்கும் ஒரு பரந்த எண்ணம் வந்தது. என்ன மதம், சடங்குகள்? ஒன்றுமே வேண்டாம்”


“அட” என்று வியந்து அவர் பேசுவதைக் கேட்கலானேன்.


“இந்த மதத்தில்தான் எத்தனை மூட நம்பிக்கைகள்? சடங்குகள்? சட்டுனு இந்த ஞானம் வந்ததும் கோயில் போறதை நிறுத்திட்டேன். கும்படறதில்ல. கடவுள்னு ஒருத்தன் இருக்கற மாதிரி என்னால நம்ப முடியலை. இருக்கலாம். ஆனா எனக்கு அவசியமில்ல” பேசிக்கொண்டே வந்தவர். பக்கவாட்டில் பார்த்து முகம் சுளித்த்தார். ‘இந்த பக்கம் பாருங்க.” என்று மறைவாகக் கை காட்டினார்.


ஒரு பெண் சற்றே பருமனாக, குண்டாக ஸ்கர்ட் அணிந்திருந்தவள், அருகிலிருந்த குழந்தை வாயிலெடுக்க, கையில் வாங்கி அதனை பேப்பர் பையில் போட்டுக்கொண்டிருந்தாள். ஏர்ஹோஸ்டஸ் அவசரமாக இன்னும் பேப்பர் பைகளையும் டிஷ்யூ பேப்பரையும் கொண்டு வர சற்றே அமளி..


“கண்டதையும் தின்னுட்டு ப்ளேன்ல ஏற வேண்டியது. நாற வைக்கவேண்டியது. இந்த வடகிழக்குல எக்கச்சக்கத்துக்கு சலுகைகள்.”


திகைப்பாக இருந்தது. கடவுள் இருக்கலாம், இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரு மனித நேயமில்லையே? குழந்தை வாயிலெடுத்தால் அதன் ஜாதியைப் பார்க்கும் மனிதன் என்ன படிச்சு என்னவாயிருந்தால் என்ன?


“எனக்கு நம்பிக்கை உண்டு” என்றேன் திடமாக “ எந்த நம்பிக்கை என்பது முக்கியமில்லை. . மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்பவனையும், ஊர்க்காவல் தெய்வத்துக்கு பலீயிட்டு வணங்குபவனையும், ஐந்து வேளை தொழும் இஸ்லாமியனையும், ஞாயிறு தவறாமல் சர்ச்சுக்குப் போகும் கிறித்துவனையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மதிக்க முடிகிறது. ஆனால், தனது மரபு தந்த பண்பை தொலைத்து, வெற்றுப்படிப்பில் தருக்கித்து, ஒன்றுமே செய்யாமல்  ‘எனக்கு எல்லாம் சம்மதம்” என்றூ வெறுமே பேசித்திரிபவனை என்னால் மன்னிக்க முடிவதில்லை”


அதன்பின்னும் பலதும் பேசினோம். அனைத்தும் வெறுமையானவை என்றே பட்டது.


மீண்டும் ஜன்னல் வழியே பார்க்கத் தொடங்கினேன் . சிகரங்கள் அழகானவை, தூரத்தில் இருப்பவை. நல்லது செய்யும் என்ற நம்பிக்கை தருபவை.


முகத்தைத் திருப்பிக்கொண்டு சிகரங்களைப் பார்க்கலானேன். தூரத்தில் கஞ்சன் ஜங்கா ஜொலித்தது.. கஞ்சன் ஜங்காதானா? வேறா?

அது முக்கியமில்லை. சிகரம், நம்பிக்கை.

இந்த முறை நானும் கண்மூடி கஞ்சன் ஜங்காவிடம் வேண்டினேன்.

Tuesday, May 31, 2016

ஆபீஸ் வாசல் அண்ணாச்சி

”ஒரு டீ குடுங்க”
"சார் எந்தூரு?” என்றார் அந்த அண்ணாச்சி. எங்க ஆபீஸ் கேட் பக்கம் ஒரு சைக்கிளின் கேரியரில் பெரிய சிலிண்டர் சைஸில் டீ ப்ளாஸ்க், முன்புறம் ஒரு ப்ளாஸ்டிக் கூடையில் , இட்லி சட்னிப் பொட்டலங்களுடன் அவர் நாலு வருடங்கள் முன்பு வந்து நின்றபோது இரண்டாம்நாள் அவர் கேட்டது இது.

சிரித்து வைத்தேன்

“நான் தமிழுன்னு எப்படி கண்டுபிடிச்சீய?” என்றார் வெகுளியாக.  சீனாக்காரன் நான் சீனன்னு எப்படி தெரியும் என்பதைக் கேட்பது போல.

“உங்க மொபைல்ல அல்லேலூயா பாட்டு ஓடுதே, காலேலேர்ந்து? அதுவும் நீங்க பேசற இந்தி.. “

அவர் நெர்வஸாகச் சிரித்தார். “ எங்கிட்டுப் போனாலும் ஆண்டவரை விடறதில்ல பாத்துகிடுங்க. நாலு பேரு கேட்டா நல்லாயிருவாங்கல்லா? என்ன நாஞ்சொல்லறது?”
“வெளங்கும். அவனவன் நொந்து போய் டீ குடிக்க வர்றான். நீரு என்னடான்னா.. சரி ஒரு டீ போடுங்க அண்ணாச்சி. காலாகாலத்துல குடிச்சிட்டு சோலி மயித்தப் பாக்கப் போவணும்”

“ஆ.. அண்ணாச்சி நம்மூரா? “ என்றார் மூக்கில் விரல் வைத்து.

“பொறவு? தூத்துக்குடிக்காரன்வே. சொந்தூரு நாங்குநேரி”

“நீங்க அசப்புல நம்மூர் மாரி இல்ல பாத்துகிடுங்க. மலயாளின்னு நினச்சேன்”
இந்த ஒரு வார்த்தைக்காகவே அவர் மனைவி விதவையாயிருக்கவேண்டும்.

“எனக்கு வீரவநல்லூரு.. இரிங்க. ஒரு வட சாப்புடுதீயளா? விடிக்காலேல ஊறப்போட்டு அரச்சது. ப்ரெஸ்ஸ்ஸ்ஸ்ஸா இரிக்கி “

அதைப்பார்த்து தவிர்த்தேன் “வடை ஒவ்வொண்ணும், ஒருலிட்டரு எண்ணெய் குடிச்சிக்கிடக்கே?. பிழிஞ்சி எடுங்க. நாளைக்கு அடுத்த ஏடு போட உதவும்”

அவர் முகம் சுருங்கினார் “ ஊருல இருக்கறவா மாரியே பேசுதீயளே? இந்தூரு பருப்புக்கு இதுதான் வருஞ்சாமி”

“அத இந்தூரு  ஆளுகளுக்கே கொடுங்க. வடா பாவ் தின்னு தின்னு வட மாரியே இருக்கான் ஒவ்வொருத்தனும்”

இத்தனையில் இரண்டாவது மாடி கால்செண்ட்டரில் இருந்த பெண்கள் இருவர் வந்து வடை வாங்கிச் சென்றனர். அண்ணாச்சி மர்மமாகப் புன்னகைத்தார் “ பாத்தியளா? பொம்பளேள் வாங்கிட்டுப் போறாளூவோ. நீங்க கரச்சல் பண்ணுதீய”

அண்ணாச்சி நல்ல நண்பராகிப்போனார். காரில் வந்து கேட் அருகே காத்திருக்கையில், பெருமையாக சல்யூட் அடித்து புன்சிரிப்பார். அன்று டீ குடிக்கப் போகையில் அடுத்திருப்பவரிடம் “சாரு,எங்கூரு தெரியுமில்லா?” என்பார் பெருமையாக. பொதுவாகவே, ஒரு திருநெல்வேலிக்காரன் அருகே மற்றொரு திருநெல்வேலிக்காரர் எப்போதும் ஒரு வேலையும் செய்யாது நின்றிருப்பார். அண்ணாச்சி அருகே யாராவது நம்மூர்க்காரர்கள் நின்றிருப்பார்கள். உடனே தொடங்கிவிடுவார்கள்“ சார்வாள் தூத்துக்குடியா? அங்கன மீளவிட்டான் பக்கத்துல எங்க மாமா இருக்காரு..”

ஆக்டிவா புதியதாகக் கொண்டுபோனதில் அண்ணாச்சிக்கு அவ்வளவு சுகமில்லை. ‘என்ன சார்வாள்? கெத்த்த்...தா கார்ல வரவேணாமா? இங்கன ஸ்கூட்டர்ல ... அந்தா அங்க பாருங்க, அந்தப் பொம்பளப்பிள்ளயும் இந்த வண்டிதான் ஒட்டுது” பெண்ணியம், சமத்துவம், பெண் விடுதலை என்று கொதிப்பவர்கள், அண்ணாச்சியை விரும்பமாட்டார்கள்.

ஆனாலும், வண்டியை அவர் அருகிலேயே வைக்க இடம் ஒதுக்குவைப்பார் “ தாயளி, எல்லாவனும் கோணலா நிப்பாட்டிட்டுப் போயிறானுவோ. நீங்க விட்டுட்டுப் போங்க,. நாம்பாத்துகிடுதேன்”
அவரை நம்பி விட்டு விட்டுப் போவது ஆபத்து என்பது பின்னர் தெரிந்தது. ஆர்.டி.ஓ வந்து வண்டியைத் தூக்கிப்போனபோது “ ஒண்னுக்கடிக்க போயிர்ந்தன் சார். அந்த அஞ்சு நிமிசத்துல ...”
ஆனால் கேட்டது வேறாயிருந்தது. ஆர்.டி.ஓ குண்டர்கள் வண்டியைத் தூக்கியபோது அண்ணாச்சி பம்மிக்கொண்டு ஒரு மூலையில் யாருடைய வண்டியோ? என்பதாக வேடிக்கை பார்த்திருந்தார் என்று ஏ.டி.எம் வாயிற்காவலர் சொன்னார். அண்ணாச்சியின் இந்த அந்நியன் split personalityஇன் பின்புலம் அன்று புரியவில்லை.

முந்தாநாள் சொன்னார் ”ஒரு வாரம் காய்ச்சலு. வேலை நடக்கல. என்ன செய்ய? சம்பாரிக்கறதுல 50% இங்க தாதா எடுத்துர்றான். இல்லன்னா நம்ம சைக்கிளையும் தூக்கி ஆர்.டி.ஓ கொண்டுபோயிருவான். செருக்கியுள்ளேள்..அவனவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கி.  ஊர்ல பொழக்க்க முடியலன்னு இங்கிட்டு வந்தா, இவனுவ வேற மாரி கொள்ளயடிக்கானுவோ. பையன் பத்தாப்பு இந்த வருசம். அவனாச்சும் பொழக்கட்டும்னு  நாய் மாரி லோல் படுதேன். என்னிக்காச்சும் ஆண்டவரு இரங்குவாரு.”

இந்த நம்பிக்கையில்தான் மும்பையில் பலருக்கு டீ கிடைக்கிறது.