Friday, May 05, 2006

குஜராத் வன்முறைகள்- பின்னணி

குஜராத்தில் கொதிப்பு இன்று நேற்றல்ல 1947க்கு முன்பிருந்தே இருக்கிறது. என்ன , கொஞ்சம் புகையடித்துக் கிடக்கும் சில வருடங்களுக்கு.. பின் மீண்டும் எரிமலைகள் சீறும் - இருபுறமிருந்தும்... இதில் போதாக்குறைக்கு பாகிஸ்தான் வேறு கட்ச் எல்லைப்ப் பகுதியில் ஊடுருவி ஆயுதங்களை அனுப்பி வைக்கும்.

குஜராத்தின் அமைப்பும் இக்கொந்தளிப்புக்குக் காரணம். கட்ச் பகுதியில் எல்லைப் பகுதி porous border. எத்தனைதான் கண்காணித்தாலும் ஊடுருவி வருவது எளிது. பஞ்சாப்ப் பகுதியிலோ காஷ்மீரத்த்திலோ இது போல் வெட்டைவெளி கிடையாது. ராஜஸ்தான் ,குஜராத் எல்லை பாதுகாப்பு மிக கடினம். பலூச்சிகளும், சிந்திகளும் மட்டுமல்ல; சில நாடோடி 'ரப்பாரிகளின்' காரவன்களும் (கட்ச் பகுதியில் இருந்து ராஜஸ்தான்வரை திரியும் சுதந்திரக் குடிமக்கள்) எல்லைகளில் தான்டித் திரிவர். யாரை யெனக் கண்காணிப்பது?
1400 களில் அகமதாபாத் ஒரு நகராக உருவானபின் நிகழ்ந்த அடக்குமுறைகள் , மராத்தா படையெடுப்பு, இந்து முஸ்லிம் குட்டி சமஸ்தானங்களின் அடிதடி, ஜூனகாத் மன்னர் பாகிஸ்தான் போக நினைத்தது எனப் பல வெளிப்பாடுகல் ,மிக முக்கியமாக சோமநாதபுரப் படையெடுப்புகள் மக்களை பல ஆண்டுகாலமாகவே சமய அடிப்படையில் பிரித்து வைத்திருக்கின்றன.
குஜராத் வன்முறைலளுக்கு வரலாற்றுப் பின்னணி இருப்பினும், பெருவாரியான கலவரங்கள் அண்மையில் அரசியல் சார்ந்ததாகவே நிகழ்ந்தன. பாகிஸ்தானிய ஊடுருவல்கள் அப்பட்டமாகத் தெரிந்திருப்பினும், காங்கிரஸ் அரசுகள் வாக்கு வங்கி அரசியல்லில் கண்மூடி இருந்தது. பெருமளவில் வளர்ந்த ஆயுதக் கிடங்குகள் நம்மமுடியாத இடங்களில் கண்டறியப்பட்டன. இது அகமதாபாத் 2002-இல் கொந்தளித்தபோது வெளியானது. அப்பாவி மக்கள் பலரும் ஒட்டுமொத்தமாக "பாகிஸ்தானிய உளவாளிகள்" எனக் குறிக்கப்ப்ட்டு கொல்லப்பட்டனர். நரோடா என்னும் பகுதியில் நடந்த கொடூரம் இன்னும் அகமதாபாத் நகரில் அச்சத்துடன் பேசப்படுகிறது. பெஸ்ட் பேக்கரி-க்கு சமமாக இதைச் சொல்லலாம்.

பழைய நகர்ப் பகுதிகள் புராதனக் கட்டிடங்கள், நெரிசலான சாலைகள் எனக்கொண்டு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இன்னும் இருப்பது கண்கூடு. 'கடைகள் வீடுகள் ஒரே கட்டிடத்தில் கீழும் மேலுமக அமைந்திருப்பதும், நெரிசலான கட்டிடங்களில் மக்கள் கூட்டாக வாழ்வதும் தடுப்புக்காப்பின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.'என்றார் எனது நண்பர். இது ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதில்லை. இந்துக்களும் முஸ்லீம்களும் இப்படித்தான் தன் கூட்டமாகவே வாழ்ந்தனர். வாழ்கின்றனர்.

புது நகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக்கட்டிடங்கள் வந்தபின்னும், கட்டிடங்களில் சொசைட்டிகள் தங்கள் சமூக மக்களுக்கு மட்டுமே வீடுகளை விற்கவும் வாங்கவும் உரிமை அளிக்கின்றன. பழைய நம்பிக்கையற்ற மனப்பாங்கு இன்னும் தொடர்கிறது. இவ்வளவு ஏன்.. இக்கட்டிடங்கள் அமைந்த தெருக்களில் இருக்கும் பள்ளிகளிலும், கல்லுரிகளிலும் தங்கள் சமூக மாணவர்களுக்கே முன்னுரிமை. சிறுபான்மையினர் சலுகைகள் கொண்டு அமைக்கிறார்கள் என்றால், பெரும்பான்மையினர் தங்கள் சமாஜம் டிரஸ்டு என்பதின் மூலம் கல்விச்சாலைகள் அமைக்கின்றனர். பெருமளவில் மாணவர்களிடம் வேறுபாடு காட்டப்படுவது இல்லை எனினும் இந்தப் போக்கு கவலை தருவதாகவே உள்ளது.

இவர்களது பரஸ்பர நன்பிக்கையற்ற மனபாங்கு தெரியவேண்டுமானால், ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் இந்துவாக இருந்தால் " அவங்களை நம்பவே கூடாது" என்பார். அவர் முஸ்லிமாக இருந்தால் " இவ்னக்களை நம்பவே கூடாது" என்பார். இருபாலருக்கும் எங்காவது ஒரு உள்காயம் இருக்கும் நிச்சயமாக. எவராவது அவர் குடும்பத்தில் வன்முறையில் மரித்திருப்பார். உதவ வருபவர்கள் அவரது சமூகம் சார்ந்தவராகவே பெரும்பாலும் இருக்க, பழி உணர்ச்சி தூபம் போட்டு வளர்க்கப்படுகிறது.

சமானிய மனிதர்கள் இவ்வாறு பாதிக்கப்படுவதால், கூட்ட உணர்வு பெரிதாக மதிக்கப்படுகிறது. ஒரு கூட்டமாக இருந்து அடித்துப் பழிவாங்க ஒவ்வொரு மனிதனும் துடிக்க பண்டிகைகளை நோக்கிக் காத்திருக்கிறார்கள். வழிபாட்டுத்தலங்கள் இலக்காகின்றன. இதில் அரசியல் ஆதாயம் தேடும் முதலைகள் வேறு. வெறியாட்டத்திற்குக் கேட்கவேன்டுமா?

வன்முறையில் ஈடுபடுபவர்களின் சமூக , பொருளாதார்ச் சூழல் ஆராயப்படுவதில்லை. இது பல அரிய உண்மைகள வெளிக்கொணரலாம். ஒட்டுமொத்தமாக " இந்துக்கள் கொல்கிறார்கள்" என்றோ "முஸ்லிம்கள் நாட்டுத் துரோகிகள்" என்றோ சொல்வது அரசியல் ஆதாயம் தேடும் சமூக விரோதிகளே.சேரிகளில் இக்கலவரம் நிகழ்வது சேரிகள் ஆக்கிரமித்க்த நிலங்களை ஆக்கிரமிக்க நினைக்கும் பேராசைக்கார பில்டர்களின் தூண்டுதல்களே பெரும்பாலும்.
கல்லெறிபவனும், அடிபடுபவனும் கொண்டுள்ள உள்தாக்கம் கவனமாக ஆராயப்படுமானால் இவற்றின் தீவிரம் குறையும்.
குறையவேண்டும் ...

No comments:

Post a Comment