Sunday, May 07, 2006

இரு மனிதர்கள்

எனக்கு ராகுகாலம் ராத்திரியில் வந்தது என்பதை கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யத் தயாராக இருக்கிறேன். கொடுமை மும்பை சர்வதேச விமானநிலையத்தில் ஆரம்பித்தது என்றால் போகும் வழியிலெல்லாம் தொடர்ந்தது.

ஏதோ மும்பையில் ஏறினோம்அடுத்ததாக நியூயார்க்கில் இறங்கினோம் என்றில்லாமல், இந்தமுறை " கோயில்பட்டிலே கொடை-ல்லா.. அதுனால மதுர வண்டி குறுக்குச்சாலை சுத்தி வுட்டுருக்கான். " என்பது போல, கோட்டிக்காரத்தனமாக ஒரு ரூட்டில் எனக்கு டிக்கட் கிடைத்தது. தத்தி தத்தி, நொந்து நூலாக அமெரிக்கா சென்ற கொடுமை சில மாதம் முன்பு.

மிலான் (மால்பென்ஸா) விமான நிலையத்தில் காத்திருப்பது என்பது மும்பையில் இருப்பதை விட மோசம். டாய்லெட்டுகள் முதற்கொண்டு அப்படியேவா அசுத்தமாக இருக்கவேண்டும்? வெறுத்துப்போய் விமானத்தின் போர்டிங் பாஸ் கிடைக்குமிடத்தின் அருகே சென்று பார்வையிட்டேன். அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் நிரம்பி வழிந்திருந்தனர். சிலர் இரண்டு இருக்கைகளில் சாய்ந்து வாய் பிளந்து உறங்கியிருக்க, சில ஆந்தைகள் லாப்டாப்களில் படு சீரியஸாக மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஒரு தூணின் அடியில் சிறிது இடமிருக்கவே, தொப்பென அங்கே அமர்ந்து கண்மூடினேன். தூக்கம் அழுத்தியதென்றாலும், உறங்க முடியவில்லை. அலுப்பும் , வலியும் எரிச்சலும் மிகுந்திருந்தன. இனிமே விமானத்தில் ஆசிய சைவ உணவென்று கொடுத்தாலும் பக்கிரிமாதிரி திங்கக்கூடாது...

தேவுடா என இருந்தவன் எதிரே இருந்த தூணின் அடியில் கால் விரித்து அக்கடாவென அமர்ந்திருந்த ஒரு மனிதர் நம்ம ஊர்க்காரர் போல இருக்கவே, "ஹலோ" என்றேன். தூக்கம் வராம இருக்க மற்றவர்களை அறுப்பதைவிட வேறு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அந்த மனிதருக்கு ஐம்பது வயதிருக்கலாம். இரு நாட்களாக சவரம் செய்யாத தாடி -சீராகவும் முளைக்காமல், கன்னாபின்னாவென இருந்தது இன்னும் அழுக்காகக் காட்டியது.

"ஹலோ" என்றவரது கண்கள் சிவந்திருந்தன. தமிழ்க்காரர் என அறிமுகப்படுத்திக்கொண்டபின் புன்னகையில் ஒரு அன்னியோன்னியம் இருந்தது." நான் ஆரோக்கியராஜ்" என்றார். "டோ ரெண்டோ வில் இருக்கேன். நியூயார்க் போய்விட்டு பத்து நாள் கழிஞ்சு கனடா போவேன்" என்றார்.
"சீனாவில் கொஞ்சம் வேலை. ஆர்டர் கொடுத்துவிட்டு, சியோல் வழியாகப் போகவேண்டியவன்... ஊருல சொந்தக்காரர் ஒருத்தர் சீரியஸ்..., இந்தியா போயிட்டு டிக்கட் கிடைக்காம இப்படி...." நொந்து நூலான கதை எல்லாருக்கும் பொதுதான் போலும்.
"சீனா எப்படி இருந்தது?"
எனது கேள்வியின் உட்காரணம் கடிகாரத்தில் இன்னும் இரண்டுமணிநேரம் கடத்துவதற்காக மட்டுமே. தூக்கம் இன்னும் சொக்கியது.
"இருக்குங்க ..எல்லாம் நம்ம ஊரு மாதிரிதான்"
ஆச்சரியமானேன். நம்மவூர் மாதிரி என்று கேட்டது புதியதாக இருந்தது.
"நம்மூர் மாதிரின்னா?"
"ம்.. எங்கப்பா சொல்லுவாரு." சொந்த ஊர் தாண்டிட்டா எல்லா ஊரும் பரதேசந்தான்."-ன்னு அதுல சீனாவென்ன, கனடாவென்ன.. எங்க போனாலும் ஊருன்னா நம்ம ஊருதான். என்ன நான் சொல்லறது?.." "
" சீனாவும் கனடாவும் ஒண்ணாயிருமா? ஒங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்காங்க-ன்னு வைச்சுக்குவம். சீனாவா , கனடாவான்னு... ரெண்டும் ஒண்ணுதான்னு சீனா போயிருவீங்களா?" சீண்டிப்பார்த்தேன்.
சிரித்தார். " எனக்கு நீங்க திருநெல்வேலியா, டொரொண்டோ வா-ன்னு கேட்டாலும் இப்படித்தான் சொல்லுவன். எங்க சோறுகிடைக்குதோ அதுதான்.." எத்திசைச் சோறு"ன்னு என்னமோ சொல்லுவாங்கள்லா... அதுதான் நம்ம பாலிசி" என்றவர், 'நியூயார்க்கில் என்ன வேலை சார்?' என்றார். சொன்னேன்.
" அடப்பாவமே.. இதுக்கு நீங்க நேரா பிலடெல்பியா போயிருக்கலாமே? நியூயார்க், அட்லாண்டா.. பிலடெல்பியா.. இதென்ன சுத்திவளைச்சு மூக்கைத் தொடற கதையாயிருக்கு?"
"வயித்தெரிச்சல் சார் " என்றவாறே பேச்சைத் திருப்ப முயற்சித்தேன்.
எதிரில் பேசிக்கொண்டே மெல்ல நடந்து வந்துகொண்டிருந்த மூவர் இந்தியர்கள் போல இருந்தனர்- அவர்களில் பாதிரியார் போல அங்கியணிந்திருந்த இருவர் சீரியஸாக எதையோ பேசிக்கொண்டிருக்க, அருகில் நடந்து வந்துகொண்டிருந்தவர் அப்பேச்சில் ஈடுபடாமல் விட்டேத்தியாகப் பார்த்துக்கொண்டு வந்தார். எங்களைப்பார்த்துப் புன்னகைத்தார். :ஹலோ" என்றேன்.
" ஹலோ " எனப் புன்னகைத்தவர் குனிந்து கையை நீட்டினார். அமர்ந்திருந்தபடியே கை குலுக்குவது அவமரியாதை என நினைத்தாரோ என்னவோ, ஆரோக்கியராஜ் எழுந்து கை குலுக்கினார். அக்கடா வென இருந்த நானும் எழுந்தேன் வேறுவழியில்லாமல்.
"நான் டேனியல். ஹைதராபாத்-திலிருந்து வருகிறேன்." ( அப்படித்தான் பெயர் சொன்னார் என நினைக்கிறேன்.. சரியாக நினைவில்லை.)என்று ஆங்கிலத்தில் சொன்னவர் கொஞ்சம் தெலுங்கில் மாட்லாடிப்பார்த்தார். தமிழ் நாங்கள் என்று தெரிந்ததும் ஆங்கிலத்திற்கு மாறினார்.
ஆரோக்கியராஜ் கிறித்துவர் எனத் தெரிந்ததும் மகிழ்ந்து போனார் மனிதர். மற்ற இரு பாதிரியார்களில் கண்ணாடி அணிந்த ஒருவரைக் காட்டினார் " அவரும் நானும் ஒரு கான்பெரன்ஸூக்கு வந்திருக்கிறோம்" என்றார். ஆரோக்கியராஜ் அழைத்ததில், மூவரும் ஒரு காபி ஷாப்பை நோக்கி நடந்தோம்.
ஆரோக்கியராஜ் காபியை குடிக்க முற்படுமுன் டானியல் " ஒரு நிமிஷம்" என்றார். கண்களை மூடி ஜபித்தார். நாங்கள் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டோ ம்.
" ஆண்டவனுக்கு முதலில் நன்றி சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் " என்றார் டானியல் ஆங்கிலத்தில்.
ஆரோக்கியராஜ் புன்னகைத்தார். " நான் ஒர் விசுவாசி. எனது பிரார்த்தனைகள் என்றும் உண்டு.." என்றவர் மேற்கொண்டு சொல்லத் தயங்கினார்.
" ஒரு கிறித்துவராக இருந்து கொண்டு நீங்கள் ஆனந்தமாக ஜெபிக்கவேண்டாமா? முஸ்லிம்கள் தொழுகை நேரத்தில் எங்கு இருந்தாலும் தொழத் தவறுவதில்லை. நீங்கள் என்னடாவென்றால் பிரார்த்தனை செய்யத் தயங்குகிறீர்கள். கேலியாகப் பார்ப்பார்களே என்று வெட்கம்... என்ன சார்?" என்றார் டானியல் சற்று சூடாக.
ஆரோக்கியராஜ் சிரித்தார் . " கொஞ்சம் இருங்கள். நான் இப்போ வந்துவிடுகிறேன்" என்றவாரே தனது போர்டிங் பாஸ் , பாஸ்போர்ட் இத்யாதிகளை அடுக்கிக்கொண்டு தனது விமானத்தின் நேரத்தைச் சரிபார்க்கப் போனார்.

டானியல் என்னைப் பார்த்தார். "உங்கள் பெயரென்ன சொன்னீர்கள்?" முதற்பெயரைச் சொன்னேன்.
பெயரில் எனது மதம் தெரியவில்லை போலும். " நீங்களாவது ஜெபித்திருக்கலாம்" என்றார்.
"மன்னிக்கவும். எனக்கு பிரார்த்தனை செய்யத் தோன்றும்போது செய்வேன். காபிக்கெல்லாம் ஆண்டவன் கோபித்துக்கொள்ளமாட்டான் என நினைக்கிறேன்" என்றேன். இன்னும் ஒன்றரை மணிநேரம் இருக்கிறது.
" நீங்கள் விசுவாசிஇல்லை அல்லவா?" என்றார்
" எந்த விசுவாசத்தைச் சொல்கிறீர்கள்?" என்றேன்.காபி உதட்டைச் சுட்டது.
" பைபிளில் வருகிறது.. " கர்த்தரை நம்பாதவனுக்கு அந்தோ.."
"சார்" என்றேன் பொறுமையிழந்து. " எனக்கு பைபிள் நன்றாகவே தெரியும். ஆனால் நான் கிறித்துவனில்லை. அதனால் விசுவாசியில்லை என்று அர்த்தமில்லை. எப்படி விசுவசிக்கவேண்டுமென்றும் , கீழ்ப்படிதல் வேண்டுமென்றும் எனக்கு நன்றாகவே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். காபியைக் குடியுங்கள்".
அவர் எழுந்துவிட்டார். எவரும் எங்களைக் கவனிக்கவில்லை என்பது ஆறுதலான விஷயம்.
" உட்காருங்கள்." என அமைதிப்படுத்தினேன்." என்ன நடந்து எனக் கோபப்படுகிறீர்கள்? நான் ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே?"

"நீங்கள் கிறித்துவர் இல்லை என்றால் ஏன் பைபிள் பற்றிப் பேசுகிறீர்கள்?" என்றார். வாழ்க்கையில் முதன்முதலாக இப்படிக்கேட்கிறேன்.
" வெட்டி வாதத்தை வளர்க்க விரும்பவில்லை. பிரார்த்தனை செய்வதும், செய்யாதிருப்பதும் அவரவரது கடவுள் குறித்தான அறிதலும், சுதந்திரமும்.அந்த மனிதரை முதலில் கேட்டீர்கள். இப்போது நான்.. " முடிக்கவில்லை நான். மனிதர் தோளில் பையை மாட்டிக்கொண்டார். என் முகத்தருகே குனிந்தார்.
" உங்களைப்போன்ற ஆட்களுக்கு நாங்கள் சொல்லிப்பார்த்தும் பயனில்லை. நியாயத் தீர்ப்பு நாள் வரும். அன்று புரியும்." சொல்லிவிட்டு விடு விடுவென நடந்தார்.
எனக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.. காபியை மெல்லப் பருகினேன்.
ஆரோக்கியராஜ் மீண்டும் வந்தார். முகமெங்கும் சிரிப்பாக. " என்ன மாட்டினீர்களா?" என்றார்
"கிண்டலா?" என்றேன்." மனிதர் என்னைச் சபிக்கவில்லை அவ்வளவுதான். நியாயத்தீர்ப்பு நாளுக்கு காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்."
நடந்ததைச் சொன்னேன்.
ஆரோக்கியராஜ் சற்று மெளனமானர்.
" இவர்கள் போல சிலரால் எது தெய்வ பாதையெனவே தெரியாமல் போகிறது. நான் ஜெபிக்கிறேன். ஆனால் எல்லா ஞாயிறு தோறும் சர்ச் போவதில்லை. என் வேலை அப்படி. நான் மனிதனா என்னும் கேள்விக்கு விடை கேட்டுக்கொண்டிருக்கிறேன். பைபிளில் அதற்கு கிடைக்கும் அறிவுரைகள் படி நடக்கிறேன்." என்றார்
நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
" எனக்குத் தெரிந்து ஏதோ எனக்குத் தோன்றியதைச் செய்கிறேன். இரு குழந்தைகளுக்கு படிக்க வசதி செய்திருக்கிறேன். அவர்களை கிறித்துவராக ஆகும்படி சொல்லவும் இல்லை. சொல்லவும் மாட்டேன். சொல்லப்போனால் நான் யாரென்றே அவர்களுக்குத் தெரியாது." தொடர்ந்தார்.
" ஆண்டவன் நமது நன்றியையல்ல , அன்பையே எதிர்பார்க்கிறான்" என்றேன்.
" எக்ஸாட்லி. கிறிஸ்து சுகமாக்கிய முடவர்களும், குருடர்களும், நோயாளிகளும் அவரிடம் நன்றி சொன்னதாக பைபிளில் இல்லை எனப் படித்திருக்கிறேன். அவர் அதனை எதிர்பார்க்கவும் இல்லை. நமது அன்பை வெளிப்படுத்துவதை விட்டுவிட்டு,முரட்டுத்தனமாக மற்றவர்களை கடிவது கிறித்துவமல்ல." என்றார்.
"இதைச் சொல்லுவதால் நீயெல்லாம் கிறித்துவனா? என யாராவது கேட்டால் நான் கவலைப்படுவதில்லை." என்றவாறே காபியை அருந்தினார். அவர் முகம் இறுகியிருந்தது. இரு நிமிடம் நாங்கள் இருவரும் பேசவில்லை.

"நேரமாகிறது" என்றவாறே எழுந்தார். கைகுலுக்கியபடி பிரிந்தவரது கழுத்தில் இருந்த மெல்லிய ஜபமாலையில் வெள்ளி சிலுவை லேசாக மினுமினுத்தது.

No comments:

Post a Comment