Wednesday, August 30, 2006

இன்றைக்கு மட்டும் வாழ்வோம்(concluded)

விற்பனைப்பகுதியில் பணிசெய்வதால் , "போடா" எனக் கஸ்(ஷ்)டமர்கள் கழுத்தைப்பிடித்துத் தள்ளினாலும், உறுதி குலையாமல் இருக்கும் பக்குவம் எனக்கு வந்திருந்தது. எனவே இதில் நான் பின்னடையவில்லை.
பத்து நிமிடம் கழிந்து மீண்டும் தொடர்புகொண்டேன்.
" உன்னோடு ஒரு நிமிடம் நான் பேசலாமா? " என்றேன்.
மவுனம். " இதோ பார். எனக்கும் தலைக்கு மேல் வேலையிருக்கிறது. வேலையத்துப் போய் உனக்கு போன் செய்யவில்லை. உன்னோடு பேசும் நேரத்தில் எனது வாடிக்கையாளர்களிடம் பேசினால் பணம் குவியும். இருந்தும் ஏன் உனக்குப் போன் செய்கிறேன் தெரியுமா?" எனது குரலில் இருந்த அழுத்தம் அவனைச் சிறிது அயர்த்தியிருக்கவேண்டும்.
" உன்னைப் பற்றி உன் காதலி கவலைப்படுகிறாள். உன் நண்பன் கவலைப்படுகிறான். முன்னேப்பின்னே காணாத பலரும் உன் பேரில் இன்று காலையிலிருந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிர்ஷ்டக்காரன் டா நீ"
" என்ன அதிர்ஷ்டம் எனக்கு? எல்லாம் போயாச்சு"
" என்ன போச்சு உனக்கு? "
" உனக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி. கெட் லாஸ்ட்" கத்தினான்.
" என்ன தெரியணும்? காலேஜ் படிக்கிற பையன் என்ன போச்சுன்னு இப்படி கத்துகிறாய் எனப் புரியலை" என்றவன் தொடர்ந்தேன்.." உனக்கு நான் எதாவது உதவி செய்ய விரும்புகிறேன். இது நானாக தேர்ந்து எடுத்துக்கொண்ட விருப்பம். புரிகிறதா?. "
அவன் சட்டென விசிப்பது கேட்டது. " நான் ஒரு தோல்வி. எல்லாம் நஷ்டப்பட்டுவிட்டேன். வாழ்க்கையில் இனி ஒன்றுமில்லை"
" நீ படு புத்திசாலி என உன் நண்பன் சொன்னான். மராத்தி கவிதைகள் எழுதுவியாமே? எனக்கு கவிதைகள் என்றால் பிடிக்கும்" என்றேன்.
" கவிதைகளை உடைப்பில் போடு. என்ன ப்ரயோஜனம். வேலை கிடைக்குமா?"
" கவிதை எழுதினால் வேலை கிடைக்கும் என யாராவது சொன்னார்களா? நீ கவிதை எழுதுவது உனது விருப்பம். உனது தேர்வு இல்லையா?
"ஆம் . அது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான்.
பலதும் பேசினோம். என்ன பேசினாலும் அடித்தளத்தில் ஒரு நம்பிக்கையின்மை, சோர்வு இருப்பதை உணர முடிந்தது. சிறுவயதில் கிட்டிய சிறு சிறு ஏமாற்றங்கள், தவறான அனுமானங்கள் அழுத்திக்கிடப்பதை உணர்ந்தேன்.
" பெற்றோர் உன்மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள்" என்றபோது சிரித்தான்.
" அவர்கள் வேண்டாமென்றுதானே , சோலாப்பூர் விட்டு மும்பைக் காலேஜில் படிக்கிறேன். அங்கேயே கிடைச்சது. இவங்க சங்காத்தமே வேணாம்"
அடிப்படையான காரணம் புரிந்தது. பெற்றோர் அடித்தது தன்னை தண்டிக்க அல்ல, திருத்தவே என்பது புரியாத வயதில் வாங்கிய ரணங்கள் இறுகி இன்று வெடிக்கிறது.
என்னென்னமோ சொல்லிப் பார்த்தேன் . அவன் தன் எண்ணச் சுழற்றலிலிருந்து மீள்வதாகத் தெரியவில்லை. எனக்கு அலுவலகத்தில் பணி கூடவே, மதியம் பேசுவதாக இருவரும் உடன்பட்ட பின், போனை வைத்தேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் அன்பளிப்பாக அனுப்பியிருந்த ஒரு சிறு புத்தகம் என் அலுவலகப் பையில் தட்டுப்பட்டது. வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். மனம் லயிக்கவில்லை. மதியம் இவனுக்கு என்ன சொல்லுவது?
மதியம் சொன்னபடியே மீண்டும் தொடர்பு கொண்டேன். நிறையப் படித்திருந்தான்.
வாழ்வு இன்றுமட்டும் வாழ்ந்து பார்க்கலாம் என டேல் கார்னீஜ் சொன்னதைப் படித்ததாகவும் சொன்னான். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என அடித்து வாதிட்டான்.
லியோ பஸ்காலியா (Leo Buscaglia) எழுதிய Personhood புத்தகம் பற்றி அவன் சொன்னதும், சட்டென எனக்கு ஒரு வாக்கு நினைவுக்கு வந்தது.. காலையில் புரட்டிக்கொண்டிருந்த personal excellence என்னும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அனுப்பிய இலவசப் புத்தகத்தில் அவரது வார்த்தைகள்...
" நீ கவிதை ரசிப்பாயல்லவா? ஒரு நல்ல சொற்றொடர் சொல்கிறேன். எப்படியிருக்கிறது எனச் சொல்"என்றவாறே அப்புத்தகத்தில் இருந்து வாசித்தேன்.
" வாழ்வு என்பதும் , அதைச் சோதனை செய்துநோக்க வாழ்வு நேரம் என்பதும் நம்மிடம் இருக்கையில், நமக்கு வெற்றி கிடைக்க சாத்தியக்கூறுகள் அதிகம்"
"Armed with life on our side and a lifetime to experiment, the odds are in our favor"
" Good one" என்றான்.
" வாழ்க்கை வாழ நேரம் இருக்கையில் அதனை திருப்பிக்கொடுத்துவிட்டு மைதானத்தை விட்டு ஓடுவது கவிதையா?" என்றேன்.
மீண்டும் சில நிமிடங்கள் பேசியதும், " என் பெற்றோர் வந்து பேசும்வரை எதுவும் விபரீதமாகச் செய்யமாட்டேன்" என அவனிடம் உறுதிவாங்கியபின் போனை வைத்தேன்.
பெங்களூர் , பின் மும்பையென அலுவலக அழுத்தத்தில் இதனை மறந்தே போனேன்.
சில நாட்கள் முன்பு எனது மொபைல் போனில் தெரியாத நம்பர் மீண்டும்.
" நான் தான்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். " இப்போது சோலாப்பூரில் இருக்கிறேன். பெற்றோரோடு. மகிழ்ச்சியாக என்றெல்லாம் சொல்லமாட்டேன். " வறட்டு கவுரவம்.. தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை.
" அப்பாவுடன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன். படிப்பை அடுத்தவருடம் தொடரலாம் என இருக்கிறேன்.." எனப் பலதும் சொல்லிவந்தவன் தயங்கினான்.
" சார்.." என்றான் மரியாதையோடு " இப்போது வாழ்வும், அதற்கான நேரமும் என்னிடம் இருக்கின்றன. அனைவருக்கும் என் நன்றி" சட்டென போனை வைத்துவிட்டான்.
புன்னகையுடன் நான் மொபைலைப் பார்த்தேன். அவன் நம்பர் பதிவாயிருந்தது. வேண்டாம் . இதைத் தொடர்ந்து பழசெல்லாம் நினைவு படுத்தவேண்டாம். அவனுக்கு அவனது வாழ்வும் , அதனை அனுபவிக்கும் நேரமும் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அவன் ஜெயிக்கட்டும்.

2 comments:

  1. ஒரு இளைஞனை நல்வழிக்கு கொண்டு வர நீங்கள் எடுத்த முயற்சியும் அதில் கிட்டிய வெற்றியும் ஒரு மனநிறைவை ஏற்படுத்தியது.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி மஞ்சூர் ராஜா அவர்களே,

    நான் இதில் செய்தது ஒன்றுமில்லை. அவனாகவே எடுத்த முடிவு இது. அதுவே வெற்றியும் கூட.
    எனக்குப்பின் மனவியல் வல்லுநர்கள் அவனிடம் பேசியிருக்கக்கூடும். நண்பர் இது குறித்து அறிவிக்காததால் எனக்கு இது அனுமானம் மட்டுமே.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete