Friday, January 24, 2014

முதிர்ச்சி.

”இதை எதுக்கு எடுத்துண்டு வந்தாய்? “ குரல் கேட்டுத் திரும்பினேன். கருத்த மெலிந்த , சற்றே வழுக்கை ஏறிய உயரமான மனிதர். யாரைத் திட்டுகிறார்? அவர் சற்றே விலகி, ஒரு இருக்கையில் அமர்ந்த பின்னரே பின்னால் அந்த மாமி தெரிந்தாள். சற்றே கூன் விழுந்த உருவம். ரெட்டை மூக்குத்தியும், காதில் பெரிய தோடுமாக மாமி நடந்து வந்ததில், கையிலிருந்த ஒரு பை அதிகமாகவே ஆடியது.

”எங்க கேட்-டுனு ஒங்கயும் போடலையே?”
மாமா சற்றே கண்ணாடியைக் கழற்றி, வாயை விரித்து, கண்ணைச் சுருக்கிப் பார்த்தார். பின் கண்ணாடியைப் போட்டும் இத்தனை கோணஷ்டைகளைத் திரும்பவும் செய்து பார்த்துவிட்டு’யாராவது நம்படவா வருவா. அவாட்ட கேப்பமா?”என்று சொல்லிக்கொண்டிருந்த போது நான் இடையில் புகுந்தேன். ஹாங்காங் ப்ளைட்டா? அதுக்கு கீழே போணும். நிறையநேரம் இருக்கு. இங்க உக்காந்த்துக்கோங்க. “ என்றேன்.
மாமா திரும்பிப் பார்த்தார். “ ஓ. நீங்களும் அதுலதான் போறேளா சார்” “ஆமா” என்றேன். மாமிக்கு அருகிலிருந்த சீட்டில் அமர்ந்தேன். 

மாமி, என்னை கைகாட்டி அழைத்தாள் “ அம்பி. எங்கயாக்கும் இருக்காய்?” குரல் பிசிறு தட்டியிருந்தது.
”பம்பாய், மாமி: 
“பார்யா என்ன பண்றா?” சொன்னேன்.
“குழந்தைகள் இருக்காளோன்னோ?”
மாமா அதட்டினார் “ என்னது, சாரோட ஜாதகத்தையே கேட்டுண்டிருக்காய்? சாரி சார். அவள் அப்படித்தான், எதாவது வழ வழன்னுண்டே இருப்பள்”
”சேச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. பெரியவா கேக்கறா. இதுல என்ன இருக்கு?” என்றேன்.
மாமியின் முகம் சற்றே விகசித்தது. மஞ்சளாக, தாறுமாறாக இருந்த பற்களைக் காட்டிச் சிரித்தாள்.
“இந்தப் ப்ராம்ணருக்கு எல்லாரையும் சார்னே கூட்டுப் பழக்கம். ரயில்வேஸ்ல இருந்தாரோன்னோ? அதான். “ மாமா பக்கம் திரும்பி “ நம்ம பத்து மச்சினன் மாதிரி இருக்கான்ல்யா? . அம்பி நோக்கு என்ன வயசாறது?”
மாமா சங்கடத்தில் நெளிந்து மறுபுறம் பார்க்க , நான் “ நாப்பத்தஞ்சு ” என்றேன்.
“அதான். எங்காத்து பத்து , பத்மனாபன்னு பேரு, அவன் மச்சினனுக்கும் நாப்பத்தாறு நடக்கறது. அவன் மாமா பொண்ணைத்தான் கொடுத்திருக்கா. வர்ர ஆனிக்கு நாப்பத்து ஆறு முடியும். ஏன்னா ஆனிதானே?” 
அவர் யாருக்கும் புரியாதமாதிரி முணுமுணுத்து , தலையை மீண்டும் மறுபுறம் திருப்பிக்கொண்டார்.
” நாங்க நாலுமாசமா வந்து இருந்தாச்சு. ஒன்றரை வயசுல ஒரு குழந்தை இருக்கு அவனுக்கு. அவளும் பாவம் ஜோலி பாக்கலை. குழந்தையோட நீயும் வாம்மா-ன்னான் இவர் அம்மா படுத்துண்டு இருந்தாளே?..,சூலிப் பொண்ணையும், மாமியாரையும் நாந்தான் பாத்துண்டேன். மாமியார் ஆடத் திவசம் முடிச்சுட்டு நாலு மாசம் முன்னாடி கிளம்பினோம்.கும்பகோணம் பக்கத்துல ...”
“நிறுத்தறயா? பிறத்தியார் என்ன மூட்ல இருக்கான்னே பாக்காம, பனரப் பனரப் பேசிடவேண்டியது. இது நல்லதில்லை கேட்டியா?” 

“சார், நீங்க எங்க பே ஏரியாவா? எந்த கம்பெனி, எங்க இருக்கேள்?’போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு ”பத்மநாபன் என்ன செய்யறார்?” என்றேன்.
“அவன் ஹைதராபாத்ல நல்ல சம்பளத்துலதான் இருந்தான், கேட்டேளா? ஒருத்தன் மெயின் ஃப்ரேன் ஸ்கில் வேணும்னுட்டு இவனை நைச்சியமா பேசி அமெரிக்கா போறியான்னான். இவன் எல்லாரும் போறாளே? நம்மளும் போனா என்னான்னு ஆசை.. கண்ணைக் கட்டிடுத்து அப்ப. அட்லாண்ட்டால ரெண்டு வருஷம். அப்புறம் சியாட்டில்.”
”அங்கதான் அவனுக்கு வேலை போச்சுடா அம்பி” என்றாள் மாமி, புடவையில் மூக்கைத்துடைத்தவாறே.
“ கிடைச்சது, அப்புறம், என்னமோ கிரகம் படுத்தறது. இர்வைன், ஆஸ்டின்-ன்னு அலைஞ்சுண்டே இருக்கான். இப்ப என்னமோ திரும்பவும் இர்வைன்ல கொஞ்ச நாளா இருக்கான். சரி, குடும்பத்த கூப்பிட்டுகறேன்னான். ”
மாமி, தாழ்ந்த குரலில் பேசினாள். “ கஷ்டப் படறதுகள்டா, அம்பி. எங்களுக்கு மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் எடுக்கணும். இவருக்கு சுகர். எனக்கு ப்ரஷர் உண்டு. செலவு இருக்கில்லயா? அதான், குளிர் ஒத்துக்கலேப்பா, ஊர்ல விஷேஷமெல்லாம் வரும்னுட்டு கிளம்பிட்டோம். ”
மாமா ஒரு நிமிடத்தின் பின் தொடர்ந்தார் “ சார், இங்க இருந்தா லைட்டா இருக்கணும். எங்கள மாதிரி சுமைகளெல்லாம் இருந்தா அவாளுக்கும் கஷ்டம், அதப் பாத்து நமக்கும் கஷ்டம். நம்ப மாட்டேள். என் பென்ஷன டாலர்ல மாத்தினா , இவளுக்கு மாத்திரை வாங்க மட்டும்தான் அது வரும். “
நான் எதோ சொல்ல வாயைத் திறந்தேன். நிதர்சனமும், அதனைப் புரிந்து கொண்ட முதிர்வின் நிதானமும் கட்டிப் போட்டுவிட்டன.
“மெட்ராஸ்ல ஒரு வீடு இருக்கு கேட்டேளா?. நாங்க ரெண்டு பேரும்னா என் பென்ஷன் தாராள்மாப்போறும். சமாளிச்சுடுவோம். சரி, கிளம்பலாமா சார்.? இவள் மெள்ளத்தான் நடக்க முடியும்.”
நான் சென்று பார்த்துவிட்டு வந்தேன். ஒரு தளம் கீழே இறங்கவேண்டும். எஸ்கலேட்டர் இருந்தது.
“ஓ அந்த பாழாப்போன எஸ்கலேட்டரா? அதுல நேக்கு பயம்டா அம்பி. படிக்கட்டு இருந்தா, மொள்ள பிடிச்சுண்டு இறங்கிடறேன்” என்றாள் மாமி.
”நீங்க வாங்க. நான் கையப் பிடிச்சுக் கூட்டிண்டு போறேன் என்று இரு முறை உறுதியளித்தபின் தான் மாமி எழுந்தாள்.
எஸ்கலேட்டரில் மாமா ஸ்டைலாக, இறங்கிச் செல்ல, நான் நின்று மாமியின் கையைல் பிடித்து மெல்ல அதில் ஏற்றினேன். 
“அந்தப் பையைக் கொடுங்க எங்கிட்ட. “ என்றதற்கு மறுத்துவிட்டாள்.

“பரவாயில்ல, எடுத்துகிட்டு ஓடிற மாட்டேன்” என்றேன் புன்னகையுடன்.
“பேஷா எடுத்துண்டு போயேன். தட்டை, நாலு முறுக்கு, மைசூர்பாக்குனு வழிக்கு வச்சிருக்கேன். இவனெல்லாம் என்ன சாப்பாடு போடறான்?. வெஜ் மீல்ஸ்னா ஒரே உப்பு. வாயில வைக்க முடியலை. இந்தப் ப்ராம்ணரானா, சாட்டுண்டே இருக்கார். உப்பு ஆகாது. சொன்னா கேக்கமாட்டார். அம்பி, இதுல கொஞ்சம் மைசூர்பாக்கு இருக்கு. உங்காத்துப் பையனுக்கு எடுத்துண்டு போ. நோக்கும் ரெண்டு தட்டை எடுத்துக்கோ. ப்ளேன்ல எங்க ஒக்காருக்காயோ?”

புரிந்து கொள்ளுதலும், கொடுத்தலுமே வாழ்வான இவர்களிடமிருந்து யார் எதை எப்படித் திருடமுடியும்? இவர்களா சுமைகள்?

1 comment: