Thursday, June 18, 2015

தெளிவு

தில்லி தீயாய் எரிந்து கொண்டிருந்தது, ஒரு மாதம் முன்பு.
T3 டெரிமினலில் அதிகர்வம் பிடித்த அமெரிக்கன் எக்ஸ்ப்ரஸ் லவுஞ்ச் “ உங்க கார்டெல்லாம் தகுதி போறாது. ஹாங்க்காங் ல கொடுத்த கார்டுன்னா உள்ளே போலாம்” என்ற போது அவமானப்படுத்தப்பட்ட கொதிப்புடன் வேகமாக நடந்தபோது..

“எக்ஸ்க்யூஸ்மி”

“யெஸ்” என்றேன். தென்னிந்திய சாயலுடன் ஒரு பெண்மணி , அருகே தளர்ந்த உடலுடன் ஒரு பெரியவர். நான் அறியாதவனென்றாலும், முகமலர பெரிதாகப் புன்னகைத்தார்.

“நீங்க ஜெட் ஏர்வேஸ்லயா பாம்பே போறீங்க? “ என்றார் அப்பெண். ஆம் என்றதும், “ இவரை போர்டிங்க் கேட் வரை கொண்டு போய்விட முடியுமா? எனக்கு கேட் மற்ற பக்கம். அழைப்பு வந்தாச்சு, நான் சீக்கிரம் போகணும்.” என்றார்.

“நிச்சயமாக” என்றவாறே பெரியவரைக் கை பிடித்துக் கொண்டேன். அந்தப் பெண் நன்றி நன்றி என்றூ பலமுறை சொன்னவாறே எதிரிப்புறம் விரைந்தார்.

பெரியவர் மெதுவாக நடந்தார். உபாதையெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆரோக்கியமாக இருந்தார். வயோதிகத் தளர்வு. பஞ்சகச்சம் கட்டி,வெள்ளை ஜிப்பா அணிந்திருந்தார். கழுத்தில் பெரிய உருத்திராக்‌ஷ மாலை. நெற்றியில் பெரிய பட்டை, நடுவே குங்குமம். அர்ச்சகர் அல்லது வேத பள்ளி ஆசிரியர் அல்லது சடங்குகள் செய்விக்கும் வாத்தியார்?

“பாம்பேல இருக்கியாப்பா?” கொஞ்சம் பிசிரடித்த குரல். “ ஆம்” என்றேன்.
“எனக்கு பெங்களூர் போணும்ப்பா. பாம்பேல பொண்ணு ஆத்துல ஒரு வாரம் தங்கிட்டு பெங்களூர் போவேன்.”

‘ஓ” என்றேன். நேரம் நிறைய இருந்ததால், மெதுவாகப் போனோம். “எங்கூட ஒருத்தி வந்தாளே? அவா குடும்பத்தோட காசி, கயான்னு போயிட்டு வர்றேன். ஸ்ரார்த்தம் பண்ணனும். ஸ்வாமி, நீர் வந்து பண்ணி வைக்கணும்’னா. ஊர்ல ,நம்மாத்துக்கு அடுத்தாத்துத்ல இருந்தவா. மாட்டேன்னு சொல்ல முடியுமோ?”


இன்னும் ஒரு மணி நேரம் கால தாமதம் என்றார்கள் ஜெட் ஏர்வேஸ் கவுண்ட்டரில். “ போர்டிங்க் பாஸ் கொடுக்கும்போது சொல்லலையே?” என்ற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லும் மூடில் அவர்கள் இல்லை. ’வந்து மாட்டியாச்சுல்ல? சாவு.’

பெரியவர் சாய்ந்து அமர்ந்து கொண்டார். ”சாப்பிட ஏதாவது வேணுமா ஸ்வாமி?” என்றேன்.

”எனக்கு ஒன்ணும் வேண்டாம்டா அம்பி. ஜலம் மட்டும் ஒரு டம்ளர் கிடைச்சா போதும்”

“அம்பியா?” தில்லானா மோகனாம்பாள் பாலையா ரேஞ்சுக்கு திகைத்தாலும் சுதாரித்துக்கொண்டு ,பிஸ்லரி பாட்டில் ஒன்று கொண்டு வந்தேன்.

மெல்ல கூட்டம் பெருகியது. அவர் பையிலிருந்து ஒரு பழைய பழுப்பேறிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு புறம் தேவநாகரி எழுத்தில் தெரிந்தது. மறுபுறம் தமிழாக இருக்கும். சில நிமிடம் கழித்து, கையை நீட்டி என் தோளைத் தொட்டு “ உன்ன எங்கயோ பாத்த மாதிர் இருக்கு. எங்கன்னு சொல்லத் தெரியலை. என் ஆத்துகாரி இங்க இருந்திருந்தான்னு வைச்சுக்கோ.. இன்னேரம் “ இவன் கிச்சா மாதிரி இருக்கான்ல்யோ? நாணா பையன் கூட இப்படித்தான் சாயல். என்ன , அவன் கொஞ்சம் நிறமா இருப்பான்’ன்னு எதாவது சொல்லுவள்” என்றார், சிரித்தபடி.

“ஆண்டவன் ஒரே ஒரு தடவை மட்டும்தான் குடிச்சுட்டு படைச்சான், அதுவும் என்னை,’ என்றுதான் நினைச்சிகிட்டிருந்தேன். இன்னொண்ணா?” சிரித்தேன்.

“அட அதென்னா? அவன் பித்தன் டா. ’பித்தா பிறை சூடி பெருமானே-ன்னு சுந்தரர் பாடலையா? குடிச்சுட்டுத்தானே போதைல ஆடிண்டிருக்கான், “ வெகு நாகரீகமாகவே கனக சபையில் ஆனந்த நடனம்” பாட்டு கேட்டிருப்பியே? “

“ ஸ்வாமி ஒண்ணு கேக்கலாமா?” என்றேன். வெகுநாட்களாக உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு கேள்வி.
“கேளேன்” என்பது போல் ஒரு அசட்டுப் புன்னகையுடன் பார்த்தார்.

“ அம்மா அப்பாவை உயிரோடு இருக்கறவரைக்கும் பார்த்துக்கொள்ளாமல், அவங்க போனப்புறம் இப்படி படு சிரத்தையாக ச்டங்குகள் செய்யறாங்களே? இதுக்கு என்ன காரணம்? சாஸ்த்ரம் சொல்கிறதே என்ற காரணமா?”

அவர் முன்னே குனிந்து, புத்தகத்தை பையில் வைத்தார்.

“ நீ என்ன நினைக்கறே?”

“ நான்..” “ ஒரு பயம்தான் காரணம்னு நினைக்கறேன். செய்யலைன்னா, பாவம் பிடிக்கும்னு சாஸ்த்ர வாக்கு இருக்கே?”

“ எத்தனை பேருக்கு இந்த சாஸ்த்ர வாக்கெல்லாம் தெரியும்னு நினைக்கறே? நீ சொன்னதுல ஒரு வார்த்தை சரி. பயம்.. அதுதான். தெய்வ நம்பிக்கை, சாஸ்த்ரத்துல மரியாதையெல்லாம் ஒண்ணுமில்லை. ”

வியந்துபோனேன். “நீங்களும் இதை சாஸ்த்ர ஒழுகுன்னு நினைக்கலையா?”

“ மனுஷ்ய மனம் ஒரு பெரிய பாழ் தெரீயுமோ? அதுல என்ன கிடக்கறது, எது உற்பத்தி ஆகும்னு எவனுக்கும் தெரியாது. தெய்வ சந்நிதானத்து முன்னாடி நின்னுண்டு, அழுக்கான நினைவெல்லாம் வரும். ஆனா வெளியே சொல்ல வெக்கம்.பிறத்தியார் என்ன நினைப்பாளோன்னு ஒர் பயம். இந்த நாடகம்தான் எல்லாத்துலயும். இன்னொருத்தன் , கலவி நேரத்துல தெய்வத்தை நினைச்சுப்பான். மனசு துண்டாடும். வெக்கமும், குற்ற உணர்வுமா அடுத்த நாள் தீவிரமா பூஜை பண்ணுவன். இதுதான் மனுஷன். மனசுல சாஸ்த்ர ஒழுகுன்னு தீவிரமா பாக்க முடியாதுடாப்பா”

“அப்ப இந்த சடங்கெல்லாம் ஒரு குற்ற உணர்வுலதான் செய்யறோம்கறேளா?”

“நிச்சயமா. இதைச் செய்யலேன்னா இன்னும் குத்த உணர்வு வரும். பிள்ளைக்கு ஒரு நாள் காய்ச்சல் வந்தா, பொண்டாட்டி சொல்லுவள் “பெரியவாளுக்கு செய்ய வேண்டியதெல்லாம் செய்யலையோ? போன வருஷம் விட்டுப்போச்சு இல்லையா?” ஏன்? ஒரு கவலைக்கு ஒரு பயம் தொடர்பு. அர்த்தமே இல்லாம அதுக்கு, நமக்குத் தெரியாத உலகத்தோட தொடர்புபடுத்திப் பார்க்கறது. இது மனுஷ ஸ்வபாவம். தப்புன்னு சொல்ல முடியாது.” ஒரு நிமிடம் நிறுத்தினார்.

“இப்ப வந்தாளே எங்கூட ஒருத்தி. அவள் மாமனாரும் எனக்கு சொந்தம்தான். அடுத்த தெருவுல இருந்தார். மனுஷன் ப்ரைவேட்ல வேலை பார்த்து ரிடையர்டு. பென்ஷன் கிடையாது. என்ன பாடு படுத்தினா ,அவரை-ங்கறே? ஒவ்வொரு நாளும் வார்த்தையாலேயே குத்திக் குத்தி மனுஷனை கொன்னா. எப்பவாவது கோயில் வாசல்ல உக்காந்துண்டு சொல்லுவர். ரெண்டு தடவை எங்கிட்டயே அழுதிருக்கார், பாவம். கையில ஒரு மஞ்சப்பையை வச்சுண்டு ஒருதடவ பஸ்ஸ்டாண்டுல நின்னிண்டுருந்தார். எங்கயோ போறேன், போம் -ன்னார் விரக்தியா. பேசிக் கூட்டிண்டு வந்தேன். அத விடு.
அவர் ப்ராணனை விட்டது, வெறு சரீரம் சம்பத்தப்பட்ட விஷ்யம்தான். ஆத்மா எப்பவோ போயிடுத்து.

இவள் பையன் கூட டெல்லியில இருக்கா. பையன் நன்னா சம்பாதிக்கறான். ஆனா பாரு, கல்யாணம் தட்டிப்போறது.

பயம் வந்திருத்து இவாளுக்கெல்லாம்..முன்னோர் சாபமோ என்னமோன்னு, கயா என்ன, காசி என்ன... அடேயப்பா. அமர்க்களம். போன வருஷம் ஸ்ரார்த்தம் செய்யறப்போ கண்ணீர் விடறா. “ என் மாமனார் அப்படி ஒரு நல்ல மனுஷன். எனக்கு கொடுத்து வைக்கலை”ன்னு ஒரு தேம்பல்.
மந்திரம் சொல்லிண்டிருக்கேன், நான். இதெல்லாம் கேக்கறது. எல்லாம் முடிச்சப்புறம் மனசுல வேண்டிண்டேன்.

“ஹே அக்னீ, எல்லாத்தையும் பஸ்மமாக்கிடறாய். இந்த நாடக பாவத்தையும் பஸ்பமாக்கு. எல்லா மனுஷாளுக்கும் இருக்கற அழுக்கையெல்லாம் பஸ்பமாக்கு. ”

வேறென்ன சொல்றது? எல்லாம் புள்ளை கல்யாணம் நன்னா நடக்கணுமே, நாம கையும் காலும் ஒழுங்கா இருக்கறப்போவே போய்ச்சேரணுமேன்னு மரண பயம்தான்.
டிக்கட் வாங்கிக் கொடுத்திருக்கா. திரும்பிப் போறேன்.”

அவர் வாயைத் துடைத்துக் கொண்டார். சில நிமிடம் பேசாமல் இருந்தேன்.

“ சொல்றேனேன்னு நினைச்சுக்காதேப்பா. இதெல்லாம் செய். கண்டிப்பா பண்ணனும். ஆனா ஒரு பீதியில பண்ணாதே. மனசால நிறைஞ்சு பண்ணு. எள்ளும் ஜலமும் இறைக்கறப்போ, கண்ணு நிறையணும் அம்பி. அப்பத்தான் செஞ்சதுக்கு ஒரு பலன் இருக்கு. மடிசாரும், பஞ்சகச்சமும், மட்டும் போதாதுடா. எல்லாம் மனசுதானே? அதுக்கு உண்மையா இரு. நீ போனப்புறம் உன் மனசை யார் கண்டா?"

ஒரு உணர்ச்சிப் பெருக்கில் தலையை மட்டும் ஆட்டினேன்.

“ இப்ப எங்கல்லாமோ முதியோர் இல்லம், அது இதுன்னு.. இருக்கா பாரு. அவாளுக்கு ஒரு வஸ்த்ரம், ஒரு வேளை போஜனம்.. இதையும் செய். மேல இருக்கற தேவதைகளோட வாழ்த்தோட, உயிரோட இருக்கறவா வாழ்த்தறதும் சமம்தான். “

பலதும் பேசிக்கொண்டே விமானத்தில் ஏறி வேறு வேறு வரிசைகளில் அமர்ந்துகொண்டோம். விமானம் கிளம்பிய இரைச்சல் என் மன இரைச்சலில் அதிகம் அன்று கேட்கவில்லை.

5 comments:

  1. /*இதெல்லாம் செய். கண்டிப்பா பண்ணனும். ஆனா ஒரு பீதியில பண்ணாதே. மனசால நிறைஞ்சு பண்ணு. எள்ளும் ஜலமும் இறைக்கறப்போ, கண்ணு நிறையணும் அம்பி. அப்பத்தான் செஞ்சதுக்கு ஒரு பலன் இருக்கு. மடிசாரும், பஞ்சகச்சமும், மட்டும் போதாதுடா. எல்லாம் மனசுதானே? அதுக்கு உண்மையா இரு. நீ போனப்புறம் உன் மனசை யார் கண்டா?"*/

    என்ன ஒரு சத்யமான வார்த்தை.. கண் நிறைந்தது!

    ReplyDelete
  2. Anonymous7:56 AM

    பதிவுகள் எல்லாம் படித்தால் மனதிற்குள் தங்கி விடுகிறது. அதில் இது கொஞ்சம் ஸ்பெசல். உன் மனசை யார் கண்டா? இக்கேள்வியை இக்கணம் படிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் இக்கணம் இதைப் படிப்பதற்கு. அருமை. தொடர்ந்து படிப்பதற்கு ஒரு நல்ல தளம் தங்களுடையது. தங்களுடய இரண்டு நாவல்களையும் விலைக்கு வாங்கியே படித்திருக்கிறேன். கதையை காதால் கேட்டு சொல்லவில்லை. இரண்டும் அருமை. அறிவியலை அறிந்து கடப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் 6174-ல் கருந்துளை மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது. அதை வைத்து கொஞ்சம் காமெடி கதையெல்லாம் பண்ணி பிறகு கலைத்து விட்டேன். நன்றி.

    ReplyDelete
  3. Anonymous10:00 AM

    நல்ல பதிவு. மனதில் தங்கி விட்டது.

    ReplyDelete
  4. “ஹே அக்னீ, எல்லாத்தையும் பஸ்மமாக்கிடறாய். இந்த நாடக பாவத்தையும் பஸ்பமாக்கு. எல்லா மனுஷாளுக்கும் இருக்கற அழுக்கையெல்லாம் பஸ்பமாக்கு. ”

    இந்த வரி மனதை துளையிட்டு நமது தினசரி நாடகத்தை கண் முன்னே காட்டுகின்றது, பயம் அது ஒன்றுதான் இன்றளவும் நம்மை வழி நடத்தும் எச்சரிக்கை மணியாக இருக்கின்றது, இருக்கும். வாழ்த்துக்கள் சுதாகர் யதார்தத்தை படம் பிடித்து காட்டியமைக்கு. நன்றி.

    ReplyDelete
  5. நன்றாகச் சொன்னீர்கள். தற்சமயம் இந்த மாதிரி பதிவுகள் தேவை.

    ReplyDelete