Sunday, May 14, 2006

சீருடையில் களங்கம்

மும்பை காவல்துறை, தனது சுய ரூபத்தை மீண்டும் வெளிக்காட்டிவிட்டது. இம்முறை , கூலிப்படைகள் போல மிருகத்தனமாக அவர்கள் மருத்துவத்துறை மாணவர்கள் மீது பாய்ந்தது மிகவும் வெறுப்பையும் கோபத்தையும் மக்கள் மனத்தில் விதைத்துவிட்டது.
நேற்று, மும்பையின் புகழ்பெற்ற ஆஸாத் மைதானத்தில் மருத்துவத் துறை மாணவ மாணவியர் ,உச்ச நிலை கல்வித் துறையில் ரிசர்வேஷன் கொண்டுவரும் திட்டத்திற், அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்து வந்த வேளையில், சாலை மறியலில் ஈடுபட்டதாகக் காரணம் காட்டி, காவல் துறையினரால் வலுக்கட்டாயமாக அடித்துத் துரத்தப்பட்டனர்.
மாணவர்களுக்கு காவல்துறையினரிடமிருந்து வந்த இந்த வன்முறைத் தாக்குதல் எதிர்ப்பாராதது. எந்த ஆயுதங்களும் இல்லாத அம்மாணவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து இக்காவல்துறை சார்ந்த மிருகங்கள் கழிகளால் தாக்கியது அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும் ஒளிபரப்பப்பட்டு, மக்களை திடுக்கிட வைத்தது.
எதிர்ப்பு தெரிவித்து வந்த மாணவர்களில் மாணவிகளும் சகிதமாக இருந்தனர். அவர்களைப் பெண் காவல் துறையினர் கட்டுப்படுத்தியிருக்கவேண்டும். மாறாக, அப்பெண்களை தரதர வென இழுத்து அடித்தவர்கள் ஆண் காவல் துறையினர். பெண் காவல்துறையினர் ஒருவர் கூட இல்லை. எந்த வகையில் இதனைத் தகுந்த கண்காணிப்புடன் நடத்தப்பட்ட காவல்துறை தடுப்பு எனச் சொல்ல முடியும்?

ஒரு கூட்டம் நடந்தால் அதில் ஆண்களும் பெண்களும் இருப்பார்கள் எனக் காவல் துறையினருக்குத் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் இவ்வாறு ஒரு பெண்காவலாளி கூட பாதுகாப்பிற்கு இன்றி அனுப்பப்பட்ட படை என்றால், அப்படை அனுப்ப்பட்ட உட்காரணம் யாது? "சகட்டு மேனிக்கு அடித்துக் கொல்லுங்கடா" என்பது தானே? இதைச் செய்ய திறமையாக, ஒழுங்கு கூடிய காவல்துறை எதற்கு? கூலிப்படை போதுமே? காவல்படையோ சீருடைக்கு உள்ளில் வெறும் அரசியல் கூலிப்படையாகவே இருக்கிறதோ?

தொலைக்காட்சியில் காட்டிய அடி நொறுக்குதலில், சீருடை அணியாத பலரும் மாணவ மாணவியரை கழிகளால் அடித்து நொறுக்கியதைக் காணலாம். யார் இவர்கள்? சீருடை அணியாத, காவல்துறை சேர்ந்தவர்களா? இவர்கள் வந்து அடிப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது? அரசியல் தாக்கமோ?

இவ்வளவு நடந்த பின்னும், மக்கள் தொலைக்காட்சிகளில் கண்டு கொதித்தபின்னும் , காவல்துறை உயர் அதிகாரி ஏ,என்.ராய் " அடிதடி நடக்கவே இல்லை" எனச் சாதிக்கிறார். இந்திய மருத்துவ அசோயியேஷன் (IMA)வைச் சேர்ந்தவர்கள் இதில்தான் மேலும் கொதித்துப்போனார்கள். அவர்களில் ஒருவர் கேட்டார் ' இப்படி ஒரு உயர் போலிஸ் அதிகாரி சொல்லுகிறார் என்றால், ஒன்று - அவர் குருடர். இல்லையென்றால் மிகப்பெரிய புளுகர். இவர்களுக்கெல்லாம் திறன் படச் செயல்படுகின்றனர் என்னும் ISO சான்றிதழ் எதற்கு?" சாட்டியடி. ஏ.என் ராய் இந்த கேள்விக்கே நாக்கைப் புடுங்கிக் கொண்டு சாக வேண்டும்.

மாண்பு மிகு முதலமைச்சர் எங்கோ மறைந்துவிட்டார். பேசவே இல்லை. அவர் காங்கிரஸ் கட்சி என்பதால் , இந்த கோட்டா விஷயம் அவரது கட்சியின் ஒட்டு வாங்கும் துருப்புச்சீட்டு என்பதால் மெளனம் சாதிக்கிறாரோ? ஆளுநர் எங்கே?
இருபத்திநான்கு மணிநேரம் கெடு ஆட்சியாளர்களுக்கு IMA கொடுத்திருக்கிறது. அவர்கள் நிபந்தனை முக்கியமாக
1. வன்முறையில் ஈடுபட்ட போலிஸ் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
2. வன்முறைக்குப் பொறுப்பு ஏற்று போலீஸ் உயர் அதிகாரிகள் ஏ.என்.ராய் உட்பட - பதவி விலகவேண்டும்

பல மாணவர்களை அடித்து ரவுண்டு கட்டி , ஜெயிலில் வைத்திருந்து நாலரை மணிநேரம் கழித்து விட்டு விட்டனர். போலிஸ் ஸ்டேஷன் எங்கோ, ஆசாத் மைதானம் எங்கோ. இப்பெண்கள் எப்படி வீடு போய்ச் சேருவர்? என்ன பாதுகாப்பு இவர்களுக்கு? யாராவது பதில் சொல்ல முடியுமா? இதில் ஒரு பெண்ணின் கை உடைந்திருக்கிறது. மற்றொரு பெண்ணிற்கு காலில் பலத்த காயம்..ரத்தம் சொட்டச்சொட்ட அவர் விந்தி விந்தி நடக்கிறார். மற்றொரு பெண்ணுக்கு கண் அருகே காயம்.. இது நான் தொலைக்காட்சியில் பார்த்தது. பார்க்காதது எத்தனையோ? பெண்களைத் தாக்கும் மிருகங்களின் கூட்டத்தை போலிஸ் என்றா இன்னும் அழைப்பது? இவர்கள் வீட்டுப்பெண்கள் இருந்தால் இப்படித்தான் அடிப்பார்களா?

காவல் நிலையத்திலேயே, நிராதரவான பெண்களை மிரட்டி மானபங்கம் செய்யும் பேயர் வட்டத்தில் இன்னும் நியாயத்தை எதிர்பார்ப்பது என் தவறுதானோ?

ரிசர்வேஷன் குறித்து ஆதரவாய் பேச என்ன உரிமை இருக்கிறதோ, அதே உரிமை அதை எதிர்த்துப் பேசவும் இருக்கிறது-சனநாயகத்தில். "எனக்கு ஓட்டு வேண்டும். அதற்காக எதுவும் செய்வேன். நீ யார் கேட்க?" என்னும் அராஜகம், இப் பசுத்தோல் போர்த்திய அரசியல் புலிகளை அடையாளம் காட்டிவிட்டது. மக்கள் இதற்கு எதிர்த்து பலத்த குரல் எழுப்பவேண்டும்.

பெண்கள் உரிமைக் கழகங்கள், இம்மாணவியர் மீதான தாக்குதல்களை எதிர்த்துக் கேட்கவேண்டும். ஏன் பெண் காவல் துறையினர் அவ்விடத்தில் இல்லை?, என்ன பாதுகாப்பு பெண்களுக்கு? என்னும் கேள்விகளை எழுப்பவேண்டும். இல்லாவிட்டால் இவர்களும் இதில் கூட்டு என்பது உறுதியாகிவிடும்.

இன்று இம்மாணவர்கள். நாளை? யார் கண்டது? இப்படி வலைப்பூவில் எழுதியதால் என்னையும் போட்டு மொத்தலாம்.

வாயிருந்தும் ஊமைகளாய், சனநாயகம் செருப்புகளில் கிழிபடுவதைப் பார்த்திருந்ததும், சமூகத்தின் நாகரீக இழைகள் இற்றுப்போவதைப் பார்த்திருந்ததும் போதும். இங்கு இன்னும் வாழ்வது வெட்கக்கேடு.

மூவர் கொண்ட குடும்பம் ஒன்று மும்பையிலிருந்து புலம் பெயர முயற்சிக்கிறது- அகதிகளாக , நாகரீகம்,மனிதநேயம் உள்ள ஒரு நாட்டில் வருவதற்கு என்னவெல்லாம் தேவை? தெரிந்தவர் எனக்குச் சொல்லலாம்.

5 comments:

  1. மரண அடி! இதப் படிச்சாலே அவங்க நாக்க புடிங்கிட்டு சாவலாம். நல்ல ஒரு பதிவு சுதாகர் அவர்களே
    இதை பற்றி நானும் ஒரு பதிவு இட்டு இருக்கிறேன்.
    பிரசன்னா

    ReplyDelete
  2. நன்றி பிரசன்னா

    ReplyDelete
  3. Anonymous6:30 AM

    வாயிருந்தும் ஊமைகளாய், சனநாயகம் செருப்புகளில் கிழிபடுவதைப் பார்த்திருந்ததும், சமூகத்தின் நாகரீக இழைகள் இற்றுப்போவதைப் பார்த்திருந்ததும் போதும்.பொங்கி எழுவோம்.

    அன்புடன்
    துபாய் ராஜா.

    ReplyDelete
  4. ரங்க் தே பஸந்தி!

    ReplyDelete
  5. Thanks SK.
    Sorry for the much belated reply. I was on tour for a longer period.
    will write again soon.
    regards
    K.Sudhakar

    ReplyDelete