Sunday, July 26, 2015

ஆயிரத்து ஐநூறு ரூபாய் டி.டி

”ஃபார்ம் நிரப்பிட்டீங்களா?”
”ஆமா”, மழையில் சற்றே ஈரப்பட்டிருந்த விண்ணப்பத்தாளை நீட்டினேன்.
“டி.டி?”
“இருக்கு, இருக்கு.”
பதட்டத்துடன் உளறி ,எதோ புத்தகத்தின் இடையே பத்திரமாக இருந்த டி.டியை தேடி எடுக்க சற்றே நேரமானது. அவர் எரிச்சலுடன் மறுபடி கேட்குமுன் கொடுத்துவிட்டேன்.
“ஏம்ப்பா பதர்றீங்க?” என்றான் மகன். அனைத்தையும் ஒரு கோப்பில் வரிசையாக வைத்திருக்கும் எனது கடைசிநிமிட பதட்டம் அவனை வியப்படைய வைத்திருக்கவேண்டும்.
எத்தனை வருடங்களாக , எழுதப்படாத ஒரு டி.டி,யை தேடிக்கொண்டிருக்கிறேன் ? அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
“சுதாகரன் ஆராணு?’ போஸ்ட்மேன் கொச்சி பல்கலையின் சரோவர் ஹாஸ்டல் ரூமில் வந்து ரிஜிஸ்டர்ட் கடிதத்தை நீட்டியபோது பகல்
உறக்கத்தில் இருந்தேன்.
“You have been provisionally selected to the B.Tech degree program of Department of Polymer Science and Rubber Technology for
the academic year of 1988. Hereby you are instructed to pay the fees in the department office by ..."
நானும் ஒரு ப்ரொபஷனல் டிகிரிக்கு தகுதியாயிருக்கிறேன்... எனது வாழ்நாள் கனவு... தொண்டையில் கனமாக ஏதோ அடைக்க, தெளிவற்ற
சொற்கள் ஒலிகளாக வாயில் வர ஏதோ “ நன்னி” என்றவன் ப்ரமித்து அமர்ந்திருந்தேன்.
அண்ணனுக்கு ’ரூ 1500 கட்டணும். மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்” என்று எழுதி கடிதம் அனுப்பிவிட்டு , டிபார்ட்மெண்ட் வந்தபோது
கால் தரையில் பாவவில்லை.
”இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு. பீஸ் கட்டிட்டியா?” சீனியர் ராமகிருஷ்ணன் கேட்டபோது ‘ வந்துறும்’ என்றேன்.
டெலிகிராம் வந்தது “ Stop joining course. details later. father'
எதாச்சும் பண முடைஇயாக ரிஉக்கும். அக்காவிடமோஅண்ணன்களிடமோ கேட்கலாம். நினைத்துக்கொண்டே, நண்பர்களிடம் கடன் வாங்கிக்கொண்டு தூத்துக்குடி, திருவள்ளுவர் பஸ்ஸில்.. வழக்கம்போல.
ராஜூ அண்ணன், வசந்தி அக்கா வீட்டுக்குப் போனபோது அக்கா வழக்கம்போல உற்சாகமாகப் பேசாததை அதிகம் கண்டுகொள்ளாமல் , பி.டெக் கிடைத்ததைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தேன்.
“ அந்த எக்ஸாம்ல நெகடிவ் மார்க் உண்டு , கேட்டியாக்கா? தெரியலைன்னு வைய்யி, சும்மா உளறிவைக்கக்கூடாது”
“ஏல, உனக்கு விசயம் தெரியாதா? இங்க இவ்வளவு அல்லோலப்படுது..” என்றாள் அக்கா.
“என்னது?” குழம்பினேன். அக்கா வீடு மாத்தறங்களா?
“பாபு அண்ணாச்சிக்கு ஹார்ட் அட்டாக்டா. ஹார்பர் ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்க. நீ என்னடான்னா, பி.டெக்க்குக்கு பைசா வேணும்னு நிக்கறே”
அதிர்ந்து போனேன். திருமலை என்ற பாபு அண்ணாச்சி தாயுமானவர். வளர்த்தவர் அவர்தான்.
ஆஸ்பத்திரியில் நான் போனபோது அவர் அருகே யாருமில்லை. இரு நாட்கள் தாடி வெள்ளையாய் முளைத்திருக்க, தூங்கிக்கொண்டிருந்தார்.
வீட்டு வாசலில் அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அம்மா உள்ளே காய்கறி நறுக்கிக்கொண்டிருக்க, ஸ்ரீதர் அண்ணன் ஆபீஸுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.
”திடீர்னு முந்தாநேத்திக்கு நெஞ்சை வலிக்கறதுன்னான். சரின்னு ஆஸ்பத்திரி போனா, ஈ.ஸிஜில ப்ரச்சனை.அட்மிட் ஆயிருங்கன்னாங்க. இப்ப பரவாயில்லை’
எல்லா விவரமும் கேட்டபின் எனது பி.டெக்கும் ஹாலில் பேச்சுக்கு வந்தது.
“இப்ப இருக்கற நிலமையில நீ இதுக்கெல்லாம் போணுமான்னு தோணுது. நல்லதுதான். ஆனா நம்மால முடியணுமேடா?” என்றார் அப்பா.
“அக்கா, அந்தமான் அண்ணனுக்கு போன், என்று பலதும் யோசிக்கப்பட்டு, ஸ்டேட்பேங்க் லோன் கேட்பது என்று அப்பா முடிவுக்கு வந்தார்.
மதியம் வரை நிலைகொள்ளாமல் நின்றிருந்தேன். ஒரு குற்ற உணர்வு. பி.டெக் இருக்கட்டும்.. இந்த நேரத்தில் இந்த கேள்வி தேவைதான? நான் சுயநலமாகப் பார்க்கிறேனோ?
அந்தமான் அருகே புயல் என்பதால் போன் லைன் போகவேயீல்லை.
அப்பா எங்கோ போய்விட்டுத் திரும்பி வந்தார் “பேங்க்ல லோன் முடியாதுன்னுட்டார் மேனேஜர்”
“கல்வி லோன்னு இருக்குமே? நான் வரட்டுமாப்பா?”
“யாரு கியாரண்டி போடமுடியும்? மேனேஜர் “ சார்,உங்களுக்கு மூணு அட்டாக் வந்தாச்சு, திருமலை சார் இப்ப ஆஸ்பிட்டல்ல இருக்காங்கறீங்க. ரிஸ்க் எடுக்க முடியாது”ங்கறார். “
ஆஸ்பத்திரியில் அண்ணனிடம் மெதுவாகச் சொன்னேன். அவர் கண்களில் கோடாக நீர் வழிந்தது. “ பரவாயில்லடா. அப்புறமா எம்பிஏ படி. என்ன? நான் படிக்க வைக்கறேன் “ . அவர் எதையும் ’என்னால் முடியாது’ என்று சொன்னதேயில்லை, இன்றுவரை.
பாலிமர் சயன்ஸ் டிபார்ட்மெண்ட் தலைவர் டாக்டர் ப்ரான்ஸிஸ் ஜோஸப் “ பரவாயில்லப்பா. இன்னும் பெரிசா படிக்க உனக்குக் கிடைக்கும் “ என்றார், எனது அட்மிஷனை கேன்ஸல் செய்தபடி.
ரூ. 1500க்கான டி,டி இணைக்கப்படாத, ஒரு அட்மிஷன் லெட்டர், பழுப்பேறி என் சர்ட்டிபிகேட்டுகளுடன் இருந்தது. சமீபத்தில்தான் கிழித்துப் போட்டேன்.
“ ஐ.ஐ.டி கிடைக்கலையேப்பா?” என்றான் அவன் வருத்தத்துடன், அட்மிஷன் முடிந்து வெளியே வந்து ஆட்டோவுக்கு நின்றிருந்தோம். மழை லேசாகத் தொடங்கியிருந்தது.
“எனக்கு பி.ஈ ஏ கிடைக்கலை. அதைப் பாக்கறப்போ, பாம்பேல மூன்றாவது பெரிய இஞ்சினீயரிங்க் காலேஜ், தடோமல் சஹானி-ல இடம் கிடைச்சிருக்கே? சந்தோஷப்படு”
“டி.டி கொடுக்கறச்சே உங்க கை நடுங்கிச்சுப்பா. கவனிச்சேன்”
“அது வெறும் பேப்பர் இல்லைடா அபி. வெயிட் ரொம்ப ஜாஸ்தி. இருபத்து அஞ்சு வருஷ பாரம் அது”
ரயிலில் ஏறியபோது மனதும் உடலும் லேசாகியிருந்தது.

2 comments:

  1. ஒரு தந்தையின் கடந்தகால நினைவுகளை நிகழ்காலத்தில் இணைத்து அருமையாகப் படைத்துள்ளீர்கள்

    ReplyDelete
  2. வெற்றியை அனுபவிக்க முடியாத வலி. நல்ல படைப்பு

    ReplyDelete