Tuesday, February 23, 2016

ஓடுவதென்பது ஒரு அடி மட்டுமே.


ப்ரதீப் குமார் என் ஆபீஸில் அருகாமையில் இருக்கும் நண்பர். ஒரு வருடம் முன்பு 90 கிலோவில் மூச்சுத் திணறுவார். மதியம் சாப்பிட்ட்டுவிட்டு ஒரு சுத்து சுத்திவந்தால் வியர்வையில் தொப்பலாக நனைந்திருப்பார்.



திடீரென அவரிடம் சில மாற்றங்களை எட்டு மாதங்கள் முன்பு கண்டேன். அவரது மூச்சுத் திணறல் சீரானது. சுற்றுகள் அதிகமாக, அவர் அதிகம் களைத்துப்போகவில்லை. பேண்ட், சட்டைகள் மாறின. “லூசாயிருச்சுங்க” என்றார்.  மதியம் நொறுக்குத்தீனியாக சமோசா, ஆனியன் தோசை, பெங்காலி ஸ்வீட்டில் மிஷ்டி தோய் என்பதெல்லாம் போய்விட்டது.

என்னதான் செய்யறார்? என்று கேட்டதற்கு ” ஒண்ணுமில்ல, ஓடறேன்” என்றார்.

“ஓடறீங்களா? நடக்கவே தடுமாறுமே?”

“அதான் ஓடறேன். நடந்தாதானே ப்ரச்சனை?”

சீரியஸாகக் கேட்டபோது, ஓட்டப்பயிற்சி செய்வதாகச் சொன்னார். பத்து அடி ஓடினாராம் முதல்நாள். வியர்வை. நடுங்கிப்போய் நிறுத்திவிட்டார். ரெண்டாவது நாள் சொசயிடியைச் சுத்தி வந்தார். கால் வலி விண்விண் என ரெண்டு நாள் பிடுங்கியது. “உங்களுக்கு எதுக்கு இதெல்லாம்? பேசாம ஐபாட் வைச்சு, காதுல சொருகிட்டு நடங்க.” என்ற டாக்டர்களை சற்றே இளித்து சமாளித்தார்.

ஒரு மாடி வரை ஏற முயன்று தடுமாறியிருக்கிறார். முட்டு வலி, வீக்கம், பழைய கான்வாஸ் ஷூ காலைப் பிடுங்கி, உட்பாதத்தில் புண்கள்.
நொண்டி நொண்டி ஆபீஸ் வந்தார் இரு வாரம்.

பிற ஆபீஸ்களிலிருந்து வந்தவர்கள் அவரது உடல் மெலிதல் கண்டு வியந்துபோனார்கள். அவர் டூரில் பிறருடன் செல்லும்போது, “ ஆடைகள் கொண்டு வந்திருக்காரோ இல்லையோ, ரன்னிங் ஷூ இருக்கும் பையில” என்ற கிண்டல்களைப் பொருட்படுத்தாமல் , காலையில் லொங்கு லொங்கு என ஓடினார்.

இடையிடையே இண்டெர்நெட்டில், ஓடுபவர்களின் கிளப்பில் எனப் போய் ஓடுவது குறித்த டெக்னிக்குகளைச் சேர்த்துவந்தார். இத்தனைக்கும் ஆபீஸ் பணியில் ஒரு குறைவும் இல்லாமல். அவருக்கு மிகப்பிடித்த டன்கின் டோனட்-டில் டோனட் வாங்கலாம் எனப் போனால்,” விடுங்க. ஓடணும். இது வெயிட் போடும்” என்றதும் தலைசுற்றியது எனக்கு.


இவர் இப்படி ஓடுவதை எனது வாடிக்கையாளர் ஒருவரிடம் சொன்னேன். அந்தப் பெண்மணியும் அரை மராத்தான் ஓடியவர் “ ஓ! அவருக்கு மன உறுதி மிகவும் அதிகம் வரும் பாருங்க. ஒரு லெவலுக்கு அப்புறம் ஓட்டம் என்பது மனத்துடனான விளையாட்டு. உடல் ஒன்றுமில்லை ஒரு தளத்துக்குமேலே” என்றார்.

“அதெப்படி?”என்றேன் ப்ரதீப்பிடம். அவர் விஷமமாகச் சிரித்தார்.

“ஓடணும்னு தொடங்கற வரைக்கும் கட்டுப்பாடு , உற்சாகம் உறுதி எல்லாம் இருக்கும். காலேல எந்திக்கறது முதல் தடை. அப்புறம் ஓடத் தொடங்கறதுக்க்கு முன்னாடி உடம்பு வம்பு பண்ணும். கால் இழுத்திருக்குன்னு தோணும், இன்னிக்கு வேணாம். நாளைக்கு ஒடலாம். முதல்ல ஆபீஸ் வேலையப் பாப்போம்” என்று சரியாக தருக்கமெல்லாம் மனதுக்குத் தோணும்.

இதையெல்லாம் தாண்டி ஒரு கிமீ ஓடினதுக்கு அப்புறம் ரொட்டீனாக ஓடுவது போரடிக்கும். மனசு அங்குமிங்கும் அலைபாயும். ரைட்டு திரும்பிறலாம்னு தோணும். அதைத் தாண்டி ரெண்டாவது கிமீ போறது மிகக் கஷ்டம்”

“அப்புறம் எப்படி ஓடறீங்க?” என்றேன்.

“மன ஆளுமைதான். சால்ஜாப்பு சொல்லக்கூடாது. இதோ வந்தாச்சு என்றெல்லாம் ஆசைக்காட்டக் கூடாது. ஓடணும். ஓடணும், அவ்வளவுதான் முடிவு எல்லை பத்தி கனவு காணக்கூடாது. கஷ்டம், பழக்கத்துலதான் வரும்”
“ஓடறது மைண்ட் கேம், சுதாகர்” என்று அப்பெண் சொன்னது நினைவுக்கு வந்தது.


இதேதான் எந்த இலக்கிலேயும். முதல்ல முறுக்கேறி நிப்போம். அட, டைரி எழுதறதை எடுத்துக்குங்க, முதநாள் எழுதுவோம், ரெண்டாவது நாள்... நாலாவது நாளிலிருந்து நின்னு போகும். ஒரு குற்ற உணர்வில் அதன்பின் எழுதவே மாட்டோம்.

”இது விஷச் சுழற்றி” என்றார் ப்ரதீப், வெந்நீர் பருகியபடி. “ தோல்வின்னு ஒண்ணு கிடையாது. தடைகள் உண்டு. தாண்டணும்.னு நினைக்க உறுதி வேணும்.”

“இது முட்டைக்குள்ள இருந்து கோழி ,கோழில இருந்து முட்டை சமாச்சாரம்”
“எதுவும் இருந்துட்டுப்போவுது. நாம பாக்கிறது நிஜம். அது முட்டையா கோழியா முதல்லங்கற பேச்சே வரப்படாது”

உண்மைதான். என்.ஸி.ஸீ கேம்ப்பில் 6 கிமீ ஓடச்சொல்லுவார்கள், ஐம்பது அடியில் பெருமளவு மக்கள் நிற்பார்கள். ஓடுபவர்களில் பாதிபேர் இடுப்பைப் பிடித்துக்கொண்டு முகம் சுருங்கப் பல் தெரிய, வேதனையுடன் மூன்றாவது கிமீல் நடப்பார்கள். அதையெல்லாம் பொருட்படுத்தாது கர்மயோகியாய் ஓடியவன் மட்டுமே இறுதியில் வருவான்.

“வெற்றி என்பதை இலக்காகக் கொள்ளணும், என்ன?” என்றேன்.

”வெற்றியா? ஓடுவது ஓடுவதற்காக மட்டுமே சுதாகர்”

இது கீதையை நினைவுபடுத்தியது. அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டேன். ஜனவரியில் அவருக்கு இஸ்க்கான் கீதை ஒன்றை பரிசளித்தேன். சந்தோசப்பட்டார்.

தாணேயில் ஹீராநந்தானி பாதி மராத்தான் போட்டியில் கலந்துகொண்டார். பையனும், மனைவியும் ஆக்டிவாவில் பின்னால் வர, இவர் இருபத்திரெண்டு கிமீ வாரத்தில் மூன்று நாட்கள் ஓடிப் பயின்றார்.


போனவாரம் போட்டியில் கலந்துகொண்டு 2மணி 18நிமிடத்தில் முடித்து வந்திருக்கிறார். வெற்றி, பரிசெல்லாம் விடுங்கள்.
  • 90 கிலோவிலிருந்து விடுதலை வெற்றி.
  • மூச்சு அடைப்பிலிருந்து வெற்றி
  • களைப்பிலிருந்து வெற்றி
  • மன உறுதி, விடாமுயற்சியில் வெற்றி
  • மன ஆளுமையில் அமைதியடைவது வெற்றி.






எவனுக்கு வேணும் கோப்பைகள்? வாழ்க்கை கிடைத்திருக்கிறதே?


3 comments:

  1. பயில வேண்டும்! மனசுக்குள் ஏற்றிக் கொள்கிறேன்!

    ReplyDelete
  2. வாழ்க்கையில் தினமும் சோதனைகள் தான்.அதைத் தாண்டி வெல்வோர் சிலபேர் தான்.

    வாழ்க்கையை விட்டு ஒட முடியாது. ஆனால் வாழ்க்கையில் ஒடலாம். வாழ்க்கையை ஒட்டலாம் அருமை திரு.சுதாகர்.

    ReplyDelete