Wednesday, July 27, 2016

நான் பாடும் பாடல் - அண்ணாச்சி உரையாடல்

நேற்றிரவு ஏதோ பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்கையில் வாசல் கதவை யாரோ தட்டினார்கள்.

“பாடினே கொன்னுருவேன்” என்று மிரட்ட ஐந்தாம் மாடி சர்தார்ஜி வருகிறானோ? என்ற சந்தேகத்தில்தான் திறந்தேன். ச.வ.ச(ச*..ளவு வளர்ப்போர் சங்கம்) காரியதரிசி வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டிருந்தார்.

“அட” வியந்தேன்”வே, போனவாட்டி “ நீர் பாடினா கழுத வரும்னீரு’.. உம்ம வாக்குப் பொய்க்கலைய்யா ”
சிரிப்பு உறைந்து போக “இந்தாரும், என்னக் கழுதன்னு சொல்ற வேலயெல்லாம் வச்சுக்காதீரும். கெட்ட கோவம் வரும் சொல்லிட்டேன்” என்றார்.
“உள்ளாற வாரும்” என்றேன். எப்படியும் இன்னும் அரைமணி நேரத்துக்கு ஒன்றும் வெட்டி முறிக்கப் போவதில்லை. பாட்டு, விருதுன்னு பொழுதை வீணடிக்கலாம்.

“எங்காளுக்கு விருது கிடைசிச்ருக்கு தெரியும்லா?” என்றார் பெருமையாக.
‘பாட்டுக்கா? அப்ப சரிதான்.”

“அட, பாட்டு எவம்வேணும்னாலும் பாடிறலாம்வே. கணக்கா நேரத்துக்கு பேசத்தெரியணும்லா? எங்காள் கரெக்டா எல்லாரும் அடிக்கற இடத்துல அடிச்சாரு. பொங்கறதா சீன் போட்டாரு. கொடுத்துட்டானுவோ”

”அங். அப்ப திறமைக்கெல்லாம் மதிப்பில்ல”
“அது இருந்தா மட்டும் போறாதுவே.  பாட்டு பத்தி பேசறத விட்டுட்டு பார்ப்பனியம்னு ஏசி எழுதணும்..”
“எழுதினா எவன் போடுவான்?”
“அட,  இத வெளியிடறதுக்குனே எளவு பத்திரிகை நடத்துதோம்லா? நாலு பக்கத்துக்கு போட்டுறுவம். கழுத விட்டை கை நிறையன்னு , எக்கச்சக்கமா பத்திரிகை வைச்சிருக்கம். வாராந்தரி, மாசாந்தரி என்ன வேணும்னு சொல்லுங்க”

”வே, பாடகன்னா பாட்டுதாம்வே பெரிசாத் தெரியும். எழுதினா எவம் படிப்பான்?”

சிரித்தார் “இப்படி இருக்கீயளேன்னு நினைச்சா பாவமா இருக்கு. கலை, இலக்கியம்னு எவம் பாக்கான் சொல்லுங்க? ஜாதியம் பார்க்கும் பார்ப்பனீயர்கள்னு தம் பாட்டைக் கேக்க வர்றவங்களையே ஏசணும். இவங்களுக்கு டிக்கட் கொடுக்கற சபாவுல பாடமாட்டேன்னு வீராப்பா அறிக்கை விடணும்”

“அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா? போயிட்டாங்கன்னா, ரசிகர் குறைஞ்சுருவாங்களேய்யா?”

“வே, அது ஒரு கேடு கெட்ட ஜென்ம கூட்டம் பாத்துகிடும். என்ன அடிச்சாலும் தாங்குவாங்க. என்ன சொன்னா என்னா, அவம் பாட்டு நல்லாயிருக்குன்னு வெக்கமே இல்லாம கேக்கற கூட்டம் அது. இத்தனை நடந்தப்புறமும் பாருங்க, பேஸ்புக்ல, ட்விட்டர்ல “வாழ்த்துக்கள்”ன்னு முதல்ல எழுதறது அந்த கூட்டம்தான்.”

“ஏம்வே அப்படி ஒரு டிசைனு?”

“எங்கள என்ன சொன்னாலும் கேட்டுகிடுவோம், அறிவுசீவியாக்கும் நாங்கன்னு காட்டிக்கிற போலித்தனம் அதுங்களுக்கு. போவட்டு. நீரு என்ன செய்யுதீரு?”

“டல் அடிச்சு கிடக்கு” என்றேன் சோகமாக “ நம்ம புக் எல்லாம் ஒரு பய சீந்த மாட்டக்கானே? வாங்கினவங்க இருக்காங்கன்னாலும் ஒரு பைசா வரலியே இன்னும்?”

“இதான் ப்ரச்சனையா? எண்ட்ட விடும். பாத்துகிடுதேன். விருது வாங்கிக் கொடுக்கறது என் வேல”

”வே” என்றேன் திகைப்புடன் “ வாங்கிக் கொடுக்கீயளா? விருது தானா வரணும்வே. வாங்க- எல்லாம் கூடாது”

“எந்த ஊர்ல இருக்கீய?” என்றார் எரிச்சலுடன். “ விருதுக்கு நீர் விண்ணப்பம் போடணும், பைசா கட்டணும். இடது சாரித்தனம் இருக்கணும். அப்புறம் பெரிய ஆளுங்க சிபாரிசு வேணும்.”

“சரி, அப்ப எதுக்கு மக்கள் கிட்ட இப்படி பீலா விடணும்? சபா இல்லேன்னா பைசா போயிரும்வே”

“ஹஹ்ஹ” என்றார் “ இங்கதான் பாடமாட்டேன்னு சொல்லச்சொன்னேன். அமேரிக்காவுல பாடமாட்டேன்னா சொன்னேன்? இங்க ரூபாய் கொடுத்து வாங்குவீய. அங்க டாலர்லா? அது போதும்வே. பேருக்கு பேர் ஆச்சி, பைசாவுக்கு பைசா”

“ஆஹா” வியந்தேன். ”இந்த அமெரிக்க இடதுசாரித்தனம் இத்தனை நாளா எனக்கு வெளங்கலையே?”

“உடனே நீரும் அறிக்கை விடணும் கேட்டியளா?” என்றார் சீரியசாக. ஒரு காகிதத்தில் மடமடவென்று எழுதி நீட்டினார் . ”இதை உடனே பேஸ்புக்ல போடும்வே.”

படித்துப் பார்த்தேன் “ இனி ஆழ்வார்பேட்டை, மைலாப்பூர் பகுதியில் இருக்கும் நண்பர்கள் வீட்டிற்கு செல்லமாட்டேன் . போலித்தனமாக ஒரு பில்டர் காபி, அடை என்று கூடும் நண்பர்களை விட , அமெரிக்காவில் ஒரு குப்பத்தில் சென்று கதை பற்றி பேசலாமென நினைத்திருக்கிறேன்”

“இது விவகாரம் பிடிச்ச வேலைல்லா? கிளம்பும்வே” என்றேன் கறாராக.

“விசயம் தெரியாம நிக்கீரேன்னு மனசுக்கு விசனமா இருக்கி” என்றார் சோகமாக. “என்ன செய்ய. ஒம்ம தலையெழுத்து அறிவியல், அண்ணாச்சின்னு எழுதியே போயிரணூம்னு இருக்கு. சரி, போற வழிக்கு ஒரு திருநவேலி கொலைவெறி வெண்பா சொல்லும். கேட்டுகிடுதேன்”

”மக்களை திட்டிய சொல்லினில் நிச்சயம்
டக்கெனத் கிட்டும் விருது”

Sunday, July 24, 2016

முத்துசாமி

இந்தூரில் நண்பரது அபார்ட்மெண்ட்டிற்குப் போகும்போதெல்லாம், அவரது வீட்டின் அண்டை வீட்டை சற்றே பயத்தோடு கவனிப்பேன். கதவு அடைத்திருந்தால் ஒரு நிம்மதி. பல முறை அப்படி கவனித்து, சற்றே நிம்மதியுடன் விரைவாகத் தாண்டிப் போகும்போது..

“சார், எங்கே பாத்தும் பாக்காம போறேள்?” முத்துசாமி சார் ஜன்ன்னல் வழியே எட்டிப் பார்ப்பார்.

“ஹி.ஹி” வழிவேன்“ சொளக்கியமா சார்? கண்ணன் இருக்கானான்னு பாத்துட்டு உங்களைப் பாக்க வரலாம்னு இருந்தேன்”

“இப்படித்தான் சொல்லுவேள். அப்புறம் நைஸா கிளம்பிப் போயிடவேண்டியது. ஏர்ப்போர்ட்ல வந்து பிடிச்சுறுவேன். ஆமா, பாத்துக்கோங்கோ” கதவை அவர் இன்னும் திறக்கவில்லை என்பதே நிம்மதியாக இருக்கும்.

“ஹ ஹா” “ கண்டிப்பா வர்றேன் சார். கண்ணன்...”

“அவா எல்லாம் மெட்ராஸ் போயிருக்காளே? அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு ரெண்டு நாள் முன்னாடி போன் வந்தது. இவன் மட்டும் ரத்லாம் பக்கம் டூர் போயிருந்தான். அங்கேர்ந்து ராஜ்தானில பாம்பே போயி அங்கேர்ந்து ப்ளைட். நாந்தான் ஐடியா கொடுத்தேன்.உள்ள வாங்கோ”

யப்பா, தொடங்கியாச்சு..

முத்துசாமி ரயில்வேயில் என்ன வேலை பார்த்தார் என்று தெரியாது. கேட்கவில்லை. கேட்டால் அது ரெண்டு நாள் கதை ஓடும்.
“ ராஞ்ச்சியில ரெண்டு வருஷம் தூக்கி அடிச்சான். என் தப்பு என்னன்னு கேளுங்கோ. காண்ட்ராக்டர்ட்ட லஞ்சம் வாங்கினதை போட்டுக் கொடுத்துட்டேன். அப்புறம்னா தெரிஞ்சது, அந்த டிவிஷனல் ஆபீஸருக்கும் அதுல கட் இருக்குன்னு? அவன் பாத்தான். “மிஸ்டர். முத்துஸ்வாமி, வி வாண்ட் ஹானஸ்ட் எம்ப்ளாயீ லைக் யூ இன் ராஞ்ச்சி”னுட்டு...”
இன்னும் முப்பது வருஷக் கதை பாக்கியிருக்கிறது.
முத்துசாமி தனியாக இந்தூரில் இருக்கிறார். பையனும் பெண்ணும் பெங்களூரில். அவளும் சமீபத்தில்தான் லண்டனில் இருந்து வந்தாள் என்று சொன்ன நினைவு.

“லக்‌ஷ்மி போனப்புறம் ஒரு வெறுமை.. யார்ட்டயும் போய் இருக்கவேண்டாம்னு ஒரு நினைப்பு வந்துடுத்து. பொண்ணு “ அப்பா, you talk too much ’ங்கறா. பையனா? அவம் பேசவே மாட்டேங்கறான். மாட்டுப் பொண் அவ வேலையப் பாக்கறதுக்கே சரியா இருக்கு. பேத்தி , தாட் பூட்னு என்னமோ பேசறது. வந்துட்டேன்”

முத்துசாமியின் ப்ரச்சனை, பல முதியவர்களின் ப்ரச்சனைதான். தான் பேசவேண்டும். பிறர் கேட்கவேண்டும்.

“பல்பீர் சிங்னு ஒரு சர்தார்ஜி.. சார், கேக்கறேளா?”

“அங்? சொல்லுங்க” என்பேன் ஏதோ நினைவில். எனது வாடிக்கையாளர் நாளைக்கே சர்வீஸ் எஞ்சினீயர் இந்தூரில் இருக்கவேண்டுமென்கிறான். அதை எப்படி சமாளிக்கப்போகிறேன்?என்று நினைத்துக்கொண்டிருக்கையில், பல்பீர்..

“எங்கயோ பாத்துண்டு இருக்கேள். போரடிக்கறேனோ?”

“இல்ல சார்” சமாளிப்பேன்.. “நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. என்ன சொல்றதுன்னு யோசிச்சிண்டிருக்கேன்”

“ஹா! இதுக்கெல்லாம் கவலைப்படப்படாது. எனக்கு எத்தனை ப்ரஷர் வந்ததுங்கறேள்? ராஞ்ச்சில யூனியன் லீடர், சூப்பிரண்டண்ட், பெரிய அதிகாரியெல்லாம் நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேப்பான்கள். சே, என்ன வேலை விட்டுறலாம்னு தோணும். ரெண்டு கொழந்தைகள், பொண்டாட்டி ஊர்ல இருக்கா. வயசான அம்மா . எப்படி சார் சமாளிப்பேன்?”

“கஷ்டம்தான்”

”எவன் என்ன வேணாலும் சொல்லிட்டுப் போகட்டும். நான் என் வேலையச் செய்யறேன்னு இருந்துட்டேன். ரெண்டு பேர் கஷ்டம் கொடுத்துண்டே இருந்தான்கள். ராய்ப்பூர்க்கு ட்ரான்ஸ்ஃபர். அப்புறம் ராஞ்ச்சிக்கு ஒரு தடவ போனப்போ, அவன்களே வந்து சொன்னான்கள் “ சர்ஜி, நீங்க போனப்புறம்தான் உங்க அருமை தெரியுது”ன்னான். அதுவும் தலையில ஏறிடப்படாதுன்னுட்டு, வெறுமனே சிரிச்சுட்டு, போன வேலையப் பாத்துட்டு வந்தேன்..”

“ம்ம்”

“எதுக்கு சொல்றேன்னா.. வேலைல வர்ற மாற்றமெல்லாம், உள்மனசுல சலனம் கொண்டு வந்துடப்படாது. ஒரு காபி சாப்படறேளா? இப்பதான் டிகாஷன் இறக்கியிருக்கேன்”

அதன்பின்னும் ராஞ்ச்சி, ராய்ப்பூர், அஸன்ஸோல் என்று அவரது நினைவு ரயில்வண்டி ஓடிக்கொண்டே இருக்கும். இரு மாதங்கள் முன்பு மாட்டினேன்.

”இப்படித்தான் பல்பீர் சிங்குன்னு ஒரு சர்தார்ஜி..”

“சார், தெரியும், போனதடவ சொல்லிட்டீங்க”

“அப்படியா? பல்பீர் வாஸ் எ பெக்கூலியர் மேன்.. ஒரு தடவ”

அந்த சர்தார்ஜியை தேடிப்பிடித்து ஏன்யா இந்தாளுகூட வேலை பாத்தே?ன்னு திட்டிட்டு வரலாமா என்று ஆத்திரம் பொங்கும். சிரமப்பட்டு அடக்கிக்கொள்வேன்.

”ஒரு தடவகூட என் ஹானஸ்டியை விட்டுக் கொடுக்கலை சார். ஸ்கூல்ல பீஸ் கட்டணும், அம்மா ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆயிருக்கான்னு ஊர்லேந்து போன் வர்றது. அவளால எஸ்.டி.டி.கூட அதிகம் பண்ண முடியாது. ராத்திரி 10 மணிக்கு மேல பண்ணினா பைசா குறையும். ஆனா தெருவுல எப்படி ஒரு பொம்மனாட்டி 10 மணிக்கு மேல தனியா நிக்க முடியும் சொல்லுங்கோ? இப்படித்தான் ஒரு தடவ”

”சார் ஹானஸ்டி பத்தி சொல்லிட்டிருந்தீங்க”

“அங்? யெஸ்! ஆமா, அப்ப ஒரு காண்ட்ராக்டர் பத்தாயிரம் தர்றேன். என் பில்லை பாஸ் பண்ணி விட்டுருன்னான். அது ரெண்டு லெவல்ல பாஸ் பண்ற பில். ரெண்டு நாள்ள சீனியர் ஆபீஸர் ஒருத்தர்ட்டேர்ந்து போன் வர்றது. அந்த பில்லை பாஸ் பண்ணு முத்துஸ்வாமி’ன்னுட்டு. “ஸாரி சார்”ன்னேன் “ ப்ரொசீஜர் படித்தான் போவேன். வேணும்னா என் மேல ஆக்‌ஷன் எடுத்துக்கோ”ன்னுட்டேன். பகவான் இருக்கார் பாத்துக்கோங்கோ. தம்பி வந்து ஸ்கூல் பீஸ் அடைச்சான். அம்மா , பாவம் பரமபதிச்சுட்டா.. நல்ல ஆஸ்பிட்டல் கொண்டுபோயிருக்கலாமே அண்ணா?ன்னு தங்கை அழுதா. கேக்கறப்போ ரம்பமா நெஞ்சு அறுந்தது.” சட்டென கலங்கின கண்களை துடைத்துக்கொண்டார்.

“ஸாரி சார்”

“விடுங்கோ. என்ன செய்யறது. அந்த பைசா வாங்கி, அம்மாவை குணப்படித்தியிருந்தேன்னு வைச்சுக்கோங்கோ, அவளுக்கு தெரிஞ்சிருந்தா, அப்பவே ப்ராணனை விட்டிருப்பா. அவ உடம்பு குணமாயிருக்கும். ஆத்மா ரணமாயிருக்கும். வேணுமா எனக்கு?”

“சார், காபி”

“ஓ. முக்கியமான ஒண்ணை மற்ந்துட்டேன் பாருங்கோ. ஒரு ஹெல்ப் வேணும். என் வாழ்க்கையில பாத்த ரெண்டே ரெண்டு, சாஸ்த்ரம் சொன்ன படி வாழ்றது, அன்பாயிருக்கறது. இத ரெண்டு நோட்டு புஸ்தகத்துல அனுபவமா எழுதி வைச்சிருக்கேன். புக்கா போட முடியுமா? கேட்டுச் சொல்றேளா? கம்ப்யூட்டர்ல டைப் பண்ண முடியலை.”

“பாக்கலாம் சார்” என்று ஏதோ சாக்கு சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
சில நேரங்களில் இந்தூரில் அவருக்கு பயந்தே, ஓட்டல் அறையில் அடைந்தேன்.

சமீபத்தில் அவர் இறந்து போனதாக அறிந்தேன். கண்ணன் வீட்டுக்குப் போகும்போது அடைத்துக்கிடந்த அடுத்த வீட்டுக்கதவு என்னவோ செய்தது. ”என்ன ஆச்சு அவருக்கு?”என்றேன் நண்பனிடம்.

“அப்பா தனியா இருக்க வேண்டாம் என்று பையனும் பொண்ணும் தீர்மானிச்சு அவரை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்க முடிவெடுத்தார்கள். அவர்கிட்ட சொன்னப்போ, சட்டுனு அமைதியாயிட்டார். அதுக்கப்புறம் எங்க கிட்ட கூட அதிகம் பேசலை.”

ஒரு குற்ற உணர்வில் நெளிந்தேன்.

“ஒரு ராத்திரி, கொஞ்சம் காய்ச்சல் மாதிரி இருக்குன்னார். லலிதா, ரசம் சாதம் வைச்சுக் கொடுத்தா. நாங்க ரெண்டுபேரும் அவர்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம். “கடை விரித்தேன் கொள்வாரில்லை. கட்டி விட்டோம்”ன்னார். அடுத்த நாள் காலேல போயிட்டார்”

”எதாவது நோட்டு புக் உங்க கிட்ட கொடுத்தாரா? ”

“இல்லையே? எல்லாத்தையும் பழைய பேப்பர், சாமான் எடுக்கறவன்கிட்ட அப்படியே போட்டுட்டு, வீட்டை வாடகைக்கு கொடுத்தாச்சே? லீவுன்னு அவங்க எல்லாம் ஊருக்கு போயிருக்கா.”

வள்ளலார் பாடல் வரிகள் எப்போதும் மென்மையானவை அல்ல.

Tuesday, July 05, 2016

நிஜ வரலாறும் நாம் கற்ற வரலாறும்



திருநெல்வேலி எழுச்சி (Tinneveli uprising) பற்றி சில கேள்விகளும், எதிர்வினைகளும் வந்தன. பலரும் சொன்னது”இப்படி ஒன்று நடந்ததே தெரியாது”. அது ஆச்சரியமல்ல. நமது கல்வித்துறைகளின் பாடத்திட்டம் அப்படி.

’கானிங் பிரபு ஏன் கருணையுள்ள கானிங் என்று அழைக்கப்படுகிறார்? துருக்கியின் கிலாஃபத் இயக்கத்தில் காந்தியடிகளின் கருத்து யாது?’ என்பது போன்றவற்றை மட்டுமே அவை கற்றுக்கொடுத்தன. சந்திரசேகர் ஆஸாத், திங்க்ரா, சவர்க்கர், சிட்டகாங் புரட்சி என்பது பற்றி அவை பேசுவதே கிடையாது என்பது கசப்பான உண்மை.

நமது சுதந்திரப் போராட்டம் பல கட்டங்களில் (Phase) நிகழ்ந்த ஒன்று. ஒரே சீராக ஒரே தலைவரின் ஆணையில் நடந்த போரல்ல. 1857, 1882-1918, 1918-1947 எனப் பெருவாரியாக இக்கட்டங்களை வகுக்கலாம். இதுவும் ஒரு தன்னிலைப் பார்வை (subjective view) யாகவே கொள்ளமுடியும். வரலாற்றிஞர்கள் இன்னும் சிறப்பாக, சுதந்திரக் கிளர்ச்சியின் காரண, காரணிகளையும், அணுகுமுறையையும் கொண்டு பிரிப்பார்கள். 

அன்னிய ஆடை தயாரிப்புகள் புறக்கணிப்பு, சுதேசி பொருட்களை பயன்படுத்தல், காதியை ஆதரித்தல் என்பது 1918ன்பின் காந்தியின் வருகையின் பின்னான கட்டத்தில் என்று பொதுவாகக் கருத்து இருக்கிறது. அது 1900களில் உதித்த சிந்தனை. அந்நிய பொருட்களை புறக்கணிப்பதை ஒரு அடையள நிமித்தமாக  அந்நிய நாட்டுத்துணிகளை 1905ல் சவர்க்கர் பூனாவில் எரித்தார். முதலில் அத்திட்டத்தை  ஆதரிக்காத திலகர், அன்று அங்கு வந்து பாராட்டி வாழ்த்திய  ஒரு செயல். காதியை அணியவேண்டும் என்பதை 1900களில் நமது சுதேசி தலைவர்கள் முன்னிறுத்தினர். 

இதெல்லாம் கண்டவர் காந்தி. அதன் உள்ளிருந்த நாட்டுப்பற்றையும், நாட்டில் அனைவரையும் சென்றடையக்க்கூடிய தீவிரத்தையும் அறிந்தார் அவர். இதனை தன் போராட்டத்தில் முன்வைத்தார். அதில்  தனக்கு முன்னிருந்தவர்களின் செயலைத் தனதாக்கும் முயற்சி எதுவுமில்லை.

ஆனால் பின்னாளில் வந்த அரசியல்வாதிகள், அவர்கள் ஆதரித்த வரலாறு புனையும் அறிஞர்கள், காந்திக்கு முன்பிருந்தவற்றை படுபுத்திசாலித்தனமாக இருட்டடிப்பு செய்ததன் விளைவுதான் நமது கோணலாக வளர்ந்து நின்ற பாடத்திட்டங்கள். 

தென்னிந்தியாவில் ஏதோ ஒன்றுமே நிகழாததுபோல ஒரு கருத்து அதில் காணலாம். அதுவும் இந்திய தேசிய காங்கிரஸ் மட்டுமே போராடியது போன்ற ஒரு கணிப்பை நம்மில் ஏற்படுத்தியதும் கண்கூடு. உண்மையில், பொலிகர் புரட்சி, வேலுத்தம்பி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதி, மாடசாமிபிள்ளை, நீலகண்ட ப்ரம்மச்சாரி, அரவிந்தர், வ.வே.சு ஐயர் என்பவர்களின் தியாகத்தை தமிழக பாடநூல்கள் முன்வைக்கவே இல்லை. வாஞ்சிநாதனின் தியாகம்,  ஜாதிய வெறியால் விளைந்த ஒன்று என்பதாகக் காட்டும் அவலம்தான் இப்போது நடக்கிறது. நாம் அதிகம் அறியாத சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் சிலரைப்பற்றி இங்கு வாசிக்க இயலும்.

http://www.thebetterindia.com/…/unsung-heroes-freedom-figh…/


உண்மையில் அன்று இருந்த தலைவர்கள் ‘இந்திய அளவில்,உலக அளவில்’ நிகழ்வுகளைத் தெளிவாக அறிந்திருந்தனர். அதனை மக்களிடம் அடையாளங்கள் மூலம் பரப்பவும் முயற்சித்தனர். பாரதி “மாகாளி உருசிய நாட்டின்கண் கடைக்கண் பார்வை வைத்தாள்” என்று தொடங்குவதும் “ கரும்புத்தோட்டத்திலே” என்று வெளிநாட்டில் அடிமைகளாக வாழ்பவர்களுக்கு வெம்புவதும் இதன் வெளிப்பாடுதான். 

இந்த திருநெல்வேலி எழுச்சி , பிப்பின் சந்திரபால் (B.C.Pal) விடுதலையானதைக் கொண்டாடுவதாக, மக்களிடம் சுதந்திர உணர்வைப் பரப்ப வ.உ.சியும், சிவாவும், பத்மனாப ஐயங்காரும் திட்டமிட்ட ஓரு பேச்சுக்கூட்டத்தின் எதிர்விளைவால் வந்த எதிர்ப்புதான். இக்கூட்டத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக மக்களைத்தூண்டினார்கள் என்பதாகத்தான் வ.உ.சி பிள்ளை, சுப்பிரமணிய சிவா கடும் சிறை தண்டனை பெற்றனர். வ.உ.சி பெற்றது இரட்டைத் தீவாந்தரத் தண்டனை - 40 ஆண்டுகள். அந்தமான் சிறையில் இடம் இல்லாததால், கோயமுத்தூர் சிறையில் வைக்கப்பட்டார். செக்கிழுத்தார். இன்னலுற்றார்.

சவர்க்கர்  பெற்றது 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை. இந்திய சுதந்திர வரலாற்றிலேயே அதிகபட்சமான தண்டனை பெற்றவர் சவர்கர்.( நாகலாந்து ராணி கைடின்லியு ஆயுள்தண்டனை பெற்றார். அதுதான் அதிகபட்ச தண்டனை என்றும் கருத்து நிலவுகிறது. இவர்களது உயர்ந்த லட்சியத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். யார் அதிக தண்டனை பெற்றவர்? என்பதல்ல இங்கு பேச்சு). அந்தமான் சிறையில் 11 வருடங்கள் அவர் சிறு அறையில் அடைக்கப்பட்டார். அவர் கண்ணெதிரே, தியாகிகள் தூக்கிலிடப்படுவார்கள். இது அவர் பெற்ற சித்திரவதைகளில் ஒன்று.

இதையெல்லாம் நாம் பள்ளியில் வரலாற்றுப் பாடத்தில் படித்திருக்கிறோமா? இல்லை. விளைவு? இன்று பேஸ்புக் பதிவுகளில் “ சவர்க்கர் யாரு?” என்ற கேள்விகள் வருகின்றன. மிகுந்த மன உளைச்சலைத் தரும் கேள்விகளில் ஒன்று அது. 

தலைவர்களை மட்டுமே சொல்லமுடியும் என்பது சரியான வாதமல்ல. ஒரு தலைவர் கீழ் இந்நாடு விடுதலையடையவில்லை. அப்படிப்பேசுவது என்னமோ ஒரு வலிமையான படைத்தலைவனின் கீழ் போரிட்டு நாடு விடுதலைபெற்றது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. நமது ஜனநாயகத்தைப் போலவே, பல தலைவர்கள் பல கட்டங்களில் பல காரணங்களுக்காக உரிமைப்போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதனை முறையாக மதித்து, அடுத்த தலைமுறையிடம் உண்மையாகச் சேர்ப்பதே நமது தலையாய கடமை. 

இனியாவது இக்கல்வித்திட்டங்கள் சரிசெய்யப்படவேண்டும். அரசியல் காரணமாக, ஓட்டுகள் சேகரிக்கும் எண்ணத்துடன் எழுதப்பட்ட போலித்தனமான வரலாறுகள் திருத்தப்படவேண்டும். அரசு மட்டுமல்ல, தனியார் ஊடகங்கள் இதில் ஈடுபட்டால்தான் முடியும்.

Wednesday, June 29, 2016

சிகரங்களும் நம்பிக்கைகளும்

குவஹாத்தி- தில்லி விமான வழி அற்புதமானது. கௌஹாத்தியிலிருந்து போகும்போது ஜன்னல் வழியாக  கர்ச்சீப் போட்டு F சீட்டுகளைத் தேடி  பிடித்துக்கொள்வேன்.


தில்லியிலிருந்து போகும்போது A சீட்டுகள். கூடவே வந்துகொண்டிருக்கும் இமயமலைத்தொடரும், நடுநடுவே அக்கினிப்பிழம்பாக மின்னும் சிகரங்களும் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. ஒரு மாதமுன்பு, தில்லி- கொளஹாத்தி காலை விமான பயணம்.


”அதோஓஓ.... தெரியறதுபாரு, சின்ன்.....ன்னதா வெள்ளியாட்டம்.. அட,அது இல்லை..கொஞ்சம் இடது பக்கம்.. ஆங்.. அதுதான் எவரெஸ்ட். “ முன் சீட்டில், புதிதாக மணமான இளைஞன் ஒருவன்,கையெல்லாம் வளையல் அடுக்கிய, மெஹந்தி அழியாத புதுக்கருக்கான  மனைவியிடம் தன் கார்ட்டோகிராஃபி அறிவைக் காட்டி இம்ப்ரெஸ் செய்துகொண்டிருந்தான். இந்த ரூட்டில் இது  வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். உள்ளூற புன்னகைத்துக்கொண்டே கேட்காத மாதிரி இருந்துவிடுவேன். எவரெஸ்ட் எப்பவோ போயாச்சு, பயல் இப்பதான் அவள் தோளிலிருந்து தலைஎடுத்து எழுந்திருக்கிறான். ரைட்டு.


”இன்னும் கொஞ்ச நேரத்துல அன்னபூர்ணா தெரியும். அப்புறம் நந்ததேவி. ஆ! அங்க பாரு, பாரு... தங்கமயமா ஜொலிக்கறது இல்லையா?! அதுதான் கஞ்சன் ஜங்கா. கண்ணை மூடிக்கிட்டு வேண்டிக்கோ. நினைச்சது நடக்கும், கஞ்சன் ஜங்காவைப் பார்த்தா.”


எவரெஸ்ட்லேர்ந்து ரெண்டு எட்டு எடுத்து வைச்சா கஞ்சன் ஜங்காவா? என்னமோ தாம்பரத்துலேர்ந்து சேலையூர் ஷேர் ஆட்டோ பிடிச்சுப் போறமாதிரின்னா சொல்றான்?ன்னு தோணினாலும், அவர்களது அறிவு வளர்க்கும் காதலில் கரடியாக நுழைய விருப்பமில்லை.


ஹலோ என்றார் அருகில் இருந்தவர். அவரும் இந்த பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்திருப்பார் போலும். என்னைப்பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார். நானும் சிரித்தேன்.  எதோ கவெர்மெண்ட் உத்தியோகம். கோப்புகளை விரித்து வைத்திருந்தார் “ Project report on *******, Kohima, Nagaland"என்று ஏதோ இருந்தது

.

“இந்த காதல் காட்சிகள் மட்டும்தான் அரசியல் மதம் கலக்காதது. நான் திருமணமானபோது இந்த ப்ளைட்ல போற வசதி இல்லை. என் மனைவிக்கு  சிகரங்களின் போட்டோக்களைக் காட்டி இம்ப்ரெஸ் பண்ணுவேன். சிக்கிம்ல போய் கஞ்சன் ஜங்கா பாத்தப்புறம்தான் என்னை நம்பவே செய்தாள்”


சிகரங்களைக் காட்டினால் மனைவி இம்ப்ரெஸ்ட் ஆயிருவாங்களா? சே தெரியாமப் போச்சே? குத்தாலம் கூட மங்கையைக் கூட்டிப்போனதில்லை.


“மலைப் பகுதி ,சிகரம் என்பது பரந்த ஞானத்தைத் தரும். நாம எவ்வளவு சிறியவர்கள் என்றூ போதிக்கும். இந்த ப்ரமாண்டத்தோடு எனக்கும் தொடர்புண்டு என்று நினைக்கையில் ஒரு பரவசம்.. அதுதான் ரிஷிகளையும் மலையை நாடச் செய்தது” பேசிக்கொண்டு வந்த  அவர் ஒரு நினைவில் ஆழ்ந்திருந்தார்.


“இந்தியா முழுசும் மலையாயிருந்தா, இந்த மதச்சண்டையெல்லாம் வந்திருக்காது இல்லையா சார்?” என்றார் திடீரென்று.

“அப்ப நீங்க போற நாகலாந்துல சண்டையே இருக்கக்கூடாது. அஸ்ஸாம் கொந்தளிக்கக்கூடாது”


“அது மத்தவங்க இடையூறா வந்ததுனால வந்த வினை. நான் அடிக்கடி இந்த மலைப்பகுதிகளில் செல்வதால் எனக்கும் ஒரு பரந்த எண்ணம் வந்தது. என்ன மதம், சடங்குகள்? ஒன்றுமே வேண்டாம்”


“அட” என்று வியந்து அவர் பேசுவதைக் கேட்கலானேன்.


“இந்த மதத்தில்தான் எத்தனை மூட நம்பிக்கைகள்? சடங்குகள்? சட்டுனு இந்த ஞானம் வந்ததும் கோயில் போறதை நிறுத்திட்டேன். கும்படறதில்ல. கடவுள்னு ஒருத்தன் இருக்கற மாதிரி என்னால நம்ப முடியலை. இருக்கலாம். ஆனா எனக்கு அவசியமில்ல” பேசிக்கொண்டே வந்தவர். பக்கவாட்டில் பார்த்து முகம் சுளித்த்தார். ‘இந்த பக்கம் பாருங்க.” என்று மறைவாகக் கை காட்டினார்.


ஒரு பெண் சற்றே பருமனாக, குண்டாக ஸ்கர்ட் அணிந்திருந்தவள், அருகிலிருந்த குழந்தை வாயிலெடுக்க, கையில் வாங்கி அதனை பேப்பர் பையில் போட்டுக்கொண்டிருந்தாள். ஏர்ஹோஸ்டஸ் அவசரமாக இன்னும் பேப்பர் பைகளையும் டிஷ்யூ பேப்பரையும் கொண்டு வர சற்றே அமளி..


“கண்டதையும் தின்னுட்டு ப்ளேன்ல ஏற வேண்டியது. நாற வைக்கவேண்டியது. இந்த வடகிழக்குல எக்கச்சக்கத்துக்கு சலுகைகள்.”


திகைப்பாக இருந்தது. கடவுள் இருக்கலாம், இல்லாதிருக்கலாம். ஆனால் ஒரு மனித நேயமில்லையே? குழந்தை வாயிலெடுத்தால் அதன் ஜாதியைப் பார்க்கும் மனிதன் என்ன படிச்சு என்னவாயிருந்தால் என்ன?


“எனக்கு நம்பிக்கை உண்டு” என்றேன் திடமாக “ எந்த நம்பிக்கை என்பது முக்கியமில்லை. . மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்பவனையும், ஊர்க்காவல் தெய்வத்துக்கு பலீயிட்டு வணங்குபவனையும், ஐந்து வேளை தொழும் இஸ்லாமியனையும், ஞாயிறு தவறாமல் சர்ச்சுக்குப் போகும் கிறித்துவனையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மதிக்க முடிகிறது. ஆனால், தனது மரபு தந்த பண்பை தொலைத்து, வெற்றுப்படிப்பில் தருக்கித்து, ஒன்றுமே செய்யாமல்  ‘எனக்கு எல்லாம் சம்மதம்” என்றூ வெறுமே பேசித்திரிபவனை என்னால் மன்னிக்க முடிவதில்லை”


அதன்பின்னும் பலதும் பேசினோம். அனைத்தும் வெறுமையானவை என்றே பட்டது.


மீண்டும் ஜன்னல் வழியே பார்க்கத் தொடங்கினேன் . சிகரங்கள் அழகானவை, தூரத்தில் இருப்பவை. நல்லது செய்யும் என்ற நம்பிக்கை தருபவை.


முகத்தைத் திருப்பிக்கொண்டு சிகரங்களைப் பார்க்கலானேன். தூரத்தில் கஞ்சன் ஜங்கா ஜொலித்தது.. கஞ்சன் ஜங்காதானா? வேறா?

அது முக்கியமில்லை. சிகரம், நம்பிக்கை.

இந்த முறை நானும் கண்மூடி கஞ்சன் ஜங்காவிடம் வேண்டினேன்.

Tuesday, May 31, 2016

ஆபீஸ் வாசல் அண்ணாச்சி

”ஒரு டீ குடுங்க”
"சார் எந்தூரு?” என்றார் அந்த அண்ணாச்சி. எங்க ஆபீஸ் கேட் பக்கம் ஒரு சைக்கிளின் கேரியரில் பெரிய சிலிண்டர் சைஸில் டீ ப்ளாஸ்க், முன்புறம் ஒரு ப்ளாஸ்டிக் கூடையில் , இட்லி சட்னிப் பொட்டலங்களுடன் அவர் நாலு வருடங்கள் முன்பு வந்து நின்றபோது இரண்டாம்நாள் அவர் கேட்டது இது.

சிரித்து வைத்தேன்

“நான் தமிழுன்னு எப்படி கண்டுபிடிச்சீய?” என்றார் வெகுளியாக.  சீனாக்காரன் நான் சீனன்னு எப்படி தெரியும் என்பதைக் கேட்பது போல.

“உங்க மொபைல்ல அல்லேலூயா பாட்டு ஓடுதே, காலேலேர்ந்து? அதுவும் நீங்க பேசற இந்தி.. “

அவர் நெர்வஸாகச் சிரித்தார். “ எங்கிட்டுப் போனாலும் ஆண்டவரை விடறதில்ல பாத்துகிடுங்க. நாலு பேரு கேட்டா நல்லாயிருவாங்கல்லா? என்ன நாஞ்சொல்லறது?”
“வெளங்கும். அவனவன் நொந்து போய் டீ குடிக்க வர்றான். நீரு என்னடான்னா.. சரி ஒரு டீ போடுங்க அண்ணாச்சி. காலாகாலத்துல குடிச்சிட்டு சோலி மயித்தப் பாக்கப் போவணும்”

“ஆ.. அண்ணாச்சி நம்மூரா? “ என்றார் மூக்கில் விரல் வைத்து.

“பொறவு? தூத்துக்குடிக்காரன்வே. சொந்தூரு நாங்குநேரி”

“நீங்க அசப்புல நம்மூர் மாரி இல்ல பாத்துகிடுங்க. மலயாளின்னு நினச்சேன்”
இந்த ஒரு வார்த்தைக்காகவே அவர் மனைவி விதவையாயிருக்கவேண்டும்.

“எனக்கு வீரவநல்லூரு.. இரிங்க. ஒரு வட சாப்புடுதீயளா? விடிக்காலேல ஊறப்போட்டு அரச்சது. ப்ரெஸ்ஸ்ஸ்ஸ்ஸா இரிக்கி “

அதைப்பார்த்து தவிர்த்தேன் “வடை ஒவ்வொண்ணும், ஒருலிட்டரு எண்ணெய் குடிச்சிக்கிடக்கே?. பிழிஞ்சி எடுங்க. நாளைக்கு அடுத்த ஏடு போட உதவும்”

அவர் முகம் சுருங்கினார் “ ஊருல இருக்கறவா மாரியே பேசுதீயளே? இந்தூரு பருப்புக்கு இதுதான் வருஞ்சாமி”

“அத இந்தூரு  ஆளுகளுக்கே கொடுங்க. வடா பாவ் தின்னு தின்னு வட மாரியே இருக்கான் ஒவ்வொருத்தனும்”

இத்தனையில் இரண்டாவது மாடி கால்செண்ட்டரில் இருந்த பெண்கள் இருவர் வந்து வடை வாங்கிச் சென்றனர். அண்ணாச்சி மர்மமாகப் புன்னகைத்தார் “ பாத்தியளா? பொம்பளேள் வாங்கிட்டுப் போறாளூவோ. நீங்க கரச்சல் பண்ணுதீய”

அண்ணாச்சி நல்ல நண்பராகிப்போனார். காரில் வந்து கேட் அருகே காத்திருக்கையில், பெருமையாக சல்யூட் அடித்து புன்சிரிப்பார். அன்று டீ குடிக்கப் போகையில் அடுத்திருப்பவரிடம் “சாரு,எங்கூரு தெரியுமில்லா?” என்பார் பெருமையாக. பொதுவாகவே, ஒரு திருநெல்வேலிக்காரன் அருகே மற்றொரு திருநெல்வேலிக்காரர் எப்போதும் ஒரு வேலையும் செய்யாது நின்றிருப்பார். அண்ணாச்சி அருகே யாராவது நம்மூர்க்காரர்கள் நின்றிருப்பார்கள். உடனே தொடங்கிவிடுவார்கள்“ சார்வாள் தூத்துக்குடியா? அங்கன மீளவிட்டான் பக்கத்துல எங்க மாமா இருக்காரு..”

ஆக்டிவா புதியதாகக் கொண்டுபோனதில் அண்ணாச்சிக்கு அவ்வளவு சுகமில்லை. ‘என்ன சார்வாள்? கெத்த்த்...தா கார்ல வரவேணாமா? இங்கன ஸ்கூட்டர்ல ... அந்தா அங்க பாருங்க, அந்தப் பொம்பளப்பிள்ளயும் இந்த வண்டிதான் ஒட்டுது” பெண்ணியம், சமத்துவம், பெண் விடுதலை என்று கொதிப்பவர்கள், அண்ணாச்சியை விரும்பமாட்டார்கள்.

ஆனாலும், வண்டியை அவர் அருகிலேயே வைக்க இடம் ஒதுக்குவைப்பார் “ தாயளி, எல்லாவனும் கோணலா நிப்பாட்டிட்டுப் போயிறானுவோ. நீங்க விட்டுட்டுப் போங்க,. நாம்பாத்துகிடுதேன்”
அவரை நம்பி விட்டு விட்டுப் போவது ஆபத்து என்பது பின்னர் தெரிந்தது. ஆர்.டி.ஓ வந்து வண்டியைத் தூக்கிப்போனபோது “ ஒண்னுக்கடிக்க போயிர்ந்தன் சார். அந்த அஞ்சு நிமிசத்துல ...”
ஆனால் கேட்டது வேறாயிருந்தது. ஆர்.டி.ஓ குண்டர்கள் வண்டியைத் தூக்கியபோது அண்ணாச்சி பம்மிக்கொண்டு ஒரு மூலையில் யாருடைய வண்டியோ? என்பதாக வேடிக்கை பார்த்திருந்தார் என்று ஏ.டி.எம் வாயிற்காவலர் சொன்னார். அண்ணாச்சியின் இந்த அந்நியன் split personalityஇன் பின்புலம் அன்று புரியவில்லை.

முந்தாநாள் சொன்னார் ”ஒரு வாரம் காய்ச்சலு. வேலை நடக்கல. என்ன செய்ய? சம்பாரிக்கறதுல 50% இங்க தாதா எடுத்துர்றான். இல்லன்னா நம்ம சைக்கிளையும் தூக்கி ஆர்.டி.ஓ கொண்டுபோயிருவான். செருக்கியுள்ளேள்..அவனவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கி.  ஊர்ல பொழக்க்க முடியலன்னு இங்கிட்டு வந்தா, இவனுவ வேற மாரி கொள்ளயடிக்கானுவோ. பையன் பத்தாப்பு இந்த வருசம். அவனாச்சும் பொழக்கட்டும்னு  நாய் மாரி லோல் படுதேன். என்னிக்காச்சும் ஆண்டவரு இரங்குவாரு.”

இந்த நம்பிக்கையில்தான் மும்பையில் பலருக்கு டீ கிடைக்கிறது.

Monday, May 16, 2016

சகாய மேரி டீச்சர்

கடந்த ஞாயிறு காலை ஜெபா போன் செய்தார் “ ஏ, ஒண்ட்ட ஒன்னு சொல்லணுமே? மூணு மணி வாக்குல துங்கா ஓட்டலுக்கு வாரியா? ” என்றார்.  ஜெபா ஒரு பேங்க்கில் மேனேஜர்.  என்றோ அவர் வங்கியில் செல்லப்போக, முதல் நாளே “டே, நீ தூத்துக்குடிக்காரனா? நம்மூர் பக்கம்லா?” என்று உரிமையாக தோளில் தட்டினார்.

துங்கா ஓட்டல் வெறிச்சோடியிருந்தது. கோடையில் பெரும்பாலும் மக்கள் மதியம் வருவதில்லைபோலும். ஜெபா வியர்வை பெருக நாற்காலியில்  மல்லாந்திருந்தார். அவர் அருகே மற்றொருவர் தொந்தியைத் தடவியபடி அமர்ந்திருந்தார். “ இவன் ஜெரால்டு. நவிமும்பைலதான் இருக்கான். ” பரஸ்பர அறிமுகத்தின் பின் உள்ளே சென்று ஏஸியில் அமர்ந்துகொண்டோம்.

“எதுக்கு கூப்பிட்டேம்னா.. ஊருக்குப் போயிருந்தேம் பாத்துக்க. இந்த கிறுக்கனும் வந்திருந்தான். ஊர்ல ரெண்டுநாள்ல போரடிச்சிருச்சி. பேஸ்புக்குல பாக்கேன்.. காலேஜ் வாத்தியார் பத்தி ஒன்னோட பதிவு இருந்திச்சி. டக்-க்குனு தோணிச்சி பாத்துக்க. ப்ரெண்டுக்கெல்லாம் போன் பண்ணி எங்க சகாய மேரி டீச்சரை பாக்கலாம்னேன்.”

ஜெரால்டு “ சகாய மேரி டீச்சர் எங்க கிராமத்துல மிடில் ஸ்கூல் டீச்சர். நாங்கெல்லாம் அவங்க கிட்ட படிச்சவங்க” என்றார் குறுக்கிட்டு.

“டீச்சர் இப்ப தூத்துக்குடில இருக்காங்கன்னு கேள்விப்பட்டம். ஊர்ல கேட்டு எப்படியோ அவங்க மொபைல் நம்பர் வாங்கிட்டேன். அவங்க ஸ்டூடண்டு ஆறு பேர் போறதா இருந்தது. கடைசில நாலு பேரு போனோம். ஒரு இன்னோவா எடுத்துட்டு தூத்துக்குடி போனம்.” இஞ்சி தூக்கலாக இருந்த டீயை உறிஞ்சினார்.

“நானு, இவன் -ஜெரால்டு, ப்ரின்ஸு . ஜோ குடும்பம் வைஃப், சின்ன பிள்ளை மட்டும். அவன் கடையில என்னமோ பாக்கணும், தனியா வர்றேன்னுட்டான்.”
மசாலா டீ கமகமவென வந்தது.
ஜெபா ஒரு மயக்க நிலையில் நடந்ததை நினவு கூர்ந்தார்.
*************************************
“காலேல பதினோரு மணிக்குப்போயிட்டோம். . ஒரு சின்ன இருட்டடைந்த ஹால், ஒரு பெட்ரூம், பாத்ரூம் இவ்வளவுதான்..

மெல்ல நடந்து வந்து கதவைத் திறந்த டீச்சர் முகத்தில் சுருக்க வரிகளூடே புன்னகை ஓடியிருந்தது.

“டீச்சர் என்னைத் தெரியுதா?” என்றேன்.

“டே.. எத்தன பேரைப் பாத்தாலும் என் பிள்ளேகளை எனக்கு அடையாளம் தெரியாதாங்கும்?. வவ்வாலு தன் குஞ்சை ஆயிரக்கணக்குல இருக்கற கூட்டத்துல கரெக்டா கண்டுபிடிக்கறா மாரி.. எங்கிட்டயா  கேக்க?” செல்லமாக தலையில் குட்டினார்.

ஜோவின் மனைவி அசந்து போயிட்டா. “ எத்தனை வருசம் இருக்கும் இவங்க உங்களைப் பாத்து? எப்படி கரெக்ட்டா?”

“வாம்மா, ஜோ பொண்டாட்டியா நீயி? சரி.. அவன் எங்க? ஏ யாரு பிள்ள இது?

ஒம்பேரென்னாடா, ராசா?” என்றார் டீச்சர் கனிந்த குரலில் சிறுவனைப் பார்த்து.
அவன் நெளிந்து, அம்மாவின் பின்னால் ஒளிந்துகொண்டான்.

உள்ளே தடுமாறி நுழைந்தோம். இருட்டு. ஒரு சீலிங் பேன் மெல்ல சுற்றிக்கொண்டிருந்தது. “பாத்து வாங்க. வலது பக்கம் சோபா இருக்கு, சேர் ரெண்டு கிடக்கு” என்றவர் தடுமாறி சோபாவில் அமர்ந்தார்.

“டீச்சர், இருட்டா கிடக்கே? லைட் எரியலையோ?”

“அதேன் கேக்க? ட்யூப் லைட்டு மாட்டியிருக்கேன். அது ஃப்யூஸ் ஆச்சின்னு சொல்லி ரெண்டு மாசமாச்சி. இந்த இஞ்ஞாசிப் பய வந்து மாத்தித் தாரேன் டீச்சர்னு சொல்லிட்டுப் போனவந்தான். இன்னும் காங்கல பாத்துக்க”

“எந்த இஞ்ஞாசி?” என்றான் ப்ரின்ஸு திகைப்புடன்/ ‘அந்த கிறுக்கன் ஒரு வேலையும் ஒழுங்கா செய்யமாட்டானே?”

“வீடே அவன் பிடிச்சுக் கொடுத்ததுதான் ப்ரின்ஸு.  திட்டாத. கர்த்தர் அவனையும் ரட்சிக்கட்டு”

இப்படி ஒரு வீட்டை டீச்சருக்கு விற்றதற்கு ... நான் கோபத்துடன்  ஏதோ சொல்ல நினைக்கையில் ஜெரால்டு “ பழுக்க காச்சின ப்ளையரை வச்சு அவனைக் காயடிக்கணும் மாப்ள” என்று காதில் கிசுகிசுத்தான். ஏற்கெனவே கால் அகட்டி நடக்கும் இஞ்ஞாசி காயடிக்கப்பட்டால் எப்படி நடப்பான் என்று யோசித்துப் பார்த்தேன். பென்குவின் ஒன்று கால் இடுக்கில் கார் ஒன்றை இடுக்கிக்கொண்டு நடப்பது போல் தோன்றியது.
சீ என்று தடுத்தேன். டீச்சர் முன்னாடி என்ன கெட்ட எண்ணங்கள்?

வாசலில் நிழலாடியது. “ ஜோ வந்திருக்கேன் டீச்சர்”

“ லேட்டா வந்திருக்கான்.டீச்சர். வாசல்ல முழங்கால் போட வைங்க”
டீச்சர் லேசாகச் சிரித்தார்.

”அதுவும் உப்பு மேல முழங்கால் போடணும்னு சொல்லுங்க டீச்சர்”

அவர் “போங்கடா போக்கத்த பயலுவளா” என்றார் உடல் குலுங்கி சிரித்தபடி. நாலு பற்கள் காணாமல் போயிருந்தது.

“லே ஜோ, உள்ளாற வாடே. யாரெல்லாம் வந்திருக்கா பாரு”

உள்ளே வந்த ஜோ, சிரமப்பட்டு மண்டியிட்டு டீச்சர் கால்களைத் தொட்டு வணங்கினான். “ ஆசீர்வதிங்க டீச்சர்”

“உனக்கு எப்பவுமே ஆசி உண்டும்ல. நீன்னு இல்ல, எம்பிள்ளேள் எல்லாருக்கும் தினமும் வேண்டிக்கிடுதேன். சேசுவே ரட்சியும்” அவர் அன்பாக ஜோவின் கரடுமுரடான தலைமுடியைத் தடவினார்.

”டீச்சர், இப்பவும் முடி வெட்ட மாட்டிக்கான். பாருங்க, எம்புட்டு முடி இருக்குன்னு” ப்ரின்ஸு போட்டுக் கொடுத்தான்.

ஜோ அவனை ஏறிட்டான். அவனது தடித்த உதடுகள் அசைந்த விதத்தில் இருந்து வரவிருந்து அழுந்திய சொற்கள் தா**ளி என்பதாக ஊகித்தேன்.


டீச்சர் ஜோவின் மனைவியை ஏறிட்டார் “ ஏ, ஒம்பேரென்ன சொன்ன?”

”ஜோஸஃபைன், டீச்சர்”

“இவன் மாசாமாசம் ஒரு ஞாயித்துக்கிளமை பையனைக்கூட்டிட்டுப் போயி முடி வெட்டிட்டு வரலைன்னு வையி.. வீட்டு வாசல்ல ஏத்தாதே. சோறு தண்ணி காட்டாதே.. அப்பத்தான்  புத்தி வரும்.” ஜோவின் தலைமுடியைக் ஒரு கொத்தாகப் பிடித்து ஆட்டினார். “ எம்புட்டு முடி பாரு.பொம்பளைப் பிள்ளேளுக்கு இருக்கறா மாரி”

“ஒரு வார்த்த கேக்க மாட்டிக்காரு டீச்சர். புத்திமதி சொல்லுங்க” என்றாள் ஜோசஃபைன், நேரமும் நல்ல ஆளும் கிடைத்த தருணத்தில்.

“இவனுக்கு என்ன புத்தி மதி சொல்ல? எம்பிள்ளேள் எல்லாருமே நல்லவனுங்க கேட்டியா? கொஞ்சம் கிறுக்குத்தனம் அப்பப்ப இருக்கும். சொல்ற விதத்துல சொல்லணும்.”

“உங்க பிரம்பு எங்க டீச்சர்?” என்றான் ஜோ எழுந்தவாறே.

“அங்கன பெட்ரூம்ல பாரு.  மூலைல சாத்தி வைச்சிருக்கேன். இப்பப்ப, சில பிள்ளைகளுக்கு தமிழு, இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கேன். முடியமாட்டேக்கி. வேர்த்துவேர்த்து வருதா, அதான் பெட்ரூம்ல வைச்சேதான் சொல்லிக்கொடுக்கேன். பிரம்பு கைப்பக்கம் இருக்கும். ” என்றவர் சற்றே நடுங்கினார். கலவரமானோம்.

“டீச்சர், டீச்சர்,” மெல்ல உலுக்கினான் ஜோ. “டாக்டர்ட்ட போவம்”
”வேணாம்’ என்பதாக அவர் கையசைத்தார். தட்டுத்தடவி, மேசை மேல் இருந்த கிண்ணத்தில் இருந்த சீனியை வாயில் போட்டுக்கொண்டார். இரு நிமிடத்தில் ஆயாசமாக புன்னகைத்தார் “ லோ ஷுகரு. அட கிறுக்கா, இதுக்குப்போயி டாக்டர்கிட்ட போமுடியுமால? “

மெல்ல எழுந்து, பெட்ரூமில் படுக்கையில் சாய்ந்துகொண்டார். ஒக்காருங்க என்றார் தீனமாக. அவர் கட்டிலின் ஓரத்தில் சிலர் அமர்ந்துகொள்ள. நானும், ஜெரால்டும் தரையில் அமர்ந்துகொண்டோம். அவர் தடுமாறி ரிமோட் கொண்டு ஏஸியை இயக்கினார். “போன வருசம்தான் வாங்கிப்போட்டேன். புழுக்கம் தாங்கல”

ஜெரால்டு ஏஸியைப் பார்த்தான். மிகப் பழைய மாடல். செகண்ட் ஹேண்ட். அவன் ஜோவைப் பார்த்தான் . ஜோ புரிந்ததாகத் தலையசைத்து இடது உள்ளங்கையில் பேனாவால் ஏஸி என்று எழுதிக்கொண்டான். ஏற்கெனவே ஹால்- ட்யூப்லைட், பேன் என எழுதியிருந்தான். இதையெல்லாம் நாம் மாற்றவேண்டும் என்பதை யாரும் சொல்லாமலே அனைவரும் புரிந்துகொண்டோம்.

டீச்சர் சாய்ந்து அமர்ந்து கொண்டார் “நீ என்னடே செய்யுதே?” என்று ஒருவர் ஒருவராகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். “ஜெரால்டு, பன்னாட்டு கம்பெனின்னா சொன்னே? நீ கோட்டும் சூட்டுமா நிக்கற போட்டோ பாக்கணுமேய்யா? எங்கிளாஸு பையன் எப்படி பேசுதான்னு கேக்கணுமே?”

“கக்” என்று ஒரு சத்தம் கேட்டது. முகத்தைத் திருப்பிக்கொண்டு  அழுகையை அடக்கியவாறே ஜோஸஃபைன் விரைவாக வெளியேறினாள்.

ஜெரால்டின் விழிகள் துளிர்த்தன. “காட்டறேன் டீச்சர்” என்றவன் ஐபோனில் யூ ட்யூபைத் திறந்தான் “ இது அமெரிக்காவுல பேசினது டீச்சர். இது கனடாவுல”
டீச்சர் வாயைத் திறந்தவாறே அதிசயமாக, பெருமையாக அந்த வீடியோக்களை முழுதும் பார்த்தார்

“ நல்லாயிருடே. கர்த்தரு நாளைக்குக் கனவுல  எங்கிட்ட கேப்பாரு. மரியாளே, சொர்க்கம் வேணுமா ?”  அப்ப சொல்லுவேன் “ சேசுவே, நேத்தி எம்பிள்ள பேசுறதப் பாத்தேன். அது போதும்”

ஜோ கண்களை கை விரல்களால் அழுத்தி குனிந்திருந்தான்.

“என்னடே வேணும் எனக்கி இனிமே? அங்? . மேய்ப்பரு கேப்பாரு , மரியாளே. என் ஆடெல்லாம் நல்லாயிருக்கா? எல்லாம் நல்லாயிருக்கு சேசுவே.. எனக்கு இனி ப்ரார்த்திக்க ஒண்ணுமில்ல.“

ஜோ செருமிக்கொண்டு பேசினான் “ டீச்சர், நீங்க சொல்லிக்கொடுத்தும் அந்த gerundனா என்னன்னு இன்னிக்கும் புரியலையே?”
”கிடக்கு விடு. அது அன்னிய பாசைல்லா. நீ பேசறது மத்தவனுக்கு புரியுதுல்லா? அது போதும்.” சூழ்நிலை சற்றே இளகியது.

“ஆனா” என்றார் டீச்சர் “ தாய்மொழி அப்படி இல்லடே. அது சரியா இருக்கணும். தமிழ் தப்பா பேசறது, அம்மா சேலை கசங்கற மாதிரி. இந்தா இப்படி” தன் சேலையை மடித்து நீவினார் “இப்படி நீவிவிட்டு கசங்கலை எடுத்துறணும். ஜோ, ஒன் பையன் என்னடே பேசவே மாட்டேக்கான்? பயமா?”

“எங்க நீங்க பிரம்ப வச்சி அடிச்சிருவீங்க்ளோன்னு பயம் போல” என்றான் ஜோ.

“அடிக்க மாட்டேன். சும்மா பயமுறுத்தறதுக்குத்தான் அது. பிரம்பு  தீ மாதிரி. சுட்டுறக் கூடாது. பயம் இருக்கணும்.  டே இங்க வாய்யா” பையனை இழுத்து அணைத்துக்கொண்டார்.

”தமிழ்ல படிப்பியா, எழுதுறியா?”

“அவங்க ஸ்கூல்ல தமிழ் கிடையாது டீச்சர், இங்க்லீஷ், ப்ரெஞ்ச்..”

டீச்சர் உடல் குலுங்கியது. “என்ன கிறுக்குத்தனம்? நீயும் உன் பொஞ்சாதியும் எங்க போனீங்க? வீட்டுல சொல்லிக்கொடுக்க வேண்டியதுதானே?”

“நேரமில்ல டீச்சர். அதுவும் இத்தனை படிக்க வேண்டியிருக்கு ச..ரி பொறவு பாத்துக்கலாம்னு”

“தாய்ப்பாலு , பொறந்த குழந்தைக்குத்தான் கொடுக்கணும். அஞ்சு வயசுக்கு அப்புறம் இல்ல. தாய்மொழி தாய்ப்பால் மாரி.. பின்னாடியெல்லாம் பயனே கிடையாது. அது அப்புற்ம மற்றொரு மொழி அவ்வளவுதான். “ அவர் எழுந்தார். அங்குமிங்கும் தேடி ஒரு சிறு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தார்.
“நாலு கோடு நோட்டு. இதுல எழுத வையி. ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம். எதையோ எழுதட்டும், ஆன எழுதறது தமிழ்ல இருக்கணும்”

“ஜோசஃபைன், இவனுக்கு தமிழ்ல எழுதத்தெரியுமா?”

“இல்ல” என்றாள் ஜோசஃபைன் சிவந்த விழிகளுடன், மூக்கை உறிஞ்சியபடி.
டீச்சர் கட்டிலின் தலைமாட்டில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தினார். வெளியே ஒரு அழைப்பு மணி கேட்டது. ஒரு இளைஞன் உள்ளே வந்தான்.
”லே ஓடிப்போயி, நம்ம ராவுத்தர் கடைல டீச்சர் சொன்னாங்கன்னு கேட்டு ஒரு பவுண்டன் பேனா வாங்கிட்டு வா. அதுல் நீல மையி நிரப்பியிருக்கணும், ஓடு”

பவுண்டன் பேனா புது ப்ளாஸ்டிக்கின் வாசம் அடித்தது. தன்னருகே ஜோவின் மகனை அமர வைத்துக்கொண்டார் மரியா டீச்சர் “ நான் பிடிச்சிக்கறேன். எழுது பாப்பம். அ..ம்...மா.. உள் கோட்டுல எழுதணும். ஆங். கரெக்ட். இப்ப எழுது த...மி...ழ்   ஆங். அந்த வால் வருது பாரு, அத கீழ சேப்பு கோடு வரை இழு.. அப்படித்தான். ம-வுக்கு மேலே சேப்பு கோடு வரை வளைச்சு ,,நல்லா வளைச்சு,..ஆ அப்படித்தான். இப்ப ஒன் பேரு எழுதுவமா?”
***************************************

டீ ஆறியிருந்தது. மெய் மறந்து கேட்டிருந்தேன். ஜெரால்டு மவுனத்தைக் கலைத்தார். தனது சாம்ஸனைட் முதுகுப் பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்.

“கோடு போட்ட நோட்டு. தினமும் பத்து நிமிசம் எழுதுதேன். அந்த பத்து நிமிசம் நானும் தமிழும் மட்டும். ஸ்ட்ரிக்க்டா வீட்டுல சொல்லிட்டேன். யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. ஏற்கெனவே ஒரு நாலுகோடு நோட்டு, ரெண்டு கோடு நோட்டு முடிஞ்சு போச்சு. “

ஜெபா சிரித்தார் “ எத்தனை நாளைக்கு இது , ஜெரால்டு?”

ஜெரால்டு அந்த நோட்டை பையின் உள்ளே வைத்தார்   ” இந்த வாயில தமிழ் வர்ற வரைக்கும். ’ஜெரால்டே, உனக்கு என்ன வேணும்?’னு கர்த்தர் கேக்கயிலே சொல்லுவேன்.. டீச்சர்கிட்ட திரும்பவும் தமிழ் படிச்சேம். அது போதும்”

Sunday, April 24, 2016

பேஸ்புக்-கில் நட்பெனும் அபாயங்கள்.

நேற்று எனது நண்பர் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
அவரது பெண் போனவருடம் 12ம்வகுப்பை முடித்து காலேஜில் சேர்ந்தாள். புத்திசாலி, துறுதுறுவென்று இருப்பாள். அதோடு டேபிள் டென்னிஸ், பெண்களுக்கான மராத்தான் என்று பலவற்றிலும் முழுதுமாக ஈடுபட்டவள்.
போன செமஸ்டர் பரீட்சையின்போது ஏதோ டல்லாக இருந்தாள் எனவும், மதிப்பெண்கள் எதிர்பார்த்த அளவு வரவில்லை எனவும் நண்பர் கவனித்தார். போகிறது, கல்லூரி சூழலுக்கு இன்னும் அட்ஜஸ்ட் செய்யவில்லை போலிருக்கு என விட்டுவிட்டார். இந்த முறையும், செமஸ்டர் லீவு நேரத்தில் அதே இறுகிய முகம், தளர்ந்த , வெறித்த பார்வை.
ஏதோ சரியில்லை எனப் புரிந்து கொண்ட பெற்றோர்கள், பெண்ணோடு பேசிப்பார்த்தனர். அம்மாவிடம், அவள் அழுதுகொண்டே தனது பேஸ்புக் பதிவுகள், சாட்செய்திகளைக் காட்டினாள். எதோ ஒரு பெண்ணின் பெயர்... முதலில் அன்பான வார்த்தைகள். அதன்பின் திடீரென திட்டுகள். சரமரியாக அவளது கேரக்டரைக் குறி வைத்த ஏச்சு மொழிகள். அதோடு நீ ஒரு முட்டாள் , உன்னால இந்த எக்ஸாம் எழுத முடியாது. பெயிலாகப்போவாய்,என அடிக்கடி வசனங்கள்.
“யாருடி இது?”
“தெரியலேம்மா. யாரோட ப்ரெண்டோ என்கூட இருக்கா. போனதடவ எக்ஸாம் எழுதும்போது மட்டும்தான் இப்படி வந்தது. அதுக்கப்புறம் எழுதலை. இப்ப எக்ஸாம் நேரத்துல ..”
நண்பர் சைபர் க்ரைம் போலீஸை நாடினார். அவர்கள் இந்த ஐ.டி, சமீபத்தில் அந்தேரியில் இருந்து பயன்படுத்தப்பட்டது என்று அறிந்தனர். நூல் போட்டுப் பிடித்ததில் பயல் சிக்கினான்.
அவன் , தனது சகோதரியின் தூண்டுதலில் எழுதியதாகச் சொன்னான். அந்தப்பெண், இவளது தோழி. பள்ளிக்காலத்தில் இருந்தே ஒன்றாகப் படித்தவள்.
’விசாரித்ததில்’ , இவளது படிப்பில் பொறாமை கொண்டு, கல்லூரியிலாவது இவளுக்கு அதிகம் மார்க் வந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படிச் செய்ததாக ஒப்புக்கொண்டாள். அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு மிகக்கடுமையான அதிர்ச்சி. இவளா இப்படி? என்று இன்று வரை இரு குடும்பத்திலும் கேட்டவண்ணம் இருக்கிறார்கள்.
தெரியாதவர்கள்தான் பேஸ்புக்கில் தொந்தரவு கொடுக்க வேண்டுமென்பதில்லை. தெரிந்தவர்களுக்கும் உள்ளிருக்கும் பிசாசு வெளிவர முகமற்ற, போலிமுகம் சாத்தியமான சமூக ஊடகங்கள் ஒரு தளத்தைக் கொடுக்கின்றன.
ஊடகங்களில் பேச்சு ஒரு மாதிரியாகப் போனால், தயவு தாட்சணியம் பார்க்காது கத்தரித்து விடுங்கள். நிஜமான பத்து நல்ல நண்பர்கள் போதும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குரங்கோடு குதித்துக்கொண்டிருக்க உங்களுக்கு நேரம் இருக்காது. வாழ்வு பேஸ்புக்கில் வாதம் செய்வதற்கு இல்லை

பாசுரமும் குழந்தை வளர்ப்பும்

”இந்த பாசுரங்களைப் படிப்பதில் என்ன ப்ரயோசனம்? ” என்றார் புருஷோத்தமன். அவர் எனது கஸ்டமர் என்பதால் எனது  பேச்சுக்கு  ஒரு வரையறை உண்டு. மவுனமாகக் கேட்டிருந்தேன்.

”ஊர்ல , எங்கப்பா டெய்லி மூணுமணி நேரம் பூஜைன்னு உக்காருவாரு. ஒரு குழந்தை கிருஷ்ணர் விக்ரகம் உண்டு. அதைக் குளிப்பாட்டி, பூவைச்சு, என்னமோ பண்ணுவாரு. அம்மா அவ்வளவு அடுப்படி அவசரத்துலயும் சந்தனம் அரைச்சு வைக்கணும், பால் ஒரு கிண்ணில எடுத்து வைக்கணும். எவ்வளவு மெனக்கெட்ட உழைப்பு?”

“அது அவங்க விருப்பப்பட்டு செய்யற விஷயம் புருஷோத்தமன். உங்களுக்கு கஷ்டமாத் தெரியறது, அவங்களுக்கு சுகமான சுமையாக்த் தெரியலாம். உங்கம்மா எப்பவாச்சும் இது முடியலைன்னு சொல்லியிருக்காங்களா?”

“அப்பா மேல இருக்கிற பயம்னு நினைக்கறேன்” என்றார் அவர்,சிந்தித்தபடி.  தெலுங்கும் தமிழும் வளர்ந்து விளையாடிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

“அப்பா தமிழ் பாசுரம் பத்தி நிறைய சொல்லுவார். . நமக்குத்தான் ஒன்னுன் ஏறலை. ஆனா வருத்தமில்ல, சுதாகர். என்ன பெரிசாத் தெரிஞ்சுகிடப் போறோம். ?”

“என்ன அப்படி சொல்லீட்டீங்க?” என்றேன் சற்றே திகைத்து.

“பின்னே? குழந்தைக்கு மை கொண்டு வா, பால் ஊட்டு, குளிப்பாட்டு-ன்னு பாடறதுல அன்னியோன்னியம் இருக்கும். உணர்வு பூர்வமான பக்தி இருக்கும். அது புரியுது. ஆனா, சடங்கா மாறும்போது, தடையாகுதோன்னு சந்தேகம் வருது. ஏன் , இந்த சடங்கு இல்லாம, பாசுரத்தை ரசிக்க முடியாதா, இல்ல பக்திதான் வராதா?”

“பாசுரத்தை உள்வாங்குவதற்கு சடங்கு துணையாக இருக்கக் கூடும்.  நமது ஈடுபாடு, பாடலின் பரியச்சம், விளங்கிக்கொள்ளும் தன்மை நாளுக்கு நாள் அனுபவத்தில் மாறலாம்” என்றேன்.

“அது ஒரு சாத்தியம் என்று மட்டும் சப்பைக் கட்டு கட்டாதீர்கள். இந்த பாசுரங்களால் குழந்தை வளர்ப்பு பலப்படுமா, இல்லை என் பக்திதான் பலப்படுமா? ஒன்றுமில்லை. நான் அவரது உணர்வை மதிக்கிறேன். ஆனா அதிகமாப் போகுதோ என்றும் நினைக்கிறேன். அவ்வளவுதான்”
அதன்பின் நாங்கள் அதைப்பற்றிப் பேசவில்லை.

ஒருவாரம் முன்பு அவருடன் மதிய உணவு.

“பொண்டாட்டி,  பிள்ளைகளோட ரெண்டு வாரம்  ஊருக்குப் போயிருக்கா. பிசாசுகளுக்கு லீவு விட்டாச்சு பாருங்க.” என்று தொடங்கினார்.

“ பெரியவ ஏழாம் வகுப்பு. ஒரு புத்தகத்தைக் கொடுத்துட்டா, ஒரு ஓரமா உக்காந்திரும். பசி ,தாகம் கிடையாது. சின்னது ரொம்ப வாலு. எங்கப்பா. பூசைக்கு வச்சிருக்கிற பழத்தை கடிச்சு வச்சிரும். பாலைக் கொட்டிரும். ஏய்னு அதட்டினா, ஒரு மாதிரி முழிச்சு பாக்கும் பாருங்க.. பொண்டாட்டி போன்ல சொல்றா , அப்பா ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறாங்க. ரொம்ப செல்லம். ”

“எப்படி சொல்லுவாரு?” என்றேன் “ அதுக்குத்தானே பூசையே பண்றாரு. ”எண்ணெய்க் குடத்தை உருட்டி , இளம்பிள்ளை கிள்ளிஎழுப்பி, கண்ணை உருட்டி விழித்து கழகண்டு செய்யும் பிரானே”ன்னுதானே தினமும் கூப்பிடறாரு முன்னால வந்து நிக்கறப்போ கோவம் எப்படி வரும்? “
“இது சரியில்லன்னேன். அவ செய்யற சேட்டை, பெரியவ கணக்குல கொஞ்சம் மந்தமா இருக்கறதுன்னு என் மனைவி, பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட சொல்லிட்டிருந்திருக்கா. அப்பா கோவப்பட்டு ‘இதெல்லாம் பேசாதே”ன்னுட்டாரு. குழந்தைகளுக்கு என்ன ப்ரச்சனைன்னு அம்மாக்காரி சொல்லக்கூடாதுன்னா.. ஓவர் இல்ல?”

“இல்ல” என்றேன் “ மத்தவங்க முன்னாடி ,குழந்தைகள் காதுபட அவங்க தவறுகளைச் சொல்லாதீங்க. அது திருத்தறதுக்குப் பதிலா, ஒரு தாழ்வு மனப்பான்மையை விதைக்கும்னு” நினைச்சிருப்பாரு”
“ஆங்” என்றார் வியந்து “ அப்படித்தான் சொன்னாரு. அந்த குழந்தைக்கு என்ன புரியும்? இதெல்லாம் அதுங்க மனசுக்குள்ள  போகாதுங்க. சும்மா பயப்படறாரு”
“உளவியல் வல்லுநர்களும் இப்படித்தான் சொல்றாங்க. நம்மைப் பற்றிய வார்த்தைகள்தாம் சிறுவயதில் நம்மை செதுக்குகின்றன. அவை நல்வார்த்தைகளாக  இருப்பின், நற்பண்புகள் சாத்தியம். திட்டுகள், தளர்ச்சியை, சுய ஐயத்தைக் கொடுக்கும்.” பாசுரம் தந்த பாடம் இது”

“இதுக்கும்  பாசுரத்துக்கும் என்ன தொடர்பு? சும்மா... எல்லாத்துக்கும் ஆகா ஓகோன்னுட வேண்டியது”

“கண்ணன் பால் தயிர் வெண்ணெய்ன்னு எல்லாத்தையும் திருடுவதை அறிந்தும் யசோதை சொல்கிறாள் “ சிறந்த நற்றயலார்கள் தூற்றும் என்பதாலே பிறர் முன்னே மறந்தும் உரையாடமாட்டேன்; மஞ்சனமாட நீ வாராய்” அவனது தவறுகளை அறிந்த அன்னை அதனை தனியாகத் திருத்த முற்படவேண்டுமே தவிர, பிறரிடம் குழந்தைகள் கேட்க, குறைபட்டுக்கொள்ளக் கூடாது. “ இதுங்க என் பேச்சைக் கேக்கறதே இல்லை” என்ற சொல், குழந்தைகளுக்கு  ஒரு அன்னையிடம் எப்படி அவள் சொற்படிக் கேட்கவேண்டும் என்ற படிப்பினையைத் தரும்? அதான் யசோதையே கண்ணனைப் பற்றி பிறரிடம் பேசமாட்டேன் என்கிறாள்.  கற்கப்  பலவும் கிட்டும்.  கற்கும் எண்ணம் இருந்தால்.  “

அவர் பேசவில்லை. தலைமட்டும் இல்லை என்பது போல் ஆடினாலும், உள்ளே ஒரு சிந்தனை முளைத்திருப்பது உணர முடிந்தது.

Friday, April 08, 2016

அன்னமும் அடையாளமும்



தவிர்த்திருக்கலாம்..

யாரோ, எப்படியோ அடித்துக்கொண்டு சாகட்டும் என விட்டுவிட்டு பேசாம போயிருக்கலாம். 

இரண்டுபேர் அடித்துக்கொள்ள, நடுவே மூக்கை நுழைத்து மத்தியஸ்தம் செய்யப்போக “ நீ யார்றா?” என்று கேட்கப்படுவது யதார்த்தம். அதில் எனக்கு வருத்தமில்லை.  ஆனால் “நீ இந்த ஊர்க்காரன். இந்த ஜாதியன். அதனால்தான் அவனுக்கு சாதகமாப் பேசறே” என்ற வார்த்தைகள் கொஞ்சம் நெஞ்சில் அடித்துவிட்டன. அடித்துக்கொண்ட இருவரும் சமாதானமாகப் போய்விட்டார்கள். ‘கோவத்துல என்னமோ பேசிட்டேன். சாரி” என்று சொல்லிவிட்டு திட்டியவனும் போய்விட்டான். அடையாளம் சொல்லி அடிப்பதென்பது நமது மக்களூக்கு கை வந்த கலை. 

ஒரு குறுகுறுப்போடுதான் டெராடூனுக்கு அலுவலக வேலையாகப் போய்வந்தேன். அங்கிருந்து போண்ட்டா ஸாஹிப். 45 கிமீ தூரம். இமாசலபிரதேச எல்லையில். உத்தரகாண்ட்- இமாசல எல்லையாக யமுனா நதி ஓடுகிறது. யமுனை தீரத்தில் போண்ட்டா ஸாஹிப் குருத்வாரா- சீக்கியர் கோவில். கோவிலும், புனித நூலும் ஸாஹிப் என்றே மரியாதையுடன் அழைக்கப்படும்.

இரண்டு நாள் போண்ட்டாஸாஹிப்-ல் ஒரு கம்பெனியில் வேலை. முதல் நாள் மாலையில், காலாற நடந்து போண்ட்டாஸாஹிப் கோயிலை அடைந்தேன். மனம் கனத்துக் கிடந்தது. அடையாளம்.. ’நீ ப்ராஜெக்ட் மேனேஜர். நீதான் இந்த கேடுகெட்ட வேலையை சுத்தம் செய்து எடுக்கவேண்டும். நீ ஸீனியர். .. எனவே வாடிக்கையாளர் சொல்லும் ஒவ்வொரு சுடுசொல்லையும் நீதான் கேட்கவேண்டும். நீ இந்த மதத்தவன். பிற மதத்தவர் என்ன சொன்னாலும் பொறுமையாகக் கேட்டுப் போ. நீ இந்த ஜாதி… உனக்கு இங்கு வேலை கிடையாது. வேணும்னா இந்த வேலையைச் செய்.’

நான் யாருமல்ல என்ற நிலையில் என்னை மனிதனாக எவன் மதிப்பான்? மதிப்பார்களா? அடையாளங்களற்ற நிலையில், அஜ்நபியாக, அயலானாக ஒருவன் நின்றால், அவனுக்கு என்ன அடையாளம்… அயலான் என்றா? 

”ஸர்ஜீ, தலையில் கர்ச்சீஃப் கட்டுங்கள்” 
 
ஒரு சிறு பெண் தனது கடைக்கு அழைத்தாள். கைக்குட்டைகள் தொங்கிக்கொண்டிருந்தன. சிகப்பு, வெள்ளை.. சீக்கியச் சின்னம் பொறித்தது, கர்ச்சீப் வாங்கிக்கொண்டு, கட்ட முடியாமல் திணறுவதைப்பார்த்து, சிரித்தபடி ஒருவர் தானே வாங்கிக் கட்டிவிட்டார். “ நீங்கள் மதராஸியா? பாத்தாலே தெரியுது. ஸாஹிப் மிகப் புனிதமானது. நீங்கள் அதிருஷ்டசாலி” 

போண்ட்டாஸாஹிப் சீக்கியர்களூக்கு மிக முக்கியமான தலங்களில் ஒன்று. காஞ்சி, சிதம்பரம் , மதுரை என்பது போல..பொற்கோயில் ஹர்மந்திர் ஸாஹிப், அனந்தபூர் ஸாஹிப் (இங்குதான் கலிஸ்தானிய Anantapur Sahib resolution நிறைவேற்றப்பட்டது). அதன்பின் வருவது புகழ்பெற்ற போண்ட்டாஸாஹிப் .  இங்கு குரு கோவிந்த் சிங் பல வருடங்கள் தங்கியிருந்து சங்கீத், உபன்யாசம் போன்றவற்றைச் செய்தீருக்கிறார். போண்ட்டா ஸாஹிப்பை சீக்கியர்களால் கைப்பற்றப்பட்டவுடன், பெரிய கோட்டை போன்ற அமைப்பை எழுப்பி, அங்கு இந்த கோயிலை நிறுவி அவர் தங்கியிருந்திருக்கிறார். அவரது சொந்த ஆயுதங்கள் இன்றும் அங்கு இருக்கின்றன. (சில திருடப்பட்டுவிட்டன என்கிறது கோயில் பதிவேடு.).

உள்ளே நுழையும்போது கவனித்தேன். ஷு, செருப்பு வாங்கி வைப்பதில் இருந்து பல வேலைகளையும் தன்னார்வலர்களே செய்கிறார்கள். எங்கும் “ ஸ்பெஷல் தர்ஷன்.. ரூ 500 ஆவும்” என்று எவரும் வந்து கிசுகிசுக்கவில்லை. சிறுபள்ளத்தில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீரில் கால் நனைத்து உதறி உள்ளே சென்று,  மவுனமாக ஒரு மூலையில் அமர்ந்தேன். நெய் வழிய வழிய , ’மூடநெய் பெய்து முழங்கை வழிவார’ சூடான கேசரி பிரசாதமாக வழங்கப்பட்டது. என்னைத் தவிர அனைவரும் , வெளியே இருந்து அதே கேசரியை ஒரு இலைக்குப்பியில் வாங்கி வ்ந்து பெரிய அண்டாவில் நிறைத்தார்கள். அதைத்தான் பிரசாதமாக அனைவருக்கும் விநியோகிக்கிறார்கள். ”கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்” என்று , பகிர்ந்து உண்டு மகிழுமாறு, இதைத்தான் ஆண்டாள் சொன்னாள். 

சே, இப்படி வெறும் கையோடு வந்துவிட்டோமே? என்ற குற்ற உணர்வில் திரும்பிப் பார்த்தேன். யாரும் வந்தவழியில் திரும்பிச் செல்லவில்லை. சரி, சுற்றி வரவேண்டும் போலிருக்கு என்று பிரதட்சணமாக வந்த போது, திடீரென அனைவரும் எழுந்து அப்படியே நிற்க, சில பாடல்களைப் பாடியபடி ‘வாஹே குரு, வாஹே குரு, வாஹே குரு” என்று பெரிய குரு சொல்ல, ஒரு முரசு அதிர்ந்தது. டம், டம் என்ற அதிர்வும், வாஹே குருவும் சேர்ந்து ஒரு ஒத்ததர்வில் ( resonance)ல் உடலெங்கும் ஒரு அதீத உணர்வு பரவ நின்றிருந்தேன்.

அதன்பின் மீண்டும் சுற்றி வந்து வணங்கி அமர்ந்தட போது மற்றொரு சடங்கைக் கவனித்தேன். என் அருகே அமர்ந்திருந்த வறுமை வியாபித்திருந்த இரு கிழவிகள், ஆளுக்கொரு  நாணயத்தை காணிக்கையாகச் செலுத்திவிட்டு, ப்ரசாதம் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.  ஐம்பது பைசாவிலிருந்து , கணக்குத் தெரியாத கற்றைகளாக ரூபாய் நோட்டுகளை பலர் காணிக்கையாக செலுத்திக்கொண்டிருந்தனர். வந்த எவரும் காணிக்கை செலுத்தாது அமரவில்லை. அவரவர் சக்திக்கு ஏற்றார்ப்போல் காணிக்கை. அதன்பின்னரே பிரசாதம். தானமாக, இரவலாக அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை- எதையும். 

வெளியே யமுனையின் சில்லிப்புடன் காற்று உடலைத்தழுவ சிறிது நேரம் நின்றிருந்தேன். ஒரு வறட்சி உள்ளே ஓட, மெல்ல நடந்தபோது பெரிய வாணலி ஒன்று தெரிந்தது. மிகப்பழமையானது. இரு ஆள் அகலமும், ஒரு ஆள் உயரமுமான துருப்பிடித்த, இரும்பு வாணலி. அருகே இருந்த பலகையைப் படித்தேன். குருவின் கிச்சன். Guru ki Langar. 

இலவசமாக உணவளிக்கும் இடம். மெல்ல நடந்தேன். சங்கிலிகளால் கட்டி வரிசையை ஏற்படுத்தியிருந்தனர். கூட்டம் அதிகமற்ற நேரம். வரிசையாக பெண்களும் ஆண்களூமாக தட்டுகளைக் கழுவி வைக்க, சிலர், கை கழுவும் இடத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தனர். ஒரு தட்டும், டபராவும் எடுத்துக்கொண்டு வரிசையில் தரையில் சப்பணமாக அமர்ந்தேன். என் அருகில் இருந்தவர் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுனர். இடதுபுறம் கட்டிடத் தொழிலாளி ( இது அவர்களது பேச்சில் தெரிந்து கொண்டது). 

"ரொட்டி, ரொட்டி “ என்று கொண்டு வந்தவரிடம், அருகில் இருந்த ரிக்‌ஷா ஓட்டுனர், கைகளைத் தூக்கி யாசிப்பது போலக் காட்டினார். இரு ரொட்டிகளை அவரிடம் தந்துவிட்டு என்னிடம் இரு ரொட்டிகளை நீட்டினார். நான் கைகளை மாற்றி வைத்து வாங்கிக்கொண்டேன். மற்ற அனைவரும், யாசிப்பது போலவே கைகளை மரியாதையாக நீட்ட, கொடுப்பவரும் பயபக்தியுடன் கொடுத்தார். 

கட்டிடத் தொழிலாளி என்னைத் தாண்டி மற்றவரிடம் சொன்னார் “ இது குருவின் சமையலறையில் இருந்து வரும் பிரசாதம். இதனைக் கை காட்டி, யாசித்தே பெறவேண்டும். அன்புடன் வழங்கப்படும் அன்னம் இது”

மற்றவர் ஆமோதித்தார். நான் யார்? என்ன ஜாதி, என்ன மதம், என்ன வேலை செய்கிறேன்? ஒரு கேள்வி இல்லை. குருவை நம்பி உள்ளே வந்திருக்கிறாயா? உனக்கும் உண்டு அன்னம். 

எதிரே இளம் தம்பதியர் இருவர் வந்து அமர்ந்தனர். அவர்கள் பணம் படைத்தவர்களாக இருக்கவேண்டும். யார் அருகே இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை. பயபக்தியுடன் ரொட்டியை கை நீட்டிப் பெற்றார்கள். 

இது யாசிப்பல்ல.. என விளங்க சில நிமிடங்களாயிற்று. கோயிலினுள்ளே பிரசாதத்தையே , நன்கொடை அளித்தபின்னே ஏற்றுக்கொள்பவர்கள்.. தெருவில் பிச்சை எடுப்பதை அனுமதியாதவர்கள் எப்படி ,ரொட்டி யாசிக்க முடியும்> இது குருவின் பிரசாதம். அதற்கான மரியாதை, தங்குதடையின்றிப் பரவிய அன்பிற்கு, மனித நேயத்திற்கு கொடுக்கப்பட்ட மரியாதை. நான், என்ற சுய கர்வம், அடையாளம் கரைந்த நிலைக்கு ஆயத்தம். 

என் அடையாளங்கள் அற்ற நிலையில், எனக்கும் பரவிப் பொங்கி வந்த அன்பு அது. அடுத்த முறை ரொட்டி வந்தபோது, வாழ்வில் முதன்முறையாக யாசிப்பதுபோல கை உயர்த்தி, வீழ்ந்த ரொட்டியை பக்தியுடன் வாங்கினேன். கண்கள் கலங்கிப்போய்,  பருப்பில் தோய்த்து, விழுங்கி விக்கித்தேன். அந்த ரொட்டித் துண்டு,. எவனோ, எவளோ அடுப்பினருக்கே பொங்கும் வியர்வையைத் துடைத்தபடி, கைவலிக்க தட்டி சுட்டு எடுத்த ரொட்டி. அதற்கும் எனக்கும் என்ன உறவு.. உலகளவிய அன்பு அன்றி வேறேது? 

எழுந்திருக்கும்போது,கால்வலியில் தடுமாறினேன். ஒரு மாதமாக கால் முட்டு வீங்கி படுத்தி எடுக்கிறது. தள்ளாடி நடக்கையில், ஒரு இளைஞன் ஓடி வந்தான். “ஸர்ஜீ, தட்டை என்னிடம் கொடுங்க”

‘வேணாம்ப்பா” மறுத்தேன். “நானே கழுவுகிறேன்”

“ஸர் ஜீ. நாங்க செய்கிறோம். பரவாயில்லை.” தட்டை வாங்கிக்கொண்டு கைபிடித்து , கைகழுவும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். “வழுக்கும், பார்த்து” 

அங்கு ஒரு சர்தார்ஜி இளைஞர் வாரியலால், மற்றொருமுறை சுத்தம் செய்து “இங்க கை அலம்பலாம்” என்பது போல் கைகாட்டினார். 

“எச்சித்தட்டெல்லாம் நான் அலம்ப மாட்டேன். இட் ஈஸ் வெரி டர்ட்டி.உவ்வே” என்ற பிள்ளையிடம், “பரவாயில்லம்மா. தட்டை டேபிள்ளயே வைச்சுட்டு போ. நான் எடுத்துக்கறேன்” என்ற அம்மாக்களின் இந்த காலத்திய அதீத செல்லங்களால் கெட்டுப்போகும் குழந்தைகளுக்கும், இந்த பாரம்பரிய மரபுக்கும் எவ்வளவு வித்தியாசம்? அவரவர் தட்டுகளை அவர்வர் கழுவ வேண்டும், முடிந்தால் பிறருக்கு உதவவேண்டும் என்பதை கர் சேவையில் கண்ட நேரம் அது.

வெளிவரும்போது காணிக்கை கவுண்ட்டரில் ஆள் இல்லை. ”நான் எதாவது காணிக்கை கொடுக்கவேண்டும்.ஆள் வரட்டும்” என்றேன்.  ஒருவர் உள்ளே சொல்ல, அங்கிருந்த ஒரு ஆறடி சர்தார்ஜி “ காணிக்கையை உண்டியல்ல போட்டுட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு வேலையைக் கவனிக்கப் போய்விட்டார். நான் காணிக்கை செலுத்தினேனா, எவ்வளவு ? என்றெல்லாம் பார்க்கவில்லை. 

பேண்ட் பாக்கெட்டில் எவ்வளவு பைசா இருந்ததோ அத்தனையையும் உண்டியலில் கவிழ்த்தேன். அது காணிக்கையல்ல. சாப்பாட்டுக்கு விலையல்ல. யமுனையின் குளிர்ச்சியை முகந்துகொண்டு வருடித் தழுவிய காற்றாக  ஓடிவந்த அன்பிற்கு மாற்றுச் சீர். 

வெளியே வரும்போது மனம் லேசாகியிருந்தது. அடையாளமற்று கரைவதிலும் சில நேரம் சுகம் உண்டு. அனைத்துக்கரைப்பான் நீர் என்று கெமிஸ்ட்ரியில் படித்திருக்கிறோம். அனைத்துக் கரைப்பான் வேறு ஒன்று உண்டு. அது எல்லையற்ற இம்மரபு வழி பொங்கிப் பெருகும் அன்பு.

Thursday, April 07, 2016

அல்ஸைமரும், மூளைப்பயிற்சிகளும்



மனக்கணக்கு, சுடோக்கு, குறுக்குப் புதிர்கள் போன்றவை நினைவு அழிதலான அல்ஸைமர் நோயைத் தடுக்குமா?


சிவனே-ன்னு போயிட்டிருந்த என்னைசூன்னு சொல்ல வைச்ச பாவம் Kala Venkat மற்றும் Geetha M Sudharsanam அவர்களையே சாரும். நான் பண்ணலை ( காமோ கார்ஷீத், மன்யுப கார்ஷீத், நமோ நமஹ என்பார்களே அதுப்போல காமம் செய்தது, மனசு செய்தது.. நான் செய்யலை” )


கணக்கில் புலியாக இருந்த மூதாட்டி, மிக முதிர்வயதில், எப்படி நினைவு தவறினார் என்பதை கலா கூறினார். கீதா அவர்கள் , அவரது அன்னையாருக்கு, சுடோக்கு எப்படி நினைவு குவியத்தைத் தந்தது என்பதாகச் சொன்னார்.


இந்த இரு நிகழ்வுகளும் எல்லைகளாக எடுத்துக்கொண்டால், யதார்த்தம் நடுவே எங்கோ நிற்கிறது. அறிவியல் ஆய்வுகளும் தெளிவாக ஒன்றும் சொல்லிவிடுவதில்லை. கூகிளில் பார்த்தீர்களென்றால், குழப்போ குழப்பு என்று குழப்பியிருப்பது தெரியும்.

சரி, நமக்குத் தெரிந்த ஒருத்தரைக் கேட்கலாமே என்று பார்த்தால் , அவர் அதற்கும் மேலே “ சில நோயாளிகளுக்கு இது ஒத்து வருது. அது அவர்கள் எந்த அளவு , சுய சிந்தனையோடு, ஒரு முயற்சியோடு போட்டுப் பாக்கறாங்கங்கறதை பொறுத்து. ந்யூரான் பாதைகள் புதிதாக 60 வயசுக்கு மேல உருவாகுதுன்னு சொல்றாங்க. செமினார்ல கேட்டேன்” என்று விட்டேத்தியாகப் பதில் சொல்லிவிட்டு, ஒரு மெடிக்கல் ரெப் தந்த ஓசிப் பேனா ஒன்றை பரிசாகக் கொடுத்து அனுப்பிவிட்டார்.

அல்ஸைமர் பரம்பரை பரம்பரையாகவும் வர சாத்தியம். ஆனால் ஒரே முட்டையிலிருந்து வந்த ரெட்டைக் குழந்தைகள் டி.என்.ஏ ஒரு போலவே இருந்தாலும், அவர்கள் பண்புகள் மாறுவது போல, அவர்களுக்கு அல்ஸைமர் வரும் சாத்தியமும், வந்தால் அதன் தீவிரம், தாக்கும் காலம் என்பனவும் மாறியிருக்கும் என்கிறது ஒரு பேப்பர். அதான் எனக்குத் தெரியுமே? என்று தங்கவேலு ஜோக் நினைவு வந்தாலும், “என்ன ம****த்துக்கு எழுதறான்? ” என்ற கெட்டவார்த்தைக் கேள்வியும் எழாமல் இல்லை.

எனவே… ஆங்? என்ன சொல்லிட்டிருந்தேன்?