Saturday, April 15, 2006

தூத்துக்குடி தெய்வங்கள் 3

அக்காலத்தில் எல்லா மாணவர்களைப்போலவே உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது ஒரே குறிக்கோள் எனக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதுதான். மிகவும் முயன்றேன். எனது முயற்சிகள் பலமாகத் தெரிந்த அளவு முடிவுகள் வரவில்லை. 84% மட்டுமே MPC -இல் எடுத்திருந்தேன். நம்பமுடியாத அதிர்ச்சியில் மிகவும் சோர்ந்து போன நாட்கள் அவை.

தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் துறையில் சேர்ந்தேன். கல்லூரிக்குப் போகவே மனமில்லாமல் போய்வந்தேன். எதிர்காலமே இல்லை இனி என முடிவானது. "டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட்,வங்கிப் பரீட்சை எழுது." என அறிவுறுத்தல்களுக்கு சோர்வோடு உடன்பட்டேன்.
வ.உ.சி கல்லூரி நான் சேர்ந்த காலத்தில் அதன் பேர் கெட்டிருந்தது. ஸ்ட்ரைக், கல்வீச்சு, காலவரையற்ற மூடுதல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. கல்லூரியின் பழம்புகழ், ஆசிரியர்களது சிறப்பு கொண்டு மட்டுமே அங்கு அட்மிஷன் வந்தது.

எனக்குப் பேச்சு தெளிவுற்றிருந்தது, ஆங்கிலம் ஓரளவு பேசவும் தெரிந்தது என்றாலும் எஞ்சினீயரிங் கிடைக்கததால் தளர்ந்திருந்ததாலும், பயம் காரணமாகவும் ஆரம்பத்தில் தனித்தே இருந்தேன். 'என்னமோ படிச்சோம், வெளியே போனோம் என்றிருப்போம்' என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.

முதல்நாள் தமிழ் வகுப்பிற்கு டாக்டர்.பிரதாப் சிங் வந்தார். அவர் வந்த இருபது நிமிடங்களில் ஒரு மாணவர் கூட்டம் வகுப்பில் வந்து " காண்டீன்ல வடை இல்லையென்கிறார்கள். கேட்டால் அலட்சியமாகப் பதில்வருது. இதைக்கண்டித்து இன்று ஸ்ட்ட்ரைக்" என அறிவித்துப் போனது. 'பத்து நிமிடத்தில் வகுப்பு கலையவேண்டும்' என்ற எச்சரிக்கையுடன்..

டாக்டர். பிரதாப் சிங் எதைத்தான் படிக்கவில்லை எனத்தெரியவில்லை. தமிழ், ஆங்கிலம் , பொருளாதாரம், வரலாறு இவற்றில் முதுகலை, ஹோமியோபதி , தமிழில் முனைவர் பட்டம் இத்தோடு என்.சி.சி யில் கடற்படை பிரிவின் தலைவர் (naval wing I). அவரது பட்டங்களின் எண்ணிக்கையில் கவரப்பட்டு அவருடன் வகுப்பு கலைந்தபின்னும் பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது என்.சி.சியில் சேரவேண்டுவோர் பேர் கொடுக்கும்படி அறிவிப்பை பியூன் கொண்டுவந்தார். அது பிரதாப் சிங் அவர்களின் யூனிட்-காகவே இருந்தது. பூரி செட்டு தின்னக்கிடைக்கும் என்ற அல்ப ஆசையில் நானும் பெயர் கொடுத்தேன். பி.எஸ்.சி இயற்பியல், கணிதம் படித்தவர்களுக்கு என்.சி.சி C சான்றிதழ் கிடைத்தால் இராணுவத்தில் சேர எளிது என்று கேள்விப்பட்டதால், அங்கயாவது வேலை கிடைக்குமே என்ற நம்பிக்கை வேறு.

முதல்நாள் சீரணிவகுப்பில் பிரதாப்சிங் உரையாற்றினார். நான்குவருடம் முன்பு அவர் பூனாவில் ஒரு மலையேறும் குழுவில் இருந்ததைச் சொன்னார். அசந்துபோனேன். இந்த வயதில் மலையேறுவதா? நானாகவே அவரிடம் சீரணிவகுப்பு முடிந்ததும் சென்று பேச்சுக்கொடுத்தேன்.
"என்ன செய்யலாம் சார்? ஒண்ணுமே பிடிக்கலை. தோத்துட்டேன்-னு தோணுது" நான் கேட்க நினைத்தது வேலை கிடைக்க என்ன படிக்கலாம் என்ன செய்யலாம் என்றுதான். அவர் சொன்னது ஏமாற்றமாக இருந்தது.
" நீ எந்தப் போர்-ல ஈடுபட்டதா நினைச்சு ' தோத்துட்டேன்'ன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுத? "
எனக்கு கோபம் வந்தது. நான் முயற்சிக்கலை என்றா சொல்கிறார்?
" இல்லடே. எல்லாருக்கும் உழைக்கும் விதம் ஒண்ணுகிடையாது. உனக்கு இன்னும் மேலே முயற்சி தேவைப்பட்டிருக்கு. ஏன் இப்படி ஓரே இஞ்சினீயரிங்ல முட்டி மோதுத? உன்னோட பலம் என்னன்னு தெரிஞ்சுக்க. அதுல வளத்துக்க"
"பலம் என்னன்னு தெரிஞ்சாத்தானே சார் வளத்துக்க முடியும்?"
"உன் பலவீனம் தெரியணும்டே அதுக்கு"
நான் பொறுமையிழந்தேன்.
அவர் தொடர்ந்தார் "நீ பயப்படுற விஷயம் என்ன?"
பயப்படுற விஷயம்னா? சற்று யோசித்தேன் " மேடைல பேசப் பயம் உண்டு சார்"
"சரி. ஒழுங்கா கட்டுரை மாதிரி எழுதத்தெரியுமா?"
தயக்கத்தோடு "இல்லை" என்றேன்.
"நீ எதச் செய்யப் பயப்படுறயோ, அதை முதல்ல கண்டுபிடி. அதை தைரியமா செய்யப் பாரு. உன் பயமெல்லாம் தேவையில்லாததுன்னு தெரியும்"
"தோத்துட்டேன்னா?"
"தோத்துப்போனா என்ன? நீ பயந்ததுதானே? அதுனாலதான் தோத்தேன்னு நினைச்சுக்க. விழுந்தா திரும்பி திரும்பி எழுந்திக்கணும். மத்தவங்களுக்காகப் பயப்படாதே.அவனா உன் வாழ்க்கைய வாழப்போறான்?"
"நானும் போராடித்தான் பாக்கிறேன் சார். ஒண்ணும் கிடைக்கமாட்டேங்குது"
"போராடுறேன்னு ரொம்ப ஈஸியாச் சொல்லறே. போராடறதுன்னா என்னன்னு தெரியுமா உனக்கு? தடுப்பு முயற்சிகள் போர் ஆகாது. எப்ப போராடறதுன்னு முடிவு பண்ணிட்டியோ, அதுக்கப்புறம் அது பத்தி மறு பரிசீலனைன்னு நினைக்கவே கூடாது. உன்னோட போரை நீ தான் தீர்மானிக்கணும். நீதான் போராடணும். வெளங்குதா?"
எழுந்து போகுமுன் அவர் ஒரு நிமிடம் யோசித்தார்.
" இந்த மூணு வார்த்தைகளை எப்பவும் ஞாபகம் வச்சுக்க. கடற்படையில் சொல்லுவாங்க. HIT FIRST. HIT HARD. KEEP HITTING TILL HE ( enemy) FALLS-ன்னு. எது கூட போரிடப்போற?-ன்னு தெளிவாக முடிவெடு. அதுக்கப்புறம் நீ தாக்குதல்தான் நடத்தணும். போர் என்பது வந்துவிட்டால் Defensiveஆகப் போகக்கூடாது.போர்க்களத்துல புண்களை நக்குறதற்கும்,அழறதுக்கும் நேரம் கிடையாது."
எழுந்தேன். என்னமோ இந்த வார்த்தைகள் ஆழப்பதிந்தன.
வீட்டுக்கு நேரே வராமல் கடற்கரைக்குப் போனேன். ஈர மணலில் நான் என்ன செய்யப் பயப்படுகிறேன் என்பதை எழுதினேன். அலைகளில் அக்கோடுகள் ஈரமணலால் நிரம்பி அழிவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

தொடரும்

3 comments:

  1. என்னவென்று, எப்படி சொல்ல்வதென்று, தெரியவில்லை!
    ஆனால், ஒரு நல்ல தன்னம்பிக்கை புத்தகம், எதிட்ர்கால இளைஞர்களுக்கு என உருவாகி வருகிறது என்று மட்டும், உள்மனது சொல்கிறது!
    அட்வான்ஸ் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. Anonymous11:01 PM

    Dear Sudhakar

    I dont remember any tacher who was motivational force for me. But the way you narrate inmbibes lot of confidence in the reader. Keep going. It is coming great,

    Regards
    Sa.Thirumalai

    ReplyDelete
  3. This comment was wrongly published in the earlier post.. Sorry friends!
    அன்பின் எஸ்.கே,
    ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. இப்பதிவுத் தொடர் ஆசிரியர்களின் அருமை காட்டமட்டுமே எழுதத்தொடங்கினேன்.எவருக்கேனும் தன்னம்பிக்கையூட்டுவதாக இருந்தால் மகிழ்வேன். புத்தகம் எழுதுமளவிற்கு நான் இன்னும் சாதித்துவிடவில்லை. அந்த ஆசிரியர்களின் வார்த்தைகள் நினைவிலிருப்பதை கூடியமட்டும் அவர்கள் கூறிய முறையிலேயே எழுத முயற்சித்திருக்கிறேன்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    அன்பின் திருமலை,
    பின்னூட்டத்திற்கு நன்றி.
    சில ஆசிரியர்கள் மட்டுமே தெய்வங்களாக விளங்கினர். வகுப்பில் வந்து "வெண்படம் வரைக" என கரும்பலகையில் எழுதிப்போட்டுவிட்டு," ம். செய்யுங்கல" என குமுதம் படித்த வாத்தியார்களும் உண்டு!
    வ.உ.சி கல்லூரியோடு இத்தெய்வங்களின் வருகை நின்றுவிட்டது.
    அன்புடன்
    க.சுதாகர்

    ReplyDelete