Sunday, October 23, 2005

நோபல் - ஒரு இந்தியக் கனவு

நோபல் - ஒரு இந்தியக் கனவு

இயற்பியல் துறையின் நோபல் பரிசு 2005ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதும், ஹிண்டுஸ்தான் டைம்ஸ் " ஒரு இந்தியருக்கு கிடைக்க வேண்டிய பரிசு. ஏமாற்றியிருக்கிறார்கள்" என கொட்டையெழுத்தில் மும்பை பதிப்பில் வெளியிட்டிருந்தது.
இவர்கள் இழுத்திருக்கும் அறிஞர் கலாநிதி E.C.G.சுதர்ஷன் - அமெரிக்காவில் ஆய்வு செய்து வருகிறார். கிளாபர் குவாண்டம் ஒளியியல் பற்றிய கருத்துக்களை ஒரு அறிவியல் பேப்பராக வெளியிட்ட சிலமாதங்களுக்குள்ளாகவே சுதர்ஷனின் பேப்பர் வெளியாயிருந்தது. இருவரின் உழைப்பும் தனித்தனியாக நடந்தவை. கிளாபர் வெளியிட்ட கொள்கைகளில் இருந்த சிக்கல்களையும், தடைகளையும் சுதர்ஷன் பின்னாளில் எடுத்துக்காட்டி, சீர்திருத்தி வெளியிட்டார். அதன்பின் அவர் குவாண்டம் ஒளியியலிருந்து சற்றே விலகி பல ஆய்வுகளில் ஈடுபடத்தொடங்கினார்.
இன்றும் அவரது கொள்கைகள் குவாண்டம் ஒளியியலில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசின் பரிந்துரைக்குழுவின் குவாண்டம் ஒளியியல் பற்றிய அறிக்கையில் சுதர்ஷனின் பங்கு குறித்து வெளியாயிருக்கிறது.

இந்தியாவில் கலாநிதி சுதர்ஷனைப் பற்றி அறிந்தவர்கள் " முன்னரே ஒரு முறை அவருக்கு நோபல் பரிசுக்கான பரிந்துரை செய்யப்பட்டது. அப்போதும் தரவில்லை. இப்போது மிக மிக அருகில் வந்தும் , பரிசு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம் மட்டுமல்ல ஒரு சோகமும் கூட " என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

சுதர்ஷன் அவர்களோ, இது குறித்து ஒன்றும் கருத்துகூற மறுத்துவிட்டு, தனது அறிவியல் தேடல்களில் ஆழ்ந்துவிட்டார் - தான் ஒரு ஆதர்சன அறிவியல் அறிஞர் என நிரூபித்துவிட்டு.

அத்துறையை விட்டு அவர் விலகியிருப்பதால், விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதால் எவரும், நோபல் பரிசு பரிந்துரைக்குழுவிடம் விண்ணப்பிக்கப் போவதில்லையாம்.

நோபல் - ஒரு இந்தியக் கனவாகவே இருந்துவிடுமோ?

அன்புடன்
க.சுதாகர்

2 comments:

  1. Anonymous6:25 AM

    "Nobalparisu"kkaaka naam yeanguvathai vida Namathu Nattil" irunthu Athup pontrathoru Parisinai "ulaga chaathanaiyalarkalukku" vazanguvatarkku muyalavaendum!

    ReplyDelete
  2. ஹமீத்,
    பின்னூட்டத்திற்கு நன்றி. நோபல் நமக்கு இல்லையே என நினைப்பது தவறில்லை என நினைக்கிறேன். இன்னும் நாம் அறிவியல் துறையில் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது. இதுபோன்ற அளவுகோல்கள் நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் காட்டிவிடும். ஒவ்வொருமுறை ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் நாம் புலம்புவதும், ஒவ்வொரு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் நாம் பொருமுவதும் வாடிக்கையாகிவிட்டது.

    இந்த முறை இயற்பியலுக்கான பரிசு விசயத்தில் நடந்தது வேறு. சுதர்ஷனின் பங்கு , குவாண்டம் ஒளியியலில் மகத்தானது. அவருக்குக் கொடுத்திருந்திருக்கலாம். நாமும் மகிழ்ந்திருப்போம்.
    அன்புடன்
    க.சுதாகர்.

    ReplyDelete