Monday, April 03, 2006

வலையில் வக்கிரங்கள்.

சில நாட்களாக எனது மின்மடலில் வெறுப்பு உமிழும் மடல்கள் வருவது அதிகரித்திருக்கிறது. காரணம் பாரதி குறித்த பதிவு. என்ன எழுதுவது என்றெல்லாம் வரம்பு இல்லை போலும். டோ ண்டு அவர்களுக்கு 60ம் திருமண வாழ்த்துச் சொல்வது குற்றம் என ஒன்று... தேவுடா..

எப்படி ஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டோ அதனைப் போலவே அதன் மாற்றுக் கருத்துக்கும் உரிமையுண்டு என்னும் சனநாயகப் போக்கு புதைக்கப்பட்டு தனிமனித வெறுப்புமடல்கள் நிரம்பி வழிவதைப்பார்க்கையில் நிஜமாகவே சந்தேகம்வருகிறது. " நாம் சமூக முதிர்வு பெற்றிருக்கிறோமா? குறைந்த பட்சம் அதனை நோக்கி வளரவாவது செய்கிறோமா?"

வலைப்பதிவுகளில் வரும் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துகள் அக்கருத்துகளைச் சார்ந்து இருப்பது பண்பு என்பது தவிர்க்கப்பட்டு வேண்டுமென்றே கருத்துகளுக்குப்பதிலாக காழ்ப்புணர்வு பரப்பபடுகிறது. பல வகையான பின்னூட்டங்கள் இதற்கு ஆதாரம். இது ஆரோக்கியமான சிந்தனைப் பரிமாற்றத்தை அடியோடு ஒழிப்பதோடு நில்லாமல், மேலும் பிளவுகள் ஏற்படவும், தன் அடிமட்ட சிந்தனை சார்ந்த ஒரு கும்பலை வளர்வதையும் துரிதப்படுத்துகிறது.

வலைப்பதிவுகளை பின்னாளில் பார்த்துவளரும் ஒரு சமுதாயம் இந்த சீர்கேடலில் முழுகித் தன்னைத் தொலைத்துக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. அதனைக்கருதியாவது நம் நண்பர்கள் அவரவர் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும்.

இந்த வெறுப்பு மடல்கள் spamல் இடப்பட்டிருப்பதால் இப்போதைக்கு எனக்கு பிரச்சினையில்லை. பின்னாளில் மற்றொரு மடல் முகவரி/மற்றொரு தொடர் வெறுப்பு மடல்கள்...காலம் இப்படியே வலைக்குள் நகரும் போலும்.

6 comments:

  1. ஆமாங்க சுதாகர்,
    எனக்கும் 'ச்சீ'ன்னு போச்சு. இதையெல்லாம் செய்யற நபர் ஒரு கணினி எக்ஸ்பர்ட்ன்னு
    நினைக்கிறப்ப, படிச்சவங்க இப்படியெல்லாம் செய்யலாமான்னு தோணுதுங்க.

    ReplyDelete
  2. இன்று தமிழ்மணத்தின் முகப்பைத் திறந்தவுடன் வலையில் வக்கிரங்கள் என்றப் பதிவு முதலில் கண்ணில் பட்டவுடனேயே போலி டோண்டுவைப் பற்றித்தான் அது இருக்கும் என ஊகித்தேன். ஊகம் பொய்க்கவில்லை.

    இதன் பின் புலன் அறிய என்னுடைய இந்தப் பதிவை அதன் சுட்டிகள் மற்றும் பின்னூட்டங்களுடன் சேர்த்துப் பாருங்கள். http://dondu.blogspot.com/2005/12/2.html

    உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் இடும்போது போட்டோ வரும், மவுஸ் ஓவரில் கீழே என்னுடைய சரியான ப்ளாக்கர் எண் 4800161 தெரியும். இரண்டும் சேர்ந்து இருந்தால்தான் அது என்னுடையப் பின்னூட்டம். அவ்வாறு இல்லாது என் பெயரில் ஏதேனும் பின்னூட்டம் வந்தால், அது ஆபாசமாக இல்லாமல் இருந்தாலும் அதை தயவு செய்து அனுமதிக்காதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

    பின்னூட்டம் நீண்டு விட்டது. மன்னிக்க வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. நண்பர் சிறுமங்கை சுதாகர்,

    மேற்கண்ட கட்டுரையை நானும் படித்தேன். பாரதியின் எழுத்துக்களில் இருந்துதான் பெரும்பாலான மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

    ஏதாவது தவறோ அல்லது மாற்று கருத்தோ இருந்தால் விவாதிக்கலாம். அதைவிட்டுவிட்டு பாரதியையோ, காந்தியையோ அல்லது பெரியாரையோ விமரிசிக்கவே கூடாது என்பது பாசிசம் ஆகும்.

    இந்த நூற்றாண்டின் முக்கிய கவிகளில் ஒருவர் பாரதியார்.அவரை கடவுளாக்கவேண்டாம்.


    மற்றபடி தனிமடலில் தாக்குதல் நடத்தும் கோழைகளை ஒதுக்குங்கள் சுதாகர்.நாகரீகமாக விவாதிப்போம்.தெளிவடைவோம்.

    ReplyDelete
  4. நன்றி D Dreamer அவர்களே,
    தரமிழந்து எழுதுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது எல்லாருக்கும் பொருந்தும். எந்த சூடான விவாதமும் தரமிழந்து போவதை கலாச்சாரச் சீர்கேடெனவே சொல்லமுடியும். வலையின் தீவிரவாதிகளை நியாயப்படுத்துவதும், உலகளவின் பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதும் ஒன்றேயென நினைக்கிறேன்.

    துளசியக்கா,
    இவர்களில் படித்தவர் படிக்காதவர் என என்ன பாகுபாடு இருக்கிறது சொல்லுங்கள். படித்தவனும் இப்படி தரமிழந்து திரிவதை மனிதரிலும் கீழாகவே எண்ணத்தோன்றுகிறது. படிப்புக்கும் பண்புக்கும் சம்பந்தம் இல்லாத அளவில் நமது கல்வித்திட்டங்களும், சமுதாயமும் இருக்கிறது என்பதே வேதனைக்குரிய நிஜம்.

    டோ ண்டு அவர்களே,
    உங்களுக்கு வாழ்த்து சொல்லியதற்கு வந்தது ஒரு மடல். அதனைப்பார்த்ததுமே புரிந்துகொண்டுவிட்டேன். நீங்கள் சொன்ன உத்திகள் இப்போது எனக்கு மனப்பாடம்! உங்கள் பெயரில் வரும் மடல்களை பிரித்தறிய நான் முன்பே அறிந்துகொண்டுவிட்டேன். அறியாத நண்பர்கள் தெரிந்துகொள்ள நீங்கள் எழுதிய பின்னூட்டத்தை அப்படியே இட்டுள்ளேன்.
    இதற்கு முன்பும் வெறுப்பு மடல்கள் வந்துள்ளன. பாரதி குறித்து எழுதியதற்கு முறையாக எழுதி நியோவின் பின்னூட்டத்தை இட்டுள்ளேன். அதில் விடயத்தோடு கண்ணியம் இருக்கிறது. அவரது மடல் ஆரோக்கியமான விவாதங்களை இட்டுச்செல்லும் என்னும் எனது முன் அனுபவத்தில் பின்னூட்டமளித்துள்ளேன். அவரது மடலுக்கு முன்பும் , பின்பும் வந்த மடல்கள் பல spam இலும் சேர்க்கமுடியாத தாழ்ந்த தரம் கொண்டவை. தனிமனிதத் தாக்குதல் மட்டுமே கொண்டவை. எனது கருத்தைச் சொல்லி விட்டுவிட்டேன்.
    தனிமனிதத்தாக்குதல் எங்கிருந்தாலும் கண்டிக்கப்படவேண்டியவொன்று. மட்டுறுத்தப்படாத அன்றைய மன்ற மையத்திலும் இது குறித்து எழுதினேன். பயனில்லை.
    என்றாவது உருப்படுவோம் என நம்பிக்கையுடன்
    க.சுதாகர்.

    ReplyDelete
  5. அன்பின் தமிழினி முத்து,
    நன்றி. சில விளக்கங்கள் பின்வருமாறு.
    விமர்சிக்கவே கூடாது என்று நான் சொல்லவில்லை. அலட்சியமாக அவனது வாழ்வின் வலியறியாது எழுதாதீர்கள் எனவே சொல்லியிருக்கிறேன். விமர்சிப்பதில் ஒரு நேர்மை வேண்டும். மரியாதையும் வேண்டும். கட்டுரையின் வார்த்தைகளைப் பாருங்கள். ஒரு சரித்திர ஆராய்வு / அலசல் கட்டுரை போல இல்லை இது. அதன் வார்த்தைகளுக்கு மறுப்பு சொன்னேன்.
    யாரையும் கடவுளாக்கும் எண்ணம் இல்லை. கடவுள் என்னும் கருத்துதான் மிகவும் சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது! நானும் எழுதியிருக்கிறேன். விரட்டவும் பட்டிருக்கிறேன். எனது மாற்றுக்கருத்துகளைச் சொன்ன நண்பர்கள் கண்ணியமாகவே வாதிட்டனர். எந்த நிலையிலும் எந்த மனிதரையும் தாழ்த்தியதில்லை.
    எனவே பாரதி போன்றோர்களைக் குறித்து பேசும்போது அவர்களுக்கு உரிய மரியாதையைத்த் தந்து பேசுவோம். ஒரு கட்டுரையின் குறிக்கோள் " பாரதி ஒரு நடிப்புச் சுதேசி என நிருபிப்பது" என்றாலும், அதனைச் சொல்வதிலும் ஒரு பண்பு இருக்கவேண்டும். குறிக்கோள்கள் விவாதிக்கப்படலாம். நிரூபிக்கப் படலாம் முறியடிக்கப்படலாம். அதில் காட்டப்படும் சான்றுகள் முழுமையாக இருக்கவேண்டும். எந்த காலத்தில் எந்த சூழ்நிலையில் யார் சொன்னது/செய்தது என்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
    பாரதியின் அணுகுமுறையயும் , வ.உ.சியின் அணுகுமுறையையும் ஒப்பிடுவது என்பது மிகச் சிக்கலான காரியம். personalities, அவர்களது பின்புலம், அவர்களது பலம் பலவீனம் போன்ற பல metrics எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.
    நியோவின் வாதங்களையும் படியுங்கள் முத்து. பின்னாளில் மேலும் வாதங்கள் வரலாம் தெளிவு பெறலாம். .. நியோ சொன்னது போல மிக ஆழமாகச் சிந்தித்து விவாதிக்கவேண்டிய விடயம் இது. அவரது பொறுப்புணர்வு, பின் வந்த பிற மடல்களில் இல்லை என்பது வேதனை... விடுங்கள்.
    நான் இந்த விவாதத்தில் ஈடுபட விரும்பவில்லை. பாரதி குறித்து இக்கோணத்தில் விவாதிக்க எனக்கு இன்னும் அருகதை இல்லை என்பது என்னைக்குறித்தான எனது அனுமானம். அவ்வளவே. எழுதுபவர்கள் எழுதட்டும். படித்துத் தெளிவு பெறுவோம். வரம்பு என்பதை நமது பண்பாடு விதித்திருக்கிறது. அவரரவர் அறிந்ததற்கேற்ப அதன் எல்லைகளைத் தாண்டாமல் எழுதுவது நன்று. இதுவே எனது வேண்டுகோள்.
    அன்புடன்
    க.சுதாகர்
    திருமங்கை என்பது தமிழில் சரியாயிருக்கும். சிறுமங்கை என்றழைத்ததில் நான் இன்னும் சிறு என்பதைச் சுட்டியதற்கு நன்றி!!! ( just for a joke muthu !!!)

    ReplyDelete
  6. அன்பின் சுதாகர்,

    ஆபாச / கோழை தனமாக பின்னூட்டங்களைப்பற்றி மட்டும் வருத்தபட்டீர்கள் என்றால் அதற்கு என் முழு ஆதரவு உண்டு.

    ஆனால் பாரதியாரையும் விமர்சிக்கிறார்களே என்பது உங்கள் நிலையாக இருந்தால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது என் நிலை.மற்றபடி நியோவின் பின்னூட்டம் அதற்கு உங்களின் பதில் ஆகியவை படித்து என் கருத்தை சொல்கிறேன்.

    நீங்கள் சொல்கிற கான்டெக்ஸ்ட் வைத்து விமர்சிப்பது பெரியாரை விமர்சிப்பவர்கள் முதற்கொண்டு அனைவருக்கும் பொருந்தும். விமர்சிக்க விடுங்கள். படிப்பவர் சொந்த முடிவுக்கு வரட்டும்.

    பாரதியின் பெருமையை ஒரு கட்டுரையால் அழித்துவிட முடியாது.


    sorry that "sirumangai" concept is unintentional...after seeing your comment only i realised the mistake..

    cheers
    muthu

    ReplyDelete