Sunday, May 08, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -2

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -2

கடவுள் துதி

பெரும்பாலான பாடல்கள் மதுரை மாவட்டத்தில் கம்பம்பள்ளத்தாக்குப் பகுதியில் சேகரிக்கப்பட்டவை.சுருளியாறு, மலைப்பகுதி, முல்லை நிலப்பகுதி,வேளாண்மையாகும் மருதநிலப்பகுதியென நிலப்பகுதிக்கான தெய்வங்கள் வணங்கப்பட்டன. கணபதியும்,முருகனாரும், அம்மனும், விஷ்ணுவும் வணங்கப்படுவதில் இப்பாடல்களின் பரவல்களை உணரலாம்.

"முந்திமுந்தி விநாயகரே
முருகா சரஸ்வதியே
கந்தனுக்கு முன்பிறந்த
கணபதியே முன் நடவாய்" ( பக் 32)

"மந்தையிலே மாரியாயி
மலைமேல மாயவரே
இந்திரரே சூரியரே
இப்ப வரவேணுமய்யா" ( பக் 32)
இப்பாடல் "தண்ணீர் தண்ணீர்" படத்தில் ஒரு பாடலில் வந்துள்ளது.

சுருளி மலைவளம் குறித்து இப்பாடல் சுருக்கமாகச் சொல்கிறது.
"இஞ்சி படருமலை
ஏலக்கா காய்க்குமலை
மஞ்சி படருமலை
மகத்தான சுருளிமலை"

பொதுவாக நாட்டுப்புறப்பாடல்கள் எளிமையானவை. நேராக விசயத்திற்கு வந்துவிடுபவை. எளிய பதங்கள், எளிய இசை. ஆயின் மிக மிக நுட்பமான வார்த்தைகளில் அவற்றின் ரத்தினச் சுருக்கமான பொருள்கள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
"எட்டடிக் குச்சுக்குள்ளே- சுப்பைய்யா
எப்படி நானிருப்பேன்
தங்கமயிலேறி-சுப்பைய்யா
வந்திட வேணுமைய்யா"
எட்டடிக் குச்சு என்பது ஒரு மாளிகையல்ல. எண்சாண் உடம்பு எனக் கொள்க. சுப்பைய்யா என்பது சுப்பிரமணிய கடவுளைக் குறிக்கிறது.

"போலீஸ்காரன்மகள்" படத்தில் வரும்
" எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த
என் தலைவன் விட்டுவிட்டுச் சென்றானடி" என்ற பாடலின் உந்துதல் இங்கிருக்கிறது.

"ஆறும் பெரியாறு- சுப்பய்யா
ஆறுமுகனாறு
இந்த ஆறு கடந்து -சுப்பய்யா
எப்படி நான் வருவேன்" (பக் 40)

இதில் ஆறு என்பதற்கு வழி எனப் பொருள்கொண்டு பார்க்கையில், பக்தியின் உச்ச நிலை புலப்படுகிறது.

நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்தும் எளிமையெனவும் நேராகவே பொருள்கொள்ளலாம் எனவும் நாம் இதுகாறும் நினைத்திருந்ததற்கு நல்ல பாடம்! மிகக் கூர்மையான, பெரும்புலமைகொண்ட புலவர்களின் பாடல்களை மட்டுமே இதுவரை இவ்வாறு அலசியிருந்தவர்கள், கொஞ்சம் நாட்டுப்புறப்பாடல்களை அக்கண்ணோட்டத்தில் காண்பின் பல கவிதை விந்தைகள் வெளிவரும்.

2 comments:

  1. Anonymous12:01 PM

    TSC...TAB...TAM???????
    we love only UNICODE......

    ReplyDelete
  2. மன்னிக்கவும் பெயரிலி. தவறினைச் சுட்டியதற்கு நன்றி.
    நான் முரசு அஞ்சல் பயன்படுத்துகிறேன் தஸ்கியில் எழுதி, யூனிகோடில் மாற்றும்போது தஸ்கி மூலத்தையே பதிவு செய்துவிட்டேன் போல.

    ReplyDelete