Tuesday, May 03, 2005

மரவெட்டு விழா

மரவெட்டு விழா
Grow trees,Chop cars என அலறுகிறது ஒரு விளம்பரப் பலகை, மும்பையின் மேற்கத்திய விரைவுச்
சாலையின் ஓரம். காரணமில்லாமல் இல்லை.

மும்பையின் மேற்குவிரைவுச் சாலை புறநகர்ப்பகுதியில் அழகன மரங்களின் வரிசை இருபுறமும்
கொண்டது. சாலையை விரிவுபடுத்தவேண்டி, மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டிச் சாய்க்கிறார்கள்.
மரங்களை மீண்டும் நடும் முயற்சியில் செய்வதாகத் தெரியவில்லை. ஜூன் மாதம் பருவமழை
தொடங்குமுன்னே சாலையின் விரிவாக்கப்பணிகளை முடிக்கவேண்டிய அவசரம் மட்டுமே தெரிகிறது.

இயற்கைச் சூழல் பெரிதும் பாதிக்குமென பல தன்னார்வலக் குழுக்கள் கொடிபிடித்தும் பயனில்லை.
எதிர்ப்பு மிகக் குறைந்து பிசுபிசுத்துப்போனது. இதே போல இரு மழைக்காட்டு மரங்கள் , மும்பை
நகருள், சாலையின் நடுவே இருந்தனவற்றை வெட்ட முயன்றபோது எழுந்த எதிர்ப்பு, பல மரங்கள்
வெட்டப்படும்போது இல்லை. மும்பை நகருள் நடப்பதென்றால் ஒரு வித கவனிப்பும்,
நகர்ப்புறமென்றால் ஒருவித கவனிப்புமாக தன்னார்வலக் குழுக்களும் செயல்படுவது பெரும் அவலம்.
இங்கும் மழைக்காட்டு மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன என்கிறது டைம்ஸ் ஆஃப்
இந்தியா(புகைப்பட ஆதாரங்களுடன்).
சாலை விரிவாக்கம், முன்னேற்றம் வேண்டியதுதான். ஆயின் அது எந்த விலை கொடுக்கப்பட்டு
பெறப்படுகிறது என்பதையும் நோக்கவேண்டும். இந்த மரங்களை சாலையோரம் மீண்டும் நடுவதற்கும்
பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனங்கள் முன்வரலாம்.
மும்பையின் மர அடர்வு குறைந்துகொண்டே வருகிறது எனக் கவலைப்படுகின்றனர் mமும்பை
சுற்றுப்புறசூழல் சங்கத்தினர். அவர்களுடனாவது கலந்து ஆலோசித்து, தக்க அனுபவமும், திறமையும்
வாய்ந்த நிறுவனங்களிடம், மரம் பெயர்த்து மீண்டும் நடுவதின் கான்டிராக்ட் அளித்திருக்கலாம்.
ராவோடு ராவாக மரங்கள் சாய்க்கப்பட்ட மர்மம் புரிபடவில்லை.
முனிசிபாலிடி அலுவலர்கள் என்றேனும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடல் குறைப்பு போன்றவற்றில்
அடிப்படை அறிவு பெறுவரா? என்ற ஆதங்கத்துடன் நான் அனுதினமும் செல்லும்
விரைவுச்சாலையின் இடப்புறம் தெரியும் மரங்களைப்பார்க்கிறேன்.
கடைசி தடவையாக(?)

No comments:

Post a Comment