Thursday, May 12, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -3

பிள்ளைக்கலி - பெண்ணின் மேலான சமூக அழுத்தங்கள்.

பெண்கள் தாய்மையில் முழுமையடைவதாக சமூகம் எண்ணுகிறது. இது தலைமுறை வளர்ச்சிக்காக சமூகத்தின் அக்கறை என்னுமளவில் ஆரோக்கியமான எண்ணம். ஆயின் தாய்மையடையும் வரை , மணமாண பெண் ஒரு நெரிசலில் உட்படுத்தப்படுகிறாள். "மலடி" என்னும் அடைமொழி, அவள் நினைக்கமுடியாத பயங்கரமான சமூக அங்கீகாரம். இதற்காக அவள் பல வழிமுறைகளையும், சம்பிரதாயங்களையும் கைக்கொள்கிறாள். அவ்வாறான திணறல்களை அவள் வெளிப்படுத்தப் பாடல்களை நாடுகிறாள். அவளது மேலான சமூக அழுத்தங்களைப் பாருங்கள்,




"மலடி மலடியென்னே
வையத்தார் ஏசாதே
மலடியென்ற பெயரை
மாற்றிவைக்க வந்த கண்ணோ?

இருசி இருசியென்றே -என் அப்பா!
என்னைத் தேசத்தார் ஏசாதே
இருசியென்ற பெயரை
எடுத்துதைக்க வந்த கண்ணோ?

இத்தகைய அழுத்தங்களை போக்குவதற்காகவே பிள்ளைக்கலி தீர்க்கச்சொல்லி தெய்வங்களை வேண்டுகிறாள். சடங்குகளையும், விரதங்களையும் மேற்கொண்டு,உடல் வருத்தி மனவருத்தத்தைத் தவிர்க்கப் படாதபாடு படுகிறாள். எப்படியென்றால்,

"காணாக் கோவிலுக்கு
கற்பூரத் தீபமிட்டு
தூரத்துக் கோவிலுக்கு
சுடர்விளக்கு நேர்ந்தாளோ?"

"தை ஆறு மாசமா
தரைமொழுகிச் சாதமுண்ண
நிச்சயமா ஆறுமாசம்
நிலமொழுகிச் சாதமுண்ண
மாசமுடிவிலே மனமொடிஞ்சி நிக்கையிலே..."

"வெள்ளி முழுகி வெகுநாளாத் தவசிருந்து
ஊசி முனையிலே உனக்கே தவசிருந்தேன்"

"விளக்கிலிட்ட நெய்போலே நான் வெந்துருகி நிக்கையிலே"
என்னும் சொல்லில் பிள்ளைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் வேதனையடர்ந்த ,எதிர்பார்ப்புச் சுமைகளுடன் நம் நோக்கி நீள்வது நிஜம்.
பிள்ளையில்லாத பெண்களை நமது சமுகம் எவ்வாறு நடத்துகிறது என்பதின் அழுத்தத்தை இந்நாட்டுப்புறப் பெண்கள் தாலாட்டிலேயே சொல்லிவைத்தது, நமது சசமுதாயத்தில் பெண்களைக் குறித்தான கண்ணோட்டம் தெளிவாகிறது.

No comments:

Post a Comment