Sunday, May 01, 2005

HIV-யும் சமூக விழிப்புணர்சியும்

HIV-யும் சமூக விழிப்புணர்சியும்

அண்மையில் கேரளாவில் , எயிட்ஸ்-ஆல் இறந்த மனிதர்களுக்கு சர்ச்சுகளில் இறுதி வழிபாடும் , சாதாரண சவ அடக்க உரிமையும் மறுக்கப்பட்டது என்னும் செய்தி பெரிதாக வந்திருந்த பொழுதும் ,அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

100% படிப்பறிவு பெற்ற கேரளத்திலேயே இந்த நிலையென்றால், சமூக விழிப்புணர்விற்கும், படிப்பறிவிற்கும் உள்ள தொடர்பு ஆரம்பகால நிலையிலேயே இன்னும் உள்ளது என்றே தோன்றுகிறது. சமூகக் கட்டுப்பாடுகளை புரட்சியால் மீற எத்தனித்த கேரளம் இன்று, ஒரு நோயாளிக்கு அவன் மனிதன் என்னும் அடிப்படை உரிமை மறுதலிக்கப்படும்போது எதிர்ப்பு தெரிவிக்காதது மிக்க ஏமாற்றமளிக்கிறது.

எனது இல்லத்திலிருந்து இரு கி.மீ தொலைவில் இருக்கிற மோட்டார் ரிப்பேர் கடையில் வேலை செய்து வந்த மார்வாடி இளைஞனுக்கு HIV positve என தெரியவர, முதலாளி அவனது தந்தையை ராஜஸ்தானிலிருந்து கூப்பிட்டனுப்பினார். மிகவும் பின் தங்கிய கிராம மனிதனார அவர், மும்பையில் வந்ததும் பலர் ' இவனை இங்கேயே எப்படியோ பிழைக்கட்டும் என விட்டுவிட்டுப் போங்கள்" என அறிவுறுத்தினர். மனிதர் குனிந்த தலை நிமிராமல் இருந்துவிட்டு இறுதியில் மகனை அழைத்துப்போனார். அவர்கள் சமூக ஆட்கள் எதிர்த்துக் கேட்டதில் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் " இன்நோய் வருமுன்னேயே இவன் எனது மகன்."
மிகப் பின் தங்கிய கிராமத்தில் அவர்கள் ஒதுக்கிவைக்கப் படும் சூழ்நிலை இருப்பினும், அவரது அரவணைப்பு, எயிட்ஸ் நோயாளிகளை விலக்கிவைக்கும் நமது சமூகத்திற்கு ஒரு பாடம்.

எவ்வளவுதான் விளம்பரம் செய்தாலும் நாம் எயிட்ஸ் என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டதைப் போல ஒதுங்குகிறோம். எத்தனை பேர் எயிட்ஸ் நோய் குறித்த விளம்பரங்களையும் , தகவல்களையும் கவனித்து உள்வாங்குகிறோம்? இது குறித்து பேசினாலே " வேற எதாவது சொல்லுங்க சார்" என்னும் பதில் வருகிறது.
அடிப்படையில் நமக்கு ஒரு எண்ணம்- ஏதோ நாம் படு புனிதமானவர்களென்றும், நமது சமூகத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லையென்றும். எயிட்ஸ் நோயாளியென்பவன் நம்து சமூகத்தின் களங்கமெனவும், இருக்கவே கூடாதென்னும் புனிதப்படுத்தும் முயற்சியில் நமக்குப் பாத்தியதை இருக்கிறதெனவும் ஒரு purging &cleaning attitude எங்கிருந்தோ போலியாக வந்துவிடுகிறது. இது சமுதாயத்தைக் குறித்தும், செக்ஸ் குறித்தும் நாம் கொண்டுள்ள கறுப்புப் படிவங்கள். இதிலிருந்து சற்றே மாறுபட்டுப் பேசினால் முத்திரை குத்தப்படுகின்றனர்
" இத் தன்னார்வலக் குழுக்கள் புகழ் தேடி இவ்வாறு செய்கின்றன" அல்லது " இவனுக்கும் இருக்கிறதோ?" இதெல்லாம் படுசாதாரணமாகக் கேட்கப்படுகின்றன.

பஞ்சாப் போலீஸ் தனது படையில் HIV infected ஆக இருக்கும் காவலாளிகளை அடையாளம் கண்டபின், சற்றும் பெரிதுபடுத்தாமல், அடித்தளத்தில் பெருமளவில் பரிசோதனை செய்யச் உத்தரவிட முயற்சியெடுத்திருக்கிறது. பாராட்டப்படவேண்டிய செயல். அக்காவலாளிகள் விலக்கிவைக்கப் படவில்லை.

HIV மற்றும் AIDS குறித்து தடுப்புக் காப்புகள் அவசியம். எனினும், தாக்கப்பட்டவர்களை எவ்வாறு சமூகத்தில் நடத்தவேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் மும்பையின் பிரபலமான மருத்துவமனைகளில் Hiv infected மனிதர்கள் அடுத்தடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.

No comments:

Post a Comment