Saturday, March 08, 2008

சமூக இடைவெளி ( முடிவு)

சில நாட்கள் முன் மீண்டும் ரோஷனை சந்தித்தேன். சட்டென வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் கேட்டிருந்தது நினைவுக்கு வந்தது.
" அந்தப் பையனை வேலைக்கு எடுத்த்தீர்களா? " என்றேன். சுத்தமாக அந்த நேர்முகத்தேர்வு நிகழ்ச்சியை மறந்தே போயிருந்தான்.
"ஆங்.. ஞாபகமில்லையே" என்று சிரமித்தவன், " அவன் பேர் தெரியுமா?" என்றான்.
"தெரியாது" என்றேன். "எத்தனையோ பேர் வர்றாங்க. யாருன்னு எப்படி கண்டுபிடிக்கறது" என்று அவன் முணுமுணுக்கவே, விட்டுவிட்டேன்.
அவன் விடவில்லை. கோப்புகளை வருவித்து ஒவ்வொரு படிவமாகப் பார்த்தான்.
இறுதியில் "இல்லை" எனத் தலையாட்டினான். "டெக்னிகல் அறிவு போறவில்லை" என அப்பையனது பயோடேட்டாவின் மேல் ஸ்டாப்லெர் செய்யப்பட்டிருந்த படிவத்தில் வேலை மறுப்பு காரணங்களில் டிக் செய்யப்பட்டிருந்தது. ஒரு நிமிடம் மனது சங்கடமாக இருந்ந்தது.
இதையும் கேட்கப் போனால் ,"டெக்னிகல் அறிவு இல்லைன்னு சொன்னா, எப்படிவே எடுக்க முடியும்?" என வாக்குவாதம் வளரும்.

ஆனால், எனக்கு என்னமோ , அவனுக்கு கேள்விகள் புரிந்திருக்காது எனவே பட்டது. ஆங்கில உச்சரிப்பு புரிந்திருக்காது போயிருக்கலாம். அல்லது ஏற்கனவே ரோஷன் "வள்" என விழுந்திருந்ததில் நடுங்கிப் போயிருக்கலாம். எதுவோ, அவன் அங்கு வேலையில் இல்லை...

நடுத்தர நகரங்களில் இருந்து வரும் மாணவர்கள் நேரிடும் தடைகள் பெரும்பாலும் புரியப்படாமலே போகின்றன. அவர்களது சமூக, பொருளாதார சிக்கல்களும், வந்த பாதைகளும் மறைக்கப்பட வேண்டியவையாக நகர வாழ்க்கை அழுத்தும்போது, அவை உணரப்படுவதில்லை.

நான் முன்பு பணியாற்றிய கம்பெனிகளில் பலர் சிறுநகரங்களில் இருந்து வந்து, மும்பையில் "நானும் உங்களில் ஒருவன் பார்" எனக் காட்டுவதில் திரிந்து வாழ்க்கையே போலியாக வாழ்ந்தது இன்னும் நினவிருக்கிறது. அவர்களின் பலரது வாழ்வு வெறுமையானதை இன்றும் பார்க்கிறேன் - வருத்ததோடு.

வேலைக்கு வெளியிடம் வரும் மாணவர்களுக்கு ஆயத்தப் பயிற்சிகள் கொடுக்கப் படாதவரை, அவர்கள் தங்கள் பொறுப்புகள் இன்னவென அறிந்து கொள்வது மட்டுமல்லாது, ஒரு நிஜ கார்டியனிடத்து தங்கள் கவலைகளை கலந்து ஆலோசிக்காதவரை இப் புண்படுதல்களும், அழுத்தங்களும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

Friday, February 29, 2008

சுஜாதா - சில எண்ணங்கள்

சுஜாதாவின் மரணம் குறித்து மரத்தடியில் அறிந்தேன்.
ஒரு மானசீக வழிகாட்டியை தொலைத்திருக்கும் கனத்தில் மனசு இடறியதில் கொஞ்சம் எழுதத் தோன்றியது.

அவரது கதைகளின் மூலமே கொஞ்சம் தரமான கதைகள் பக்கம் கால்வைத்த பலர் உண்டு.குறிப்பாக 70, 80களில் "அட, இப்படியும் போகுமா கதை?" என ஆச்சரியமாக சிறுகதைகள் படித்தவர்களில் நானும் ஒருவன்.
"ராகினி என் வசமாக' என்ற கதையின் இறுதியில் " நான் இறங்கி நடந்து போவதை நானே பார்த்தேன்" என வரும்.. இது கொஞ்சம் குழப்பமாக் இருந்தது முதலில். சிறிது சிறிதாக உணரத் தொடங்கியதும், நூலகத்தில் சுஜாதா கதைகளை காத்துக்கிடந்து படிக்கலானேன். சில புரிந்தது - சில புரியாமல் சீண்டியது. இது அவரது பெரும் வெற்றி எனலாம்.மேலும் பல புத்தகங்களைப் படிக்கவும், ரெஃபரன்ஸ் பார்க்கவும் தூண்டியது.

இதனால் நான் என்னமோ இலக்கியவாதியாக ஆகிவிடவில்லை. "பேயாகத் திரிந்த பங்காரு, ரத்தக்காட்டேரியின் பழி" போன்ற கதைகளையும், ராஜேந்திர குமார்-இன் கதைகளையும் படித்து புளகித்த என்னைப்போல் பலருக்கும் ,' அறிவியல் கதைகள் என ஒன்று உண்டுடே ' என அவர் அறிமுகப் படுத்தியது உண்மை.
தமிழில் அறிவியல் கதைகளின் முன்னோடி எனலாம் அவரை - தைரியமாக.

சில அறிவியல் உண்மைகளை அவர் சரி பார்க்காதது தவறாக இருக்கலாம். லேசர், ஹோலோகிராஃபி என்பதெல்லாம் "கொலையுதிர் காலங்கள் " வரும் வரை பலரும் அறிந்த வார்த்தைகள் இல்லை. அறிவியல் புனைக்கதைகளில் அவர் மேலும் கவனம் செலுத்தி இன்னமும் பெரிய அளவில் கொண்டுவந்திருக்கலாம். தமிழகத்தின் துரதிருஷ்டம்- அவருக்குப் பின் அப்படி எழுத எவரும் வரவைல்லை இன்னும்.

ஜனரஞ்ஜகத்தில் இருந்து இலக்கியவாதியாக பரிமளிக்க முடியாது என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. அவரது அறிவியல் புனைக்கதைகள் மூலம் தனி இடத்தை இன்னும் மேலாகவே அவர் பெற்றிருக்க முடியும்.தமிழகம் அவரது எழுத்தை கணேஷ் வசந்த் , வைணவர் ,ஜனரஞ்சகம் என்பதாகவே சிலாகித்தது. அவரும் நாமும் ஒரு வேலிக்கு இரு புறமும் நின்று ஒருவரை ஒருவர் ரசித்திருக்கிறோம்.

இழப்பு பெரிது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Sunday, January 13, 2008

சமூக இடைவெளி (4)

சமூக இடைவெளி (4)
அடிப்படையில் கிராம, ரெண்டுங்கெட்டான் நகர வளர்ப்பில் ஒரு பிழை.
அடக்கம் என்பது கோழைத்தனம் இல்லை. கர்வத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் ஒரு மெல்லிய இடைவெளி இருக்கிறது. நல்ல பையன் என்றாலே நாம் என்ன சொல்லிக் கேட்டிருக்கிறோம்?. "அடக்கமா இருக்கணும். கேட்டால் மட்டுமே பதில் சொல்லணும். கீழ்ப்படியணும்" இது விபரீதமானது.

தைரியத்தைக் குறைத்த மாணவன் நல்ல பையனாகிறான். பள்ளியிலும், வீட்டிலும் அடக்கமானவன், அதிகம் பேசாதவன் - நல்ல பையன். நல்ல மார்க் வாங்குபவன் -புத்திசாலி. சிந்திப்பதை மழுங்க அடிப்பது படிப்பாகிறதா? நல்ல பொம்மைகளை உண்டாக்குவதைத் தவிர இந்த கல்வித்துறையும், சமூக அழுத்தமும் என்ன சாதித்துவிட்டது?

நகர மாணவர்களின் அழுத்தங்கள் வேறு. தன்னுடன் படிக்கும் மாணவர்களை விட முன்னே நின்றுகாட்ட வேண்டிய கட்டாயத்தில் அவன் பல நுணுக்கங்களை வளர்ந்துக்கொள்கிறான். அவனுக்கு எக்ஸ்போஷர் கிடைக்கிறது. கிராமத்து கல்லூரி மாணவர்களுக்கு வெளியுலகம் காண என்.சி.சி தவிர எந்த எக்ஸ்போஷர் இருக்கிறது? நல்ல அழுத்தத்திலும் உள்வெப்பத்திலும் நகரத்து கரிக்கட்டை கூட வைரமாக ஜொலிக்கிறது. கெடுக்கும் அழுத்தத்திலும் வெப்ப்பத்திலும் கிராமத்து கட்டை கிராபைட்டாக மட்டுமே ஆகிறது. இது கட்டையின் குற்றமா? அழுத்தம் கொடுப்பவனின் குற்றமா?
தொடரும்

சமூக இடைவெளி (3)

சமூக இடைவெளி (3)

இண்டர்வியூ பற்றி மேலும் தொடருமுன் ஒரு சிறுநிகழ்ச்சி குறித்து....

இரு நாட்கள்முன் அகமதாபாத்தில் ஒரு மருந்து நிறுவனத்தில் எங்கள் மென்பொருள்குறித்து பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது.
சென்னையிலிருந்து - தெரியாத எண். " உங்கள் கடனட்டையின் பேரில் பெர்சனல் லோன் தருகிறோம்" பலான வங்கியின் கால்? எரிச்சலோடு எடுத்ஹ்டேன். தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் தொடருமுன் " எனக்கு கடனட்டை வேண்டாம்" என்றேன் அவச்ரமாக.. அவர் சிரித்தார் " இல்லை சார். இது உங்கல் ப்ளாக்க் குறித்தது".. குழம்பினேன். மீண்டும் விளிப்பதாகக் கூறி வைத்தேன். மறந்தும் போனேன்.

சாயங்காலம் மீண்டும் அழைத்தார். நான் மன்னிப்புக் கேட்டதைப் பொருட்படுதாமல் தொடர்ந்தார்" நீங்கள் சொன்ன இடைவெளியின் வலி நானும் அறிவேன்." என்றார். இளநிலை பொறியியல் மெக்க்கானிகல் படித்துவிட்டு நேர்முகத் தேர்வுகளில் திணறி ஒருவழியாக வேலை கிடைத்தட்ச் சொன்னவர் தொடர்ந்தார்." என்னுடன் படித்த பலரும் இன்னமும் சரியான வேலை இல்லாமல் திணறுகிறார்கள். எப்படி தன்னைக் காட்டிக்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நகரங்களில் படித்த மாணவர்கள் தைரியமாகப் பேசுகிறார்கள். இரண்டுக்கெட்டான் நகரங்களிலிருந்து வந்த நாங்கள் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் திண்டாடுகிறோம்" என்றார்.

இது நான் அறிந்ததுதான். என் மனைவி நக்ர்ப்புறக் கல்லூரிகளில் லெக்சரராக இருந்துவிட்டு இப்போது மும்பையின் ஒரு "ஹை-ப்ரொஃபைல்" கல்லூரியில் வேலைபார்க்கிறார்.நகர்ப்புற மாணவர்கள் நல்ல திறமை இருந்தும், தெளிவாக சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் தெரியாமல் இருக்க, கொஞ்சம் தெரிந்தாலே மிக தைரியமாக "விட்டு அடிக்கும்" நகர மாணவர்கள் திறமை குறித்து அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.
" நான் பட்டது என் ஜூனியர்ஸ் படக்கூடாது சார்" என்றார் சென்னை அன்பர். " என் கல்லூரியில் எப்போது முடியுமோ அப்போதெல்லாம் போய் எப்படி நேர்முகத்தேர்வுக்கு ஆயத்தம் செய்யவேண்டும் ,எப்படி உடை அணியவேண்டும், எப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் எனப் பகிர்ந்துகொள்கிறேன். இப்போது நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இதுபோன்ற பயிற்சி முகாங்களை எங்களுக்கு இலவசமாக அளிக்கிறது. அதன் முக்கிய அம்சங்களையும், எனது அனுபவங்கலையும் சேர்த்து அவர்களிடம் சொல்கிறேன்" என்றார். பாராடப்பட வேண்டிய விஷயம். தனது செல்போன் நம்பரைத் தந்தவர், தன் பெயரை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் ( நிறுவனத்திலிருந்து எதேனும் தடை வருமோ?).
தொடரும்

Sunday, January 06, 2008

சமூக இடைவெளி-2

சமூக இடைவெளி-2


1985 என நினைக்கிறேன். தூத்ஹுக்குடியில் இளநிலை இயற்பியல் படித்த காலம். துறைமுகக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு இளைஞர் குழு அமைத்து நாங்கள் தடுமாறி உலகம் கண்ட நாட்கள் அவை.
ஸ்பிக் கம்பெனியிலிருந்து திரு. ஜி.டி.ஷர்மா அவர்களை ஒருமுறை எங்கள் குழுவில் பேச அழைத்திருந்தோம். மெலிதான உடல். சீரான தாடியுடன் அவரது தோற்றம் எங்களை அசர வைத்திருந்தது. சிறிது காலம் முன்பு வினாடி வினா நிகழ்ச்சிகளை அவர் நடத்தியிருந்ததால் அவரைக் குறித்து சிறிது அறிந்திருந்தோம்.
ஜீன்ஸும், டீ ஷர்டும்மாய் ஒரு ஞாயிறு மாலை, துறைமுக பள்ளியில் ஒரு வகுப்பில் "எப்படி நேர்முகத்தேர்வுகளை சந்திப்பது?" என்பது குறித்து அவர் பேசினார். எப்படி உடை அணியவேண்டும், எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது குறித்து அவர் சொன்னது எங்களுக்குப் புதியதாக இருந்தது.

இது நடந்து சில நாட்களில் கல்லூரி அளவிலான "சிறந்த மாணவ/மாணவியர்" தேர்வு ஸ்பிக் ரோடராக்ட் நடத்தியது. நானும் போயிருந்தேன். நேர்முகத் தேர்வு ... எனது முறை. எனக்கு முன் சென்ற பெண் சிரித்தபடி வெளியேறினாள். நான் பதட்டத்துடன் கதவைத் திறந்து நுழைந்தேன்... தட்டாமலே.. "உள்ளே வரலாமா? என்று கேட்காமலே..

ஷர்மா என்ன்னைக் கவனித்தார். அவர் முகம் சுருங்கியது. " வெளியே போய் , கதவைத் தட்டிவிட்டு, "உள்ளே வரலாமா?" எனக்கேட்டு விட்டு, அனுமதித்தால் மட்டும் நுழை.." என்றார். அவமானத்தில் சுண்டிப்போனேன். சுதாரித்தபடி வெளியேறி, மீண்டும் நுழைந்தேன், கதவைத் தட்டி, அனுமதி கேட்டபின்...

என்னை எவரும் இருக்கச் சொல்லுமுன் ஒருவர் எனது கால்களைக் கவனித்தார். " இண்டர்வியூ-ன்னு தெரியுமில்லே? பாத்ரூம் செருப்பு போட்டுட்டு வந்திருக்கே?"
ஷர்மா அவரை உடனே அடக்கினார்." இந்த தேர்வு நடத்துவதின் நோக்கம், இவர்களைக் குற்றம் சொல்வதற்கு இல்லை. சொல்லிக் கொடுப்பதற்கு . முழுமனிதனாக உருவாக்குவதற்கு" என்று கடிந்தவர், புன்னகையுடன் என்னைப்பர்த்தார். "இண்டர்வியூவில் உன் திறமையை மட்டுமில்ல, நீ உன்னை எப்படி மதிக்கிறாய், எப்படிக் உன்னைக் காட்டிக்கொள்கிறாய் என்பதும் முக்கியம். சும்மா அலட்டச் சொல்லலை. எளிமையாக , அதேசமயம் சுத்தமாக உன்னைக் காட்டவேண்டும். புரியுதா?" என்றார். மேற்கொண்டு கேட்ட பல கேள்விகள் நினைவில்லை. தோல்வியுடன் திரும்பியபின் என் நண்பன் குட்டியிடம் எல்லாம் சொன்னேன். கடற்கறை மணலில் கைகளைத் தலைக்கடியில் வைத்து அண்ணாந்து படுத்திருந்த சிறிது நேர அமைதியின் பின் கேட்டேன் " மக்கா, பாத்ரூமுக்கெல்லாம் செருப்பு போட்டு போவாங்களாடே?"
அவனுக்கும் அக்கேள்வி எழுந்திருக்கும்.
எழுந்து நடக்கையில், கடற்கரை மணல் உள் புக செருப்பு உறுத்தியது.
இன்னும் உறுத்துகிறது.

சமூக இடைவெளி -1

சமூக இடைவெளி-1

ஒரு மாதம் முன் டிஜிட்டல் டிவைட் ( Digital Divide)குறித்து என் நண்பர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர். " இதைவிட தீவிரமாக நாம் ஆலோசிக்கவேண்டிய இடைவெளி ஒன்று இருக்கிறது" என்றேன் நடுவில் புகுந்து. "தெளிவாக எனக்கு அதனைப் பெயரிடத் தெரியவில்லை. சமூக இடைவெளி என்பது பொருத்தமாக இருக்கலாம்" என்றேன் ஒரு முன்னுரையாக.

நவம்பர் மாதத்தில் ஒரு சனிக்கிழமை.. அலுவலக வேலைகலை முடித்துக் கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென செல்போன் சிணுங்கியது. நண்பன் ராகேஷ்.
" எப்படி இருக்கிறாய்? நான் அடுத்தவாரம் அமெரிக்கா போகிறேன். இன்று என் ஆபீஸ் வருகிறாயா?பார்த்து நாளாகிறது." அழைப்பைத் தட்டமுடியாமல் அவன் அலுவலகம் விரைந்தேன்.

சிலர் வரவேற்பறையில் அமர்ந்திருக்க, ராகேஷ் கான்ஃபெரன்ஸ் அறையில் இருந்தான். " இன்னும் அரைமணி நேரம் வேலை. ஒரு நேர்முகத்தேர்வு. நீயும் உட்கார். உனது தனிப்பட்ட அனுமானங்கள் எனக்கு உதவும்." நானும் அமர்ந்தேன். இளம்பொறியாளர்களுக்கான தேர்வு. ஒரு வருடம் , 2 வருடம் அனுபவம் கொண்ட இளைஞர்கள்....
ஒரு நபரின் தேர்வு முடிந்ததும், நானும் ராகேஷும் அவ்விளைஞனைக் குறித்து சிறிது பேசிக்கொண்டிருந்த போது, திடீரெனக் கதவு திறத்நது. அடுத்த நபர் நுழைந்தார்... சொல்லாமலே.
ராகேஷ் முகம் கோபத்தில் சிவந்தது. "வில் யூ ப்ளீஸ் கெட் அவுட்?". அவ்விளைஞன் தடுமாறிப்போனான். "சார்" என்றான் புரியாமல். ராகேஷ் இம்முறை கத்தினான்.."ஐ ஸே, கெட் அவுட்"
அவ்விளைஞன் அவமானத்தில் சிறுத்தான். "சாரி" என்றவாறே வெளியேறினான்.
" யார் இவன்?" ராகேஷ் கோபம் தணியவில்லை. " கதவைத் தட்டிவிட்டு நுழையவேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள்..."

நான் அவனது பயோடேட்டாவைக் கவனித்தேன். பெயர் தெரியாத சிற்றூரில் இருக்கும் பொறியியல் கல்லூரி, நாந்தேட் என்னுமிடம் அருகே, (மராத்வாடா பல்கலைக்கழகம்?)
"சரி விடு" என்றேன் ராகேஷிடம். "அவனை அழைத்து தேர்வு நடத்து". " முடியாது" என்றான் ராகேஷ் முறைத்தபடி. "இவனையெல்லாம் வைத்துக்கொண்டு என்னால் குப்பை கொட்ட முடியாது.வேலை பயிற்றிக்கலாம். எதெல்லாம் சொல்லித் தருவதென்று ஒரு அளவு இல்லையா?"
"அவன் அவனது சூழ்நிலையின் கைதி." என்றேன். " இது இம்மாணவர்களுக்கு புது அனுபவம். அவன் வாழும் ஊரில் யார் இதெல்லாம் சொல்லித்தருவர்கள்?"
ராகேஷ் ஒரு கணம் நிதானித்தான்.
"இது நீ படித்து வந்த காலம் இல்லை சுதாகர்" என்றான். அவனுக்கு எனது அனுபவம் தெரியும்..

தொடரும்

Tuesday, November 28, 2006

கைசிகி நாடகம் -டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி

கைசிகி நாடகம் இந்த வருடமும் டிசம்பர் 1ம் தேதி, திருக்குறுங்குடி நம்பி கோவில் வளாகத்தில் நடைபெற இருக்கிறது.
கைசிக ஏகாதசியன்று இரவு முழுதும் நாடகம் நடத்தப்படுவதைக் காண்பது புண்ணியம் என பக்தர்கள் கூறுவது ஒருபுறம் இருப்பினும், அதன் நாடகச் செறிவும், சமுதாயப் பார்வையும் பல அறிஞர்களை ஈர்த்திருக்கிறது.
1900களில் பொலிவுடன் விளங்கிய இந்நாடகப் பாங்கு, கால ஓட்டத்தில் சிதைந்து , அனிதா ரத்னம், பேராசிரியர். செ.இராமானுஜம் போன்றோர்களின் முயற்சியால் மீண்டும் உயிர்பெற்று ,கடந்த சில வருடங்களாக புதுப்பொலிவுடன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 வருடங்களாக புராதன வழக்கு சிதையாமல் , ஓலைச்சுவடிகலில் கிடைத்த பாடல்களைக் கொண்டு,பழைய நடிகர்களை ஊக்குவித்து மீண்டும் கட்டமைத்து, சீர்திருத்தப்பட்டு வந்த இந்நாடகம் இப்போது ஒருவாறு முழுதும் சீர்திருத்தப்பட்டு விட்டது எனலாம்.

வருடாவருடம் கைசிகி காண நாடக வல்லுநர்களும், ரசிகர்களும் அதிகரித்து வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. "கைசிகி காண்பது ஒரு அலாதி அனுபவம் "என்கிறார்கள் கண்டு ரசித்தவர்கள். நாடக வல்லுநர்கள், தேசிய நாடகப் பள்ளி மாணவர்கள் , பன்னாட்டு வல்லுநர்கள் இம்முறை திரளப் போகிறார்கள் -திருக்குறுங்குடியில். கைசிகி காண விழையும் நண்பர்கள் திருநெல்வேலி, சாத்தான்குளம், நாங்குநேரி வழியே திருக்குறுங்குடி செல்லலாம். பேருந்து வசதி நெல்லையில் உண்டு.
கைசிகி குறித்து எனது வலைத்தளத்திலும் முன்பு சிறிய அளவில் எழுதியிருக்கிறேன். ஆர்க்கைவ் -இல் இருக்கும்.


"எங்கனையோ அன்னைமீர்காள் என்னை முனிவது நீர்.
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நாம்கண்டபின்.
சங்கோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றது என் நெஞ்சமே"
என நம்மாழ்வார் பாடிய நம்பியின் வடிவழகை ,கைசிகியோடு உணர்ந்து அனுபவியுங்கள்.
அன்புடன்
க.சுதாகர்.

Sunday, September 17, 2006

ஹீரோ பேனா

ஹீரோ பேனா

" ஏல, ஜான்சன் சட்டைப்பையில பாத்தியால?" கிசு கிசுத்தான் சரவணன். ஒன்பதாம் வகுப்பில் சரவணன் மிக நெருங்கிய தோழன். ரெண்டாம் பெஞ்சில் பெருமிதமாக ஜான்சன் அமர்ந்திருந்தான். அவன் சட்டையை உற்றுப்பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை.
"என்னலா பாக்கச்சொல்லுத?" என்றேன் சரவணனிடம்.
'சட்' என புடதியில் ஒன்று போட்டான்." மூதி. கண்ணாடி போட்டும் கண்ணு தெரியாது உனக்கு. பளபளன்னு மின்னுது பாரு ஒரு பேனா -அவன் சட்டைப்பையிலெ"
அப்போதுதான் கவனித்தேன். ஜான்சனின் வெள்ளைச் சீருடை சட்டைப்பையில் தங்கமென மின்னியது ஒரு பேனாவின் கிளிப்.
"அது ஹீரோ பேனா- டே. நம்ம ஜஸ்டின் சார், ஹெட்மாஸ்டர் கிட்ட மட்டும்தான் இருக்கு. ஜான்சன் அப்பா கப்பல்ல வேலைபாக்கார்லா? அதான் வாங்கிவந்திருக்காரு அவனுக்கு" சரவணனின் குரலில் அந்தப் பேனாவின் மதிப்பும், அது நம்மிடமெல்லாம் இருக்காது என்னும் தாழ்வு மனப்பான்மையும் வழிந்தன.

ஹீரோ பேனாவை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன். ஜான்சன் தன் கையிலேயே வைத்துக்கொண்டு எல்லாரையும் தொட்டுப்பார்க்க அனுமதித்தான். நானும் தொட்டுப்பார்த்தேன்.
"என்னலா இதனோட நிப்பு உள்ளேயே இருக்கு? நம்ம பேனா மாதிரி வெளிய இருந்தாத்தானே எடுத்து கழுவிப்போட முடியும்? என்ற கணேசனை ஜான்சன் ஏளனமாகப் பார்த்தான்.
"மூதி. இதெல்லாம் பெரிய ஆட்களுக்கு உள்ளதுல. நிப்பு, நாக்கட்டை எல்லாம் கழுவ தனி ஆட்களே இருப்பாங்க"
நம்பினோம்.
ஜான்சன் பெரிய ஆளாக அன்று கருதப்பட்டான். மரியதாஸ் சார் கூட " எங்கடே வாங்கின?" என்று எடுத்துப் பார்த்ததும், நான் சத்தியமாக ஜான்சன் பெரிய ஆள்தான் என முடிவே கட்டிவிட்டேன்.

அதன் தங்க நிற மூடியை சட்டையில் தேய்க்கத் தேய்க்க பளபளப்பு ஏறிக்கொண்டே போனது கண்டு ப்ரமித்தேன். அதில் ஜான்சனின் முகம் விகாரமாக வளைந்து தெரிந்தது. " கண்ணாடி கணக்கால்லா தெரியுது?' என்றேன் வாயைப் பொளந்த படி.
"போதும்ல. கொடு" என்றான் ஜான்சன் அலுத்தபடி. பேனாவை என் கண்ணிலிருந்து மறைத்தான் -சட்டைப்பையின் உள்ளே இட்டவாறே.

ஒரு உத்வேகம் எழுந்தது.
வாழ்க்கையில் எப்படியும் ஒருநாள் இந்த ஹீரோ பேனா கொண்டு எழுதவேண்டும்.

பேனா மேலும் எழுதும்.

Saturday, September 16, 2006

எனக்கும் ஒண்ணு வேணும்

வலைப்பதிவுகளுக்கு நான் கணனி முன் இருப்பது எனது ஒன்பது வயது மகனை
ஈர்த்திருக்கிறது. தொண தொணவென நச்சரித்து அவனுக்கும் ஒரு வலைத்தளம்
உருவாக்கிக்கொண்டிருக்கிறான்.
http:\\abhijeetthoughts.blogspot.com

சிறுபிள்ளைகள் தங்களுக்குள் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதற்கு வலைப்பதிவு
நல்ல ஊடகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இது அவனது வலைத்தளம்.
தமிழில் இன்னும் எழுதச் சொல்லிக்கொடுக்கவேண்டும்..

Friday, September 15, 2006

எண்ணித் துணியும் கருமம்...(கல்விக்கூடத்தில் லினக்ஸ்)

அண்மையில் ஒரு மின்மடல் காணும் வாய்ப்புக்கிடைத்தது ( எனக்கு வந்ததில்லை). திறந்த மூல மென்பொருட்களைக் கல்லூரிகளில் பயன்படுத்துவது குறித்த ஒரு புள்ளியியல் ஆய்விக்கான அழைப்பு அது. மாஸ்ட்ட்ரிக்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவின் சி.டாக் (C.DAC) அமைப்பு (இப்போது வேறு பெயர்... நினைவில் இல்லை) நடத்தும் இயக்கத்திற்கான முன் ஏற்பாடுகள் குறித்தானது. மென்பொருள் தயாரிக்கும், பயன்படுத்தும் நிறுவனங்களின் முதுநிலை அதிகாரிகள், முதுநிலைக் கல்லூரி (கணனி, செய்தி தொழில்நுட்பம்)ஆசிரிய/ஆசிரியைகள் என கணனித்துறையில் பாதிக்கப்படும், பாதிப்பை ஏற்படுத்துபவர்களை விளித்து விரிவாகச் செய்யப்பட்ட ஆய்வுக்கேள்விப்பட்டியல் அது.
சில கேள்விகள் ஆய்வில் கலந்துகொள்பவர்களின் இயங்குநிலை, அவர்களது பணி குறித்துக் கேட்கப்பட்டிருந்தன. தொழில்நுட்பரீதியில் அமைந்திருந்த கேள்விகள்
1. தற்போது உபயோகிக்கும் மென்பொருட்கள்
2. அவற்றினைக்குறீத்தான மதிப்பீடு
3. வாய்ப்புக் கிடைத்தால், திறந்த நிலை மென்பொருட்கள் பயன்படுத்துதல் குறித்த மதிப்பீடு.
4. திறந்த மூல மென்பொருட்கள் குறித்தான மதிப்பீடு/ கருத்து
5. மென்பொருட்கள் வாங்குவது குறித்தான முடிவெடுக்கும் தகுதி, சிபாரிசு செய்யும் வலிமை
6. எந்த அளவில் திறந்த மூல மென்பொருள் மற்றும் Proprietary மென்பொருட்கள் பயன்படுத்த திட்டமிடுதல், எந்த விகிதத்தில் இரண்டும் கலந்திருக்க வேண்டும் என்பது குறித்த எண்ணம்

என நீண்டுசென்றது. கவனிக்கவேண்டும். இது வெறும் கருத்துக் கணிப்பல்ல. திறந்த மூல மென்பொருட்கள் பயன்படுத்த தற்போதைய இடர்கள், தடைகள் முதலியனவும் சில கேள்விகளில் வெளிக்கொணர முயற்சித்திருக்கிறார்கள்.
இச்சுட்டியில் மேலும் விவரங்கள் காணலாம்.
http://www.cdac.in/HTmL/press/3q05/prs_rl170.asp

சர்வதேச அமைப்பான flossworld மற்றும் சி.டாக் இன் பணி குறித்து இச்சுட்டிகளில் காணலாம்.
http://www.hoise.com/primeur/05/articles/monthly/AE-PR-09-05-55.html
http://www.flossworld.org/

இதன் பலன் சிறிது வருடங்களில் தெரியலாம். தற்போது திறந்த மூல மென்பொருள் பயன்பாடு வளர்ந்து வருகிறது என்பது உண்மை.. ஆயின் மிகத் திறம்பட வந்திருக்கிறதா என்றால் இல்லை. H.P, IBM சில சர்வர்களை லினக்ஸிற்காக சந்தையில் விற்பது அவர்களது brand image, வளர்ந்து வரும் சந்தையிலும் வலுப்படலாம் என்னும் எண்ணம்தானே தவிர, லினக்ஸை வளர்க்கும் நல்லெண்ணம் எல்லாம் இல்லை. இதில் தவறும் இல்லை.

இந்த ஆய்வின் பின் சில சுவையான தகவல்கள் வெளிப்படலாம். எந்த அளவில் கல்லூரிகளும், தொழிற்பேட்டைகளும் திறந்த மூல மென்பொருட்களுக்காகத் தயாராக இருக்கின்றன என்றும், எத்தனை வருடங்களில் அவை லாபகரமான தொழிலிற்குத் தயாராகும் என்பதும் சிறிது விளங்கும். இதன் மூலம் பாடத்திட்டங்கள் அமைக்கமுடியும். இந்த முயற்சி திருவினையாகும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் - இதில் அரசியல் இல்லை.

கேரள அரசு எடுத்திருக்கும் முடிவிற்கும், இந்த முயற்சிக்கும் உள்ள வித்தியாசம் .....

Sunday, September 03, 2006

மற்றொரு மாநிலம்- மற்றொரு கல்விக்கூட மென்பொருள் அரசியல்

கேரளா கல்வித்துறை மென்பொருளில் கை வைத்தால், காங்கிரஸ் அரசு சும்மாயிருக்குமா? மஹாராஷ்டிரா இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ்ஸின் இச்சுட்டியில் (http://epaper.hindustantimes.com/default.aspx) மும்பை பதிப்பில் மூன்றாம் பக்கம் (metro) பார்க்கவும்.

கல்வித்துறையில் கணனி மயமாக்குவதற்கும், இணையம் மூலம் கல்விக்கும் உள்ள திட்டங்களை செயல்படுத்த, மென்பொருள் வல்லுமையும் , ஆளுமையும் கொண்ட TCS நிறுவனத்தை வெளியேறச் சொல்லிவிட்டு, ஊழலும் ஆளுமைக்குறைவும் கொண்ட ஒரு அரசு சார்ந்த நிறுவனத்திடம் மஹாராஷ்டிர அரசு கொடுத்திருக்கிறது.
இத்தனைக்கும் மஹாராஷ்ட்டிராவின் கணனித் தொழில் மேம்பாட்டிற்காக இத்துறை வல்லுநர்களும்,உயர்நிலை ஆசிரியர்களும் பலமுறை அரசுக்குத் தங்கள் சேவையைத்தர முன்வந்திருக்கின்றனர். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், பல கணனித்துறை வல்லுநர்களும் பல கூட்டங்களிலும் பேட்டிகளிலும் அறிவித்த ஒன்று.

எனக்கு TCS மீது என்ற சார்பும் இல்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எப்படி இருந்தாலும் "நாங்கள் சீரழித்தே தீருவோம்" என கங்கணம் கட்டிக்கொண்டு அரசியல் கட்சிகள் பகிரங்கமாக செயல்படுவதை , இக்கட்சிகளின் தலைமை பீடம் கண்டுகொள்ளுமா? கணனித்துறையில் செல்வாக்குப் பெற்ற அதிபர்களூம், வல்லுநர்களும் பேசவேண்டிய நேரம் இது. வாய் மூடி நிற்பது ஒரு தலைமுறையையே சீரழிக்கும்.

Saturday, September 02, 2006

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ் - செய்திச் சுட்டிகள்

கேரள அரசும் லினக்ஸும் குறித்தான அரசியல் பின்னணி இந்த சுட்டியில் காணவும். Open Source Code குருவான ஸ்டால்மன் கேரள அரசின் ஆலோசகர் என்னுமளவிற்கு சொன்னது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது தூண்டுதல் இதில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறது என்பது தெளிவு. இந்த அளவில் ஒரு பெரும் வல்லுநரை ஆலோசித்தது முறையானதே. ஆனால் , தொழிற்நிறுவனங்கள் , பிற கணனி தொழில்நுட்ப வல்லுநர்களையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
http://in.rediff.com/money/2006/sep/02microsoft.htm

கணனி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஏன் கேரள அரசின் இந்த முடிவில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதற்கு சுவையான காரணம் இச்சுட்டியின் இறுதிப்பத்தியில் காண்க! லினக்ஸ் இலவசம் என்பதால் ஒவ்வொரு கணனி விற்பனையிலும் இவர்களின் லாப சதவீதம் கூடுகிறது. இல்லாவிட்டால் மைக்ரோசாஃப்ட் ஈட்டிக்காரன் மாதிரி தன் பங்கைக் கேட்டு நிற்கும். திருட்டுத்தனமாக pirated மென்பொருள் இட்டுத்தந்தால், சட்டம் சும்மாயிருக்காது...
கேரள அரசின் முடிவில் இந்த ஹார்ட்வேர் விற்பனையாளர்களின் லாபி இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை!
"எலி ஏண்டா அம்மணமா ஓடுது-ன்னு இப்பல்லா புரியுது?" http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=138464

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்(contd)

( போன பதிவில் மணியன் மற்றும் வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ் இட்ட பின்னூட்டத்திற்கான விளக்கம். மிக நீண்டதால் தனிப்பதிவாக இட்டிருக்கிறேன்.)
எனது வாதம் லினக்ஸுக்கு எதிர் அல்ல. லினக்ஸ் பயன்படுத்துவதைப் வரவேற்கிறேன். ஆனால் நடைமுறைப்படுத்த கேரளா எடுத்திருக்கும் அரசியல் போக்குதான் என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
பள்ளியில்"லினக்ஸ் பயன்படுத்துவோம்" என்பதன் பின்புலம் மைக்ரோஸாஃப்ட் மென்பொருளை பயன்படுத்துவது குறித்தான எதிர்ப்பு என்பதுதான். மாநில அளவில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவருமுன் சரியான முறையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டும். எந்த pilot project ம் கேரளா நடத்தி அதன் புள்ளிவிவரத்தைக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை.
நான் லினக்ஸ் ஆதரவாளன். ஆனால் பள்ளிகளில் கொண்டு வருமுன் அதனை சரிவர நடைமுறைப்படுத்த சில கேள்விகளுக்கு பதில் தேவையாயிருக்கிறது. லினக்ஸுக்கு தற்போது கேரளாவில் பயிற்சி infrastructure இருக்கிறதா?, அரசு இயந்திரம் இதனை சரிவர புழக்கத்தில் கொண்டுவர பயிற்சி அளிக்க எத்தனை வல்லுநர்கள் தேவைப்படுவர்? எத்தனை காலம் ஆகும்? இது குறித்த அச்சுதானந்தன் அரசின் விளக்கம் என்ன?
லினக்ஸ் மென்பொருள் பயன்படுத்துவதோடு, பிரபலமான மென்பொருள்கள் குறித்தான exposure பள்ளிகளில் கொடுக்கவேண்டும். மைக்ரோசாஃப்ட் நாம் வெறுத்தாலும் விருப்பப்பட்டலும் சரி, உலகளவில் பெரும் ஆதிக்கம் கொண்டுள்ளது. இதனைப் படிப்பிக்க மறுப்பது வர்த்தக ரீதியில் ஒரு competitive disadvantage நிலையை கேரளாவில் ஏற்படுத்தும்.
லாபி என்பது மைக்ரோசாஃப்ட்டுக்கு மட்டுமல்ல, லினக்ஸூக்கும் உண்டு! லினக்ஸ் ஆதரளவாளர்கள் பாராட்டியதில் நான் ஆச்சரியப்படவில்லை.

IT Parks & பள்ளிக்கல்வி:
IT Parkகள் அந்தந்த பிராந்தியங்களில் இருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புத் தரவேண்டிய தார்மீகப் பொறுப்பில் இருக்கின்றன. ஆனால், IT Park கள் வியாபார ரீதியில் செயல்படவேண்டியவை. இதில் அரசியல் கலப்பது ஆரோக்கியமல்ல. வர்த்தக ரீதியில் செயல்படும் நிறுவனங்கள் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களில் தங்களுக்கு வரவேண்டிய ப்ராஜெக்ட்க்ளின் தேவைகளை ஆராய்ந்து வல்லுநர்களை எடுப்பர். இதில் எத்தனை ப்ரோஜெக்ட்கள் பிரபலமான மென்பொருட்களை ( மைக்ரோசாஃப்ட்/ ஆராகிள்/ ஐ.பி.எம்) சார்ந்து இருக்கின்றன ? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் மட்டும் எத்தனை சதவீதம் என்பதை அச்சுதானந்தன் அரசு கணித்துள்ளதா? எந்த அளவில் இது வருங்கால லினக்ஸ் மட்டும் கற்ற கேரள மாணவ /மாணவியருக்கு வேலை வாய்ப்பிற்கு அனுகூலமாக இருக்கும் - என்பது பற்றி விவாதங்கள் நடைபெற்றனவா? முக்கியமாக , அங்கு முதலீடு செய்ய முன்வரும் தொழில் வல்லுநர்கள், கம்பெனிகள் கலந்து ஆலோசிக்கப்பட்டனரா?

கொச்சி இன்னும் பெங்களூர்/ஹைதராபாத்/ சென்னை போல hot location இல்லை. அதன் வியாபார uniqueness இப்போது என்ன? லினக்ஸ் ப்ராஜெக்ட்கள் அதிகம் வந்திருக்குமானால், பெங்களூர், ஹைதராபாத் எப்பவோ அதில் குதித்திருக்கும்.

லினக்ஸ் பயன்படுத்துவது வளர்ந்துவருகிறது. மறுக்கவில்லை. மேலே குறித்த கேள்விகளுக்கு பதில் அது வளரும் வேகமென்ன, எந்த அளவில் வல்லுநர்களின் தேவை இருக்கும் என்னும் ஆய்வில் இருக்கிறது. இந்த ஆய்வுகள் நடத்தினார்களா/ என்ன முடிவு என்பது வெளிவராத நிலையில் , கேரள அரசின் போக்கினை ஒரு அரசியல் சார்ந்த முடிவாகவே எண்ண வாய்ப்பு இருக்கிறது.
பெப்ஸி/ கோக் பூச்சிக்கொல்லி விவகாரம் அமெரிக்க முதலீட்டைப் பாதிக்கிறது என்பதை நானும் ஒத்துக்கொள்ளவில்லை! ஆனால் இங்கு நிலை வேறு. எனது வாடிக்கையாளர்களுக்கு லினக்ஸ் வேண்டுமானால் நான் அதில் மகிழ்ச்சியாகச் செய்யலாம். அவருக்கு மைக்ரோசாஃப்டின் மென்பொருள் அடிப்படையில் வேண்டுமானால் நான் செய்ய முடியாவிட்டால் வேறொருவன் செய்துபோவான். எது தேவையென நான் முடிவு செய்யவேண்டும். அரசு என் கையைக் கட்டிப்போட உரிமையில்லை.

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரளப் பள்ளிகளில் லினக்ஸ்

கேரள மார்க்சிஸ அரசு, பள்ளிகளில் மைக்ரோஸாஃப்ட் மென்பொருள்களை அகற்றி இலவச லினக்ஸ் மென்பொருளை உபயோகிக்கும் படி ஆணையிட்டிருக்கிறது.

ஓப்பன் சோர்ஸ்கோட் ( open sourcecode software) லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது வரவேற்கப்படவேண்டியதுதான்.. ஆனால் இதன் அரசியல் பின்னணிதான் உதைக்கிறது.

மைக்ரோசாஃப் மென்பொருள்களை அரசு உபயோகிப்பதை தான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே கடுமையாக எதிர்த்தவர் அச்சுதானந்தன். இப்போது லினக்ஸ் வேண்டுமெனச் சொல்லுவது மைக்ரோசாஃப்டை துரத்தத்தானே என்பது "கடைஞ்செடுத்த அரசியல். என்னல கேணத்தனமா கேக்க?" என ஐந்து வயது பயல் கூடக் கேட்டுவிடுவான். எதில்தான் அரசியல் கொண்டு விளையாடுவது என்பது இல்லை. ஏற்கெனவே கேரளா மென்பொருள் உற்பத்தியில் அப்படியொன்றும் பேர் எடுத்துவிடவில்லை. இப்போதுதான் கொஞ்சமாக கொச்சியில் காக்கநாடு பகுதியில் I.T Park வர ஆரம்பித்திருக்கிறது.

முதலில் கோக், பெப்சி, இப்போது மைக்ரோசாஃப்ட் . சும்மாவே வெத்து வாயை மெல்லும் கேரள இடது சாரி அரசுக்கு பொரி கிடைச்சது போல... "இந்தியாவின் லினக்ஸ் மென்பொருள் திறம் கொண்ட மையமாக கேரளாவை உருவாக்குவதே என் லட்சியம்" என்று அச்சுதானந்தன் திருவாய் மலர்ந்தருளியிருப்பது, இந்திய அரசியல்வாதிகளின் தீர்க்கதரிசனத்தைக் காட்டுகிறது..:)

லினக்ஸ் வளர்ந்து வருவது உண்மை. ஆனால் பொருளாதார ரீதியில் ஒரு அரசு IT park வரும்படி பற்றி சற்று யோசிக்கவேண்டும். இந்த டெக்னாலாஜி சண்டையெல்லாம் வல்லுநர்களுக்கு விட்டுவிட்டு அரசியல் வாதிகள் திறப்பு விழாவில் ஒரு குத்துவிளக்கு ஏற்றி, மாலை வாங்கிக்கொண்டு அம்பாசிடர் காரில் கிளம்பிப் போய்க்கொண்டே இருக்கவேண்டும். அதுதான் எல்லோருக்கும் நல்லது. டெக்னாலஜி பத்தி அரசியல்வாதிகள் அதிகம் பேசுவது ஆபத்து..


சேட்டம்மாரே.. ஜமாயுங்கள்.

Wednesday, August 30, 2006

இன்றைக்கு மட்டும் வாழ்வோம்(concluded)

விற்பனைப்பகுதியில் பணிசெய்வதால் , "போடா" எனக் கஸ்(ஷ்)டமர்கள் கழுத்தைப்பிடித்துத் தள்ளினாலும், உறுதி குலையாமல் இருக்கும் பக்குவம் எனக்கு வந்திருந்தது. எனவே இதில் நான் பின்னடையவில்லை.
பத்து நிமிடம் கழிந்து மீண்டும் தொடர்புகொண்டேன்.
" உன்னோடு ஒரு நிமிடம் நான் பேசலாமா? " என்றேன்.
மவுனம். " இதோ பார். எனக்கும் தலைக்கு மேல் வேலையிருக்கிறது. வேலையத்துப் போய் உனக்கு போன் செய்யவில்லை. உன்னோடு பேசும் நேரத்தில் எனது வாடிக்கையாளர்களிடம் பேசினால் பணம் குவியும். இருந்தும் ஏன் உனக்குப் போன் செய்கிறேன் தெரியுமா?" எனது குரலில் இருந்த அழுத்தம் அவனைச் சிறிது அயர்த்தியிருக்கவேண்டும்.
" உன்னைப் பற்றி உன் காதலி கவலைப்படுகிறாள். உன் நண்பன் கவலைப்படுகிறான். முன்னேப்பின்னே காணாத பலரும் உன் பேரில் இன்று காலையிலிருந்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அதிர்ஷ்டக்காரன் டா நீ"
" என்ன அதிர்ஷ்டம் எனக்கு? எல்லாம் போயாச்சு"
" என்ன போச்சு உனக்கு? "
" உனக்கு என்ன தெரியும் என்னைப் பற்றி. கெட் லாஸ்ட்" கத்தினான்.
" என்ன தெரியணும்? காலேஜ் படிக்கிற பையன் என்ன போச்சுன்னு இப்படி கத்துகிறாய் எனப் புரியலை" என்றவன் தொடர்ந்தேன்.." உனக்கு நான் எதாவது உதவி செய்ய விரும்புகிறேன். இது நானாக தேர்ந்து எடுத்துக்கொண்ட விருப்பம். புரிகிறதா?. "
அவன் சட்டென விசிப்பது கேட்டது. " நான் ஒரு தோல்வி. எல்லாம் நஷ்டப்பட்டுவிட்டேன். வாழ்க்கையில் இனி ஒன்றுமில்லை"
" நீ படு புத்திசாலி என உன் நண்பன் சொன்னான். மராத்தி கவிதைகள் எழுதுவியாமே? எனக்கு கவிதைகள் என்றால் பிடிக்கும்" என்றேன்.
" கவிதைகளை உடைப்பில் போடு. என்ன ப்ரயோஜனம். வேலை கிடைக்குமா?"
" கவிதை எழுதினால் வேலை கிடைக்கும் என யாராவது சொன்னார்களா? நீ கவிதை எழுதுவது உனது விருப்பம். உனது தேர்வு இல்லையா?
"ஆம் . அது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான்.
பலதும் பேசினோம். என்ன பேசினாலும் அடித்தளத்தில் ஒரு நம்பிக்கையின்மை, சோர்வு இருப்பதை உணர முடிந்தது. சிறுவயதில் கிட்டிய சிறு சிறு ஏமாற்றங்கள், தவறான அனுமானங்கள் அழுத்திக்கிடப்பதை உணர்ந்தேன்.
" பெற்றோர் உன்மீது நிறைய அன்பு வைத்திருக்கிறார்கள்" என்றபோது சிரித்தான்.
" அவர்கள் வேண்டாமென்றுதானே , சோலாப்பூர் விட்டு மும்பைக் காலேஜில் படிக்கிறேன். அங்கேயே கிடைச்சது. இவங்க சங்காத்தமே வேணாம்"
அடிப்படையான காரணம் புரிந்தது. பெற்றோர் அடித்தது தன்னை தண்டிக்க அல்ல, திருத்தவே என்பது புரியாத வயதில் வாங்கிய ரணங்கள் இறுகி இன்று வெடிக்கிறது.
என்னென்னமோ சொல்லிப் பார்த்தேன் . அவன் தன் எண்ணச் சுழற்றலிலிருந்து மீள்வதாகத் தெரியவில்லை. எனக்கு அலுவலகத்தில் பணி கூடவே, மதியம் பேசுவதாக இருவரும் உடன்பட்ட பின், போனை வைத்தேன்.

ரீடர்ஸ் டைஜஸ்ட் அன்பளிப்பாக அனுப்பியிருந்த ஒரு சிறு புத்தகம் என் அலுவலகப் பையில் தட்டுப்பட்டது. வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். மனம் லயிக்கவில்லை. மதியம் இவனுக்கு என்ன சொல்லுவது?
மதியம் சொன்னபடியே மீண்டும் தொடர்பு கொண்டேன். நிறையப் படித்திருந்தான்.
வாழ்வு இன்றுமட்டும் வாழ்ந்து பார்க்கலாம் என டேல் கார்னீஜ் சொன்னதைப் படித்ததாகவும் சொன்னான். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என அடித்து வாதிட்டான்.
லியோ பஸ்காலியா (Leo Buscaglia) எழுதிய Personhood புத்தகம் பற்றி அவன் சொன்னதும், சட்டென எனக்கு ஒரு வாக்கு நினைவுக்கு வந்தது.. காலையில் புரட்டிக்கொண்டிருந்த personal excellence என்னும் ரீடர்ஸ் டைஜஸ்ட் அனுப்பிய இலவசப் புத்தகத்தில் அவரது வார்த்தைகள்...
" நீ கவிதை ரசிப்பாயல்லவா? ஒரு நல்ல சொற்றொடர் சொல்கிறேன். எப்படியிருக்கிறது எனச் சொல்"என்றவாறே அப்புத்தகத்தில் இருந்து வாசித்தேன்.
" வாழ்வு என்பதும் , அதைச் சோதனை செய்துநோக்க வாழ்வு நேரம் என்பதும் நம்மிடம் இருக்கையில், நமக்கு வெற்றி கிடைக்க சாத்தியக்கூறுகள் அதிகம்"
"Armed with life on our side and a lifetime to experiment, the odds are in our favor"
" Good one" என்றான்.
" வாழ்க்கை வாழ நேரம் இருக்கையில் அதனை திருப்பிக்கொடுத்துவிட்டு மைதானத்தை விட்டு ஓடுவது கவிதையா?" என்றேன்.
மீண்டும் சில நிமிடங்கள் பேசியதும், " என் பெற்றோர் வந்து பேசும்வரை எதுவும் விபரீதமாகச் செய்யமாட்டேன்" என அவனிடம் உறுதிவாங்கியபின் போனை வைத்தேன்.
பெங்களூர் , பின் மும்பையென அலுவலக அழுத்தத்தில் இதனை மறந்தே போனேன்.
சில நாட்கள் முன்பு எனது மொபைல் போனில் தெரியாத நம்பர் மீண்டும்.
" நான் தான்" என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். " இப்போது சோலாப்பூரில் இருக்கிறேன். பெற்றோரோடு. மகிழ்ச்சியாக என்றெல்லாம் சொல்லமாட்டேன். " வறட்டு கவுரவம்.. தலைகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை.
" அப்பாவுடன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன். படிப்பை அடுத்தவருடம் தொடரலாம் என இருக்கிறேன்.." எனப் பலதும் சொல்லிவந்தவன் தயங்கினான்.
" சார்.." என்றான் மரியாதையோடு " இப்போது வாழ்வும், அதற்கான நேரமும் என்னிடம் இருக்கின்றன. அனைவருக்கும் என் நன்றி" சட்டென போனை வைத்துவிட்டான்.
புன்னகையுடன் நான் மொபைலைப் பார்த்தேன். அவன் நம்பர் பதிவாயிருந்தது. வேண்டாம் . இதைத் தொடர்ந்து பழசெல்லாம் நினைவு படுத்தவேண்டாம். அவனுக்கு அவனது வாழ்வும் , அதனை அனுபவிக்கும் நேரமும் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அவன் ஜெயிக்கட்டும்.

இன்றைக்கு மட்டும் வாழ்வோம் 1

அன்று மும்பையில் வெயில் கடுமையாக இருந்தது. அலுவலகத்தை அடைந்ததும் உள்ளேயும் வெப்பம் கடுமையாக...
"நாளைக்கே பெங்களூர் வர்றேன்"என வாடிக்கையாளர் ஒருவருக்கு சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது. தெரியாத எண்..
மீண்டும் பத்து நிமிடத்தில் அதே நம்பர். பதட்டத்துடன் அழைத்தவரை நினைவுபடுத்திக்கொள்ள ஒரு நிமிடம் ஆனது. ஒருமுறை ரயிலில் பிறருக்கு உதவுவது குறித்துப் பக்கத்தில் இருந்தவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அறிமுகமானவர். பல தொழில்முறை வல்லுநர்களின் , முறைசாராக் குழுமம் ஒன்றின் உறுப்பினர். மும்பையில் வைர வியாபரத்தில் ஈடுபட்டிருக்கும் பரம்பரை வியாபரக் குடும்பத்தினைச் சேர்ந்தவர்.
"இன்று ஒரு கல்லூரி மாணவனுக்கு உதவி தேவையெனத் தகவல் வந்தது. பண உதவியில்லை. ஊக்கப்படுத்தி, தெளிவாகச் சிந்திக்க வைக்கக் கோரி அவனது நண்பன் அழைத்திருந்தான்.கொஞ்சம் உதவ முடியுமா?"
நான் திகைத்தேன் " நான் என்ன செய்யமுடியும்? இதற்கென்றே படித்த மனவியல் வல்லுநர்கள் யாரையாவது அணுகுவோம். அதுதான் நல்லது"
தயங்கினார். "அதற்கு நேரமில்லை. நாம் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இவன் எதாவது ஏடாகூடமாகச் செய்துவிடுவான்".
"நான் எனது நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். கூடிய விரைவில் மனநல வல்லுநர்கள் யாராவது கிடைத்தால் அவர்களை ஈடுபடுத்துவோம். அதுவரை கொஞ்சம் தாக்குப்பிடியுங்கள்" என்றார்.
" சரி . அவன் நம்பர் கொடுங்கள்.பேசிப்பார்க்கிறேன்" நாளை பெங்களூர் போகவேண்டும் என்ற கவலை வேறு.
கொடுத்தார். "நேரில் சந்திக்க முயலவேண்டாம். பையன் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறான். யாரையும் பார்க்கத் தயாராயில்லை. அவனது நண்பனின் வீட்டில் இருக்கிறான்.பெற்றோருக்குத் தகவல் சொல்லியிருக்கிறார்கள். சோலாப்பூரிலிருந்து அவர்கள் நாளை வந்துவிடுவார்கள்"
தான் அவனிடம் பேசியதையும் , எதற்கும் அவன் உடன்பட மறுப்பதையும் சொன்னார்.
" போன தேர்வு முடிவுகளிலும் அவன் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான். மனமுடைந்து போய்விட்டான். தன் காதலியிடம் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பயமுறுத்தியிருக்கிறான்.அப்பெண் பயந்துபோய் அவனது நண்பனிடம் சொல்ல, அமுக்கமாக நண்பன் வீட்டில் கொண்டுவந்துவிட்டனர். அங்குதான் நேற்று இரவிலிருந்து இருக்கிறான்." இத்தனையும் போனிலேயே சுருக்கமாகச் சொல்லி விட்டு, நண்பர் பிற நண்பர்களுக்கு போன் போட முனைந்துவிட்டார்.

எனக்கு இது புதிது. என்னமோ எனது வாழ்க்கையில் ஆசிரியர்கள் ஊக்கம் கொடுத்ததைச் சொல்லப்போக, மனிதர் நான் அவ்வாறு இருக்கலாம் என தவறாக முடிவுக்கு வந்துவிட்டாரோ?
தயக்கத்துடனே போன் செய்தேன். அவனது நண்பன் எடுத்தான் ( அவர்களது பெயர், முகவரி இடமெல்லாம் மறைத்திருக்கிறேன்) . எனது போன் என்றதும் அவனிடம் கொடுத்தான்.
" ஹலோ, நான் உனது நண்பன்" என்றேன்.
" எனக்கு இப்படி யாரும் நண்பன் கிடையாது" பட்டென வந்தது பதில். அத்தோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் வரும்.

Saturday, August 26, 2006

மொழியும் நகரவாழ்வும்

பெங்களூர்(ரு?) ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் மாறியிருக்கிறது. பாலங்கள் கட்டும்போது சாலை நெரிசல் என்றார்கள் முதலில். இப்போது பாலங்களடியில் சாலை நெரிசல். மாட்டிக்கொண்டு முழி பிதுங்கும்போது ,பிசினஸ் தவிர்த்து வேறெதாவது பேசுவமே என அருகிலிருந்த நண்பனிடம் பேச்சுக்கொடுத்தேன்.
"கன்னடியர்களுக்கு ஏன் தமிழர்களென்றால் இப்படி எரிச்சல்?" அவனைக் கிளப்பிவிடுவதற்காகக் கேட்ட கேள்வி இது.
"தமிழர்களை விடுங்கள். இந்திக்காரர்கள் மேல்தான் இப்போ கோபமெல்லாம்" என்றார் நண்பர். 100% கன்னடியர். பெங்களூர் வாசி - பிறந்ததுமுதல்.
எனக்குப் புரியவில்லை. அவர்களும் திருவள்ளுவர் சிலை மாதிரி வால்மீகி , வியாசர் என விதான்சௌதா முன்னே சிலை வைக்க வந்தார்களோ?
"கன்னடமொழியினை அவர்கள் கிண்டல் செய்து அவமதிப்பது பெரும் கோபத்தைக் கிளறுகிறது. ஒருத்தன் கூட கன்னட மொழி பேச முயற்சிப்பது கூடக் கிடையாது. தமிழர்கள் சரளமாகக் கன்னடம் பேசுவதும், நாங்கள் தமிழ் பேசுவதும் இங்கு சகஜம்"
ஆக, மொழிக்கு மரியாதைதான் இங்கே பிரச்சனை.. கேட்டேன்.
" அவர்களுக்கு கன்னடத்தின் அருமை புரிவதில்லை. எட்டு ஞானபீட விருதுகள் பெற்ற இலக்கியம் எங்களது. கன்னட இலக்கியம் புராண கால, நவீன கால இலக்கியம் இரண்டிலும் சிறந்தது". ஞானபீடம் என்றால் அரசியல் உண்டு இல்லையோ? அதுக்கும் இந்திக்கார வெறுப்புக்கும் என்ன தொடர்பு?
"யக்ஷகானம் புரிவதில்லை என்பது வேறு, 'அது என்னடா, தலைல இம்மாம்பெரிய கொண்டை வைச்சு ராத்திரி பூரா ஆடறான்?' என கிண்டலடிப்பது வேறு இல்லையா?" என்றான் நண்பன். கொதித்துப் போயிருந்தான்.
"பெங்களூரில் யக்ஷகானம் எங்க நடக்கிறது? எனக்குப் பார்க்கணும் என்று ரொம்பநாளா ஆசை" உண்மையைச் சொன்னேன். மும்பையில் கர்நாடக சபாவின் ஆதரவில் எப்பவாவது நடக்கும். எங்கே, எப்போ எனத் தெரிவதற்குள் முடிந்தும் போஇவிடும்.
நண்பன் தடுமாறினான். "நல்ல யக்ஷ கானம் பார்க்கணும் என்றால் மங்களூர் போகணும். அங்குதான் எல்லாம் காக்கப்படுகிறது. பெங்களூர் ஒரு பம்மாத்து. பிட்ஸாவும், பீரும், மினிஸ்கர்ட்டும் தான் இங்கே"
"இந்த விஷயத்தில் சென்னை பரவாயிலை" தொடர்ந்தான்.
"இசைக்கட்சேரி சீசன் என ஒன்று இருக்கு. இந்த அளவுக்கு பெங்களூர் மாதிரி தறிகெட்டுப் போகலை"
"அது உன் அனுமானம் " என்றேன்.
"தமிழ் கலாச்சாரம் என்மமோ பூம்புகார் கடையிலும், போத்தி பட்டுச் சேலையிலும் என இப்போதெல்லாம் வெள்ளைக்காரன் கூட நினைப்பதில்லை"
"தமிழ் இலக்கியம் குறித்து சராசரி கன்னடியருக்கு என்ன தெரியும் ? " என்றேன்.
"ம்... திருவள்ளுவர், பாரதி அப்புறம்..." யோசித்தான்.
" தமிழ் நாடகம் பற்றி ஏதாவது இங்கு பேச்சு உண்டா?"
" இருக்கலாம். தெரியாது" என ஒப்புக்கொண்டான்.
" கே.வி சுப்பண்ணா தெரிந்த தமிழர்களும் இருக்கிறார்கள். " என நான் சொன்னபோது வியந்து போனான்.
" சுப்பண்ணா மரணம் குறித்து எத்தனை கன்னட வலைப்பூக்கள் எழுதின தெரியுமா? இருபது கூடத் தேறாது" என்றேன். சிறிது மௌனம்..
"இப்போதைய கன்னடிய குடும்பங்கள் , குறிப்பாக பெங்களூரில் இருப்பவர்கள் குழந்தைகளுக்குக் கன்னடம் சொல்லிக்கொடுப்பதில்லை. பெங்களூரில், பெரும்பாலான கன்னட குழந்தைகளுக்கு கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாது."என்றான்
"கன்னடியர்களே இன்னும் மரியாதை கொடுக்கவில்லை என நீங்கள் சொல்லுகிறீர்கள். இந்திக்காரன் கன்னடம் குறித்துத் தெரிந்திருக்கவேண்டும் என நினைப்பது விடுத்து, கன்னடத்தை கன்னடியர்கள் அறிந்திருக்கச் செய்வது முதல் வேலை இல்லையா? என்றேன்.
சிறிது யோசித்தபின் கேட்டான்" தமிழின் நிலை எப்படி?"
நான் பதில் சொல்லாமல் வெளியே வெறித்தேன்.
பெங்களூர் மீண்டும் ஒரு மாலை மழைக்குத் தயாராகி இருந்தது.
முழுதும் இருட்டுமுன் போய்ச்சேரவேண்டும்.

Friday, August 25, 2006

"பயங்கர"ப் பயணங்கள்

ஆம்ஸ்டர்டாம் விமானநிலயத்தில் பிடித்து வைக்கப்பட்டிருந்த "பயங்கரவாதிகள்"ஐ அப்பாவிப் பயணிகள் தான் என நெதர்லாந்து அடையாளம் காண இரண்டு நாட்களாயிருக்கிறது.. என்னத்தைச் சொல்ல?
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"என தாடி வைத்து, ஆசிய நிறத்தில், நீள அங்கி அணிந்திருக்கும் எவருமே தீவிரவாதி என நினைக்கும் மேலை நாடுகள் கொஞ்சம் புத்தி தெளியவேண்டும். யாராச்சும் அவர்களுக்கு வேப்பிலை அடித்தால் நல்லது. இது சமூக அளவில் வெறுப்பையே ஏற்படுத்தும் என்பதை "பாதுகாப்பு கருதி" யாவது மேல்நாடுகள் உணர்வது அவசியம்.

சமீபத்தில் ஆம்ஸ்டர்டாமிலும் பாரீஸ் விமானதளத்திலும் ஆசியர்களை "ஒரு மாதிரியாக"ப் பார்ப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். துருக்கிக்கு மேல் பறந்துகொண்டிருந்த எங்களது ஏர்பிரான்ஸ் விமானம் எஞ்சின் கோளாறு காரணமாக அவசரமாக பாரீஸ் திரும்பியது தொடர்ந்து மறுநாள் மீண்டும் மும்பை வந்து இறங்கியது வரை விமானத்தில் இருந்தவர்கள் பட்ட இடர்கள் .... ஒரு பதிவாகவே போடலாம் என இருக்கிக்றேன். இதே விமானம் நியூ யார்க் அல்லது சிகாகோ செல்வதாக இருந்திருந்தால் நிலையே வேறு.

இந்த சந்தேகப் போக்கு கண்டிக்கப்படவேண்டியதுதான் என்றாலும் சில குறைகளை நாமும் திருத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பொதுவாகவே அயல்நாட்டுப் பயணத்தில் கண்டிருக்கிறேன்.. இந்தியர்கள் ஒழுங்கு கடைப் பிடிப்பதில்லை.
"இருக்கைப் பட்டை அணியுங்கள்" என்றால் "தெரியும்வே" என்னும் அலட்சியம். "நான் அடிக்கடிப் பறப்பவனாக்கும். எனக்கு இதெல்லாம் சாதாரணம்" என்பதுபோல் காட்டிக்கொள்ளும் அல்பத்தனம்.
"விமானம் நிற்குமுன் மொபைல் போன் உபயோகிக்காதே" என்றால் அப்போதுதான் " அலோ" எனக் கத்தி டெல்லி மாமா, சண்டிகார் சாச்சா-வெல்லாரையும் அழைப்பார்கள். அதுதான் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கப் போகிறோமே, அதுக்குள்ள என்ன ஆயிரம் போன்கால் ? ஒரு மர மண்டைக்கும் இது புரியாது.

ஏற்கெனவே ஆயிரம் பாதுகாப்பு கெடுபிடிகள். அது மீறி இப்ப்படி நடந்துகொள்வது எந்த முறையில் நியாயப்படுத்த முடியும்?
அயல்நாடு போகும் விமானங்களில் "குடி மகன்"களின் தொல்லை இன்னும் மோசம். "ஓசியில கிடைச்சா ஆசிட் கூடக் குடிப்பான்" என மலையாளத்தில் சொல்வார்கள். அதுமாதிரி, ஓசில குடிக்கக் கிடைச்சதும், நம்ம ஆளுங்க வர்ற வரத்து... குடிச்சு வாந்தி வைச்சு, அலம்பு பண்ணி... " சே"ன்னு போயிரும்.
இதெல்லாம் இருப்பதால் ஆம்ஸ்டர்டாம் நிகழ்ச்சியை நான் நியாயப்படுத்தவில்லை. இந்த ஒழுங்கீனம், அலட்சியம் இருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது என்பது உண்மை. இதுதான் ஆம்ஸ்டெர்டாமிலும் நடந்திருக்கிறது.
இனியாச்சும் நம்மவர்கள் ஒழுங்கு என்பதைக் கடைப்பிடிப்பார்களா?

சார் போஸ்ட்..

"உங்களுக்கு யாரோ கடிதம் எழுதியிருக்காங்க" என்ற மனைவியின் குரலில் இருந்த ஆச்சரியம் என்னையும் தொற்றிக்கொண்டது. வழக்கமாக கடனட்டை அறிக்கைகள், ரீரடஸ் டைஜஸ்ட் கொட்டையெழுத்துக்களில் அனுப்பும் வருடாந்திர மார்க்கெட்டிங் வீண்செலவுகள் எனவே எனது தபால்கள் வருவதுண்டு. இல்லாவிட்டால் உறையின் ஓரங்களில் மஞ்சள் தடவிய திருமன அழைப்புகள், வெகு தொலைதூரச் சொந்தக்காரரது வீட்டின் பூப்புனித நீராட்டுவிழாக்களின் அழைப்புகள் ( எவன் மும்பையிலிருந்து வேலை மெனக்கெட்டு இதுக்கெல்லாம் போகிறான் என இன்னும் புரியவில்லை) எனவே இருக்கும். பெரும்பாலும், பார்த்த சில நொடிகளில் குப்பைகளில் சேர்ந்துவிடும்.
இந்த கடிதம் சிறிது வேறுபட்டது. பொறுமையாகக் கையெழுத்தில் முகவரி எழுதப்பட்டு , ஐந்து ரூபாய் தபால்தலை மிக ஒழுங்கக நேராக ஒட்டப்பட்டு மிகக் கவனமாக அஞ்சல் செய்யப்பட்டது. அதனாலேயே கொஞ்சம் மதிப்புடனேயே உறையைப் பிரித்தேன்.

நான் இதுவரை பரியச்சப்படாத திரு.ச்ரீனிவாசன் என்னும் முதியவரிடம் இருந்து வந்த அஞ்சல். நடுங்கும் கையெழுத்தில் பழையகால நாகரீக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. எனது தூரத்துச் சொந்தம் எனினும் , அவர் ஒரு இலக்கிய ஆர்வலர் என்பது மட்டுமே எனக்கு இதுவரை தெரியும். புழக்கத்தில் இருந்து, மீண்டும் அச்சடிக்கப்படாது புதைந்து போன ஒரு வைணவ சமயப் புத்தகத்தை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்த அவரது கடிதம் பல பரிமாணங்களையும் தொட்டிருந்தது 1944களில் இருந்த மும்பை, மகாராஷ்டிர சிறுநகர வாழ்வு, அவரது நண்பர்கள் எனப் பலதரப்பட்டவை குமிழ்ந்திருந்தன. இந்த வயதிலும் எழுத முயல்வது மட்டுமல்ல, அந்தக் கடிதம் அனுப்பும் முறை குறித்து அவர் எடுத்திருந்த கவனம் என்னை மிகவும் கவர்ந்தது.
"எவனுக்க்குவே இதுக்கெல்லாம் நேரம் இருக்கு?" என ஒருமுறை பின்கோடு எழுதாது நான் ஒரு அஞ்சல் செய முயன்றபோது தடுத்த எந்தந்தை மீது சீறியது நினைவுக்கு வந்தது. " எவனுக்கு நஷ்டம்? உனக்கு உன் தபால் ஒழுங்காப் போய்சேரணும்னு ஆத்திரம் இருந்தா , ஒழுங்காச் செய்வே" என அவர் இடித்ததும் வெறுப்போடு பின்கோடு தேடி எழுதினேன். "எப்படி போஸ்ட் பண்ணினாலும் பத்துநாளாவும்.. இதுல பின்கோடு ஒண்ணுதான் குறையாக்கும்" என முணுமுணுத்துக்கொண்டே போஸ்ட் செய்தேன். இரண்டே நாளில் கடிதம் சென்னை போனது. கூரியர் ஒருநாள் முந்திப் போயிருக்கும் அவ்வளவுதான்.
மின்னஞ்சல் வந்ததும் கடிதம் எழுதுவது வெகுவாகக் குறைந்து போனது. "அலோ, இன்னிக்கு என்ன குழம்பு?" என எஸ்.டி.டி. போட்டுப் பேசும் தெனாவெட்டும், வசதியும் வந்ததும் சுத்தமாக எழுதுவது நின்றே போய்விட்டது. "பேசற மாதிரி வருமா?" என்னும் சால்ஜாப்பு வேறு.

ஒரு குறுகுறுப்பில் அவருக்கு பதில் எழுத முனைந்தேன். வெட்கத்தை விட்டுச் சொல்கிறேன்.... எப்படி தொடங்குவது என்பதே மறந்து போய் விட்டது. "அன்புள்ள?" " மதிப்பிற்குறிய?" " உபய குசலோபரி?" "அடியேன் தெண்டம் சமர்ப்பிக்கும் விண்ணப்பம்?"
பேனாவை மூடி வைத்தேன். கணணி முன் அம்ர்ந்தேன்.
" கையால் எழுதாதற்கு மன்னிக்க்கவும். என் தமிழ்க் கையெழுத்து எனக்கே புரியவில்லை" என ஆத்மார்த்தமாக மன்னிப்புக் கேட்பதுடன் தொடங்கினேன். பிரிண்ட் எடுத்து கூரியரில் அனுப்பினேன் - குற்ற உணர்வோடு.

ஒரு வாரம் கழிந்தது. என் நண்பன் முத்துக் குமரன் டெல்லியிலிருந்து போன் செய்தான். " என்னடே, திடீர்னு தபால் எழுதியிருக்க? ஒரே ஆச்சரியம் என்வீட்டுல.. உனக்கு ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி இல்லையோடே?"
"ஏல, தபால் வந்தா நல்லாயிருக்கா இல்லியா? " இடைவெட்டினேன்
" சந்தோசமாயிருக்குடே. அதுவும் வேலை மெனக்கெட்டு எனக்குன்னு கைப்பட எழுதிருக்க பாரு. அதுவே சந்தோசம். அதான்டே போன் பண்ணினேன்" அவனது உற்சாகம் என் நெஞ்சில் நிறைந்தது.
சிறிது தயங்கினான் " எங்கய்யாவுக்கு இன்னிக்கு லெட்டெர் தமிழ்ல்ல எழுதிப் போட்டிருக்கேன். நம்ப மாட்டடே மக்கா.. எப்படி எழுதணுனே மறந்து போச்சி. என்னமோ கோழி கிண்டினாப்போல கிறுக்கிப்போட்டு.... காலேஜ்ல எழுதினது அதுக்கு அப்புறம் இப்பத்தான்...வெக்கமாயிருக்குல."
ரோஜாக்கள் கொடுக்கும் கையிலும் மணம் வீசும்.. மலர்களின் வாசனை கைகள் மாறுவதில் சிறக்கிறது.
இன்னும் எழுதணும்.. போஸ்ட் ஆபீஸ் உங்க ஏரியால எங்கயிருக்கு?

Monday, May 29, 2006

எங்கவே தொலைஞ்சீரு?

இப்படி உரிமையாகக் கேட்டு எழுதிய நண்பர்களுக்கு நன்றி. கொஞ்சம் வேலைப்பளுவின் பின், தஞ்சாவூர் பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு வந்தேன். இலக்கியம், நாடகம் பற்றிய அறிவுபெறுதல், உணர்தல் என்று உருப்படியாகக் கொஞ்சம் வேலை பார்த்துவிட்டு வந்தேன். அதென்னமோ நமக்கும் சென்னை செல்வதற்கும் என்னமோ தடங்கிகிட்டே வருது. சென்னை நண்பர்கள் அதிர்ஷ்டம் - பிழைத்துப் போனார்கள்.
ஊருக்குப் போனதில் உருப்படியாகப் படித்தது- திரு.வெங்கட் சாமிநாதன் அவர்களின் நாடகம் பற்றிய விமரிசனங்களின் தொகுப்பு நூல்.
சிறிய அவகாசம் பின் எழுதுகிறேன்.
அன்புடன்
க.சுதாகர்.