Saturday, May 10, 2014

கருப்பி என்ற தேங்காத் துருத்தி

ஞாயிறு காலை 6 மணி என்பது நடுநிசி என்றுதான் என் அகராதியில் பொருள். அந்த நேரத்தில் தொலைபேசி அடிக்கவும், தூக்கக் கலக்கத்தில் குழறினேன். “அல்லோ”
“லே, இன்னுமா எந்திக்கல? ஒரு விசயம் சொல்லணும்டே” சிவகுமாரின் குரல் உறக்கத்தைக் கலைத்தும் கலைக்காமலுமான ஒரு நிலையில் வைத்திருக்க, அடுத்த வாரம் அவன் மும்பை வரப்போகும் சேதியைச் சொன்னான். பேசி முடிக்கும்போது “தெரியுமாடே, தேங்காத்துருவி ஆச்சி போயிட்டு” என்றான்.
“யாரு?” எனக்கு ஒரு நிமிடம் புரியவில்லை. அவனது மவுனத்தில் ஒரு கோபம் எழுந்து வருவதை மெல்ல உணர்ந்தேன். மங்கலாகத் தோன்றிய நினைவில் கருப்பி ஆச்சி கண்ணில் பட்டாள்.
“யாரு?கருப்பி ஆச்சியா?” என்றேன்,சோம்பல் முறித்தவாறே.
“ஆமா, ஒரு மாசமாச்சி. ஞாபகமிருக்கா? சொர்ணா கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடிதான் அவங்க அறுவது நடந்துச்சு. நீ இருந்தேல்லா?”
புதுத் தெருவிலிருந்து வடக்குத் தெரு திரும்பும் இடத்தில் பெரிசாக ‘காந்திமதியம்மன் ஜெனரல் ஸ்டோர்ஸ்” என்று போர்டு போட்டிருக்கும் தணிகாசலம் கடையில் ‘கணக்கு நோட்டு வேணும்ணாச்சி. ரெஜினா  டீச்சர் திட்டுவாங்க” என்று இரவு எட்டுமணிக்கு நினைவுக்கு வந்து பதட்டத்துடன் சொன்னாலும் , “ சோவாறிப் பயலே. இப்பத்தான் கேக்கணும்னு நனவு வந்துச்சாங்கும்? பள்ளிக்கூடத்துல எங்கல வாய்ப் பாத்துகிட்டிருக்கீய? “ என்று உரிமையுடன் திட்டியபடியே  கணக்கு நோட்டை எடுத்துத் தருவார். 5 பைசாவுக்கு, 10 பைசாவுக்கு என்று ,  நீல மையினை அடர்வு மாற்றி, வாங்குபவனின் பண நிலைக்கு ஏற்ப பவுண்டன் பேனாவில் நிரப்பிக் கொடுப்பார். மை நிரப்புவதும், கோடு போட்ட, போடாத நோட்டு கொடுப்பதும் மட்டும்தான் அவரது வேலை என்று வெகுநாள் நினைத்திருந்தேன்.
ஒரு நெடிய பனை மரம் போலிருப்பார் தணிகாசலம். கருகருவென அவர் கால்கள் முட்டியிலிருந்து கீழே தெரிய, வெள்ளை வெளேரென்று வேட்டியை மடித்துக் கட்டியபடி அவர் நிமிர்ந்து நடப்பதைப் பார்க்கும்போது, ”அண்ணாச்சி மாதிரி இருக்கணும்” என்பேன் , தையற்கடை ஆறுமுகத்திடம்.
”போல” என்பார் அவர் சிரித்தபடியே.”இவம் மாரி இருந்தா குடும்பம் வெளங்கும். கல்யாணங் கட்டிட்டும் இன்னிக்கும் ப்ரம்மச்சாரி. நாலு கழுத வயசாயிட்டு.” அப்போது புரியாதது, கல்லூரி பஸ்ஸுக்குக் காத்திருக்கையில் , ஆறுமுகம் சொல்லச்சொல்லப் புரிந்தது.
தணிகாசலத்தின் முறைப்பெண் மீனாட்சி , கருப்பாக, குண்டாக இருப்பாள். அத்தோடு முன்னால் தெற்றுப்பற்கள் மூன்று மஞ்சளாகப் பெரிதாகத் தெரியும். கொஞ்சம் அப்பாவியான மீனாட்சி, வாயைத் திறந்தாலே மற்றவர்கள் சிரிக்கத்தொடங்கிவிடுவார்கள். அவளைக் கருப்பி என்றும் தேங்காத் துருத்தி என்றுமே அழைத்துப் பழக்கம்.
ஊர் அவளது அப்பாவித்தனத்தை, மந்த புத்தி என்றும், பைத்தியம் என்றும் பேரிட்டு வைத்தது. சொத்து போய்விடக்கூடாது என்பதற்காகவும் “ என் பொண்ண நீதான் வாக்கப்படுதணும் தம்பீ” என்று அவள் அம்மா கதறியதாலும், தணிகாசலம் அவளைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் என்ன நடந்தது என்பது ஊரில் அவரவர் வாய்ப்படி பேசப்பட்ட கதைகள்.
அடுத்த மாதமே, அவளைத் தாய்வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு. “இவளோட குடும்பம் நடத்த எனக்கு ஒப்பு இல்ல. பெரியவக மன்னிக்கோணும். “ என்றாராம் தலையில் கைகூப்பியபடிகுடும்பத்தில் பெரிய ஆண்கள் தனியாக அவரை விசாரித்தபோது “ சொல்லக் கூசுது. அவ ஒடம்புல ஒரு நாத்தமடிக்கி. கவுச்ச மீன் வாடை. தோலு, மீன்செதிலு கணக்கா சொரசொரன்னு. மீனான்னு கூப்பிடறப்போ, மீனுதான் நெனவுக்கு வருது. என்னத்த சொல்ல? விசயம் இன்னும் நடக்கல” என்றாராம்.
பெரியவர்கள் கூடிப் பேசிய பின், சொக்கலிங்கம் தாத்தா ’மீனாட்சியின் தங்கை சுந்தரியை அவருக்கு மணமுடித்துக் கொடுத்துடணும். ரெண்டு பெண்களையும் தணிகாசலம் காலம் முழுக்க வச்சுக் காப்பாத்தணும்’என்பதாக ஒரு தீர்ப்பைச் சொன்னார்.  தணிகாசலம் ஒத்துக்கொள்ளவில்லை.
“லே,நீ என்னா இப்படி கொதிக்க? சுந்தரிக்கு என்னா கேடு? நம்ம சாதியில ரெண்டு கட்டறது பழக்கம்தான்டே. வச்சுக்கவா சொல்லுதேன்? கட்டுன்னுதான சொல்லுதேன்?”
“பெரியவக மன்னிக்கோணும்.” தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாராம் தணிகாசலம். “ இவளக் கட்டினபொறவு இன்னொரு கட்டு எனக்கில்ல. என்ன, இவ கூட வாழ மனசு ஒப்பமாட்டேங்கு. மாசாமாசம் இவளுக்கு ஒரு தொகை கட்டிப் போடுதேன்.” அன்று அக்கா வீட்டிலிருந்து வெளியேறியவர், எத்தனையோ பெண்களின் வலைவீச்சுக்கும், குடும்ப வற்புறுத்தலுக்கும் மசியாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்.
“இதான் கேக்கேன். இதென்ன வாழ்க்கையாடே? கட்டினா, அவகூட கிடக்க வேண்டியதுதானே? லைட்டை அணைச்சிட்டா, கருப்பென்னா, வெளுப்பென்னா,?” ஆறுமுகத்தின் சில தருக்கங்களை உசாதீனப் படுத்த  முடியாது என்றாலும், ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
ஆயிற்று. இருவத்து எட்டு வருடங்கள் கடந்து விட்டன. ஊர்ப்பக்கம் அடிக்கடி போக்கு இல்லை என்றாலும், எப்போவாவது தணிகாசலத்தை அவர் கடையில் தூரத்திலிருந்து பார்க்க நேரிடும். வயது ஏறிய ஒரு உறுதியான பனைமரம் மெல்ல மெல்லத் தளர்வதைப் பார்க்க என்னவோ போலிருக்கும்.
இரு வருடங்கள் முன்பு, சிவகுமாரின் தங்கையின் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். அடுத்த நாள் திருமணம் என்பதால், மாலையில் சாவி தருவதாக மண்டபத்தில் சொல்லியிருந்தார்கள். சில சாமான்களைக் கொண்டு வைப்பதற்காக மதியமே நானும் சிவகுமாரும் போயிருந்தோம்.
“அறுவது ஒண்ணு இன்னிக்கு காலேல. முடிஞ்சிட்டு. இப்ப கிளம்பிருவாங்க. இரிங்க” என்றார் மண்டப ஆபீஸர்.
“யாருக்கு அறுவதாங் கல்யாணம்?” என்றான் சிவகுமார். மண்டபம் கிட்ட்த்தட்ட காலியாயிருக்க, நாற்காலிகள் வரிசையின்றி கலைந்து கிடந்தன. அங்கங்கே சிலர் கூட்டமாக அமர்ந்து வதந்தி பேசிக்கொண்டிருக்க, ஒரு மூலையில் கலகலவென ஒலி. சில வயதான பெண்களும், அவர்களின் நடுவே இரு நாற்காலிகளில் மாலையும் கழுத்துமாக இரு வயோதிகர்கள்.
“லே மக்கா, அது தணிகாசலம் அண்ணாச்சில்லா?” என்றேன் வியப்போடு.
அவர்களின் பின்புறமாகத் தாண்டி ஸ்டோர்ஸ் செல்ல வேண்டியிருந்ததால், அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்டது.
”அக்காங். ரெண்டு மாசம் அண்ணாச்சி ஆசுபத்திரியில கெடந்தப்ப , கருப்பிதான வந்து எல்லாஞ் செஞ்சா? அவளுக்கு நீரு,ஒரு பவுனு போட்டா என்னவாம்?” ஒரு கிழவி சீண்ட, தணிகாசலம் நெகிழ்ந்திருந்தார்.
“ ஆமாட்டி, கருப்பி, நீ வரலன்னா, பக்கவாதத்துல, புழுத்தேல்லா அங்கிட்டு செத்திருப்பேன்? . கொஞ்சமும் சுளிக்காம மலம், மூத்திரம் அள்ளிப் போட்டியேடி? ஒனக்கு நான் என்ன செஞ்சிருக்கேன்?”
“ஏ புள்ள, கருப்பி, இதான் நேரம். கேளு, ஒனக்கு என்னா வேணும்னு சட்டுன்னு சொல்லிப்போடு.” எவளோ கூட்டத்தில் சொல்ல, “ஆமா, ஒரு புள்ள வேணும்னு கேளு” என்றாள் இன்னொருத்தி. கூட்டம் கலகலவென சிரித்தது.
நான் சுற்றி வந்திருந்தேன். மீனாட்சி என்ற  கருப்பி என்ற தேங்காத் துருத்தி எனக்கு வலப்பக்கம் வெகு அருகில் தெரிந்தாள். அவளது கரிய முகத்தில், கண்களின் ஓரம் கண்ணீர் பளபளத்தது.
“என்னாத்த பெரிசாக் கேட்டுறப் போறன்? அன்னிக்கு எங்காத்தா வூட்டுல வுட்டுட்டுப் போறப்போ ஒரு வார்த்த சொன்னீய.” இவளக் கட்டுனபொறவு எனக்கு வேற கட்டு இல்ல” ஒம்ம மனசுல நான் இல்லாட்டி இந்த வார்த்த வந்திருக்குமா? என் மனசுல நீரு இருந்தீரு. மலம் மூத்திரம் அள்ளிப்போட்டன்னு சொல்லுதீயளே? வயித்துல சொமந்த புள்ளைக்குக் கூடத்தான் ஒருத்தி குண்டி தொடைக்கா. மனசுல சொமந்த ஆளுக்கு செஞ்சா என்னா? அடுத்த சென்மம்னு இருந்தா, நீரு எம் புருசனாயிருக்கணும், நான் ஒம்ம நெனப்புல இப்ப மாரியே எப்பவும் இருக்கணும். அதான் வேணும்”
“கருப்பி” என்றார் தணிகாசலம் கண்களைத் துடைத்தபடி.
நானும் சிவகுமாரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அது பற்றி இருவரும் ஒன்றும் பேசவில்லை.
”லே மக்கா, லைன்ல இருக்கியா?” சிவ குமாரின் குரலில் நனவில் மீண்டேன்.
“ஆங் இருக்கேன். இப்ப தணிகாசலம் அண்ணாச்சி எங்க இருக்காரு?”
“அவரு பைத்தியமாயிட்டாரு. கருப்பி, கருப்பின்னு பொலம்பி, வேட்டி அவுந்தது கூடத் தெரியாம பஸ் முன்னாடி போய் நின்னு… ஊர்க்காரங்க அவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில சேத்திருக்காங்களாம்.” அதன் பின் அவன் பேசியது என் நினைவில் இல்லை.
“அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்னம் மாநீர்ச்சேர்ப்ப!
இம்மை மாறி மறுமையாகிலும்,
நீயே ஆகியர் என் கணவனை
நானே ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே!”
“அணில் பல் போன்ற கூரான முட்களை உடைய செடியில் கார் அன்னப் பறவைகள் கூடுகட்டுகின்ற வளமையான நெய்தல் நாட்டை உடையவனே! இந்த பிறப்பு போய் மறுபிறப்பு வருமானாலும், நீயே என் கணவனாக ஆகுக. நான் மட்டுமே உன் நெஞ்சில் இருப்பவளாக ஆகக் கடவேன்” குறுந்தொகையில், தன்னிடம் திரும்பி வந்த தலைவனைப் பார்த்து தலைவி பாடியது இப்பாடல்.
கூடி இருந்து குழந்தைகள் பெற்றால் மட்டும்தான் இல்வாழ்வா? இல்லறம் என்பது நெஞ்சில் இருப்பது.

ஆடுகளம்

ஜிம்-ல் வழக்கம்போல,நண்பன்  மனீஷ்  ட்ரெட்மில்லில் ப்ரோக்ராம் செய்து தந்தான். “இன்னிக்கு கொஞ்சம் ஸ்பீடும் கூட்டியிருக்கேன் நெஞ்சு வலிச்சா உடனே சொல்லு என்ன?”. நான்  புதிதாக ஜிம்மில் சேர்ந்த்தில் மனீஷுக்கு பெரும் பங்கு உண்டு. எப்படியும் வியர்க்க ஓடினால், சர்க்கரை நோய் பறந்துவிடும் என்று சத்தியம் செய்து தந்திருந்தான். இன்று ஆறாவது நாள்.
வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டிருந்தவன், கால் வலியை மறக்க சற்றே நிலைக்கண்ணாடியில் பார்க்க, பின்னே ஒரு சைக்கிளில் பயிற்சி செய்துகொண்டிருந்த பெண் கண்ணில் பட்டாள். ஸ்லிம்மான , கட்டான உடல். மிகவும் டிப்பிகலான வட்டமான பெங்காலி முகம். பெரிய கண்கள்.
அவள் சிறிய பூத்துவாலையில் கழுத்தைத் துடைத்தபடியே , பயிற்சி கொடுப்பவரிடம் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்தவன், திடீரென வேகம் கூடியதைக் கவனியாமல் தடுமாறிவிட்டேன். மனீஷ் பார்த்துவிட, சற்றே அசடுவழிந்து  சமாளித்தேன்.
” பாத்து, ஜொள்ளு விடாம வீட்டுக்கு ஒழுங்காப் போய்ச்சேரு.”
சட்டென கோபம் எழ “ அவ யாராயிருந்தா என்ன? இங்கதான் நிறைய டி.வி நடிகைகளையும், மாடல்களையும் பாக்கறோமே? இவ என்ன பெரிய அழகியா?” என்றேன்.
“ சுபாங்கியைப் பாத்துட்டு சும்மா போனவன் குறைவு மச்சான். அவ பக்கத்துல இப்ப ஒருத்தன் இருக்கான் பாரு.“ என்று கிசுகிசுத்தான் மனிஷ்.
பெரிதாக தொந்தியுடன் ஆறடி உயரத்தில் ஒரு வட நாட்டவன் அவளருகே நின்று பேசிக்கொண்டிருந்தான். அவளை அணைத்து முத்தமிட்டுப் பின் அவன் நிலை சைக்கிள் ஒன்றில் ஏறினான்.
“அவர் இப்ப ஓடிக்கிட்டிருக்கிற  பிரபல மாமியார் மருமகள் சீரியல்லோட இயக்குனர். இப்ப ஒரு லீடு ரோல்ல இருக்கற பெண்ணை எடுத்துட்டு சுபாங்கியைப் போடப் போறாங்களாம்” மனீஷ் பிலிம் சிட்டியினுள் பல செட்டுகளில் காண்ட்ராக்டுகள் எடுத்தவன். அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
“ இந்த ரோலுக்கு அவ ஒரு வருஷமா அலைஞ்சா. ரெண்டு தடவை  அவர் பார்ட்னரோட கோவா, டெல்லியில ஃபார்ம் ஹவுஸ், அப்புறம் இவர்கூட தொடர்பு கிடைச்சதும், ஸ்பெயின்ல பத்துநாளு…”
அவள் வெளியேறும்போது நானும் மனீஷும் எனது காரில் ஏறிக்கொண்டிருந்தோம். ஸ்கூட்டியில் வந்த ஒருவன் அவளிடம் எதோ பேச, அவள் அவன் பின் ஏறிக்கொண்டாள்.
“ அவதான் அவ புருசன்” என்றான் மனீஷ் சீட் பெல்ட் அணிந்தவாறே. நான் அவனை அவன் சொசயிட்டியில் இறக்கிவிட்டுப் போனேன். மும்பையில் பிலிம் ஸிட்டியின் அருகே இருந்துவிட்டு, இதற்கெல்லாம் ஆச்சரியப் படமுடியாது. எங்கள் அபார்ட்மெண்ட்டிலேயே இரு பெண்கள் இருந்தனர்.சீரியலில் வருவார்கள் என்று சொன்னார்கள்.  பின்னர் ஓபாராய் அபார்ட்மெண்ட்டில் 1 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி சென்றுவிட்டனர்.
அடுத்த நாள் ஜிம் பயிற்சியாளர் எனது ட்ரெட்மில்லின் ப்ரோக்ராமை சரிசெய்தபோது அவள் உள்ளே வந்தாள். ஒரு கற்றை ரூபாய் நோட்டுகளை அவனிடம் கொடுத்துவிட்டு மெலிதான குரலில் “ ரிசீப்ட் அப்புறம் வாங்கிக்கறேன்” என்றாள். என்ன குரல்?! என்ன உடல் வாகு?! எப்படி இவள் இன்னும் ஒரு பெரிய ஹீரோயினாக வரவில்லை?
சுபாங்கி சீக்கிரமே சென்றுவிட, பயிற்சியாளரிடம் பேச்சு கொடுத்தேன். “ இவள் இதன் முன் இங்கு வந்த்தில்லையே?”
“நேத்திக்கு வந்த டைரக்டர் இவளோட ஜிம்-க்கு பைசா கொடுத்திருக்காரு. எல்லாம் கறுப்புப் பணம். அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குது. அதுக்கு முந்தி இன்னும் உடல் குறையணுமாம்” சிரித்தார். பின்னர் தொடர்ந்தார்.
“ இவ வீட்டு வாடகை இன்னொருத்தன் கொடுக்கறான். மளிகை ஒருத்தன். காரு பழைய டைரக்டரோடது. இப்ப புதுசா டயோட்டா வந்திருக்கு.”
“ அவ புருஷன் , ஸ்கூட்டியில வர்றான்?” என்றேன். இன்னும் பத்து நிமிடம் ட்ரெட்மில்ல ஓடணும். அதன்பின்  வியர்வை அடங்கியதும் கிளம்பிவிடலாம்.
“ அவன் இவ புருஷன் இல்ல. இவளோட பாதுகாவலன்ன்னு வச்சுக்கலாம். அவனும் டீ.வி ஆக்டர்தான். சிஐடி சீரியல்ல முந்தி வருவான். இப்ப மார்க்கெட் மப்பா போவுது அவனுக்கு. இவ பாத்துக்கறா”
“அட. பரவாயில்லையே.?” வியந்தேன்.
“ சுபாங்கிக்கு ஊர், வங்காளத்துல  ஒரு கிராமம். ஒருத்தன நம்பி ஊர்லேந்து கல்கத்தாவுக்கு ஓடிப் போயிட்டா. அவன் தலைமறைவாயிட்டான். அங்கேயிருந்து ஊர் போகமுடியாம, அவன் மும்பையில பிலிம் சிடியில சின்ன சின்ன வேசத்துல நடிச்சுக்கிட்டிருக்கான்னு தெரிஞ்சு இங்க வந்தா.. அவன் , இவளத் தெரியவே தெரியாதுன்னு சாதிச்சிட்டான். இவ, சீரழிஞ்சு , ரெண்டு வருஷமா பலரோட இருந்து.. இப்ப அவளும் ஒரு நடிகை. இங்க அவ புருசன்கிட்ட அவளைக் கூட்டிட்டு வந்தவந்தான் நீங்க ஸ்கூட்டில பாத்தது. அவனுக்கு குடும்பம் இருக்கு. இவ அவனோட இருக்க முடியாது. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்துக்கறாங்க. “
மெல்ல மெல்ல ட்ரெட்மில்லின் வேகமும் கூடியது. மூச்சு இறைக்கத் தொடங்கியது.
“எல்லாம் ஆக்டர்கள்தான் சார். ஒருத்தன் புருஷனா நடிச்சான். ஒருத்தன் புருசனா வாழ்ந்தான். அவ பலருக்கு பல மாதிரியா நடிச்சிகிட்டிருக்கா. ஒருத்தனுக்கு மட்டும் அன்பான மனைவியா , கட்டாத பொண்டாட்டியா வாழ்ந்துகிட்டிருக்கா. அதுவும் ஒருநாள் நடிப்புன்னு ஆகும்.”
பயிற்சியாளர், வேகத்தைக் கூட்டினார். “அஞ்சு நிமிசம் இதே ஸ்பீடுல ஓடுங்க.  ஆட்டோ கூல் ஆஃப்-க்கு தானா போயிடும்” அவர் நகர்ந்து போக, நினைவுக்கு வந்தது ஓர் சொல்.
ஆடுகளம். ஆடுகள மகள். ஆடுகள மகன்.  கூத்து ஆடும் பெண், கூத்தாடி.

கிராமத்துக் குடும்பப் பெண், காதலால் வீடு நீங்கி, தன் வாழ்வில் நடித்த ஓர் நடிகனைத் தேடிப்போய் , தானும் நடிகையாகி, தன்னைக் காத்தவனோடு வினோத உறவு கொண்டு நிஜமாக வாழ்வது என்பது நிஜமா, நடிப்பா?  எது ஆடுகளம்? எது கூத்து?
”மள்ளர் தழீஇய விழவினாலும்
மகளிர் தழீஇய துணங்கையானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை:
யானுமோர் ஆடுகள மகளே. என்னைக்
கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே.” -  ஆதி மந்தியார், குறுந்தொகை.

மலர் விழும் ஓசை

பூங்காவில் அன்று ஆட்கள் குறைவாக இருந்தனர். காலை ஆறு மணிக்கு வேனிற்காலத்தில் பூங்காவில் முன்னே செல்பவர்களின் காலில் இடறாமல் நடக்க முடியாது. சீக்கிரமே வந்துவிட்டேனோ? விறுவிறுவென இருபது நிமிடம் நடந்துவிட்டு, பெஞ்சில் அமர்ந்தேன். அட, இன்னிக்கு வந்திருக்காரே?
நடேசனுக்கு எழுபது இருக்கும். ஆனால் அறுபதுபோல் தெரிவார். நேரான உடல், பாண்ட் எயிட் வடிவத்தில் விபூதி பட்டை. அயர்ன் பண்ணின அரை டிராயர். அயர்ன் செய்த டீ ஷர்ட், ஒளிர் பச்சை நிற ரீபாக் காலணிகள். படு கச்சிதமான ஆடை அணிந்திருப்பார். ஏன், சாக்ஸ்கள் கூட ஒரே நீளத்தில் காலைத் தழுவியிருக்கும்.
மனிதர் மிலிடரியோ? என்று சந்தேகித்து ஒரு முறை கேட்டேன். டெல்லியில் ஏதோ மத்திய அரசின் பணித்துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். பூங்காவினை அடுத்து இருக்கும் பெரிய அடுக்கு மாடிக் கட்டிடத்தில் மகனுடன் இருக்கிறார். மகள் பெங்களூரில் என்பதால் இரண்டு நகரங்களுக்கும் நடுவே போய் வந்து கொண்டிருப்பார்.
‘சுத்தம், நேர்மை எல்லாம் ஒண்ணுதான். உடல் சுத்தமா இல்லாதவனால மனசுல நேர்மையா இருக்க முடியாது. நேர்மையா இல்லாதவன் சுத்தமா இருந்தாலும் செயற்கையா இருக்கும். அதி சுத்தமா எவன் இருக்கானோ அவனுக்கு உள்ளே எதோ சாக்கடை ஓடுதுன்னு அர்த்தம். நம்ம அரசியல்வாதிகளப் பாருங்க. வெளுத்த உடைகள், கதர், கஞ்சி போட்டு மொற மொறன்னு.. ஆனா உள்ளே?”
நான் சிரித்துக் கொண்டே வேறு பேச்சுகளுக்குத் தாவி விடுவேன். அவருக்கு என கொள்கைகளை வைத்திருப்பார். என்ன சொன்னாலும், செவி மடுப்பாரே தவிர ஏற்றுக் கொள்ளமாட்டார் ..
”மாடர்ன் தமிழ் லிட்ரேச்சர்? ம்.. பள்ளி கொண்டபுரம் படிச்சிருக்கேன். கொஞ்சம் நகுலன். என்ன சார் கல்கி, சாண்டில்யன் ? காதல் வீரம் இருந்தா கதையாயிடுமா? கதை படிக்கவே தமிழனுக்குத் தெரியாதுங்கறேன். ஜெயமோகன் நன்னா எழுதறான், கேட்டேளா? இப்ப யாரு சங்க இலக்கியம் பத்தி கதை ,கட்டுரைன்னு எழுதறா சொல்லுங்கோ? விஷ்ணுபுரம்னு ஒண்ணு எழுதியிருக்கானாமே? படிச்சிருக்கேளா?”
ஒரு முறை கம்பராமாயணம் பத்தி ஆரம்பித்தேன். அவர் பையிலிருந்து நாலாய் மடித்துவைத்திருந்த ஒரு காகிதத்தை எடுத்தார். “ குறுந்தொகை பாடல்கள். பத்து இருக்கு. ஒரு நாளைக்கு பத்து படிச்சிடறதுன்னு வச்சிருக்கேன். நற்றிணை முடிச்சாச்சு. குறுந்தொகையில ஒண்ணொண்ணும் முத்து கேட்டேளா? இதக் கேளுங்கோ, தலைவியோட காதல் பத்தி வீட்டாருக்கு சொல்லாம சொல்றா, அவ தோழி. என்னமா மறைச்சு சொல்றா?  அகவன் மகளே, அகவன் மகளே”
சங்கம் தவிர்த்து வேறு பேசமாட்டார் அவர் என்று தெரிந்ததும், மெல்ல தவிர்த்தேன். உறுதியான பாறைகள் கவர்கின்றனதான். ஆனால் பாறைகளோடு பேச முடிவதில்லை. அவற்றிற்கு மெல்லுணர்வு கிடையாது. சங்கப் பாடல்கள் அதன் உள்ளே ஓடும் நீரோட்டம் அவ்வளவே. சமூகம் குறித்தான மெல்லுணர்வுகள் பாறைகளுக்கில்லை.
’ஹலோ சார்’ என்றேன். அவர் கையை அசைத்து அருகில் அமரப் பணித்தார். பேசவில்லை. அப்போதுதான் கவனித்தேன். முகம் முழுதும் வேர்வை. கழுத்தில் ஒரு வியர்வைப் படலம் காலை வெயிலில் பளபளத்தது. கண்கள் சற்றே தளர்ந்திருந்தன.
“என்ன ஆச்சு சார்? “ பரபரத்தேன்.
“ஒன்றுமில்லை” என்றார் தீனமாக. “ ஷுகர் குறைஞ்சிருச்சு. பார்க் காவலாளிகிட்டே, வெளியே டீக் கடைலேர்ந்து கொஞ்சம் ஜீனி வாங்கிவரச் சொல்லியிருக்கேன். சரியாயிடும். உக்காருங்கோ”
அவர் நடுங்கும் கையால் என் மணிக்கட்டைப் பற்றினார். அவர் உள்ளங்கை சூடாக இருந்தது.”டாக்டர்கிட்ட போலாம். கொஞ்சம் கைத்தாங்கலா நடக்க முடியுமா? கார்ல  போயிடலாம்”
அதற்குள் வாட்ச்மேன் ஒரு காகிதத்தில் பொதிந்த சக்கரையுடன் ஓடி வர, அவர் நடுங்கும் கையால் சிறிது எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அவன் கொடுத்த தண்ணீரைக் குடித்தவாறே சற்றே சாய்ந்தார். கூடிய சிறு கூட்டத்தை காவலாளி கலைக்க, நான் அவரருகே அமர்ந்து கொண்டேன்.
சார், வீட்டுக்குப் போயிரலாமா? பையன் நம்பர் சொல்லுங்க.“ அடுத்த பில்டிங்க் என்பதால் கைத்தாங்கலாக அழைத்துப் போய்விடலாம்.
“வேணாம்.” என்றவாறு தலையசைத்தார். “ அந்த  வீட்டில எந்திரங்கள்தான் இருக்கு. ஒண்ணு மல்ட்டி நேஷனல்ல வைஸ் ப்ரெஸிடெண்ட். இன்னொன்னு இன்வெஸ்ட்மெண்ட் பேங்க்கர். என் மனைவி ஓய்ந்து போன எந்திரம். நான் ஓயப் போற ஒண்ணு. பாக்டரிக்கு அப்புறம் போலாம் “
துணுக்குற்றேன். இப்படி அவர் பேசியதேயில்லை. அவர் குடும்பத்தைப் பற்றி அவர் இதுவரை ஒன்றும் சொன்னதில்லை. அவர் சற்றே தெளிவானதும் நிமிர்ந்து அமர்ந்தார்.
”குறுந்தொகை படிச்சிருக்கேளா சுதாகர்? ”
விடமாட்டார். அதுவும் இப்போதிருக்கும் நிலையில், குறுந்தொகை ஒன்றுதான் பாக்கி. ” அப்புறம் பேசலாம் சார். முதல்ல வீட்டுக்குப் போற வழியப் பாப்போம்.” வலுக்கட்டாயமாக அவரது பையனின் நம்பரை அவரிடமிருந்து வாங்கி, அழைத்து பார்க்கிற்கு வரச்சொன்னேன்.
“ குறுந்தொகையில ஒரு பாடல். எழுதினது…ஒக்கூர் மாசாத்தியாரா? மறந்துடுத்து. எனிவே.. தலைவிக்கு தூக்கம் வரலை. சொல்றா “ தோழி, ஊரெல்லாம் தூங்கிடுத்து. எனக்கு உணர்வுகள் முழுசும் முழிச்சிண்டிருக்கு. அவனானா, இன்னிக்கு ராத்திரி வர்றேன்னுட்டு, இன்னும் காணலை. இந்த வீட்லேர்ந்து கொஞ்ச தூரத்துல இருக்கிற மலைலே, மயிலோட காலடி மாதிரி இருக்கிற இலை கொண்ட நொச்சி மரத்திலேர்ந்து கொத்து கொத்தா நீலப் பூக்கள் இந்த இரவிலே உதிர்றது. அந்த மலர் உதிர்கிற ஓசை எனக்குக் கேக்கறதுடீ” ங்கறா. மலர் உதிர்கிற சத்தம் கேட்டிருக்கேளா சுதாகர்?”
“சார் அப்புறம் பேசலாம்”
“எங்க ஊர் குமிழி பக்கம். மலைக்காடு வீட்லேர்ந்து பாத்தா தெரியும். மலர் உதிர்ற ஓசை கிராமத்துல கூட கேக்கறது சிரமம். ராத்திரி திடீர்னு எருமை ம்மான்னு அலறும். சுவர்க்கோழி கத்திண்டே இருக்கும். இந்த இயற்கை ஓசையிலேயே மலர் விழறது கேக்காது. ஆனா, நம்ம உணர்வுகள் விழிச்சிருந்தா, காது தீட்டியிருந்தோம்னா கேக்கும். ஒரு பூ விழுந்தாக் கூட கேக்கும். கொத்தா பூ மலையில உதிர்ந்தா பெரிசாவே கேக்கும். யானை தோட்டத்துல நுழைஞ்சா மாதிரி..”
தூரத்தில் அவசரமாக யாரோ வருவது தெரிந்தது.
“ நகரத்துல இந்த பூ உதிர்ற சப்தம் நிச்சயமா கேக்காது. ஏகப்பட்ட இயந்திர இரைச்சல். அதோட நம்ம காதும் செவிடாயிடுத்து. நேர்மையான மனுஷாளா இருந்தா, சிசு உடல்ல ஜனனம் சேர்ற ஒலியும், உடல்ல மரணம் உரசற ஒலியும் கேக்கணும். அது எந்த ஜீவனாயிருந்தாலும் கேக்கணும். கிராமத்து மனுஷாளுக்குக் கேட்டது. எப்படி தூரத்துக் காட்டுல எந்த பூ விழுந்தாலும் அவளுக்கு கேக்கறதோ, ஒரு பூ விழுந்தாலும், ஆயிரம் பூக்கள் விழுந்தாலும் கேக்கறதோ, அதுமாதிரி. அதுக்கு உணர்வு விழிச்சிருக்கணும். இந்த பூ, அந்தப் பூ, இத்தனை பூக்கள் , அத்தனைப் பூக்கள் -னு பிரிக்கப் படாது. இப்படிப் பாகுபாடில்லாம இருந்தா அவள். அதான் முடியலை. என்னாலயும் முடியலை. பூ விழும் ஓசை படுத்தறது. இந்த எந்திரங்களின் இரைச்சலையும் மீறிக் கேக்கிற  மலர் உதிர்ற ஓசை பொறுக்காம அங்கேயிங்கே ஓடறேன். எங்க ஓடமுடியும்? திரும்பி வந்தா இரைச்சல்தான்.  குறுந்தொகை கொடூரமானது கேட்டேளா? “
“டாட் ,ஆர் யூ ஓகே?” என்றவர் என்னை விட ஐந்து வயது இளையவராக இருப்பார். விவரத்தைக் கூறினேன். கை குலுக்கி நன்றி தெரிவித்து விட்டு நடேசனை மெல்ல அழைத்துப் போனார்.
ஒரு ப்ரமை பிடித்த நிலையில் வீட்டுக்கு வந்தேன். வந்ததும் குறுந்தொகையில்  தேடினேன். அப்பாடலை எழுதியவர் கொல்லன் அழிசி.
“கொனூர் துஞ்சினும், யாம் துஞ்சலமே
எம்இல் அயலாது எழில் உம்பர்:
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே”
நேர்மை, சுத்தம், மென் உணர்வுகள்  கடுமையானவை. குறுந்தொகை கொடியது.

Wednesday, April 30, 2014

எம் டி என் எல்லும் இணைய எதிர்பார்ப்பும்.

பிரதமராக யார் வந்தாலும் ஒரு எதிர்பார்ப்பை முன் வைக்கிறேன். இந்த பாழாய்போன MTNL போன்றவற்றை அதானிக்கோ, அம்பானிக்கோ வதேராவுக்கோ விற்றுவிடுங்கள் இல்லேன்னா இலவசமாகவாது கொடுத்துவிடுங்கள். புண்ணியமாகப் போகும்.
15 நாளாச்சு. இதுவரை மஹாநகர் டெலிபோன் கனெக்‌ஷன் + broadband வரவில்லை. போன சனிக்கிழமைக்கு முந்திய சனிக்கிழமை விண்ணப்பம் செய்தபோது, பார்கோடு லெக்சரெல்லாம் செய்தவர்கள் , விண்ணப்பத்தை பதிவு செய்து வொர்க் ஆர்டர் தயாரிக்கும் நேரத்தில் கணனிகள் நின்றுவிட்டன . “ கனெக்டிவிடி இல்ல சார்” இவங்களுக்கே இல்லன்னா, வாடிக்கையாளர்கள் கதி? சரி போவுது என்று நினைத்திருக்கும்போது “ திங்கள் செவ்வாயில் வந்துடும்” என்றார்.
ஓட்டுப் போட்டிருந்தால் 200 ரூபாய் கழிவு வேறு என்று போர்டு பார்த்தேன். அதைக் கேட்டால் அசடு வழிந்து, “சிஸ்டம்ல வரலை. வந்தா பாக்கறேன்” என்றார். 'அப்புறம் எதுக்கு போர்டு வச்சிருக்கீங்க?' என்றால், 'அது மார்கெட்டிங்க் சமாச்சாரம். எங்களுக்கு சம்பந்தமே இல்லை' என்றார்கள்.
திங்கள்லேர்ந்து வெள்ளி வந்தது. போன் வர்ற வழியாக் காணோம். இந்த லட்சணத்துல, இருந்த ஏர்ட்டெல் கனெக்‌ஷனையும் கத்தரித்துவிட்டேன். அரசனை நம்பி, புருஷனை கை விட்ட கதையாப் போச்சே என நினைத்திருந்தேன். இருந்த ஏர்ட்டெல் ப்ராட்பேண்ட்-உம் போய்விட டாட்டா டோக்கோமோவில் எப்பவாவது இணையம்.
சனிக்கிழமை போய்க் கேட்கும்போது அந்தப் பெண்மணி இல்லை. அந்த நாற்காலியில் இருந்த ஒரு மனிதர் அடுக்கி வைத்திருந்த பல விண்ணப்பப் படிவங்களில் தேடி உதட்டைப் பிதுக்கினார்.” நீங்க கொடுத்துட்டுத்தான் போனீங்களா? வேற எக்ஸ்சேஞ்சுக்கு போயிட்டீங்களோ? எதுக்கும் அடுத்த பில்டிங்க்ல, ரெண்டாவது மாடியில, பவார்-ன்னு ஒருத்தர்...”
நான் கோபமாக சொல்ல எத்தனிக்குமுன் , அருகிலிருந்த மேசை டிராயரை அவர் காஷுவலாகத் திறக்க... எனது விண்ணப்பப் படிவமும், செக் இதழும்.. “ சார். இதான் சார் என்னோடது” என்றேன். அவர் திகைத்துப் போய் அடுத்திருந்த பெண்ணிடம் “ இதப் பாத்தீங்களா?” என்றார். அவர் இல்லை என்றார்.
“ டிராயர்ல வச்சிருந்தா அவங்க எப்படி வொர்க் ஆர்டர் போடமுடியும்?” என்றார் லாஜிக்காக என்னிடம். “ நானா சார் வைக்கச் சொன்னேன்? எனக்கு கனெக்‌ஷன் ஏன் கொடுக்கலைன்னு கேட்டா, உங்க தப்புக்கு என்கிட்ட ஏன் கேக்கறீங்க? என்றேன் குரலை உயர்த்தி.
மனிதர் ” எலக்‌ஷன் டூட்டிக்குப் போறதுக்கு முன்னாடி அந்தம்மா இது இங்க இருக்குன்னு சொல்லலைங்க. அதான் நானும் பாக்கலை” என்றார். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு dot matrix printer கொண்டு, லேசாகத் தெரிகின்ற மையில் அடித்த இரு கம்ப்யூட்டர் பேப்பர்களைக் கொடுத்தார். “ அடுத்த வாரம் வந்துடும். சாரி சார். அந்தம்மா மறந்துடுச்சு. “ என்றார்.
“அடுத்த வாரம்னா?”
“ திங்கள் இல்லே செவ்வாய். நிச்சயமா”
திங்களிலும் வரவில்லை. நேற்று ஒருத்தர் வந்து “ட்யூட்டி முடிஞ்சு போச்சு. மறந்துட்டேன். சரி, நாளைக்கு வந்து கனெக்‌ஷென் கொடுத்துடறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
இன்றும் வரலை. நாளை மே தினம். சாதாரண நாட்களிலேயே வேலை செய்யாதவர் நாளையா செய்யப் போகிறார்?
MTNL க்கு மறதிக்கு மருந்தான ப்ரம்மி மாத்திரைகளை சப்ளை செய்யும் காண்ட்ராக்ட் எடுக்கலாமோ?
ஏர் இந்தியா விமானம் சரியான நேரத்துக்கு வரும் என்பது போல ப்ராட்பேண்ட்-ஐ எதிர்பார்த்திருக்கிறேன்.
Waiting for the Godot.

Thursday, April 24, 2014

சிறியன சிந்தியாதான்

"தாயென உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீயென நின்ற நம்பி!நெடிது நீ நோக்கும் நோன்மை
நாயென நின்ற எம்மால் நவையற உணரலாமே?!
’தீயன பொறுத்தி’ என்றான், சிறியன சிந்தியாதான்”

- வாலி வதைப் படலம்.
இறக்கும் தருவாயில் கிடக்கும் வாலி, இராமனிடம் வாதம் செய்து, இலக்குவன் நடுவே புகுந்து ஒரு விளக்கமும் அளித்த பின்னர், வாதத்தை நிறுத்திக் கொண்டு சொல்கிற வார்த்தைகள் இவை.



’சிறியன சிந்தியாதான்’ என்ற அற்புத புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். வாலி வாதம் & வாலி வதம் குறித்த அருமையான தகவல்களும், சிந்தனைப் பாங்குகளுமாக திரு.எஸ்.இராமகிருஷ்ணன் தந்திருக்கும் பெருஞ்செல்வப் பெட்டகம் அது. 1957ல் வெளிவந்து 1967 வரை மறுபதிப்பு கண்ட புத்தகம் திடீரென மறைந்து விட்டது. இப்போது மீண்டும் வந்திருக்கிறது. https://www.nhm.in/shop/100-00-0000-727-6.html இல் கிடைக்கிறது.

இந்த பாடல் வரை இராமனுக்கும் வாலிக்கும் நடக்கும் விவாதத்தை கம்பரின் சொல்லாட்சியையும், அதில் இரு சாரருக்கும் நடுவே நின்று, இருவரின் வாதங்களிலும் சீர் தூக்கிப் பார்க்கும் சிந்தனை செய்து, நம்மையும் ஆ என வாயைப் பிளக்க வைக்கும் திரு. இராம கிருஷ்ணன் அவர்களின் எழுத்து மாட்சியில் வியந்து வணங்கி நிற்கிறேன்.

இந்த பாடலுக்குப் பின் அவர் இரு வார்த்தைகளைக் கொண்டு விளக்குகிறார். ’தீயன பொறுத்தி” ,  “ நெடிது நோக்கும் நோன்மை” ( தீர்க்கதரிசனமாக பின் வருங்காலத்தின் நிகழ்வுகளை முன்னே அறியும் திறமை).
இராமன் வாலியைக் கொன்றதற்குச் சொன்ன காரணங்களை வாலி ஏற்றுக் கொள்ளவில்லை. இளைய பெருமாளான இலஷ்மணன் சொன்ன விளக்கத்தையும் ஏற்கவில்லை. வாலி சுக்ரீவனை  அவன் காலில் விழுந்தபின்னும் அடித்ததும், அவன் மனைவியான உருமையைக் கவர்ந்ததும் அவனது விலங்கு வழக்கப்படி குற்றமல்ல. மிஞ்சிப் போனால், நீதி அறிந்த ஒருவனுக்கு அது குறையாகும். கொல்லும் அளவுக்கு அது குற்றமாகாது என்கிறார் ஆசிரியர்.

பின்னே இராமன்  கொன்றது சரி என்று வாலி எப்படி ஏற்றுக் கொண்டான்?

வாலி அக்னி சாட்சியாக , இராவணனிடம் தோழமையும் அவனுக்கு உதவி செய்யவும் உறுதி பூண்டது, நீதி அறிந்த ஒரு மன்னனுக்கு அழகல்ல. இராவணன் பிறரை வருத்தும் போது, அவனை விட வலியனான வாலி, இராவணனை அடக்கி பிறரைக் காத்திருக்கவேண்டும். அதை விடுத்து தன் கிட்கிந்தையில் மட்டும் தனது வலிமையைக் காட்டி ஆட்சி செய்தது ஒரு குற்றமாகிறது.

ஒரு அரசன் தீய செயல்களை விட்டுவிடுவது மட்டுமல்லாது, நல்லது அனைத்தையும் தன் கடைமையாகச் செய்யவேண்டும். இதில் வாலி பிறழ்ந்து விட்டான். ஒரு தீய நட்பைத் தேடியது இழுக்கைத் தருகிறது. ஒரு குற்றமாகிறது. தண்டனை கிடைக்கிறது. வாலியே இதனைச் சொல்கிறான் “என் பழம்வினைத் தண்டமே அடியனேற்கு உறுபதம் தருவதே”   அவனது தீச்செயலின் தண்டனை அவனுக்கு வைகுந்தம் அளிக்கிறதாம்! என்ன ஒரு தீர்க்கமான, தெளிவான சிந்தனை?!இறக்கும் தருவாயிலும், தனது குறைகளை எண்ணி, இதனால் வந்த விளைவு என்று பெரிதாக எண்ணுவதால் அவன் ’சிறியன சிந்தியாதான்”.

 நாளை இராம இராவண யுத்தம் நடக்கும்போது, தோழனாக வாலி , இராவணன் பக்கம் நின்று போரிட வேண்டி வரும். தருமத்தின் பாதையை எதிர்த்து நிற்க வேண்டி வரும். இதனை தொலைநோக்குப் பார்வையாக இராமன் கருதியே , தன்னை இப்போதே கொன்றான் என்று வாலி எண்ணுகிறான். இராவணனுடன் தோழமை கொண்ட ‘தீயன பொறுத்தி” என்கிறான்.

புத்தக முடிவில் ஆசிரியர் வியக்கிறார் “ எப்பேர்ப்பட்ட மாவீரன் இறந்துவிட்டான்?!” நாமும் தாரை போல் திகைத்துப் போகிறோம் “ தேறேன் யானிது , தேவர் மாயமோ? வேறோர் வாலி கொலோ விளிந்துளான்?”  ( நான் இதை நம்ப மாட்டேன். தேவர்கள் செய்யும் மாயைச் சூழ்ச்சியோ?வேறு ஒரு வாலிதான் இறந்து கிடக்கிறான். என் வாலி அல்ல)

நம் வாலி என்றும் சாகான்.

என்னிடம் இருப்பது ‘67ம் வருடத்திய பிரதி. பழைய எழுத்து வடிவம், சிக்கென இருக்கும் பழைய எழுத்துரு... Nostalgic. பம்பாய்த் தமிழ்ச்சங்க நூலகத்திற்கு நன்றிகள். 

Saturday, April 19, 2014

பார் கோடு படுத்தும் பாடு.


காலங்காத்தாலேயே எனது டீலரும் வெகுநாள் நண்பணுமானவன் போன் செய்தான் “ *** லேர்ந்து ராவ் போன் பண்ணினார். நம்ம டெண்ட்ரை ரிஜெக்ட் பண்றாங்களாம். நம்ம சாப்ட்வேர் டெக்னிகலா அவங்க தேவையை பூர்த்தி செய்யலைன்னாரு” அதெப்படி? அவரை டெலெகான்ஃபரன்ஸில் அவன் இழுக்க, மூவருமாக உரையாடினோம்
“ உங்க சாப்ட்வேர்ல பார் கோடு இருக்கா?” என்னமோ உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?ங்கற மாதிரி ஆரம்பித்தார்.
“சார். இதெல்லாம் ஸ்டாண்டர்ட் செயல்பாடுகள். எல்லாம் இருக்கு” அதுவும் இரு பரிமாண பார் கோடு வேறு கொடுத்திருக்கிறோம். பிறரெல்லாம் ஒரு பரிமாணத்தில் இருக்கும்போது.
“ எங்க? போடலயே உங்க கொட்டேஷன்ல?”
இதெல்லாம் எழுதப் போனா நாலு பாக்ஸ் ஃபைல் சைஸில் ஒரு கொட்டேஷன் வருமென்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. இல்லை, புரிய முயற்சிக்கவே இல்லை.
வழக்கம்போல “ கவெர்மெண்டு பாருங்க. எல்லாம் முறைப்படி இருக்கணும். இப்ப இந்த விவரத்தோட, என் சீனியர்கிட்ட கொடுப்பேன். அவர் கையெழுத்துப் போட்டு, டிஜிஎம் கிட்ட கொடுப்பாரு. அவர்கிட்டேயிருந்து பர்ச்சேஸ். அப்புறம்..: அரசாங்கம் என்ற இயந்திரத்திடம் வேலை செய்ய அசாத்தியப் பொறுமை வேணும்.
அவருக்கு ஒரு பரிமாண பார் கோடு ( நாம் சாதாரணமாகப் பார்ப்பது ஒரு நேர் கோட்டில் ஒல்லியாகவும், தடியாகவும் இருக்கும் சிறு கோடுகள்) இருபரிமாண பார் கோடு ( ஒரு கட்டம் போல ஒன்றில் கச்சா முச்சா என இருக்கும்) வித்தியாசம் தெரியவில்லை. எவனோ காம்பெடிஷனில் ஒருவன் நேராக ஒரு பார் கோடை போட்டு, அதையே செங்குத்தாகவும் வரைந்து, இதுதான் இரு பரிமாண பார் கோடு என்று அடித்துச் சொல்ல மனிதர் நம்பியிருக்கிறார். நான் எடுத்துச் சொல்லச் சொல்ல மறுத்தார்.
”சரி, உங்க கிட்ட 2டி பார்கோடு இல்லை. கோடு 39 என்ற ஸ்டாண்டர்ட் இருக்கா?”
பற்றிக் கொண்டு வந்தது எனக்கு “ இருக்கு. சார், 2 டி க்கு இதெல்லாம் தேவையில்லை. எவனோ உங்களை குழப்பி...”
“அதெல்லாம் இல்லை. எனக்குத் தெரியும். நீங்க குழப்பறீங்க இப்ப.” என்றார் கோபத்தோடு.
என் டீலர் இடைப் புகுந்தார் “ சார், ஒரு பரிமாணத்துக்கே கோடு 39 Standard வேணும்னா, இரு பரிமாணத்துக்கு அதை விட அதிகமா வேணுமில்லையா?” நான் திகைத்துப் போனேன். இவன் என்ன புதுக் கதை விடுகிறான்.?
“ஆமா “ என்றார் ராவ் , சற்றே யோசித்து.
“நாங்க கோடு 128 standard என்று ஒன்றூ தருகிறோம். பாருங்க, 39 -ஐ விட பல மடங்கு அதிகம்.”
ஒரு நிமிடம் மவுனம். ராவ் பின் உயிர்த்து “ கரெக்ட். நீங்க அதிகம் தர்றீங்க. உங்களுக்கு இது அட்வாண்ட்டேஜ். சரி நான் கம்பேரிஸன் எழுதி சார்கிட்ட கொடுத்துடறேன்” என்று போனை வைத்தார்.
“என்னடா இது? இப்படிச் சொல்லறியே? கோடு 128 இப்போ எல்லாரும் கொடுக்கலாம். அதுவும் 2 டி பார்கோடுல இது எங்க இருந்து வந்தது?”
அவன் தடுத்தான் “ ஒன்னு புரிஞ்சுக்க. இது ஆனைக்கு அல்வா அரைக்கிலோ கணக்கு”
பழங்காலத்தில் , அரசு அலுவலகத்தில், ஆயிரம் ரூவாய்க்கு கணக்கு இடிக்கிற்து என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அல்வா ரசீது ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி, செலவின் விவரத்திற்கு “ ஆனைக்கு அல்வா அரைக்கிலோ கொடுத்த மேனிக்கு - ஆயிரம் ரூவாய்” என்று எழுதினால் போதும் என்பார்கள். ரசீது வேண்டும், விவரம் வேண்டும். ஆனை அல்வா திங்குமா? அதுவும் அரைக்கிலோவுக்குஆயிரம் ரூவாயா? என்றெல்லாம் கேட்கமாட்டார்கள் அரசாங்கத்தில். இப்படி ஒரு சொல்வழக்கு. அதை ராவ் இன்று நிரூபித்தார்.
சரி. முடிந்தது என, MTNL -ன் Broad band சேவை மீண்டும் எடுத்துக் கொள்ள படிவம் வாங்கப் போயிருந்தேன். அவர்கள் வலைத்தளத்தில் ஒரு போட்டோ, நீங்கள்கூட நம்புவதற்கரிய போட்டோ இருக்கும் ஆதார் அட்டை காப்பிகள் போதும் என்று சொல்லியிருந்தாலும், அங்கு போனதும், எதிர்பார்த்தபடியே “ எலக்ட்ரிஸிடி பில், வாட்டர் பில் எதாச்சும் இருந்தா கொண்டுவாங்க” என்றார்.
ஆதார் அட்டையைப் பார்த்ததும் ஒரு ப்ச் கொட்டி திருப்பித் தந்தார். அந்த அளவுக்கு மோசமாகவா இருக்கேன்?
“ இதுல ஒரு பார் கோடு இருக்கும்,. அதுவும் வேணும். சும்மா அவங்க சொன்னாங்கன்னு க்ரெடிட் கார்டு சைஸ்ல கிழிச்சிருக்கீங்க. செல்லாது” என்றார் அப்பெண்மணி.
“இதுலதான் என் மூஞ்சி பக்கத்துலயே ஒரு 2 டி பார் கோடு இருக்கே? அதோட, கீழ ஒரு நம்பர் வேற இருக்கு. அதை டைப் பண்ணினாலே என் டேட்டா முழுதும் வந்துடும்”
என்றெல்லாம் சொன்னதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
"தப்புங்க, நீங்க சொல்றது. பார் கோடுன்னா என்னன்னு தெரியுமா? இந்த பிக் பஜர்ர், ரிலையன்ஸ் மார்ட்ல எல்லாம் ஒரு ஸ்கேனர் வச்சு , சின்னதா ஒரு லேபிலை சிவப்பு லைட்ல அடிப்பாங்க பாருங்க...” ஒரு பேப்பரைத் தேடி எடுத்து, பால்பாயிண்ட் பேனால்வால் சில கோடுகளைக் கீற்றினார். ‘ இப்படி இருக்கும்”
இனிமே யாராவது பார் கோடு என்றால் ஓடிவிடவேண்டும்.

Monday, April 14, 2014

அவார்டுக்கு எப்படி எழுதுவது?

ரைட்டு. இனி எழுத்து எப்படி இருக்கவேண்டுமென்று பார்ப்போம். விருதுக்கு என்றால், முன், பின் நவீனத்துவ, சர்ரியலிஸ பாணிகளை விழுங்கிவிட்டிருக்க வேண்டும். புக்கர் கிடைத்த புத்தக்ங்கள் வாசிக்கவும். 

“அவன் காலையில் வாசலுக்கு வந்து தெருவைப் பார்த்தான்” என்று ஒரு வரியில் எழுதக் கூடாது. 

வரிக்கு வரி சமூக அவலத்தினை அப்பட்டமாக வெளிக்கொணர்ந்து, அதிர்ச்சியை, படிப்பவன் மூஞ்சியில் அறைவது போல் கொடுக்கவேண்டும். மேற்கண்ட வார்த்தையை ஞானபீடம் வேண்டுமென்றால் “ கிராமத்தின் அந்த சாலை, வெறியுடன் புணர்ந்து விலகிச் சென்ற மனிதர்கள் விட்டுச் சென்ற படுக்கை போல அலங்கோலமாக்க் கிடந்தது. தெருவின் ஓரமான சாக்கடையில் நிர்வாணமாய் ஒரு குழந்தை குத்திட்டு மலங்கழித்துக் கொண்டிருக்க, அதன் பின் , வைக்கோல் போரில் பண்ணையார், வேலைக்காரியை ***** ( எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு கூசுகிற மாதிரி எழுதுங்கள். அவார்ட் வேணுமா வேண்டாமா?). மூடியது போலத் திறந்திருந்த கதவை மூடியபடி திறந்து வெளிவந்த அவன், எதிரே இருந்த யாளித் தூணைக் கவனித்தான். காலங்காலமாக அது அங்கு இருந்து வருவதை அவன் அறிவான். ஒவ்வொரு முறையும், அந்த யாளியுன் முகம் கோபமாக அன்றி, ஏதோ யானை விழுங்கி, மலச்சிக்கலில் திணறும் முகமாகவே அவனுக்குப் பட்டது. இந்த சிந்தனையை அவன் பகிர்ந்தபோது, முதலாளித்துவ பூர்ஷ்வாக்கள் யாளியின் கால்களுக்கு இடையில் அவனைக் கட்டி வைத்தனர். யாளியின் மூத்திர நெடியில் அவன் மூச்சு கொதித்த்தை அவர்கள் உணர்ந்தவரில்லை எனினும், அந்த சதுர வட்டத்துளினின்று அவன் கட்டுடைத்து வெளியேறும் நாள் அருகிவிட்டது என்பதை, காலைச் சூரியனின் கறுநிற ஒளி நிழலில் கண்டிருந்தனர். “

இப்படியெல்லாம் எழுதுவதை விட்டுவிட்டு, நான் புரிய்ற மாதிரித்தான் தமிழ்ல எழுதுவேன் என்று அடம் பிடித்தீர்களென்றால்... welcome to the victims group.

தமிழ் நாவல்? கோட்டி பிடிச்சிறுச்சா?

நண்பர் திருச்செந்துறை ராமமூர்த்தி சங்கர் நாவல் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார். அதுவும் தமிழ் நாவல்.

நல்லா இருந்த ஒரு மனுசன் இப்படி நிம்ஹான்ஸ் கேஸ் ஆகிப்போய்விடுவாரோ என்ற பயத்தில்தான் இந்த பதிவை எழுதுகிறேன். 

முதலில் எதற்கு எழுதுகிறோம்? என்று தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஞானபீட, சாகித்ய அகாடமி கனவு என்றால் முதலில் பேனாவை மூடி வைத்துவிடுங்கள். முன்னேற்பாடுகள் பல செய்யவேண்டும் அதற்கு.

1. யாருக்கும் புரியாத, ஆனால் பரிசு வாங்கியிருக்கிற கதைகளை வாங்கிவையுங்கள். படிக்கவெல்லாம் சொல்லவில்லை. நீங்கள் படிக்க அவர்கள் எழுதவுமில்லை. அந்த பெயர்களை அங்குமிங்கும், பேஸ்புக்கில் அவ்வப்போது எடுத்து விடவேண்டும்.

2.முடிந்தால் த.மி.தா நினைவு பள்ளியின் 7 பி செக்சனில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கும், ஜெய்ப்பூர் லிட்டெரெரி பெஸ்டிவலுக்கும் போய்வரவும். அருந்த்தி ராய், எதோவொரு பெங்காலி எழுத்தாளர் கூட எடுத்த போட்டோக்களை பேஸ்புக்கில் போட்டு :என்ன பாக்கியம் செய்தேன்? என்று எமோஷனலாக எழுதவும்.

3. குறிப்பிட்டு ஒரு மத த்தை தாக்கி எழுதவும். அருந்ததி , மேதா போன்றவர்கள் எழுதிய ரிவ்யூக்களுக்கு ரிவ்யூ எழுதவும். இதை சொந்த காசில் சூனியம் வைத்து ப்ரசுரிக்கவும். எவரும் படிக்கமாட்டார்கள். அது பத்தி நமக்கு என்ன கவலை? இந்த ப்ரசுரங்களை சோஷியல் மீடியாக்களில் ப்ரகடனம் செய்யவும்.

4. வாய்ப்பு கிடைத்தால் மோதியை அடிக்கவும். இல்லை அவர் நல்லவர்னு நினைக்கறேன் என்று சொல்பவர்களை அடிக்கவும். இப்போ ஒரு நல்ல சான்ஸ். க்ரூஸ் என்பவரை ரவுண்டு கட்டி அடிக்க முனைந்திருக்கிறார்கள். உடனே சேர்ந்து, அவர் மீது துப்பிய எச்சிலில் எனது எச்சிலும் இருக்கிறது என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலமும் நிறுவ வேண்டும்.

இப்படி செய்தால் ஒரு வட்டம், அல்லது வட்டத்தினை புகழ்ந்து நிற்கும் மற்றொரு முட்டாள் வட்டம் இவற்றில் சேரமுடியும். இந்த இரண்டும் இல்லாவிட்டால், இந்துத்வ எதிர்ப்பு என்ற வெறுப்பை உமிழ்ந்து கொண்டே இருக்கவும். இளிச்ச்ச் வாயன் எவனாவது கிடைத்தால் அவன் சுவற்றில் உங்கள் வெறுப்பை நக்கலாகவோ, தார்மீக கோபத்தோடோ தெரிவிக்கவும். ஆங்! இப்ப நீங்க அங்கீகரிக்கப் பட்டுவிட்டீர்கள்.

'சரி, என்னவே எழுதணும்? அதை சொல்றதை விட்டுட்டு என்னமோ சளம்பிக்கிட்டிருக்கீரே?” என்று கேட்காதீர்கள். என்ன எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. யார் சார்ந்து எழுதுகிறோம் என்பதுதான் தமிழ்ச் சூழலில் முக்கியம்.

பெண்ணொருத்தி வந்தால்....

”நானும் வந்தேதான் ஆகணுமா,?” என்ற அந்தப் பெண்ணை வியப்புடன் பார்த்தேன். அவர் அப்படியெல்லாம் சொல்கிற ரகமில்லை. இளம் வயதிலேயே அனுபவமிக்க ஆலோசகர். 2003ம் வருடத்திய ப்ராஜெக்ட் அவார்ட் ஒன்று பெற்றவர்.

“நீ வராமல் , அந்த கிழட்டு சர்தார் ஆர்டர் கொடுக்கமாட்டாம்-மா. ஒரு நாள் தகவல் சேகரிக்க , அடுத்தநாள் ப்ரசெண்டேஷன் கொடுக்க என்று ரெண்டு நாள் போதும். இப்ப வேற ப்ராஜெக்ட்ல நீ பிஸி இல்லையே?”
“இல்ல. ஆனா..” என்று இழுத்துவிட்டு ‘ சரி “ என்றார். ஒரு தடவை அந்த நடுத்தர அளவிலான எஞ்சினீயரிங் டிஸைன் கம்பெனிக்குப் போய் வந்திருக்கிறார், எனக்கு முன்பு.

மும்பையின் புறநகர்ப் பகுதி ஒன்றில், கரடு முரடான சாலையில் ஒரு பழைய மில் காம்ப்பவுண்ட் ஒன்றினுள் அந்த கம்பெனி இருந்தது. வாடிக்கையாளர்கள் கேட்டவித்த்தில், கருவிகளோ, அதன் பாகங்களோ டிஸைன் செய்து, ப்ரோட்டோ டைப் கொடுப்பார்கள். சரியாக வந்துவிட்டால், பின்னர் முழு தயாரிப்பும் நடக்கும். வெளிநாட்டு , வணிகம் கணிசம்.

தாங்கள் செய்யும் வேலைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதால் நாட்கள் அதிகமாகிறதோ என்ற எண்ணம் உருப்படியாக சிலருக்கு உதிக்க, எங்களை, அவர்களுக்கு வேண்டியது போல மென்பொருள் ஒன்றை உருவாக்கித் தரச் சொல்லியிருந்தார்கள். 2002-ல் தொடங்கி ஒரு வருடமாகப் பேச்சு வார்த்தை நடந்து, இறுதியில் எங்களை ஒரு சாம்பிள் workflow ஒன்றை உருவாக்கிக் காட்டப் பணித்திருந்தனர். கிழட்டு சர்தாரை நான் ஒரு முறைதான் சந்தித்திருக்கிறேன். பலமாக சிரிப்பார். சர்தார்ஜிகளூக்கே உண்டான திறந்த பேச்சு, உரத்த குரல், விலை என்று வரும்போது புலியாக பேரம் பேசுதல்...விடுங்கள்.

நானும் , ஆலோசகரும் அங்கு போனபோது காலை ஷிப்ட் ஷிப்ட் முடிந்து ஆட்கள் வெளிவந்து கொண்டிருந்தனர். பெண்கள் ஒரு குழுவாக இருந்து மொத்தமாக வெளிவந்து ஓட்டமும் நடையுமாக பஸ் நிறுத்த்த்திற்கு விரைந்தனர். சாலையின் ஓரம் விளக்குக் கம்பங்கள் சாய்திருந்தன. மாலை ஷிப்ட் ஆட்கள் நுழைய வேண்டும்.
சர்தார்ஜியின் அறையில் நிபுணர் அமைதியாக அமர்ந்திருந்தார். சர்தாரின் பேச்சு பொதுவாக இருந்தாலும், பார்வை அவர்மீதே இருந்தது. ஜொள்ளுக்கு வயதில்லை.

“நீ வேணுமான, ஷிப்ட் இன் சார்ஜ்கிட்ட தேவைகள் பத்தி பேசப் போலாம்மா” என்றார் சர்தார். நிபுணர் அமைதியாக எழுந்து வெளியேறினார். இன்னும் இருவர் வந்து சேர, சர்தாரின் அறைக்கு அடுத்த கான்பரன்ஸ் அறையில் புகுந்தோம். நான் கம்பெனியின் தோற்றம் வளர்ச்சி, நாலு வருட பைனான்ஷியல் புள்ளி விவரம் (சற்றே ஜோடிக்கப் பட்டவை) குறித்து அளந்து கொண்டிருந்தேன்.
இத்தனை வருட அனுபவத்தில் தெரியும் ஒரு விவரம் - நீங்கள் கார் கேரேஜில் கம்பெனி தொடங்கி நாலு பில்டிங் வாங்கிப் போட்ட்தையும், இரு பணியாளர்களோடு தொடங்கிய கம்பெனி இன்று 200 பேர் அமெரிக்காவில் ( 150 பெஞ்ச் -இல்) இருப்பதையும் ஒரு பயலும் கேட்கமாட்டான். சுத்த வேஸ்ட். நேராக பாயிண்ட்டுக்கு வந்துவிடுங்கள்.

எனது செல்போன் அதிர, மன்னிப்புக் கேட்டபடி எடுத்துப் பார்த்தேன். மெஸ்ஸேஜ்? அதுவும் என் நிபுணரிடமிருந்து? ..” Please come out. Urgent" என்ற வகையில். அதிர்ந்து போனாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் ’ஒரு நிமிடம்’என்றபடி வெளியே வந்தேன். அவர் கண்களில் நீர் கட்டியிருந்தது.

“இந்த ப்ராஜெக்ட் வேணாம் சுதாகர். இவங்க.. நடத்தை சரியில்ல. போன தடவையே கவனிச்சேன். மேல வந்து விழறது, கையப் பிடிக்கறது. தொட்டுக் கூப்பிடறது... இன்னிக்கு அவங்க ரூம்ல பேசிட்டிருக்கும்போதே, கொஞ்சம் விரசமா ஜோக்.. அதுவும் இன்னொருத்தனும் சேந்துகிட்டு..”

”ஆல் ரைட். நான் சர்தார் கிட்ட பேசிக்கறேன். டீம் பூரா ஆம்பளைங்களாப் போட்டுறலாம்.”

“இல்ல. ப்ராஜக்ட விட்டுறலாம்-ங்கறேன். இங்க வேலை பாக்கற பொம்பளைங்களும் ரகசியமா சொன்னாங்க. பைசா கொடுக்க மாட்டாங்களாம். வேணும்னே அது இதுன்னு சொல்லி, லீகல் கேஸ் வரை போவாங்களாம். பார்ட்டி , விட்டாப் போதும்னு ஒடவைப்பாங்களாம். இதுக்கு முன்னாடி மூணு கம்பெனி விட்டுட்டுப் போயிருக்காங்க. பொம்பளைங்களுக்கு பாதுகாப்பே கிடையாதுங்கறாங்க”

நான் அமைதியாக இருந்தேன். என் டார்கெட்-ல் பெரிசாக ஓட்டை விழும். அமதாபாத்தில் பாஸ் குதியோ குதி என்று குதிப்பான்.

உள்ளே நுழைந்தேன். “ ஸாரி, என்னோட வந்தவருக்கு அவசரமாக மற்றொரு ப்ராஜெக்ட்டில் அவசர அழைப்பு வந்திருக்கிறது. எனவே அவர் இப்பவே போகிறார்”

“அப்ப டெமோ?” என்றார் சர்தார் கோபமாக. “ நாளைக்கு , அடுத்த நாள் வந்து டெமோ கொடுக்கச் சொல்லுங்க. நீங்க அனாவசியமா வரவேணாம்”.

“அத அப்புறம் பேசலாம்” எனத் தவிர்த்தேன். பின் சர்தாரின் அறைக்குச் சென்றபின் அவரது பேச்சைக் கூர்ந்து கவனித்தேன். அடிக்கடி ஒரு ஜோக். அதுவும் சற்றே X ரேட்டிங். அருவருக்கக் கூடியதில்லை எனினும் பெண்கள் இருக்கையில் பேசும் பேச்சல்ல. அவரோ மிகவும் வெளிப்படையாக , பெண் சூபர்வைஸர் வ்ந்து நிற்கும்போதும் ஜோக்குகளை வீசினார். கூட இருப்பவர்கள் எடுத்து விட, தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களின் பெயர் கொண்டே சில ஜோக்குகள். எனக்கு ஓரளவு கம்பெனியின் தரம் புரியத் தொடங்கியது.

இரு நாட்கள் கழித்து சர்தாரிடமிருந்து போன் வந்தது.. “ ஸாரி” என்றேன். “ எங்கள் முழு டீம், மற்றொரு ப்ராஜெக்டில் ஈடுபட்டுவிட்ட்து. அடுத்த ப்ராஜெக்ட் நாங்கள் எடுக்க இன்னும் ஆறுமாதமாகும்” சர்தார் திட்டியபடி போனை வைத்தார். அமதாபாதில், எனது பாஸ்-க்கும் அவரது தலைவருக்கும், ஹெச். ஆர் தலைவருக்கும் ஏன் இந்தப் ப்ராஜெக்ட் நாம் எடுக்க்க் கூடாது? என்பதை விளக்கி ஒரு மின்ன்ஞ்சல் அனுப்பினேன். அனைவருமே அந்த முடிவை ஆதரித்தனர். வேறு ப்ராஜெக்ட் கிடைக்காமலா போய்விடும்?. ஆர்டகளுக்கு, இன்னும் கொஞ்சம் கூடுதலாக நாய் மாதிரி சுத்தணும். ஆனா நாய் மாதிரி எல்லா எலும்புத் துண்டுக்கும் வாலாட்டக் கூடாது.

11 வருடங்களின் பின் இன்று அதே வளாகத்தில் சென்றிருந்தேன். அந்தக் கம்பெனி அங்கு இப்பொது  இல்லை. தெருக்கள் அகலமாக, விளக்குக் கம்பங்கள் சீராக இருந்தன. ஒவ்வொரு கம்பெனியின் நுழைவாயிலிலும், உள்ளே கட்டிடங்களின் சுவர்களிலும்,” வேலை செய்யுமிடத்தில் பாலியல் வன்கொடுமை, சீண்டுதலுக்கு ஆளாகிறீர்களென்றால், பயப்படாமல், எங்களிடம் பேசுங்கள்” என்று பெரிய சுவரொட்டிகள் , செல்போன் எண்களுடன், மனித வள துறை அதிகாரியின் மின்னஞ்சல் விவரங்களுடன்...மாலை ஷிப்ட்டில் பெண்கள் எவரும் இல்லை.
Anathakrishnan Pakshirajan பி.ஏ.கே சார் டிவியில் சொன்னது போல் எதிர்காலம் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. எங்கிருந்து எங்கு வந்துவிட்டோம்! இன்னும் போகலாம். போகவேண்டும்.

ஜெய வருடம் நம்பிக்கையையும், தைரியத்தையும் தரட்டும்.

Tuesday, April 08, 2014

திறமைக்கு என்ன விலை?

அந்தப் பிரபலமான தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியின் கார்ப்பரேட் அலுவலகத்தில் நானும் என் விற்பனைத்துறைப் பிரிவு நண்பர்களும்  அமர்ந்திருந்தோம். இரண்டு நாட்கள் முன்புதான் ஆர்டர் தருவதாகச் சொல்லி இனிக்க இனிக்கப் பேசி வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். இன்று காலை ஒரு போன் “ சேர்மன், ஆர்டரை நிறுத்தி வைச்சுட்டாரு. வந்து பேசுங்க.”
என்னமோ ஏதோவென அடித்துக் கொண்டு  வந்திருந்தோம். மார்ச் இறுதி வேறு, ஆர்டர்கள்  வராவிட்டால் வீட்டில் அடுப்பு எரியாது.

இத்தனைக்கும் அவர்கள் எங்களது பழைய வாடிக்கையாளர்கள். நிறைய கருவிகள் எங்களிடமிருந்து வாங்கியிருக்கிறார்கள். என்ன திடீரென்று? எனத் தெரியவில்லை. காம்படிஷன் , விலையைக் குறைத்துவிட்டானோ?
”சேர்மன் கூப்பிடறாரு” வந்து சொன்ன பர்ச்சேஸ் ஆபீஸர் முகத்தில் ஈ ஆடவில்லை. எங்களுக்கு பரிந்து பேசப்போய் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் போலும். சேர்மன் ஒரு பஞ்சாபி. தங்க கோதுமை நிறம். பாக்கிஸ்தான் பிரிவினையில் மூல்தானிலிருந்து நடந்தே இந்தியா வந்தவர். இங்கு போராடி ஜெயித்து... இப்போதும்  கம்பீரம் குறையாத, பார்த்தவுடன் மதிப்பை ஏற்படுத்திவிடும் முகவெட்டு.
பெரிய விலையுயர்ந்த மர டேபிளின் மறுபுறம் அவர் கோட்டு சூட்டுடன் அமர்ந்திருந்தார். தங்கமெனப் பளபளக்கும் இரு நீண்ட ஃபவுண்டன் பேனாக்கள் அவரது டேபிளில்  தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் போல தலைகுத்தி நின்றிருந்தன. மிக விலையுயர்ந்தவை. இன்றும் அவர் கையெழுத்து, ஃபவுண்டன் பேனாவில்தான் இடப்படும். அவர் பின்னால் சுவரில் பெரிய ஓவியம். Souza , மேத்தா என்று யாராவது இருக்கும். அதெல்லாம் பார்க்கும் நிலையில் நாங்களில்லை.
“சார். கூப்பிட்டீஙகளாமே?” தயங்கித் தயங்கி விற்பனைத்துறை நண்பர் தொடங்கினார். எனக்கு சேர்மனை வெகுகாலமாகத் தெரியும். ஆனால் இன்று கண்டுகொள்ளாத்து போல் காட்டிக் கொண்டார். புரிந்தது - பேரம் பேசப் போகிறார் மீண்டும்.

“என்னயா கொட்டேஷன் கொடுத்திருக்கே?” சேர்மன் ஒரு காகித்த்தை தூக்கி எங்கள் முன் போட்டார். கோபம் காகிதம் தொப் என விழுந்ததில் , எங்கள் மேலே தெறித்தது.
“சரியாத்தான் சா...”
சேர்மன் பேசி முடிக்க விடவில்லை. விடமாட்டார் எப்பவும்
“என்ன சரி? கடைசி ஐட்டம் பாரு.”
“ ட்ரெயின்ங் மெட்டீரியல். இது புதுசா சேர்ந்திருக்கவங்களுக்கு வேணும்னு...”
“ அது ஷிப்மெண்ட்ல வராது. டவுன்லோட் பண்ணனும்னு போட்டிருக்கே?”
“ஆமா, இதெல்லாம் ஈ. புக் சார். ஆன் லைன்லயும் ட்ரெயினிங்க் எடுக்கலாம். எப்ப வேணும்னாலும் அவங்க விட்ட எடத்துலேர்ந்து தொடர்ந்து, எத்தனை தடவை வேணும்னாலும் படிக்கலாம்.”
“முந்தியெல்லாம், உங்க ஷிப்மெண்ட்ல தடி தடியா, வழுவழுன்னு பேப்பர்ல அச்சு போட்டு புக் வரும். அதுக்கு விலை அதிகம். நீ பைசா கேட்டே, நியாயம். இப்ப என்னடான்னா, நீ ஒரு இ மெயில் அனுப்பிவியாம். அங்? அதுல யூஸர் பெயர், பாஸ்வேர்டுன்னு கொடுப்பியாம். நான் அதை வச்சு, உன் வலைத்தளத்துலேர்ந்து டவுன்லோடு பண்ணனுமாம்.”
“கரெக்டு சார். இப்பவே வேணும்னாலும் டவுன்லோடு பண்ணலாம். கருவி வர்றதுக்கு முன்னாடியே இவங்க பயிற்ச்சி “
 “ ஒரு இ மெயிலுக்கு இத்தனை டாலரா? கொள்ளை அடிக்கறீங்க. ஒரு பிரிண்ட் செலவு, பைண்டிங்க் செலவு, பேப்பர் செலவு, அனுப்புற செலவு கிடையாது. இதுக்கு எதுக்கு இவ்வளவு டாலர் கொடுக்கணும்? வுடு. ஆர்டர் கேன்ஸல் பண்றேன்”
விற்பனைத் துறை நண்பர் சங்கடமானார். இந்த முதியவருக்கு எப்படி புரிய வைப்பது. அதுவும் சேர்மன்,.. ரொம்ப பேசவும் முடியாது. பரிதாபமாகத் திரும்பிப் பார்த்தார்.
“சார்” என்றேன். “என்னை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்..”

“ நீ என்ன சொல்லப் போற? ஏன் அதே விலைன்னு விளக்கமெல்லாம் சொல்லாதே. எனக்கு நேரமில்லை”
“ அதில்ல சார். உங்க கிட்ட முந்தி ஒரு எம்.எஃப் ஹூசைன் ஓவியம் இருக்கும். அதைக் காணமேன்னு கேக்க..”
“இங்க” என்றார்,  மார்பில் தொட்டுக் காட்டியபடி, புன்னகைத்து.
“ அதுல  இருக்கிற மெட்டீரியலை தனியா விலை போட்டா எவ்வளவு இருக்கும் சார்? தங்க முலாம் விட்டுறுங்க. ப்ரேம் சார்ஜ் தனியா..”
“ஹ ஹா” சிரித்தார் “ இதெல்லாம் இருக்கிற மெட்டீரியலுக்கு மதிப்பில்லை மேன்.அதெல்லாம் அந்த திறமைக்கு மதிப்பு.”
“இந்த ட்ரெயினிங்க் மெட்டீரியல் புத்தகமெல்லாம், கடைக்குப் போட்டா மிஞ்சிப் போனா நூறு ரூவா கிடைக்கும். ஆனா , நீங்க பத்தாயிரம் கொடுத்து வாங்கினீங்க போன வாட்டி”
” ஸோ?” என்பது போல பார்த்தார்.
“ 9990 ரூபா, அத எழுதினவனோட திறமைக்குக் கொடுத்தீங்க. இல்லையா.? அதே திறமைதான் சார் இந்த ஈ புக்லயும் இருக்கு. நீங்க முந்தி கொடுத்த விலைதான் இப்பவும் கேக்கறோம். “
அவர் சற்று நேரம் விழிகளில் ஊடுருவினார். மணியை ஒலித்து ப்யூனை வரவழைத்து”சாய் - நாலு” என்றார். நாங்கள் பெருமூச்சு விட்டோம். மனிதர் சஹஜமாகிவிட்டார். ஆர்டர் பிழைத்த்து. நாங்கள் பிழைத்தோம்.


எதுக்கு சொல்ல வந்தேன்? ஆங். ” மின் புத்தகங்களுக்கு ஏன் சார் இவ்வளவு விலை? இலவசமாக, இல்லே மிகவும் மலிந்த விலையில் , கொடுக்கவேண்டியதுதானே? பேப்பர் விலை, அச்சடிக்கும் விலை, விற்பனைக் கூடத்தின் விலை என்று ஒன்றுமே இல்லையே இதில்?”  என்று சிலர் கேட்டிருந்தனர்.

Friday, March 28, 2014

பொறுப்பு - உணர்வு

Daniel Goleman ன் Focus   படித்துக் கொண்டிருந்தேன். சிந்தனையை நிறுத்திப் பிடித்தது ஒரு வரி
“The brain's right hemisphere recognizes the feeling depicted , while the left understands the name and what it means"

சுருக்கமாக - மூளையின் வலது பகுதி, வெளியுலகிலிருந்து கிடைக்கும் தூண்டல்களிலிருந்து உணர்வுகளைப் புரிந்து கொள்கிறது. இடது பகுதி அது எந்த உணர்வு என்பதை வார்த்தைகள் மூலம்,முன்பு புரிந்து கொண்டதை தனது தகவல் கிடங்கில் கிடக்கும் சொற்களோடு இணைத்து முழுமையாகப் புரிந்து கொள்கிறது.

 கவனிக்கவும் முழுமையாக மட்டுமே - 'சரி'-யாக இல்லை.

ஏன் 'சரி'-யாக என்று சொல்லவில்லை? என்றால், எனது இந்தப் புரிதல் ஒரு அனுபவத்தில் நிகழ்ந்தது.

இரு வருடங்கள் முன்பு , டெல்லி விமான நிலையத்தில் மும்பை செல்ல அழைப்பிற்காகக் காத்திருந்தேன். அருகே ஒரு வயதான பெண்மணி. சற்றே தளர்ந்த விழிகள், முன்புறம் நரைத்த முடி. 60- 65 வயது மதிக்கத் தக்கவர். இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அவருக்கு மறுபுறம், ஒரு நவ நாகரிக யுவதி. படு ஸ்லிம்மாக, உடலை ஒட்டிய பேண்ட், சிறிய டீ ஷர்ட். இடுப்புப் பகுதியில் டீ ஷர்ட்டை அடிக்கடி இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தாள் . இப்படி குட்டையாக போடுவானேன்? இழுத்து விடுவானேன்?

விடுங்கள் அது முக்கியமில்லை. ஏனெனில்  அவளது சிறு குழந்தை அங்குமிங்கும் தத்தக்கா பித்தக்கா என ஓடிக்கொண்டிருந்தது. அதை சற்றே உயர்ந்த குரலில் அதட்டுவதும், அதனை ஓடவிட்டுப் பின் ஓடிப்போய்ப் பிடித்து எடுத்து வருவதுமாக அப்பெண் அலட்டிக் கொண்டிருந்தாள். டிபிகல் டெல்லி கலாச்சாரம். உரத்த குரலில் கொஞ்சுதல், பின் திட்டுதல் என நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது.

குழந்தை எதையோ கொட்டி விட்டது என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. இந்தப் பெண் இடுப்பில் கை வைத்தவாறு “ look at me. what have you done? haan?" என்று அனைவரும் பார்க்க, அதட்டினாள். குழந்தை அவளை ஏறிட்டு சில நொடிகள் உற்றுப் பார்த்து , சர்வ சாதாரணமாக மீண்டும் ஓடத் தொடங்கியது. அவள் , அருகிலிருந்த பெண்மணியைப் பார்த்து போலி அலுப்புடன் சொன்னாள் “ Not at all having fear. He does not know fear. I am sooo tired , you know".

அந்தப் பெண்மணி ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தார். அந்தப் பெண் , குழந்தையுடன் விமான அழைப்பு வர எழுந்து சென்றதும் என்னை நோக்கி சரிந்தார். மிக மெல்லிய குரலில்
“She is blessed with motherhood. But she is not a mother yet" என்றார்.

வியப்புடன் அவரை ஏறிட்டேன். பின் பேசியதில் அவர் டெல்லியில் ஒருகல்லுரி ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர் என்றும் இந்தூர் செல்கிறார் என்றும் தெரிந்தது. எனது விமானத்தில் , அதுவும் எனது அருகிலிருந்த இருக்கையில்தான் வருகிறார் என்றும் தெரிந்ததும் இருக்கையில் அமர்ந்த பின்னும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“ புரிதல் என்பது இரண்டின் சேர்க்கை. தூண்டுதல்களின் மூலம் கிடைக்கும் உணர்வுகள் மற்றும் அதனைப் பற்றிய முன் அனுப்வங்கள், தகவல்கள். உணர்வுகளுக்கும், முன்னறியும் தகவல்களுக்கும் ஒரு தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம். குழந்தைப் பருவத்தில் இத் தொடர்பு தவறாக ஏற்பட்டு விட  வாய்ப்பு அதிகம். அந்தப் பெண்ணின் குழந்தைக்கு, கோபம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. வார்த்தைத் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது கோபம் என்பது இன்ன வகையான முக பாவம், குரல் ஏற்றத் தாழ்வு என்று தெரியாமல் போயிருக்கலாம். இதனைச் சொல்லித் தரவேண்டியது பெற்றோரின் கடமை. இவள் அதையெல்லாம் செய்யாமல், ஒரு தாயாக செய்ய வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு, தனது தாய்மையை மட்டும் கொண்டாடுகிறாள். இது பொறுப்பற்ற சுயநலம்”

அசந்து போனேன்.

“ நீயெல்லாம் சிறுவனாக இருக்கும்போது ராமாயணம், மஹாபாரதம் கேட்டிருப்பாய். காமிக்ஸ் புத்தகம் படித்திருப்பாய். அதுல கோபம்னா, கடுங்கோபம், வெகுளி, ஆத்திரம், சினம் -னு நிறைய வார்த்தை வரும். அதோட, கதை சொல்றவங்க முகத்தில, குரல் மாடுலேஷன்ல ஒரு உணர்வு தெறிக்கும். உன்னை அறியாம, இந்த வார்த்தைக்கு இன்ன உணர்வு, இன்ன குரல் மாடுலேஷன்னு உன் மூளை பொருத்திக்கும். இப்ப? கார்ட்டூன் விட்டா குழந்தைகள் எதிலிருந்து கத்துக்கும்? ஒரு 2 D சித்திரம், கார்ட்டூன் என்ன உணர்வைப் பெரிசாக் கத்துக் கொடுத்து விடும்.? ”சின்சென்...” என்று அலறும் ஒரு விகார ஜப்பானிய முகம்.. அதுவா ரொளத்திரம், கோபம்? இதுக்குத்தான் கதை கேக்கணும், நல்லா கதை சொல்ற்வங்க வீட்டுல வேணும்-ங்கறது. "

" கூட்டுக் குடும்பம் அவசியம்னு சொல்றீங்க?”

“ அப்படி இல்ல. கூட்டுக் குடும்பமா இருந்துட்டா மட்டும் போதாது. ஆட்களுக்கு கதை சொல்லத் தெரியணும். கூட்டுல இருந்துட்டு சண்டை போட்டுக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. பெற்றோர் கதை சொல்லணும். அதுல ஆர்வம் இருக்கணும்.குழந்தை வளர்ப்பு , ஒரு தார்மீகப் பொறுப்பு, ஒவ்வொரு அப்பனுக்கும், அம்மாவுக்கும்.”

அவர் இந்தூரில் இறங்கிப் போனபின்பும் நான் இதனை சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று மீண்டும் என் நினைவுகளில். எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை?

Tuesday, March 18, 2014

7.83 ஹெர்ட்ஸ், புதிய நாவல் மின்னூலாக வெளியீடு

எனது இரண்டாவது நாவல் 7.83 ஹெர்ட்ஸ் சமீபத்தில் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் அச்சு வடிவம் இன்னும் இரு மாதங்களில் வம்சிபுக்ஸ் வெளியீடாக வெளிவரும். 

இதுவும 6174 போல அறிவியல் சார்ந்த புதினம். ஆனால், கணிதப் புதிர் ,புதிர்ப் பாடல்கள் என்றெல்லாம் இல்லாமல், அறிவியல், மரபணுவியல் சார்ந்த ஒன்றாக அமைத்திருக்கிறேன். 

மின்னூல் ஏன்?  கடல் கடந்து வசிக்கும் நண்பர்கள், மேலும் இந்தியாவிலேயே பல பகுதிகளில் கூரியர் டெலிவரி சரியாக இல்லாத இடங்களில் இருக்கும் நண்பர்கள், அச்சு வடிவ பிரதிகள் கிடைப்பதில் இருக்கும் சிரமத்தைத் தெரிவித்தனர். 6174 நாவலுக்குக் கிடைத்த பின்னூட்டங்களில் எனக்குக் கிட்டிய ஒரு தகவல் இது. 

மின்னூலாக இருக்குமானால், எளிதில் தரவிறக்கம் செய்து வாசிக்கவும் முடியும். தற்போது அமேசான்.காம் தளத்தில் மட்டுமே கிடைக்குமாறு செய்திருக்கிறேன். இது எனது கன்னி முயற்சி; எனவே போதிய கட்டுப்பாடுகளுடன் , எச்சரிக்கையாக ஒரேயொரு தளத்தில் மட்டுமே பரிசோதித்து பார்த்திருக்கிறேன். சில மாதங்களில் பிற ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐபுக் தளங்களிலும் கிடைக்கும். 

https://www.amazon.com/dp/B00IP00X72 என்ற நிரலியைச் சொடுக்குவதன் மூலம் இப்புத்தகத்தின் பக்கத்தை , அமேசான்.காம் -ல் நீங்கள் அடையலாம். 

படித்துவிட்டு உங்களது மதிப்பீட்டைத் தரவும் என்ற வேண்டுதல்களுடன்
க.சுதாகர்.  

Tuesday, March 04, 2014

சீறுவோர்ச் சீறு - சிறுகதை

"விமானம் கிளம்ப இன்னும் ஒரு மணி நேரமாகும். Technical Snag" என்ற ground staff விமானப் பணிப்பெண் நட்புடன் சிரித்தாள். இந்த சிரிப்பு இரண்டு மணி நேரம் அவள் என்போல் காத்திருந்தால் நட்புடனோடு இருக்குமா? என்ற சந்தேகத்தோடே மீண்டும் வந்து அமர்ந்தேன்.
சாரிஎன்று காலைத் தொட்டு கன்னத்தில் ஒற்றிக்கொண்ட மனிதர் அடுத்த இருக்கையில் அமர்ந்தார். நானும் அவரை லேசாகத் தொட்டு கன்னத்தில் ஒற்றிக்கொண்டேன். கால் இடறிய மனிதர் புன்னகைத்துஇன்னும் ஒரு மணி நேரம்என்றார். “ குறைந்த பட்சம்என்றேன்.
மயூர் சோலங்க்கி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். விலை அதிகமான வேதியல்பொருட்களையும் அவற்றின் பண்புகளை அளவிடும் கருவிகளையும் தயாரிக்கும் சொந்தக் கம்பெனி வைத்திருந்து, அதனை நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டு, இப்போது உற்பத்தித் துறையில் கன்ஸல்ட்டிங்க் செய்து கொண்டிருக்கிறாராம். ன்னை விட இரு வருடங்கள் இளையவர். உயரமாக , வாட்ட சாட்டமாக கம்பீரமாக இருந்தவரின் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் இழையோடியதாகப் பட்டது. சிறிது பேசிக்கொண்டிருந்த பின் , பீன்ஸ் & லீவ்ஸ் -ல் அவருக்கும் சேர்த்து  காப்பி வாங்கி வந்தேன்.
எனது புதிய நாவலில் பிழைகள் திருத்துவதில் மூழ்கியிருந்தேன். மெல்ல என் புறங்கையைத் தொட்டார்.’ படா பாய் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கணும். ஏனோ சொல்லணும்னு தோணுது.தவறா இருந்தா மன்னிக்கணும்என்று தொடங்கினார். லாப்டாப்பை மூடி வைத்தேன்.  
இஞ்சினீயரிங்கில் கூடப் படித்த நண்பர்கள் சமீபத்தில் 20-ம் வருட get together நடத்தினார்கள். பல வருடங்களாகப் பார்க்கா பலரைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி எனக்கு. போன் நம்பர்கள் , மின்னஞ்சல் முகவரிகள் எல்லாம் பரிமாறி, ஒரு கூகுள் குழுவும் அமைத்தோம். நாந்தான் அதை முன்னின்று முனைப்புடம் செய்யவும் செய்தேன்.” ஒரு கணம் நிறுத்தினார்.
அதில் ஒரு பெண். எல்லாரோடும் மிக சகஜமாகப் பழகுவாள். இப்போதும் அப்படியே கலகலவென இருந்தாள். மின்னஞ்சல் குழுவில், அவளைக் குறித்து, கிண்டலாகத்தான் கணவர் பெயரைப் பின்னால் போட்டிருக்கிறாயே? பாவம் அவர்’  என்று எழுதியிருந்தேன். அதற்கு அவள்நீ பெண்கள் பின்னால் அலைகிறாய். நீ மண வாழ்க்கையில் நிம்மதி இல்லாதவன்என்று அனைவருக்கும் பொதுவாகக் கிடைக்குமாறு எழுதிவிட்டாள். “ மனிதரின் முகம் நினைவில் மேலும் கனத்தது.
சட்டென குளமான கண்களோடு என்னை ஏறிட்டார். உதடுகள் துடிக்கநான் அப்படிப் பட்டவனில்லை அப்படி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனக்கு நண்பர்கள் கிடைத்தார்களே என்ற உற்சாகத்தில், கல்லூரியில் இருந்தது போலவே அதே இளமை மனத்துடன் இருந்துவிட்டேன். அதுதான் தவறோ?”
உங்கள் கருவியில் லேசர் உபயோகிப்பீர்கள் இல்லையா?” என்றேன்
ஆமாம்.”
அதில் ஒரு லேசர் கற்றை இரண்டாய்ப் பிரிக்கப்படும். அதுவரை இரண்டுக்கும் ஒரே அகடு, முகடுகள். ஒரே அலை நீளம், அதிர்வெண். இரண்டும் வேறு வேறு ஊடகங்களில் பயணித்து மறுபுறம் வந்து சேரும்போது ஒன்றாக இருப்பதில்லை. ஒன்றின் அலை நீளம் ஊடகத்தால் மாறியிருக்கும். ஒன்றாக சேராது. இதுதானே நீங்கள் பயன்படுத்தும் கருவியின் அடிப்படை தத்துவம்?”
ஆம்என்றார்எந்த அளவு அதன் நீளம் மாறுகிறதோ அதை வைத்து அந்த ஊடகத்தின் மூலக்கூறுகளை , அடர்வை அறியமுடியும்
நீங்களும் உங்கள் நண்பர்களும் கல்லூரியில் ஒரே அலைவரிசை கொண்டிருந்தீர்கள். அதன்பின் கிடைத்த, சமூக அனுபவங்கள் வேறுவேறு. இப்போது சேரும்போது எப்படி அதே ஒத்துப்போகும் அலைவரிசையை எதிர்பார்க்கமுடியும்?”
அது புரிகிறது அண்ணா. ஆனால் ஏன் அப்படி ஒரு வெறுப்பை உமிழ வேண்டும்? அந்த அளவுக்கு நான் ஒன்றும் மோசமாக நடந்து கொண்டு விட வில்லையே? ”
பெண்களுக்கு எச்சரிக்கை உணர்வு அதிகம். அதிகமான உரிமையோடு பேசினாலோ, பழகினாலோ அந்த எச்சரிக்கை மணி ஒலித்துவிடும். சில தவறான அபாய ஒலியாகவும் இருக்கலாம். விடுங்கள். மேற்கொண்டு, நிஜமாகவே உங்களை, உங்கள் நட்பை மதிப்பவர்களிடம் பேசுங்கள். முப்பது நண்பர்களில் ஓரிருவர் இப்படி நடந்து கொண்டால் இருவத்தி எட்டு பேரும் மோசமானவர்களல்ல. நீங்கள் என்ன பதில் கொடுத்தீர்கள்?” என்றேன்.
ஒன்றும் செய்யவில்லை. விட்டுவிட்டேன். நாம ஏன் அந்த அளவுக்கு தரக்குறைவாப் போகணும்?-னு நினைக்கறேன்
அப்ப விடுங்க.”
அதான முடியலை? என்றார் பரிதாபமாக. அவரை உற்றுப் பார்த்தேன். அவருக்கு ஏதோ சொல்லவேண்டும்போல இருக்கிறது. ஆனால் சமூக விதிகளை அனுசரித்து , ஒரு கனவானாக நடிக்க முயல்கிறார். அனுகணமும் தோற்கிறார்.
 “இது மாதிரி உங்களிடம் பேசுவது போல் பகிர்ந்து கொண்டால் ஆறிவிடாதா. அவள் அப்படியே நினைத்துப் போகட்டும். என் நண்பர்களுக்கு நான் யார் என்று தெரியும்:”
பகிர்தல் என்பது மூடிய குக்கரிலிருந்து சீட்டி ஒரு முறை இருமுறை மேல் தூக்கி, அதிகப்படியான அழுத்த்த்தை இறக்குவது. ஆனால், அடுப்பிலிருந்து சூடு கிடைக்கும்வரை, குக்கர் கொதிக்கத்தான் செய்யும்”
என்ன செய்யணும் படா பாய்?” அவர் முகத்தைத்தில் கைக்குட்டை பரப்பி வியர்வையில் இயலாமையைத் துடைக்க முயன்றார்
நீங்கள் ஒரு எதிர்மொழி கொடுக்கவேண்டும். அது காட்டமாக அவள் சொன்னது போலத்தான் இருக்கவேணுமென்பதில்லை. உங்கள் மனத்தின் இயல்புக்கு ஏற்றமாதிரி,மென்மையாகவோ, பூடகமாகவோ, சிரிப்பினூடே உள்குத்துடனோ, அல்லது சுடு சொற்களாலோ எப்படியோ .. தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்த அழுத்தத்தில், உஷ்ணத்தில் நீங்கள்தான் வெந்து போவீர்கள்
அது நமது பண்பாடு இல்லை. அப்படி பெண்களிடம் கோபமாகப் பேசும்படி நான் வளர்க்கப்படவில்லை
பண்பாடு என்பதைத் தவறாகப் புரிந்துகொள்வதால் வரும் சிக்கல் இது. அந்தப் பெண்களை மட்டும் உங்களிடம் இழிவாகப் பேசும்படி வளர்த்திருக்கிறார்களா? இல்லையே? அவர் தவறும்போது அதனை இடித்துரைக்க வேண்டியது உங்கள் பண்பாடு
அவர் சமாதானமாகவில்லைஇல்லை படா பாய். இது கல்ச்சருக்கு ஒத்து வராத ஒன்று. என்னால் முடியாது
கொஞ்ச நேரம் முன்பு என் காலைத் தவறுதலாக எத்தியவுடன் என்ன செய்தீர்கள்?”
வணங்கினேன். உடல் ஒரு கோயில் அண்ணா
உடல் கூட ஒரு கோயில் என்றால் அதிலிருக்கும் மனம் அதிலும் உயர்ந்தது இல்லையா? அதனை அவமதிப்பது பாவம் என்பதையும், அதன் மரியாதையைக் காக்க வேண்டியதும் பண்பாடு இல்லையா?” மீறினால் தட்டிக் கேட்கவேண்டியது நமது கடமை. அதைச் செய்ததாக நினைத்துப் போங்களேன்
அவர் எழுந்தார் . “ரொம்ப நன்றி. படாபாய். யோசிக்கிறேன்

விமான அழைப்பு வர, நானும் எழுந்தேன்முன்னிருந்த பளபளத்த பித்தளைப் பலகையில் என் முகம் தெரிந்தது. சில கணங்கள் உற்றுப் பார்த்தேன். மயூர் சோலங்கி தெரிந்தார்