Tuesday, November 15, 2005

கொங்குதேர் வாழ்க்கை

கொங்குதேர் வாழ்க்கை - நூல் கருத்து

திரு. எஸ்.சிவகுமார் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை -பாகம் 1( பதிப்பகம் யுனைட்டட் ரைட்டர்ஸ்) படிக்கக் கிடைத்தது. இது வந்தது 2003ம் வருடம். எப்போதுமே நான் சோம்பேறி என்பதால், என்னை இப்போதும் மன்னிக்கவும்!

நூலின் முன்னுரைக்கு முன் எழுதிய ஒரு குறியீட்டுக்காட்சி
தமிழரின் இப்போதைய தலைமுறை (புதுக்குடி)அதன் மொழி, பண்பாட்டை அறியாது எங்கோ விரைகின்றது. இதனைக் கண்டு வேதனைப்படும் கிழவனாக ஒரு குறியீடு அமைத்திருக்கிறார். தான் கண்ட கவிதைச் செல்வத்தைப் புதிய தலைமுறைக்குக் கொடுக்க நினைக்கிறான் அக்கிழவன். அது ஏற்கப்படுமா என்ற தயக்கம் அவனுக்கு இழையோடுகிறது...

உணர்வு பூர்வமான இக்குறியீடு தேவையில்லையோ எனத் தோன்றுகிறது. ஏனெனில், தெளிவாக அவரது குறிக்கோளாக உள்ளே முன்னுரையில் சொல்கிறார்
" ...என் ஆர்வ்த்தையே அடிபடையாக வைத்துச் செய்திருக்கிறேன். மரபில் ஆர்வம் இல்லாத புதிய தலைமுறையினருக்கு இத்தொகுப்பு ஆர்வத்தை ஏற்படுத்துமானால் அதையே எனக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுவேன்"

'எடுக்கப்பட்ட பாடல்கள் ஒரு சுவைக்கான மாதிரிதான். இதனினும் உங்களுக்குப்பிடித்த பாடல்கள் இந்நூல்களில் இருக்கக் கூடும் ..'.
இது போல பல rider clause வைத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் பாடல்களின் தொகுப்பு அவரது தேர்வின் திறனைக் காட்டுவதாக ஒவ்வொரு பாடல் தேர்விலும் மிளிர்கிறது.

அகம், புறம் என திணைகளில் திணறாது இரண்டிலும் நேர்த்தியாக பாடல்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

முதலில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, காப்பியங்கள் எனப் போகிறது பாடல்களின் தேர்வு.

இரு சுவைகளை அதிகம் காட்டியிருப்பதாகப் படுகிறது.
ஒன்று :அவலச் சுவை

உதாரணமாக
பாரிமகளிர் பாடல் "அற்றைத்திங்கள் ",
கபிலர் பாடியது "தீநீர்ப் பொருங்குண்டு சுனைப்பூத்த குவளை.." ( பாரி இறந்ததும், பாரிமகளிரின் அறியாப் பருவம் கண்டு இரங்கிப்பாடியது)
சீவகசிந்தாமணி "வெவ்வாய்ஓரி முழவாக...." சீவகன் சுடுகாட்டில் பிறந்த போது விசயை பாடியபாடல்
அரிச்சந்திர புராணம் "பனியால் நனைந்தும்.."சந்திரமதி மகன் இறந்ததும் பாடிய பாடல்..

இந்த ரீதியில் போனால், பெரியபுராணத்தில் "மணமகனே பிணமகனாய்" என்னும் பாடலை எதிர் பார்த்தேன். நல்லவேளை அது வரவில்லை!

மற்றொன்று: காமச் சுவை
நீலகேசி --- துபடு துவரிதழ் துடிக்கும்.. ( நீலிப் பேய்மகளின் அழகிய உருவம்)
சீவக சிந்தாமணி, -'மீன்சேர் குழாமனைய மேகலையும்..(காந்தருவதத்தையின் அழகு)
நளவெண்பா, 'கொங்கைமுகங் குழையக் கூந்தல் ( நளன் தமயந்தி காதல் வர்ணனை)
கந்த புராணம்--- 'அன்னதொருகாலை'( முருகனை வள்ளி தழுவுதல்)
இன்னும் பல சொல்லலாம்.

இவை இலக்கிய நயத்திற்காக இடப்பட்டிருக்கின்றன என்றாலும், இலக்கியரசனை வளர பல சுவைகளையும் ஆசிரியர் எடுத்துத் தந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
கம்பராமாயணத்தில் குகன் பரதனைக் கண்டதும் கொள்ளும் கோபம், யுத்தகாண்ட தோற்றங்கள், வில்லிபாரத்தில் வரும் போர் வருணனைகள் , திருமங்கையாழ்வாரின் காதலால் இரங்கும் பெண்ணின் நிலை எனப் பலசுவைகளைக் காட்டியிருக்கலாம்.

சில பாடல்கள் எப்படியும் நம்மக்கள் எங்கேயாவது கேட்டிருப்பர் . "அற்றைத்திங்கள் ", "வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள் '(சிலப்பதிகாரம்),'வெவ்வாய் ஓரி முழவாக '( சீவக சிந்தாமணி) , 'ஆயிரம் இராமன்நின் கேழ் ஆவரோ?' ( கம்பராமாயணம்) போன்றவை.. ஆனால் பாடல் முழுதும் தெரிந்திருக்காது. இந்த வகையில் அப்பாடல்களை எடுத்திட்டு, அதனை சிறிது விளக்கியும் இருப்பது ,படிப்பவருக்கு "அட நாம முந்தியே படிச்சதுதானே" என்னும் அனுபவத்தைத் தந்துவிடுகிறது. பின் அப்பாடல் முழுதும் படித்து முடிக்கும்வரை கீழே வைப்பது கடினம்.. இது என் அனுபவம்.


ஒரே நூலிலிருந்து ( எ.கா சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம்)ஆசிரியர் , பலப் பல திறனுடைய பாடல்களைக் காட்டியிருப்பது அவரது ஆழ்ந்த அனுபவத்தின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

பாகம் 2 இன்னும் பார்க்கவில்லை. தேம்பாவணி, இரட்சணிய யாத்ரீகம் போன்றவை முதல் பாகத்திலில்லாததால் இரண்டாம் பாகத்தில் இருக்குமென நினைக்கிறேன்.
மொத்தத்தில் மரபு இலக்கியத்தில் அவ்வளவாகப் பரியச்சமில்லாதோர் துவங்குவதற்கு ஒரு நல்ல படி.

திரு.எஸ்.சிவகுமார் அவர்களின் அயராத உழைப்பிற்கும், நல்ல ஆக்கத்திற்கும் நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்
அன்புடன்
க.சுதாகர்

Monday, November 14, 2005

மும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)

மும்பை நாடகவிழா (பார்க்காமல் எழுதிய விமர்சனம்)
-----------------------------------------------------
எந்த நேரத்துல " நாடகவிழா பாத்துட்டு வந்து எழுதறேன்"ன்னு சொன்னனோ தெரியலை... நுழைவுச்சீட்டு தருகிறேன் எனச்சொல்லியிருந்த ஆட்கள் சமத்தியா ஏமாற்றிவிட்டார்கள். தீபாவளீக்கு ஊர் சென்று திரும்பும்போது ." ஒரு சீட்டு என் நண்பன் கிட்டே இருக்கு. இந்தா அவன் தொலைபேசி எண்" எனத் தந்த நண்பனுக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லிவிட்டு, அவரைப் பிடிக்கப் போனால்,... குடும்பத்தோடு குஜராத்தில் தீபாவளிக்குப் போயிட்டார். புழுங்கிக்கொண்டிருந்தபோது. மிட் டே பத்திரிகை " நாடகம் பரவாயில்லை" என்ற ரீதியில் எழுதியிருந்ததைப் படித்ததும் ஒரு நிம்மதி. "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்"?!

அநியாயத்திற்கு விளம்பரம்.. சஞ்ஜனா கபூர் பண்பலை ரேடியோவில் மணிக்கு ஒரு முறை வந்து  நாடகத்தைப்பத்திப் பேசாமல், அடைமொழியும், பண்புச்சொற்களுமாக அடுக்கி ஒரு நிமிடத்திற்குப் பேசினார். கேட்டே வாழ்க்கை வெறுத்துவிட்டது.

ஜிகினா தொழில்நுட்ப வேலைகள் நிறைந்திருந்தது என்பது நம்ம பாரிவையாளர்களுக்கு புதியது. மைக் முன்பு காள் காள் எனக் கத்டுவது நாடகம் எனப் புரிந்துகொண்டிருந்தவர்கள், முதன்முறையாக நாடகம் பார்த்தார்கள் என்கிறது ஒரு விமர்சனம். பார்வையாளர்களில் பலர் நாடக விற்பன்னர்கள். அவர்களே ப்ரிஅமித்துப் போஇ " எவ்வளவு செலவு? இதுல பத்து ல ஒருபகுதி கிடைச்சிருந்தா நான் எங்க்யஓ போயிருப்பேன்" எனப் பெருமூச்சு விட்டனர். ஒளித் தொழில் நுட்பம் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல். நம்ம ஆட்கள் நாலு கலர்கலரா விளக்கு வைச்சு நாடகம்னு போட்டுட்டு "மக்களுக்கு ரசனையே பத்தாது" என்பார்கள் பேட்டிகளில்.
"லாப்டாப் கணனிகளுக்கு நாடகத்துல என்ன வேலை?" என்றார் ஒரு நாடக நடிகர் அப்பாவித்தனமாய். பத்து லாப்டாப் வைத்து நாடகத்தின் போக்கை அவர்கள் சிறப்பாக ஆழுமை செய்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. "படுதாக்கு பின்னாடியிருந்து மெல்லமா கூப்புடவேண்டியதுதானெ?" நாம என்னிக்கு உருப்படப் போறோம்?
ஆனால், ஒன்று சொல்லவேண்டும். இது மக்களுக்கு நாடகம் பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுத்திருக்கும். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை மரபு கெடுக்காமல், எப்படி நவீன உத்திகளைக் கையாண்டு நல்ல படைப்பைத் தரமுடியும் எனக் காட்டியிருக்கிறார்கள். இனிட்யாவது, நவீன நாடகம் என்றல் புதுக்கதையாகத்தன் இருக்கவேண்டும் எனவும், மரபு நாடகம் எல்லாம் பார்ப்பது பத்தாம்பசலித்தனம் என நினைப்பதும் கொஞ்சம் குறையும். அதற்காகவாது சஞ்ஜனா கபூருக்கு நன்றிகள்.

 

 

Friday, November 04, 2005

ஊடகங்களும் பிறமொழிப் படைப்புகளும்

ஊடகங்களும் பிறமொழிப் படைப்புகளும்
-------------------------------------
ரவி‚ɢšРதமிழ் இலக்கியத்தை உலகளவில் மொழிபெயர்ப்பின் மூலம் மேற்கத்தியர்கள் அறிந்திருப்பது குறித்து சு.ராவின் கருத்தைக் குறித்து எழுதிய வலைப்பதிவின் தாக்கம் இது.
பிற கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களை உள்வாங்குவது குறித்து பேசுமுன் இரு முக்கியமான விடயங்களை நாம் கவனிக்கவேண்டும்.
ஒன்று : புரிந்து கொள்ளுதலில் ஊடகங்களின் பங்கு.
இரண்டு: அவ்வூடகங்கள் குறித்து நமது அணுகுமுறை.
ஊடகங்களின் பங்கு
பிற கலாச்சாரங்களை நாம் ஊடகம் மூலமே பார்க்கிறோம், உணரத் தலைப்படுகிறோம். இலக்கியம் ஒரு ஊடகமெனினும், புரிந்துகொள்ளுதல் என்பதான முயல்விற்கு அதற்கு மொழி, மொழியின் கையாடல் போன்ற ஊடகங்கள் தேவைப்படுகின்றன. குருசோவா, பீட்டர் புரூக்ஸ் போன்றோர் திரைப்படம் மற்றும் நாடக ஊடகங்கள் மூலமே பிற கலாச்சார நுணுக்ங்களை சிறப்பாக பலதரப்பட்ட பார்வையாளர் மத்தியில் கொண்டுபோக முடிந்தது.
°¼¸í¸û ÌÈ¢òÐ ¿ÁÐ «ÏÌÓ¨È"
ஐரோப்பிய கலாச்சாரத்தை விடுங்கள். நமது நாட்டு பிற மொழி இலக்கியங்கள் எத்தனை நாம் அறிந்திருக்கிறோம்? இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், தகுந்த ஊடகங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிட்டோ ம் என்ற குற்றச்சாட்டிலிருந்து நாம் மீளமுடியாது.
திரைப்படமென்றாலே ஆபாசமும், மசாலாவும் மட்டுமே என மலிந்திருக்க, நாடகங்கள் "வெகுஜன நாடகங்கள்' என்ற போர்வையில் அபத்தங்களை சிரிப்பு நாடகமென்ற பெயரில் துப்பிக்கொண்டிருக்கின்றன. நலமான முயற்சிகளை கவனமாக " இதெல்லாம் அறிவு ஜீவிகளுக்கு" எனத் தள்ளிப்போக்கிவிடுகிறோம்.
மலையாளத்தில் இருக்கும் வடக்கன் வீரகத எத்தனை தமிழருக்குத் தெரிந்திருக்கும்? அவை அப்படியே இலக்கிய வடிவில் தமிழில் கட்டாயப்பாடமாக்கிய்ருந்தாலும் நாம் அசட்டை செய்திருப்போம். ஒரு திரைப்படமாக M.T.வாசுதேவன் நாயர் கொண்டுவந்ததும் மலையாளத்திலேயே கொஞ்சம் அதிகமாக அது பேசப்பட்டது.

இலக்கியம் , கலாச்சாரப் பிண்ணனியின்றி உணரவியலாது. உணர்வதற்கு ஆரோக்கியமான ஊடகங்கள் வேண்டும். ஊடகங்கள் குறித்தான ஆரோக்கியமான புரிதல் வேண்டும். திரைப்படம் பொழுதுபோக்கு என்றும், அது வியாபார நோக்கம் மட்டுமே சார்ந்தது எனவும் சப்பைக்கட்டுவதை திரைப்படத் துறையினரும் நிறுத்தவேண்டும். அவ்வாறு வரும் திரைப்படங்களை மக்கள் வரவேற்பதையும் குறைக்கவேண்டும்.

நாடகங்கள் குறித்து நமது புரிதல் வெகுவெகு பாதாளத்தில் இருக்கிறது என்பது வருந்தத்தக்க விசயம். நாடகங்கள் குறித்து பேசுவதும், அலசுவதும் தமிழ்நாட்டில் மிகக்குறைவு.
ப்ருத்வி நாடகமன்றம் மும்பையில் இந்த முறை ஆங்கில நாடகக் குழுஒன்றின் படைப்பான ஷெக்ஸ்பியரின் measure for measure நாடகமேற்றியிருக்கிறது. ஏழு ஆண்டுகள் தொடர்ந்த முயற்சியின் விளைவாக அக்குழு முதன்முறையாக இந்தியாவில் மேடையேற்றியிருக்கிறது. பண்பலை வானொயிலும், செய்தித்தாள்களிலும் அடிக்கடி விளம்பரம் செய்து ப்ரபலப்படுத்திவிட்டார்கள். மாணவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் 50% தள்ளுபடி . இதெல்லாம் நம்மூரில் செய்ய என்ன தடை?

Sunday, October 23, 2005

நோபல் - ஒரு இந்தியக் கனவு

நோபல் - ஒரு இந்தியக் கனவு

இயற்பியல் துறையின் நோபல் பரிசு 2005ம் ஆண்டு அறிவிக்கப்பட்டதும், ஹிண்டுஸ்தான் டைம்ஸ் " ஒரு இந்தியருக்கு கிடைக்க வேண்டிய பரிசு. ஏமாற்றியிருக்கிறார்கள்" என கொட்டையெழுத்தில் மும்பை பதிப்பில் வெளியிட்டிருந்தது.
இவர்கள் இழுத்திருக்கும் அறிஞர் கலாநிதி E.C.G.சுதர்ஷன் - அமெரிக்காவில் ஆய்வு செய்து வருகிறார். கிளாபர் குவாண்டம் ஒளியியல் பற்றிய கருத்துக்களை ஒரு அறிவியல் பேப்பராக வெளியிட்ட சிலமாதங்களுக்குள்ளாகவே சுதர்ஷனின் பேப்பர் வெளியாயிருந்தது. இருவரின் உழைப்பும் தனித்தனியாக நடந்தவை. கிளாபர் வெளியிட்ட கொள்கைகளில் இருந்த சிக்கல்களையும், தடைகளையும் சுதர்ஷன் பின்னாளில் எடுத்துக்காட்டி, சீர்திருத்தி வெளியிட்டார். அதன்பின் அவர் குவாண்டம் ஒளியியலிருந்து சற்றே விலகி பல ஆய்வுகளில் ஈடுபடத்தொடங்கினார்.
இன்றும் அவரது கொள்கைகள் குவாண்டம் ஒளியியலில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. நோபல் பரிசின் பரிந்துரைக்குழுவின் குவாண்டம் ஒளியியல் பற்றிய அறிக்கையில் சுதர்ஷனின் பங்கு குறித்து வெளியாயிருக்கிறது.

இந்தியாவில் கலாநிதி சுதர்ஷனைப் பற்றி அறிந்தவர்கள் " முன்னரே ஒரு முறை அவருக்கு நோபல் பரிசுக்கான பரிந்துரை செய்யப்பட்டது. அப்போதும் தரவில்லை. இப்போது மிக மிக அருகில் வந்தும் , பரிசு கிடைக்காமல் போனது துரதிருஷ்டம் மட்டுமல்ல ஒரு சோகமும் கூட " என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

சுதர்ஷன் அவர்களோ, இது குறித்து ஒன்றும் கருத்துகூற மறுத்துவிட்டு, தனது அறிவியல் தேடல்களில் ஆழ்ந்துவிட்டார் - தான் ஒரு ஆதர்சன அறிவியல் அறிஞர் என நிரூபித்துவிட்டு.

அத்துறையை விட்டு அவர் விலகியிருப்பதால், விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதால் எவரும், நோபல் பரிசு பரிந்துரைக்குழுவிடம் விண்ணப்பிக்கப் போவதில்லையாம்.

நோபல் - ஒரு இந்தியக் கனவாகவே இருந்துவிடுமோ?

அன்புடன்
க.சுதாகர்

மற்றொரு இழப்பும், அது குறித்த அறியாமையும்

மற்றொரு இழப்பும், அது குறித்த அறியாமையும்

சு.ரா மறைந்தது குறித்து சிலர் எழுதினர். அவரது படைப்புகளை எவ்வளவு தூரம் தமிழக சராசர வாசகன் அறிந்திருக்கக் கூடுமென்பது அனைவருக்கும் தெரிந்த புள்ளியியல் விவரம்.
தமிழகம், இழப்புகளைக் குறித்து அறியவேண்டுமெனில், இருப்பைக் குறித்து முதலில் அறிந்திருக்கவேண்டும். நாடக மேதை ஹெக்கோடு சுப்பண்ணா மறைந்தார் என்றால் பெரும்பாலோருக்குத் தெரியாது. வருந்தத்தக்க , வெட்கக்கேடான அறியாமை.
மேலும் இது குறித்து நான் எழுதாமல், வெங்கட் சாமிநாதனின் அமுதசுரபியில் வெளியான இக்கட்டுரையைப் படித்துப் பாருங்கள் என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன்.

Wednesday, October 12, 2005

மெளனத்தின் நாவுகள் -3

யாரோ அழைத்தான ஞாபகத்தில்..

அபியின் சுயம் தேடலும் , சுயம் சார்ந்த வினாக்களும், தேடல் முயற்சிகளும் பற்றிய கவிதைகள், ஆழமிக்க சொற்கள் கொண்டவை. படிமங்களை அவர் தேர்ந்தெடுத்திருக்கிற விதம், ப்ரமிக்க வைக்கிறது.

யாரோ அழைத்தான ஞாபகத்தில் - என்ற கவிதை இதைப்பற்றியதுதான் என இறுதியிட்டுக் கூற முடியாது. நான் உணர்ந்த அளவில்,இது மனிதம் என்னும் பண்புகளின் கலவையினை உருவாகக் கொண்ட ஓர் உயிர் -( அது கடவுளின் தூதனாகவும் இருக்கலாம்..) , சமுதாயத்தால் எதிர்க்கப்பட்டும், புறக்கணிக்கப்பட்டபின்னும் அயராது, எவரோ ஒரிடத்தில் தனது தேவையிருப்பதாக, நம்பிக்கையின் ஊற்றை தன்னில் புதுப்பித்துக்கொண்டு, அதனையே அருந்திக்கொண்டு, புத்துணர்வோடு புறப்படும் ஒரு பயணத்தின் சாராம்சம். அது சந்தித்த சவால்களையும், அதன் முயற்சிகளையும் பற்றிய இக்கவிதையின் சில வரிகளைப் பாருங்கள்.

அதன் தற்சமய நிலை குறித்துச் சொல்லுகையில்
" இறந்த காலத்தின் நிமிஷங்களைக்
கம்பி நீட்டி
எதிர்காலத்தின் ராகங்களை
வாசித்துக்கொண்டே
......
மாரிக்காலத்து ஏதோவொரு இரவில்
யாரோ கிசுகிசுத்து அழைத்தான
ஞாபகத்தில்
என் பயணம் தொடர்கிறது "
என பயணத்தினைக் குறித்துச் சொல்கிறார்.

இதுவரை அனுபவித்த இடர்களோவெனில்..

"எந்தெந்த காற்றையெல்லாமோ
சுவாச ருசி கண்டு
எந்தெந்த மூட்டங்க்களில் எல்லாமோ
மூச்சுத்திணறி

சோகத்தின் சுகக்கருவில்
மறுபடி நுழைந்து வளர்ந்து
மறுபடி வெளியேறி..."

சூரியன் மலைகளிடையே மறைவது என்ற நிகழ்வை,

மேற்குத்தேசத்தின் பொன்மாளிகையில்
வாய்பிளந்து நின்ற
விட்டிலின் வாயில்போய்
விளக்கு விழுந்தபின் "
என்னும் வரிகளில், மானிட வாழ்வில் விளக்குகள்( வழிகாட்டிகள்) விட்டில்களால்( சாமானிய மானிடப்பதர்களால்) அணைக்கப்படுவதை "ரிவர்ஸ் மெட்டஃபர் ( reverse metaphore) கொண்டும் அற்புதமாகக் காட்டியிருக்கிறார். எங்கும் படிமம் கலையவில்லை. எங்கும் வார்த்தைகளின் ப்ரயோகத்தால் கவிதையோட்டம், கரு நீர்க்கப்படவில்லை.

தனது வழிகாட்டுதல் யாருக்கோ தேவைபட்டிருப்பதாக "யாரோ அழைத்த ஞாபகத்தில்" நன்னம்பிக்கை கொண்டதினைக் காரணிக்கிறார் இவ்வாறு.

அடித்தளத்து கண்ணீரைப்
ப்ரகாசமிக்க சிரிப்புகளாக
மாற்றிவரும் இந்தத்திரி
யாருக்கோ தேவைப்பட்டிருக்கிறது.

இதுவே அதன் raison de etre.

இதுவரை தனது வழிகாட்டல்களை சரியாகக் கொள்ளாதாரைப் பற்றிச் சொல்கிறார்.
" உழாமல் விதைத்தும்
விதையின்றியே உழுதும்
ஏமாந்தவர் பிரிந்தபின்.."

தன்னைநோக்கி வருகின்ற எவரையோ ஆவலுடன் தான் காத்திருப்பதை
" இந்த வளமான பூமியைத் தேடி
விழிகளில் மேகங்கள் திரட்டி
இதயக்கூடை நிறைய விதைகளோடு
பரிசுத்தமான நோக்கங்கள் வழிகாட்ட
யாரோ வரும் காலடியோசை!"
ஏசுநாதர் பிறந்தபோது நட்சத்திரங்கள் வழிகாட்ட மன்னர்கள் வந்தது போலவே, இந்தக்காட்சி!

தன்னை இதுவரை அடையாளம் கண்டுகொள்ளாதாரைப் பற்றி வெதும்பிச் சொல்லும் வரிகளைப் பாருங்கள். ஏசுநாதரும், கலீல் கிப்ரானும், "நாம் இவர்களுக்கு எவ்வளவு நன்மை செய்தாலும், இவர்கள் அறியாமல் இருக்கிறார்களே " என இப்படி நினைத்திருப்பார்களோ என ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துவிடுகிறது.

"
சிலர்
சேற்றில் புதைந்த
என் வேர்களை முகர்ந்துவிட்டு
ஏக்கத்தோடு விரிந்த என் மலர்களை
நாடாது நடந்தனர்

என் சுவடுகளை
என் கைவிரல்களால் பதிக்கிறேன்
என்பதை அறியாமல்
என் பாதங்களின் பழுதுகளைப்
பரிகசித்துப் போனார்கள்"

எத்தனை அழுத்தமான வார்த்தைகள்.!

Tuesday, October 11, 2005

அறிவியல் இதழும் அண்ணாச்சியும்

அறிவியல் இதழும் அண்ணாச்சியும்
_________________________________________
வின்செண்டு அய்யாத்துரை மும்பையில் வந்து முப்பது வருடங்களாகிறது. காட்கோபர் என்னுமிடத்தில் சுழலும் வாடகை நூலகம் வைத்து நடத்திவருகிறார்.

போனவாரம், யதேச்சையாக அவர் கடையில் தமிழ்புத்தகம் பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பிடித்துவிட்டார். ரொம்ப காலம் முன்னே பழக்கம் மாதிரி சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். எனது கார் செப்பனிட்டு முடிக்க இன்னும் நேரமிருந்ததால் நானும் பேசிக்கொண்டிருந்தேன்.
"எழுவத்தொம்பதுல வந்தேன். அப்பெல்லாம் இந்தமாதிரி கூட்டம் கிடையாதுல்லா. இப்ப.. சே.. இந்த ஊரு வெளங்கும்கீயளா?" ( சாத்தான்குள வேதத்து ஆசிப் அண்ணாச்சி மாதிரிப் பேசுகிறாரே எனப் பார்க்கிறீர்களா? இவருக்கு சொந்த ஊர் தூத்துக்குடி பக்கம் திரேஸ்புரம்).

வாட்ட சாட்டமாக ஒரு இளைஞன் நுழைந்தான். வின்செண்டுக்கு அவனைப் பிடிக்காது போலும். முகத்தைத் திருப்பிக்கொண்டு அவனைச் சகித்துக்கொண்டிருந்தார். புத்தகங்களைப் புரட்டியவன், ஏதோ தடியாக ஒரு ஆங்கில நாவலை எடுத்துக்கொண்டு , கையெழுத்திட்டு நகர்ந்தான்.
அவன் போனவுடன், வின்செண்டு " இப்ப வந்தாம்லா, பாத்தியளா?" என்றார், சாலையில் எட்டிப்பார்த்து , அவன் கேளாததை உறுதிசெய்துகொண்டே.
" உம் " என்றேன்
" நம்ம ஊரு பயல்தான். வெளங்காத மாடு. அப்பங்காரன் அம்பேர்நாத் வரை போயி ஷிப்ட்டுல வேலை பாத்து படிக்க வைக்கான். இவன் இங்கன சோவாறிட்டு திரிதான். படிக்கற புத்தகத்தைப் பாரு.. " கோபம் கொப்பளித்தது அவர் வார்த்தைகளில்.
" உங்களுக்கு என்ன கோபம் அண்ணாச்சி? அவன் பாட்டுக்கு படிச்சுட்டுப் போறான்.உம்ம கடைல நீரு வைச்சிருக்கற புத்தகம்தான அது? வேற அறிவியல் புத்தகம்னா வைச்சிருக்கீரு? " சீண்டினேன்.
"இதப் பாருவே" என ஒரு இதழைக் காட்டினார். அது செப்டம்பர் மாதத்திய சயண்டிஃபிக் அமெரிக்கன்- இந்திய பதிப்பு.
"இத எடுத்துப்படிக்கலாம்லா? இவன் கெமிஸ்ட்ட்ரிதான் படிக்கான் காலேஜ்ல"
"புதுசா வாங்கி வைச்சிருக்கீறா? போன மாசத்துப் புஸ்தகம்வே அது" என்றேன்.
"புது புக்கு நூறு ரூபா தெரியுமாவே? ஒரு மூதியும் தொடமாட்டேங்கு. அதை வாங்கறதுக்கு பதிலா, ஒரு டெபனேர் இல்லெ ஒரு சவ்வி, வுமன்ஸ் ஈரா-ன்னு வாங்கிறுவேன். பொட்ட புள்ளைக படிக்கும்"
அப்போதுதான் கவனித்தேன். ஒரு மாத இதழ் 100 ரூபாய். கிட்டத்தட்ட 2.5 டாலர். எத்தனை பேர் வாங்குவார்கள்?
" உம்மர மாதிரி நூலகத்துல வாங்கினா, பசங்க படிப்பான்கள். நீரு இப்படி கஞ்சத்தனம் பாத்துப்புட்டு, அப்புறம் அவன்களை நொட்டை நொள்ளைன்னா என்ன அர்த்தம்?" என்றேன்
" எனக்கு ஆசை இல்லன்னா இத ஏன் வாங்கி வைக்கேன். சொல்லுமே பாப்பம் ? என்றார் ஆவேசமாக.
" போனமாச புத்தகம் 10 ரூவாய்க்கு சர்ச் கேட் பக்கம் கிடைக்கும். ஒரு நாய் சீந்தாது. தூக்கிட்டு வந்து, சரி இந்த புள்ளைங்க உருப்படட்டுமேன்னு வைச்சா, சவத்து மூதி ஒண்ணும் தொட்டுக்கூடப் பாக்கலை" அவரது 10 ரூபாய் அப்படியே கிடப்பது அவருக்கு வயிறெரிகிறது.

100 ரூபாய் கொடுத்து சயண்டிஃபிக் அமெரிக்கன் வாங்க எத்தனை கல்லூரி மாணவ மாணவியரால் இயலும்? அல்லது பொது மக்கள்தான் 100 ரூபாய் கொடுத்து வாங்குவார்களா?
இந்திய பதிப்பு, அறிவியல் சிந்தனைகளை இந்திய மக்களிடம் பரப்ப வந்திருக்கிறது என்றெல்லாம் விளம்பரப்படுத்தினரே ? டெல்லி விமானநிலையத்தில் இன்னும் இருப்பதாக நினைவு.
உலகமயமாக்கலில், அறிவியலைக் கூட இறக்குமதி செய்து,அதற்கும் வளர்ந்த நாடுகளைப்போல பணம் கொடுக்கும் நிலையில் இருந்துவரும் சராசரி இந்தியனுக்கு, என்று அவன் வாங்கும் நிலையில் அறிவியல் புத்தகங்கள், பொருட்கள் கிடைக்கும்?

Sunday, October 09, 2005

மொளனத்தின் நாவுகள் -2

மொளனத்தின் நாவுகள் -2
-------------------------

காமம் ..
வள்ளுவர், வாத்ஸ்யாயனர் முதல் வைரமுத்து வரை அனைத்து கவிஞர்களும் போற்றிய ஓர் அடிப்படை உணர்வு. பட்டினத்தார் போன்ற சித்தர்களும், துறந்த முனிவர்களும் "வேண்டாம்" என ஒதுக்கிப் பாடினாலும், அந்த ஒதுக்கல்களிலும் காமத்தின் வேகத்திற்கு ஓர் மரியாதை தென்பட்டது. காமம் மனிதனின் உணர்வுகளில் ஆழப்பதிந்து பிற உணர்வுகளைத் தாக்குமாதலால், முனிவர்களூம் அஞ்சி ஒதுக்கிய ஓருணர்வு.
அபி காமத்தை எப்படி அழைக்கிறார் எனப் பார்ப்போம்
" போ போ ராப்பிச்சைக்காரனே"

இதை விட வெறுப்பின் உச்சியில் நின்று காமத்தை விரட்டிய கவிதை படித்ததில்லை.

" எத்துணை இடினும்
நிரம்பாத
உன் ஓட்டைப் பாத்திர
நாற்றத்தில்
என் சுவாசங்கள் கூசுகின்றன"
சுவாசங்கள் கூசுமளவிற்கு ராப்பிச்சைக்காரனின் பேராசைக் கலசத்தின் நாற்றம் கவிஞரின் நாசியில்!..

"சிலரே தாங்கள் படைத்ததில்
உனக்குப் பங்களிக்கிறார்கள்.
பலரும் உனக்குப் பங்களிக்கவே
படைக்கின்றனர்"

உண்மையான வார்த்தைகள்.

காமத்தின் மேலுள்ள வெறுப்பு சித்தர் போலவுள்ள போதனையால் வந்ததல்ல. காமத்திற்கு கொடுக்க வேண்டிய இடம் கூடுதலாகவே கொடுக்கப்படுகிறது என்பதை சுட்டுகிறார். அபியின் நடுநிலைமை, உணர்வுகளையும் கூட்டிப் ப்ரதிபலிப்பதை இக்கவிதையில் காணலாம்.

Friday, October 07, 2005

நெளியும் நண்பர்கள்- மண்புழு வளர்ப்பு
-------------------------------------

மும்பை போன்ற நகரங்களின் மிகப்பெரிய தலைவலி- திடக் கழிவு நிர்வாகம். மும்பையில் மட்டும் ஒரு நாளுக்கு 6000 மெட்ரிக் டன் கழிவு உற்பத்தியாகிறது. மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் மிகத் திறமையாகச் செயல்பட்டால் 5500 மெட்ரிக் டன் கழிவை அப்புறப்படுத்த முடியும். மிச்சம் 500 டன் கழிவுகள்? ஆதாரம் www.ceeraindia.org/documents/bmc.htm
எடுத்த கழிவுகளை புதைக்க landfil இடங்கள் தேடுவது மற்றொரு தலைவலி. 25 வருடங்களில் ஒரு இடம் நிறைந்து போகும். பின்னர் மற்றதைத் தேடவேண்டும். கழிவு நிறைந்த இடத்தை மீண்டும் புதுப்பிப்பது என்பது மற்றொரு தலைவலி. அவ்வளவு எளிதல்ல.
பல ஆலோசகக் குழுக்கள் பலதரப்பட்ட யோசனைகளை வழங்கியிருக்கின்றன. குப்பையை உருவாக்கும் இடத்திலேயே பிரித்தல் ( seggregation at source) என்பதைக்குறித்து அதிர்ச்சியூட்டும் விதமாக முனிசிபல் கார்ப்பரேஷன்கள் இன்னும் ஆலோசித்துமட்டுமே வருகின்றன. மக்களை படிப்பிக்கும் விதம் குறித்து கவலை கொள்கின்றனவாம்.. இது முதலில் கட்டாயமாக்கவேண்டும்.
மண்புழு வளர்ப்பு மூலம் கரிம கழிவுகளுக்கு ஒரு தீர்வு காணலாம் என்பதை அறியும்போது கொஞ்சம் வியப்பாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. மண்புழு வளர்ப்பு என்பது வேளாண்மைக்கு பயன்படும் என்றும், அது நல்ல கரிம உரம் தயாரிக்கும் குடிசைத்தொழில் என்று மட்டுமே நான் அறிந்திருந்தேன். பெரிய அளவில் கரிம உரம் தயாரிக்கவும், கழிவுகளை சுத்தப்படுத்தவும் இது உதவும் என்பதை இச்சுட்டியில் அறிந்தேன்.
http://www.morarkango.com/waste_management/index.html
மொரார்கா தன்னார்வலக்குழுவின் மண்புழு வளர்ப்பு பற்றிய செய்திகள் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், பொருளாதாரத்தில் கீழ்நிலையிலிருப்பவர்களுக்கு வேலை,மற்றும் பீடித் தொழிலாளர்களௌக்கு அவ்வேலையை நிறுத்தி,மாற்று வேலை கொடுக்கும் திட்டம் போன்றவற்றிற்கு உதவுவதாகவும் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இக்குழு செய்திருக்கும் பணி குறித்து அறியும்போது , மாநகரங்களில் கழிவு நிர்வாகம் மேம்படச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை.

வீடுகளில் கழிவு நிர்வாகம் குறித்துக் கூறுகையில், வெறும் ரூ.2500.00 கொண்டு எப்படி கழிவுகளை அகற்றலாம் என்பதையும், கரிம உரம் தயாரிக்கலாம் என்பதையும் சொல்கிறார்கள். IFFCO நிறுவனம், இவ்வுரத்தை நல்ல விலையில் வாங்கிக்கொள்ளவும் தயாராக இருப்பதால், கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் கூட்டுறவு நிறுவனங்கள் இதனை ஒரு தொழிலாகவும் எடுத்துச் செய்யலாம்.
பல மாடிக்கட்டிடங்கள் கொண்ட குடியிருப்புகளுக்கென பெரிய அளவில் கழிவு நிர்வாகம் செய்து தரவும் இந்நிறுவனம் தயாராக இருக்கிறது. ஓட்டல்கள், குடியிருப்பு வளாகங்கள் இதனால் பயன்பெறும் என்பதோடு, முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு கழிவுநிர்வாகத்தில் பளு பெருமளவில் குறையும்.
முன்னுதாரணமாக மும்பையில் சேரிச் சிறுவர்களைக்கொண்டு செய்யப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்டில் சிறுவர்கள் பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு இதனைத் தொழிலாக ஏற்று நடத்த முன்வந்தனர் என்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை ஒருவருடம் முன்பு வாசித்த ஞாபகம் வருகிறது.

இதனை பெரியளவில் வர சில சக்திகள் தடுப்பதாகவும், அரசியல் ஆதாயம் கருத்தில் கொண்டு புழு வளர்ப்பு தடைப்படுவதாகவும் கேள்வி. கழிவிலுமா கமிஷன் அடிக்கணும்? பாவிகளா...

பிடித்த புத்தக அலசல்-மெளனத்தின் நாவுகள்

நண்பர்களே,
படித்த கவிதைகளை அலசுவதென்பது ஒரு அலாதியான இன்பம்..படித்த கவிதைகளில் தாக்கிய வரிகளைப் பற்றி எழுதுகிறேன். ( நானே சொந்தமாய் எழுதி அறுப்பதைவிட இது பரவாயில்லை).
மெளனத்தின் நாவுகள் - கவிதைத்தொகுப்பு .
இயற்றியவர் : அபி.
------------------------------------------------------------

"ஏதோ ஒரு விடையை
என்னுள் வாங்கியதால்
எத்தனையோ
வினாக்களுக்குத் தாயானேன்.
அவ்வினாக்களின் மூலம் தேடிப்போகிறேன்"
என்று தன் அலசல்களை அறிவித்தவர் அபி. "கடவுளின் சோதனைச்சாலை விடுத்து தன் சொந்தச் சோதனைச்சாலைக்கு செல்லும்" காரணமாக இதைச் சொன்னார்.
கவிஞர் மீராவுடன் இணைந்து பணியாற்றியவர். 70'ச் களில் தமிழ் கவிதையில் புதுக்கவிதைஎ
ன்ற பரிமாணத்தில் அவருக்கென தனிப்பாணியை வகுத்துக்கொண்டார். 60களில் தமிழ் இன உணர்வு கொந்தளித்தபின், எழுபதுகளில் சிறிது அடங்கி, பரீட்சார்த்த முறைகளை கவிஞர்கள் கையாளத்தொடங்கினர். கிப்ரானிய மொழி வீச்சும், எளிய வார்த்தைகளில் உணர்வுகளை செறிவாக்கிக் கொட்டும் வித்தைகளும் தமிழ்க்கவிதைகளில் இடம்பெறத்தொடங்கின. கண்ணீர்ப்பூக்கள், கறுப்பு மலர்கள் என மு.மேத்தா, காமராசன் போன்றோர் தொடங்கியவை, சாதாரணமாகக் கவிதை படிக்கத் தயங்கும் மக்களுக்கு புதுக்கவிதை படிக்க ஆர்வம் பிறப்பித்தாலும், ஒரு படி மேலே போய் உன்னதமான கவிதைஉத்திகளை சிறப்பாகக் கையாண்டதில் சிலருக்கே அபி போன்ற பெரும்பங்கு உண்டு. "மொளனத்தின் நாவுகள்" - அதன் சாட்சி.
படிமங்கள் கையாள்வதில் அவரது சிறப்பு. மீரா அவர்களும் , அப்துல்ரகுமான் அவர்களும்
அபியின் கவிதைத்தொகுப்பினை பிற பதிப்பகத்தார் வெளியிட தயக்கம் காட்டிய போது, கொ
தித்தெழுந்து , சொந்தமாகவே "அன்னம்"என்ற பதிப்பகத்தை சிவகங்கையில் தொடங்கினர் -எ
ன்பது வரலாறு. "பாலையும் நீரையும் பகுத்தறியாப் பாமரர்களே, அன்னம் பாலைப் பகுத்துக் காட்டுகிறது" என்ற உதாரணமோ- அன்னம் என்ற குறியீட்டுப் பெய்ர்?
புதுக்கவிதையின் புதுப் பரிமாணங்கள் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் , தமிழ் புதுக்கவிதை
யின் உண்மையான முன்னோடிகள் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள், அபியை அவசியம்
அறிந்துகொள்ளவேண்டும். இக்கவிதைத்தொகுப்பின் முன்னுரையை கவிக்கோ அப்துல்ரகுமான்
அவர்களும், முடிவுரையை கவிஞர் மீரா அவர்களும் வழங்கியிருக்கின்றனர்.

அபியைப் படிக்குமுன், அவ்வுரைகளைப்படிப்பது நல்லது. ஏனெனில். அபியின் வார்த்தைகளின்
எல்லைகளை வரையறுப்பது கடினம். சுழன்று சுழன்று ஆழம்காண இயலாத பரிமாண எல்லைக
ளுக்கு இட்டுச்செல்லும் சக்திவாய்ந்த வரிகள் அவை.

கலீல் கிப்ரானின் வலிகள் குறித்து வருந்திய கவிஞர் "அம்மானுடம்பாடியைத் துன்புறுத்தியபோது இருந்திருந்தால் நான் இப்படித்தான் பாடியிருப்பேன் " எனக் குறிக்கிறார்.

மதவாதிகளால் லெபனாலின் துன்புறுத்தப்பட்ட கலீல்கிப்ரான், அமெரிக்காவில்
சரண்புகுந்தபின்னும் லெபனானின் பஞ்சம் ஏற்பட்டபோது "டெஅட் அரெ ம்ய் பெஒப்லெ" என்று இரங்கல்
பாடினார். இதனை வியந்து
"உன் வேர்களை அருவெருக்கும்
நிலங்களை நோக்கி ஏன் உன் விழுதுகளை
அனுப்புகிறாய்?" என்றார் அபி.
வார்த்தைகளின் வீச்சைக் கவனியுங்கள்! எவ்வளவு உன்னத உதாரணம்!


அத்தோடு விடவில்லை அபி...
லெபனான், கிப்ரானின் கவிதைகளை தடை செய்தும், அவர் லெபனான் குறித்து கவலைப்பட்டதை,
"நீ பாசமுள்ள பறவையாய் இருந்தால்
உன் முட்டைகளை புற்றிலா இடுவாய்?"
என்கிறார்.

கிப்ரானுக்குக் கிட்டிய வதைகளை விவரிக்கிறார்...
"நீ நிற்கும்
சிலுவையின் நிழலில்கூட
ஆணிகள்..."
என்ன ஒரு ஆழம்...! இயேசுநாதரை சிலுவையில் அறையும் போது உலகில் விழுந்த வலிகள்
உறைந்த சொற்களாய்...

லெபனானைச் சபிக்கிறார் இவ்வாறு- அறம்பாடலாய்...
"லெபனானின் பள்ளத்தாக்குகள்
அழகின் கம்பீரமான உச்சரிப்புகளை
இழந்து போகட்டும்"
அதனால்தானோ, அதன்பின் இன்னும் ஒரு கிப்ரானை லெபனான் கர்ப்பம் தரிக்கவில்லை?


இன்னும் வரும்.
அன்புடன்
க.சுதாகர்

Monday, September 26, 2005

பெண்குழந்தைகளுக்கு இலவசக் கல்வி

ஜெயஸ்ரீக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும். அவர்தான் "இதைப்பத்தி யாரேனும் எழுதினாங்களா?" என்ற நியாயமான கேள்வியைக் கேட்டுவைத்தார். அவர் வலைப்பதிவு ஒன்றும் தொடங்காததால், நான் எழுதியடித்துவிட்டேன்.

மத்திய அரசு என்ன சொல்லியிருக்கிறது எனப் பார்ப்போம். " ஆறாம் வகுப்பு முதல் பெண்குழந்தைகளுக்கு இலவசக்கல்வி" என்று மொட்டையாக டைம்ஸ் ஆப் இந்தியா நேற்று இட்டிருந்தது. இது சி.பி.எஸ்.ஸி பாடத்திட்டத்திற்கு மட்டுமே பொருந்துமா எனக் கேள்வியிருக்கிறது. அப்படியானால் மாநிலப் பாடத்திட்டக் கல்விக்கூடங்களில் பயிலும் மாணவிகள்?
இன்னொன்று, " ஒரு பெண்குழந்தை மட்டும் உள்ள குடும்பங்கள்" மட்டுமே இச்சலுகை பெறலாம். வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் வீட்டில் இரு பெண்குழந்தைகள் இருந்தால்? பெரும்பாலும் அவ்வாறு அமைய சாத்தியமிருக்கிறது. குடும்பக்கட்டுப்பாடு சரியாக அமலாக்கப்படவில்லையெனில் அதற்காகக் குழந்தைகளைத் தண்டித்து என்ன பயன்? சீனாவின் முன்னுதாரணத்தை தவறாகப் பயன்படுத்த முனைவதின் விளைவு இது.
வசதியாக இருக்கும் குடும்பங்களில் ஒரு குழந்தை கொண்டவர்கள் எப்படியாவது படிக்கவைக்கிறார்கள் என ( சும்மா ஒரு பேச்சுக்கு) வைத்துக்கொள்வோம். முரண் இதில் இவ்வாறு அமைகிறது. வசதியுள்ளவர்கள் செலவழிக்க வேண்டாம். ...
பல கல்விநுட்ப வல்லுநர்கள் இதில் உள்ள பிழைகளை இன்று சுட்டியுள்ளனர் ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ). "அடிப்படைக் கல்வியே இங்கு தகிடதத்தம் போடுகிறது. அதை முதலில் கட்டாயமாக்குங்கள். ஒரு வருவாய்க்கோட்டிற்கு கீழ் இருக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் அடிப்படைக்கல்வியை இலவசமாக்குங்கள்." என்கின்றனர் சிலர். இதில் நியாயம் இல்லாமலில்லை. அடிப்படைக் கல்வி என்பது குழந்தைகளின் பிறப்புரிமை என்று அரசு பேசியதாக ஒரு நினைவு. என்ன ஆயிற்று அது?
பெண்குழந்தைகளைக் கல்விபயில வைக்கும் நல்ல திட்டம் என்றளவில் வரவேற்கப்படவேண்டியது. ஆயின் செயல்முறையில் இருக்கும் இடர்களை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது அரசு? மாநில அரசுகள் தங்கள் பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளில் அமலாக்க, நிதியுதவி கேட்குமெனில், மத்திய அரசு எவ்வாறு அதனை சமாளிக்கும்? இன்னும் ஒரு கல்வி வரி விதிக்கப்படுமா?
படிக்கவைக்க வசதியுள்ளவர்களையும் கொடுக்கவேண்டாம் எனச் சொல்லாமல், அந்தத் தொகையை, மற்றொரு ஏழைப்பெண் கல்விகற்க உபயோகிக்கும் முறை குறித்து அரசு இயந்திரம் சிந்திக்கவேண்டும்.
ஆசிரியர்கள் தங்கள் பணிகளை ஊக்கத்துடன் செய்ய அவர்களுக்கு வழங்கப்படும் வருமானத் தொகை சரியாகப் போய்ச்சேருகிறதா? என தணிக்கை செய்வது மேலும் தீவிரப்படுத்தப்படவேண்டும்.
ஏனெனில், ஏழ்மை கல்வியை கற்கும் மாணவிகளிடமிருந்து மட்டுமல்ல, கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்தும் பறித்துவிடுகிறது.

Sunday, September 25, 2005

மொழியும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும்

மொழியும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும்
இந்தியில் கார்டூன் நிகழ்சிகள் என்றதும்,"சரி , இனிமே நம்ம பயல் தொலைக்காட்சி பக்கம் போறதை கொஞ்சம் நிறுத்துவான்" என மகிழ்ந்திருந்தேன். நினைப்பில் மண்ணை வாரிப்போட்டது டிஸ்னி சானல். ஒரு சிரமமும் இல்லாமல் அதே அளவு நேரம் தொலைக்காட்சிப் பெட்டி முன் பையன் இருக்கிறான். பார்த்த நிகழ்சிகளைக் குழந்தைகள் தங்களுக்குள் பேசி நடித்து விளையாடுவது உலக வழக்கு. நேற்று அவன் விளையாடுவதை சிறுது கவனித்தேன்.
அட்சர சுத்தமாக இந்தி வாக்குகள் சுளுவாக குழந்தைகளுக்கு வருகின்றன. " நீ சொன்னது உனக்குப் புரியுதா?" என்றால் அதன் அர்த்தமும் குழந்தைகள் சொல்கின்றனர். கார்ட்டூன் இந்தியில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் .slang போன்றவை கலக்காமல் பேசப்படுகிறது. விளைவு? நல்ல மொழிப் பயிற்சி அதிகம் முயற்சிக்காமலே வருகிறது. பாராட்டவேண்டும் இந்தியில் மொழிப்பெயற்ச்சி செய்கிறவர்களை.
தமிழிலிலும் கார்ட்டூன் பார்த்தேன். இயல்பாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு ச்ரளமாக slang கலந்து சொற்றொடர்கள் வருகின்றன. இதனால் தமிழ் வளராது போவது மட்டுமல்ல, "தமிழ் இப்படித்தான் பேசவேண்டும் " எனக் கருத்தும் இளைய தலைமுறையிடம் வந்துவிடும்.
மொழிப்பெயர்சி செய்பவர்கள் இவ்வாறு ஒரு கண்ணில் வெண்ணெய் , மற்றொன்றில் சுண்ணாம்பு என இல்லாமல் இருந்தால் தமிழுக்கு நல்லது.
காக்கைச் சிறகினிலே.

முதலில் ஆண்களுக்கான சிகப்பழகு க்ரீம் வந்துவிட்டது என்ற நற்செய்தியை அறிவித்துவிடுகிறேன். இரு வாரங்களுக்கு முன் இது குறித்து குறிப்பாக எழுதியிருந்தேன். நண்பர் தெரிவித்த மார்கெட் ரகசியம் என்பதால் சிறிது அடக்கி வாசிக்க நேர்ந்தது.
"இது ஒரு புதிய மார்கெட் திறக்கும்" என சில நண்பர்கள் கருத்து தெரிவித்தனர். சில கருத்துக் கணிப்புகள் , ஆண்களில் பலர் சிகப்பழகு அவர்களுக்கு சமூக அங்கீகாரம் தருவதாக எண்ணுவதாக குறித்திருந்தன. உலகமயமாக்கலில், எந்த சமுதாயம் சிலரது தோல் நிறம் கொண்டு தங்கள் முதலீடுகளைத் தீர்மானிக்கிறது எனப் புரியவில்லை.
எந்த சமுதாயத்தில் இவ்வாறு ஆண்கள் சிகப்பழகை விரும்புகிறார்கள் எனபது இனி வரும் விளம்பரத்தில் காணலாம் - மிகத் தவறான கருத்த்து மதிப்பீடுகளின் வெளிப்பாடாக.
அண்ணாசாலையில் "நீங்க ஃபேர் ஆக வேணாடமா? எங்க க்ரீம் யூஸ் பண்ணிப் பாருங்க" என த்ரிஷா, கிரண் ஆகியோரது அறிவுறுத்தல் விளம்பரங்களை எதிர்பார்க்கலாம்.
இது உருப்படற வழியாத் தெரியலை.

Saturday, September 17, 2005

நாலெழுத்து வார்த்தையும் முஷரஃப்பும்

.
நாலெழுத்து வார்த்தையும் முஷரஃப்பும்.
------------------------------------------------------------------------

நீங்கள் நினைத்த அந்த நாலெழுத்து வார்த்தையினும் கெட்டது இது. RAPE என்பதற்கு, தமிழில் கற்பழிப்பு என்பதைவிட மிக வல்லிய வாக்கு இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. அதன் நிகழ்வைவிடக் கொடியது அதனைக்குறித்தான அவதானிப்புகளும், எண்ணங்களும். ஒரு சமுதாயம் எப்படி தன் பெண்களை குறித்து சிந்திக்கிறது என்பது அதன் அரசியல் வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன.
பாக்கிஸ்தானில் பஞ்சாயத்தால் பல மிருகங்களால் கற்பழிக்கப்படவேண்டும் என தண்டனை விதிக்கப்பட்ட பெண் அமெரிக்கா சென்று "பாக்கிஸ்தானில் நீதி கிடைக்காது" என வெதும்பிச் சொன்னதைக் குறித்து ,முஷரப் பேசியது மிகத் தரக்குறைவு.
ஒரு நாட்டின் பிரதான பொறுப்பில் உள்ளவர் பேசும் பேச்சல்ல இது.

"பாக்கிஸ்தானியப் பெண்கள் வெளிநாடு சென்று ( அமெரிக்கா, கனடா எனக் குறிப்பிட்டு)குடியேற்றமும், டாலர்களும் கிடைப்பதற்காக, வேண்டுமென்றே கற்பழிப்பில் தன்னிச்சையாக ஈடுபடுகின்றனர்" என்று அவர் சொல்லியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
பாக்கிஸ்தானில் பெண்கள் இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளது நியாயமான கோபங்களின் வெளிப்பாடு. ஆயின் இது போதாது.
ஆணாதிக்க உணர்வும், பெண்களை மிகக்கேவலமாக கருதும் எண்ணமும் கொண்ட ஒரு நாட்டுத்தலைவரிடம் என்ன பெரிதாக எதிர்பார்த்துவிடமுடியும்?

வேலியே பயிரை மேய்ந்த அவமானம் ஒருபுறமிருக்க,அதனைக் குறித்தான சிந்தனையும் பேச்சும் அதனைவிட அருவெறுப்பாக இருக்கிறது. முஷரஃப் காஷ்மீர் குறித்து கவலைப்படுவதை விட்டுவிட்டு கராச்சியிலும், லாகூரிலும் தனது ஆட்சியின் தரம் குறித்து கவலைப்படட்டும்.
முதலில் மனிதனாக அவர் வாழ முயலவேண்டும். பாக்கிஸ்தானியாக வாழ்வதை பற்றி அவர் பிறகு யோசிக்கலாம்.

காக்கைச் சிறகினிலே -2

காக்கைச் சிறகினிலே -2

நேற்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பச்சி கர்க்காரியாவின் கட்டுரை

சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. அழகு சாதனப் பொருட்கள் விற்பனைக்காக நடத்தப்பட்ட ஒரு விழாவில் பெண்ணுரிமை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் கலந்துகொண்டதைக் கண்டித்து அமைந்திருந்த அக்கட்டுரையின் நியாயமான கோபங்கள் சம்பந்தப்பட்டவர்களை குற்ற உணர்வில் ஆழ்த்தியிருக்கும்.

கறுப்பாக இருப்பது ஏதோ குறைபாடு என்பது போலவும், அவ்வாறு இருப்பவர்கள் சிவப்பாக்கும் க்ரீம்கள் உபயோகிப்பதன் மூலம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வர் என்பது போலவும் அமைந்து வரும் விஷமத்தனமான விளம்பரங்களின் சொந்தக்காரர்கள் நடத்தும் விழாக்களில் அதுவும் சிகப்பு மட்டுமே அழகு எனக்காட்டும் அழகுப்போட்டிகளில் பெண்ணியவாதிகள் கலந்துகொண்டு கைதட்டுவது எந்தவிதத்தில் அவர்களின் தார்மீகப் பொறுப்புணர்வைக் காட்டுகிறது?

'உழைத்துப்படித்து முன்னேறுவது என்பதைவிட சிகப்பாக இருந்தால் போதும்; அழகாக இருந்தால் போதும்; பேரும் புகழும் தானாகவே தேடிவரும்; சினிமாவில் வாய்ப்பு கிட்டும்' என்பது போல அமைந்து வரும் விளம்பரங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. (இது குறித்தான எனது வாதங்களை அண்மையில் எழுதினேன்). இதில் சினிமாக்காரர்களும் ( ப்ரியதர்ஷன் போன்ற இயக்குனர்களுக்கெல்லாம் இது வேணுமா?)அடக்கம்.

பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவிகளின் மனதைத் திசைதிருப்பும்படி அமையும் இவ்விளம்பரங்கள் ஒரு புறமென்றால், மற்றொரு சோப்பு விளம்பரம் ஒரு படி மேலே செல்கிறது. பெண்ணை சோப்பு வாங்க அனுப்பும் அம்மா, அய்யோ இவள் வேறெதாவது சோப்பு வாங்கிவந்துவிட்டால், சருமத்துக்கு கேடாகும்.. அப்புறம் அவளுக்கு கல்யாணமே நடக்காது ( எப்படி இருக்கிறது கதை? பெண்ணுக்கு வயது ஏழு இல்லை எட்டு இருக்கும்) என அல்லாடுவதாக அமைந்திருந்தது. யார் சொன்னார்களோ "கல்யாணமே நடக்காது" என்னும் வரிகள் இப்போது மாற்றப்பட்டிருக்கின்றன. என்ன செய்தாலும் விஷம் விஷம்தானே.

இது போன்ற விளம்பரங்களும் அவை விற்கும் விஷங்களும் முற்றிலும் புறக்கணிக்கப் படவேண்டும். ஒரு தலைமுறையின் சிந்தனையையே மாற்றும் கொடிய சக்திகள் இவை.

Saturday, September 10, 2005


பாரதி ஸாங்க்ஸ் லிஸன் பண்ணினீங்களா?

பாரதி நினைவுநாள் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ராகமாலிகா இன்று வந்தது. வழக்கம் போல விஜய் ஆதிராஜ் தமிங்கிலத்தில் தொடங்கினார். அதில் பேசிய சொற்றொடர்களைக் கேளுங்கள்.
"பாரதி எல்லாருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் இல்லையா?
அவர் ஆயிரக்கணக்கான பாடல் எழுதியிருக்கார். அவரோட நிறைய ஸாங்க்ஸ் படங்கள்ல கம்ப்போஸ் பண்ணியிருக்காங்க.
இந்த எபிஸோட் அவரை ரிமெம்பெர் பண்ற மாதிரி அமைச்சிருக்கோம்
அவரோட திரைப்பட(?) டூயட் ஸாங்க்ஸ் ஃபர்ஸ்ட் ரவுண்ட்ல பாடுவாங்க.
நீங்க எந்த ஸாங்க் பாடப்போறீங்க?
வெரிகுட்.
ஒரு சின்ன ப்ரேக்."

பிற நிகழ்சிகளில் ஆங்கிலம் கலப்பதை விடுங்கள். இன்றாவது, பாரதி நினைவு நிகழ்சி என்ற ஒரு மரியாதையாவது காட்டியிருக்கலாம். இசைக்கு மொழி கிடையாது என்று ஒரு சாக்கு சொல்லிவிடலாம். ஆனால், பாடலுக்கும், கவிதைக்கும் மொழியின் ஆழம் அடர்வு உண்டு. அந்த அளவிற்காவது பாரதியின் பாடல் என ஒரு மரியாதை இருந்திருக்க வேண்டும்.
இதைச் சொல்லப்போனால் " இது ஜனரஞ்சகமான, பொதுமக்களுக்குப் போய்ச் சேரும் நிகழ்ச்சி. இதிலெல்லாம் ரொம்பவும் மொழித் தரம் என்றெல்லாம் பார்க்க முடியாது " எனப் பதில் வரும். அதற்காக இப்படியா?
தேவுடா!

மெல்லத் தமிழினி.....

போன வாரம் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்குமாய் ஒரு அவசரப் பயணம். சென்னைஎக்ஸ்பிரஸ் சென்ட்Tரலில் வந்து சேர்ந்த்ததுமே ஒரு புதிய உற்சாகம். குப்பையாக மும்பை சாலைகளைக் கண்டு வெறுத்துப் போயிருந்த எனக்கு சென்னை என்றாலே கொஞ்சம் நிம்மதிதான்.
மவுன்ட் ரோட்டில் ஒரு பெரிய விளம்பரப்பலகை. "செல்ஃபோன் எதுக்கு. டாக் பண்ண்றதுக்கு" என ஒரு நடிகை சொல்லியவாறு ... தமிழ் வாசிக்கத் தெரியாத என் மகனுக்கு அதனை வாசித்துக்க் கட்டுவதில் சிரமமே இருக்கவில்லை. " அப்பா, இது இங்க்லீஷ்ல இருக்கு. நீ தமிழ்ல என்ன எழுதியிருக்குன்னு சொல்லு" என்றான். ஒரு வருடம் முன்னால் புனே நகரில் தேசிய வேதியியல் ஆராய்வுச் சாலையில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது.
எனது நண்பர் டாக்டர் தேஷ்பான்டேயின் மகன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைகிடைத்து சென்னை செல்ல நேர்ந்தது. " அவனுக்கு தமிழ் தெரியாதே" என்றார் கவலையாய். " ஒன்றும் பயமில்லை சார். ஒரு மாதத்தில் தேறிவிடுவான். மேலும் அலுவலகத்தில் ஆங்கிலம் இருக்கும். கவலையை விடுங்கள் " என்று சொல்லியிருந்தேன். இரு வாரங்களுக்கு முன் அவரது வீட்டில் அவர் பையனைச் சந்தித்தபோது " மொழிப் பிரச்சனை இருக்கா?" என்றேன். இல்லை என்றான் சிரித்தபடி. " அவங்க தமிழ்-ல பேசினாலும் எனக்குப் புரியும். பாதிக்கு மேல தமிழ்ல இங்லீஷ்தானே இருக்கு ? "
தமிழ் இலக்கணம், இலக்கியம் தெரியாது எனக் கவலைப்படுவதை விட இது மிகத் தீவிரமாக கவனிக்கப் பட வேண்டிய விசயம். சராசரி மனிதன் பேசும் தமிழில் தமிழ் எத்தனை சதவீதம் இருக்கிறது? ஆங்கிலம் கலக்காது பேசுவது "செந்தமிழில் பேசுவது" என்று அர்த்தமில்லை.
எளிய தமிழில் கடு கட்டியான செந்தமிழ் வாக்குகள் இல்லாமலே சரளமாக பேசலாம். இந்த மொழிப்பூனைகளுக்கு மணிகட்டுவது நம்மால் மட்டுமே முடியும்.
அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யமாட்டர்கள். அவர்கள் அளவில் மொழிப்பற்று என்பது நெடுஞ்சாலையிலும், ரயில்வண்டி நிலயங்களிலும் இந்தி மொழிப் பெயர்களை தார் போட்டு அழிப்பது என்ற அளவோடு நின்றுவிடுகிறது.
நாம் ஒழுங்கான தமிழில் வீட்டிலும் வெளியிலும் பேசவில்லையெனில் 'மெல்லத் தமிழினி..."

பி.கு அதே தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மும்பையில் எப்படி தெரியுமா? சரியான இந்திச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்கள்.!

Friday, September 09, 2005

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி
-------------------

நாராயண் மாத்ரே-ஐ கொஞ்ச நாளாய்த்தான் எனக்குப் பழக்கம். பெரிய உரத்தொழிற்சாலையில் பணியாற்றும் அவரைப் பார்த்ததும் சட்டெனப் பிடித்துவிட்டது. வழுக்கைத்தலையும், சிறிய மூக்குக்கண்ணாடியுமாய், முதிர்ந்த உயர் நடுத்தரமட்டத்து தலைமுறையின் ஒரு உதாரணம் அவர்.
போனவாரம் எனது அலுவலக மின்னஞ்சல் தொடர்பு சிறிது பாதிக்கப்பட்டிருந்ததை அவருக்கு ஒரு மின்னஞ்சலில் விளக்கியிருந்தேன். நேற்று சந்தித்தபோது சட்டெனக் கேட்டார் "நீங்கள் கான்வெண்ட்டில் படித்தவரில்லை சரியா?"
ஆம் என்றேன்.
"உங்கள் தாய்மொழியில் பள்ளியில் படித்திருப்பீர்கள்" என்றார்
"ஆம்" என்றேன் சற்றே வியப்புடன்.எதாவது தவறாக எழுதிவிட்டேனோ?
கேட்டுவிட்டேன்.
சிரித்தார் " இல்லை. தவறு இல்லாமல் இலக்கண சுத்தமாக இப்போது இளைஞர்கள் எழுதுவதில்லை. அதுவும் மின்னஞ்சல் என்றால் கேட்கவே வேண்டாம்."
"நீங்கள் சொல்வது சற்றே மிகைப்பட்டதாகத் தோன்றுகிறது" என்றேன். " உங்கள் மற்றும் எனது தலைமுறையினருக்கு ஆங்கில மீடிய கான்வெண்ட் படிப்பு என்றால் ஒரு நிறப்பிரிகையுள்ள கண்ணாடி மூலமே பார்க்கிறோம். சிலருக்கு இருக்கும் தாழ்வுமனப்பான்மையை மறைப்பதற்கு அனாவசியமாக எல்லாவற்றிலும் மட்டம்தட்டி குற்றம் காண்கிறோம். அனைவரும் இப்படி எழுதுவதில்லை. சிலருக்கு பொறுமை இல்லாமை, நேரப்பற்றாக்குறை, அவசரம் ... அதனால் பிழைகள் வரலாம். பொருட்படுத்தாதீர்கள்" என்ற என் பேச்சைக் கேட்டவாறே அவரது கணனியின் திரையைக் காட்டினார்.
"இந்த மின்னஞ்சலைப் படியுங்கள்" என்றார். அது ஒரு தனியார் நிதிக்கம்பெனியிலிருந்து வந்திருந்தது. பெரும் பேரும் புகழும் உலகளவில் பெற்றிருக்கும் நிதிக்கம்பெனியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபரின் மின்னஞ்சல். நம்பமுடியாத அளவிற்கு பிழைகள்.
"பிழைகளை விடுங்கள். வார்த்தைகளில் ஒரு மதிப்போ, மரியாதையோ கூடத் தென்படவில்லை.சுதாகர் " என்றார் மாத்ரே. "நான் ஒரு வாடிக்கையாளன் என்ற அளவில் ஒரு மரியாதை எதிர்ப்பார்ப்பது தவறா? சொல்லுங்கள்" என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
Slangs சரளமாக உபயோகித்துப் பழகியிருக்கக் கூடும் அந்த இளைஞன்... வார்த்தைகளி, சொற்றொடர்களில் ஒரு இணைப்பு இல்லை. நேராக விசயத்திற்கு வந்திருந்தான். இரண்டே வார்த்தைகளில் தனது கம்பெனி ஏன் நிதி வழங்குவதில் தயக்கம் காட்டுகிறது என்பதைச் சொல்ல முயன்றிருக்கிறான். மிக மிக நாசூக்காகச் சொல்ல வேண்டியது. யார் படித்தாலும் கோபம் மூளும்.

"நமது இளைஞர்களுக்கு எப்படி சிந்திக்கவேண்டுமென்பதும், சிந்திப்பதை எப்படி வார்த்தைகளில் கொணரவேண்டுமென்பதும் கற்பிக்கப் படவில்லை. நான் படிக்கும்போது லாஜிக் என்றொரு வகுப்பு உண்டு. சிந்திக்கும் முறை, வழி பற்றிச் சொல்லிக்கொடுப்பார்கள் " என்றார் மாத்ரே, மூக்குக்கண்ணாடியைத் துடைத்தபடியே.

"இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு. ஒரு மனிதனின் தவறை அவன் தலைமுறை முழுதும் ஏற்றுவது சரியல்ல. எத்தனை எம்.பி.ஏ பட்டதாரிகள் இப்போது வருகிறார்கள்? எல்லோருமா இப்படி தவறு செய்கிறார்கள்?" என வாதாடினேன்.

" நான் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே காட்டினேன். என்னுடன் வருகிறீர்களா? மும்பையின் பிரபலமான கல்லூரிகளுக்குச் செல்வோம். எத்தனை பேருக்கு தெளிவான சிந்தனையும், அதனை வெளிப்படச் சொல்லும் திறமை இருக்கிறது எனப் பார்ப்போம்" என்றார் மாத்ரே.

"நான் படித்தது கிராமத்தில். மராத்தி மீடியம்தான். அதில் வருத்தமோ வேதனையோ இல்லை. மாறாக இப்போது எனது ஆசிரியர்களுக்கு நன்றி சொல்கிறேன். Wren &Martin இலக்கணமும், மனப்பாடச் செய்யுள்களும், கணித வாய்ப்பாடுகளும் இப்போதும் எனக்குக் கைகொடுக்கிறது. நாலு இலக்க எண்களைக் கூட்டவும், வட்டி, கழிவுத்தொகை கணக்குகளுக்கும் எனக்கு எக்ஸெல் தேவையில்லை. இவர்களுக்கு லாப்டாப் இல்லாமல் முடியாது." மாத்ரேயின் சொற்களில் உண்மையிருக்கிறது.

புதிய பாடத்திட்டங்களை ஒழுங்காக உருவாக்குவதிலும், அதனைச் செயல்படுத்தவும் தோல்வியடைந்த நாம், பழைய பாடத்திட்ட முறையிலிருந்த நல்ல விசயங்களையும் கைவிட்டுவிட்டோ ம். தெளிவாகச் சிந்திக்கவும், சிந்தித்ததைக் கோர்வையாகச் சொல்லவும், எழுதவும் நமது இளம் தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்க மறந்துவிட்டோ ம்.
இந்தியாவின் இப்போதைய முன்னேற்றத்திற்கு இந்த தெளிவான சிந்தனையும், திறம்படச் செயல்படும் திறனும் முக்கியகாரணம் என்பதை வளர்ந்து வரும் தலைமுறைக்கு உணர்த்தவேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் பேச்சுப்போட்டியும், எழுத்துப்போட்டியும், போட்டியளவில் ஆசிரியர்களுக்கு பிடித்த மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கிட்டும் என்பது இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்பப் பயிற்சியளிக்கவேண்டும். கணிதம் என்றாலே "எங்கே எக்ஸெல்?" என்னும் அளவிற்கு மூளைச் சோம்பேறிகளை உருவாக்குவதில் பெரும் அபாயம் இருக்கிறது. கணனித்துறைக்கு வெறும் coderகள் மட்டும் வேண்டுவதில்லை. ஆராய்ந்து அறிந்து, செயல்படுத்தும் திறமையும் முக்கியம் என்பதை பெரும்பாலும் பெற்றோர் உணருவதில்லை. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் PTA போன்ற அமைப்புகள் பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இல்லையெனில், பெயர் சொல்லவே திக்கித்திணறும் இந்தியாவை இன்னும் பத்துவருடங்களில் காணலாம்.

Saturday, August 27, 2005

காக்கைச்சிறகினிலே

அண்மையில் , அழகுசாதன மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் மார்கெட்டிங் துறையின் மூத்த அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்."போன வருடத்திலிருந்து வருவாய் அதிகரித்திருக்கிறது. முக்கியமாக மூன்றாவது, நாலாவது குவாட்டர் மாதங்களில் நல்ல விற்பனை"என மகிழ்ச்சியாகச் சொன்னவர், ஒரு வார்த்தையில் கடுப்பாக்கினார்.
" தெரியுமோ, புதிய சிகப்பழகு சாதனங்களை இந்த முறை நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்தது தென்ன்னகத்தில். அதில்தான் வருமானம் கூடியது. முக்கியமாக கறுப்பாக மக்கள் இருக்கும் தமிழ்நாடு, ஆந்திராவில் தான் வியாபாரம் அதிகம்.." கடுப்பானேன் நான்."கறுப்பு சிகப்பு எல்லாம் ஜாதி பார்ப்பது போல. இதில் என்ன இருக்கிறது?வேறு காரணங்கள் இருக்கலாம். சும்மா சொல்லாதீர்கள்."
" வியாபாரமே நிறத்தில்தான் சார்" என்றார்.
"எத்தனை முறை நீங்கள் சிகப்பாக இல்லையா? எனக்கேட்கிறோமோ, அத்தனைக்கு மக்கள் எங்கள் விளம்பரத்தைப் பார்க்கிறார்கள். சிகப்பழககு கிரீம்,பவுடர் வாங்குகிறார்கள் "
ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது என்றாலும், மேலும் மறுத்தேன். " இது அநியாயம். மக்களுக்கு இல்லாத ஒரு தாழ்வு மனப்பாங்கை வளர்த்து உங்கள் பொருளை விற்கிறீர்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்"
சிரித்தார். "நாங்கள் வளர்க்கவில்லை. கண்டுபிடிக்கிறோம். முக்கியமாக ஒரு புள்ளிவிவரத்தைக் காட்டுகிறேன். வெளியே சொல்லக்கூடாது "என்றவர் ஒரு மார்கெட்டிங் நிறுவனத்தின் ஆய்வுக் கட்டுரையைக் காட்டினார் ( confidential என்பதால் கம்பெனியின் பெயரையும், அவரது பெயரையும் குறிப்பிடவில்லை)

தமிழ்நாட்டில்,ஆந்திராவில் 14-18 வயது மாணவர்கள் மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. நகரங்கள் வருமான,போக்குவரத்து, செய்தித் தொடர்பு, மக்கள் நெருக்கம், பள்ளி கல்லூரிகளின் எண்ணிக்கை போன்ற பல அளவுகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதில் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் கல்யாணமாகாத இளைஞர்/பெண்கள், ஒரு குழந்தை கொண்ட குடும்பங்கள் என தரம் பிரிக்கப்பட்டு, ஆய்வுக் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வளர்க்கிற, உங்களை தொய்யச் செய்கிற முக்கியமான காரணத்தைக் கூறுமாறு ஒரு கேள்வி. அதற்கு "ஆங்கிலத்தில் பேச இயலவில்லை " என 70% கூறியிருக்கின்றனர். "நான் கறுப்பாக இருக்கிறேன்" என்பதை 45% மாணவர்கள் குறையாகச் சொல்லியிருக்கின்றனர். ( சிலர் பல காரணங்களை வரிசைப்படுத்தியதால் இரு தரப்பிலும் அவர்களது காரணங்கள் சேர்க்க்பட்டிருகின்றன).
"சிகப்பாக இல்லை எனப் பெண்களைப்போலவே ஆண்களும் நினைக்கின்றனர். குறிப்பாக +2, கல்லூரி மாணவர்கள் இதில் அதிகம். " என்றார் நண்பர்.
"மாணவிகள் சிலர், தாங்கள் கறுப்பாக இருப்பதால் சில மாணவிகள் தங்களிடம் பேசுவதில்லை எனவும் , மேடைப்பேச்சு, நாடகம் போன்றவற்றில் ஆசிரியர்கள் தங்களைச் சேர்ப்பதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்" என்கிறது அந்த ஆய்வு.
கிராமச்சூழ்நிலையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இது அதிகமில்லை. நடுத்தரமான நகரங்கள், சென்னை, கோயமுத்தூர், விசாகப்பட்டினம், நெல்லூர் என வரும் நகரங்களில் இது அதிகம்.
"கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு பெயர்நத குடும்பத்தில் வளரும் மாணவர்கள், மாணவிகளிடம் இம்மனப்பாங்கு அதிகம் காணப்படுகிறது. "குடும்பச் சூழ்நிலையும் நகரச் சூழலும் மாறுபடும் போது உண்டாகும் தடுமாற்றம் இது " என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
" முகப்பூச்சு பவுடர் உபயோகிக்கும் ஆண்கள் ( மாணவர்கள் ) தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் அதிகம் " என்கிறது ஆய்வு. "இது வாசனைக்கோ அன்றி வியர்வைக்கோ இல்லை. முகம் வெளுப்பாகத் தோன்றவேண்டும் என்ற அடிப்படை எண்ணமே இந்த உபயோகத்திற்குக் காரணம்" என்றார் நண்பர். விரைவில் ஆண்களுக்கு என விசேஷமாக முகப்பூச்சு பவுடர் கொண்டுவர சில கம்பெனிகள் யோசித்துக்கொண்டிருக்கின்றன. மார்க்கெட் அப்படி.

மேலும் வரும்...

Sunday, August 14, 2005

சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம்

சுழன்றும் ஏர்ப்பின்னதுலகம்
--------------------------------------

இன்றைய ஹிந்துஸ்தான் டைம்ஸ்-ஸில் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கட்டுரை வந்திருக்கிறது. நமது 70 களின் பசுமைப்புரட்சி பற்றி இன்றும் மார்தட்டிக்கொள்வதின் அபாயத்தை விளக்கியிருக்கிறார் அதன் ஆசிரியர் சைக்கத் நியோகி. 70 களின் தீவிரம் இன்று இல்லை என்பது வருந்தத்தக்க நிதர்சனமான உண்மை. உணவுப் பொருட்கள் இந்தியாவில் பற்றாக்குறை ஏற்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிறது அக்கட்டுரை.
CMIE -ன் உணவுப்பொருள் விளைச்சல் குறித்த 2004-05 -ன் புள்ளிவிவரங்கள் கவலைதருகிறது.
உதாரணமாக அரிச உற்பத்தி 1.3% குறைவாகவும், பருப்பு போன்றவைகளின் உற்பத்தி 1.4% குறைவாகவும் இருப்பது(2003-2004 உற்பத்தியுடன் நோக்கும்போது) குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சராசரி இந்தியனுக்கு கிடைத்த உணவுப்பொருள் 1990-ல் 510 க்ராம். இது 95-ல் 495 கிராம் ஆகவும், 2003-ல் 436 ஆகவும் குறைந்து வருகிரது. இதேபோல பருப்பு வகைகள் 91-ல் 41.6 கிராம் எனவும் 2003-ல் இது 29.1 கிராம் எனவும் குறைந்து வந்திருக்கிறது.
உணவுப்பொருட்களின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது. விளைநிலங்களின் அளவு கூடுவதில்லை எனவும், நிலங்களின் உற்பத்தித்திறன் குறைந்து வருகிறது எனவும் விவசாயத் துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர். விளைநிலங்கள் , ஒரு மனிதனுக்கு 1991 ல் 0.34 ஹெக்டேர்இருந்தது. இது 2001 -ல் 0.31 ஹெக்டேர் ஆகக் குறைந்திருக்கிறது. இருக்கும் நிலத்தில் அதிக மகசூல் தரும் விளை பயிர்களை வளர்ப்பதில் உள்ள பெரும் தடைகல் - விவசாயிகளுக்குத் தேவையான செய்திகள், சரியான ஊடகங்கள் வழியே சென்று சேருவதில்லை. விவசாயத் துறையில் வல்லுநர்கள் அளவில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது (M.s.Swaminathanக்கு அடுத்த தள அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் குறைவு ). மேலும் ஊக்கத்தோடு புது முயற்சிகள் எடுப்பதில் உள்ள தயக்கம் ( இஸ்ரேலுடன் ஏற்பட்ட விவசாயத் தொழில் நுட்பப் பரிமாற்ற அமைப்புகளின் முயற்சிகள் என்னவாயிற்று?), உலக அளவில் பன்னாட்டு நிறுவனங்களின் சுயநலப்பாங்கும், அவற்றிற்கு எதிரான புரட்சிகளும் விவசாயத்துறையில் புதுக்காற்று வீசுவதற்கு நல்ல தளம் அமைக்கவில்லை.
இந்நிலையில், பண்பளவில் மாற்றப்பட்ட பயிர்கள் ( genetically modified குத் தமிழில் என்னவென தெரியவில்லை, மன்னிக்கவும்), பருத்தியைத் தாண்டி பிற பயிர் ரகங்களில் விவசாயிகளைக் கவரவில்லை. இதிலும் மோன்ஸோன்ண்டா நிறுவனத்தின் பண்புமாற்றப்பட்ட பயிர்களின் விதைகள் குறித்தான வாதங்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை.
நோய்களையும், புழுக்களையும் எதிர்க்கும் புதுப்பயிர் ரகங்கள் பல பயிர்களில் இந்தியாவில் வருவதில் உள்ள சிரமங்களைக் குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இது.
நமது இளைய தலைமுறை, விவசாயத்திலும் ஈடுபாடு கொள்ள வேண்டிய தூண்டுதலை பள்ளிகளும், கல்லூரிகளும் அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றன. கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் "இஞ்சினீயர், டாக்டர், மென்பொருள் வல்லுநர் " என்னும் கனவுகளோடு மட்டுமே இருப்பதில் "ஒரு தலைமுறையே தவறு செய்துவிட்டதோ?' எனத் தோன்றுகிறது.
விவசாயம் குறித்து இளைய தலைமுறைக்கு புதிய கருத்துக்களையும், அதன் முக்கியத்துவத்தையும் விளக்குவற்கு இன்னும் நேரம் கடந்துவிடவில்லை. தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட புரட்சி வேண்டாத mms-ல் நின்றுவிடாமல், கிராமத்தில் வேளாண்மையின் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்த முடியுமானால், நமது வளர்ச்சி சீராக அனைத்துத் துறைகளிலும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Sunday, July 31, 2005

உயிர்களிடத்து அன்பு வேணும்

உயிர்களிடத்து அன்பு வேணும்
---------------------------

எனது பக்கத்து வீட்டுக்காரர் இந்திரநில் பாண்டே சொந்தத் தொழிற்சாலை வைத்து நடத்திவருபவர். செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் தொழிற்சாலையில் மிகச்சேதம். அன்று மதியம் கிளம்பி இரவு தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்தார்(வீட்டிலிருந்து அலுவலகம் 3 கி,மீட்டர்தான். மூன்று கிமீ செல்வதற்கு பத்து மணிநேரம் ஆகியிருக்கிறது).

மனிதர் அடுத்த நாள் , அருகில் இருக்கும் ஆரே பால்பண்ணைப் பகுதியில் ( இது நமது ஆவின் போல மும்பைக்கு பால் வழங்கும் மிகமுக்கியமான நிறுவனம்) மாட்டியிருந்தவர்களை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி நெடுஞ்சாலை வரை கொண்டு விட்டுவந்தார். ஆரே நிறுவனப் பகுதியில்தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் ( பாலாஜி டெலெபிலிம்ஸ் - ஏக்தா கபூர் புகழ்) ஸ்டூடியோக்கள் வைத்திருக்கின்றன. ராயல் பாம் ( Royal palm) போன்ற நவீனக் கட்டுமானங்கள் வந்துகொண்டிருக்கும் அழகிய இடம்.இது மலைக்காட்டுப் பகுதி. பால்பண்ணையில் ஆயிரக்கணக்கான மாடுகள் கட்டிவைக்கப்பட்டிருக்கும்.

அன்று, வெள்ளம் வருமுன்னரே மாடுகளையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு எடுத்துச்சென்றிருக்கவேண்டும். செய்யவில்லை. குறைந்தபட்சம், அவற்றைக் கட்டியிருக்கும் கயிறுகளையாவது அவிழ்த்துவிட்டிருக்கவேண்டும். அதுவும் செய்யவில்லை. விளைவு மிகப் பயங்கரம்.

"குறைந்தது 700 மாடுகள் செத்து மிதக்கின்றன" என்றார் பாண்டே, மூக்கில் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தபடியே. அதிர்ந்துபோனோம்.
"இது பரவாயில்லை. மற்ற தபேலா ( தனியார் மாட்டுப் பண்ணை)க்களில் கூட்டம்கூட்டமாக மாடுகள் மரித்திருக்கின்றன. அவற்றை புதைப்பதற்குக்கூட யாரும் வரவில்லை. நாற்றம் அப்படி குடலைப்பிடுங்குகிறது" என்றார் பாண்டே, தோளைக்குலுக்கி அந்தக்காட்சியை நினத்து அதிர்ந்தபடி. தோல் உரிக்கக் கொண்டு போகும் வசாய் போன்ற இடங்களிலும்" இனிமே மேற்கொண்டு சடலங்களைக் கொண்டுவராதீர்கள்" எனச் சொல்லிவிட்டார்கள். சடலங்களின் நிலையும் , துர்நாற்றமும் அப்படி. இன்னும் உடல் ஊதிய நிலையில் ஆரே காட்டில் சிக்கிக் கிடக்கின்றன பல சடலங்கள். இதில் மனித சடலங்களும் அடக்கம். யார் போய் இக்காட்டில், இம்மழையில் எடுப்பது?

உயிர்வதைத் தடுப்பு தன்னார்வல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தபேலா உரிமையாளர்களை அணுகியபோது புகைப்படம் கூட எடுக்கவிடாமல் துரத்தப்பட்டார்கள். செய்தித்தாள்கள் மூன்றாம்பக்கத்தில் இச்செய்தியைப் பிரசுரித்தன.

முக்கியமாக , இச்சடலங்கள் அழுகுவதால், நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது ( பரவிவிட்டது என்கிறார்கள்). அழுகும் சடலங்களைத் தின்ன காட்டுவிலங்குகள் அருகிலிருக்கும் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா, மலைக்காடுகளிலிருந்து வருவதற்கும் சாத்தியம் இருக்கிறது.

"போய்யா, அவனவன் உயிருக்குப் பயந்து ஓடிக்கிட்டிருக்கான். இதுல மாட்டை காப்பாத்தணுமாமில்ல?" என்று சொல்லிக்கொண்டிருந்தார் தமிழ்க்காரர் ஒருவர் , நேற்று காய்கறிக்கடையில்.
பாரதி இருந்திருந்தால் இன்னும் வருத்தப்பட்டிருப்பான்.

Saturday, July 30, 2005

தமிழா தமிழா

தமிழா தமிழா
----------------

மழையால் வந்த சேதம் போதாதென, வதந்திகள் உயிர்ப்பலி வாங்கிய அவலம் மும்பையைப் பெரிதும் தாக்கியிருக்கிறது. சுனாமி வருகிறதென சில விஷமிகள் பரப்பிய வதந்தியில் கடற்கரையினருகே நேரு நகர்ப் பகுதியில் வசித்து வந்த மக்கள் பதறி ஓட, அந்த அமளியில் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.
நேருநகர்பகுதியில் வசிப்பவர்களில் பெருவாரியில் தமிழ்மக்கள்.அன்றாடங்காய்ச்சிகள். அது சேரிப்பகுதியென்பதால் குறுகலான வழிகள் ஓடும் பாதையைல் நெரிசலைக் கூட்டியிருகின்றன. சுனாமி பற்றிக் கேள்விப்பட்ட தமிழ்மக்கள் என்பதால் பீதி அதிகமானது.
காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கின்றது. வதந்தியைப் பரப்பியவகளில் சில அறவாணிகளூம், நடனமாதுக்களும் முக்கியமான குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேது கொலைக்குற்றம் சாட்டப்படுள்ளது. காவல் ஆணையர் "வதந்திகளை நம்மப வேண்டாம் " என மீடியா மூலம் வேண்டுகேள் விடுத்துள்ளார். கனமழையில் வேலை செய்யாத மொபைல் போன் கம்பெனிகள், காவல்துறையின் வேண்டுகோள்களை குறு செய்திகள் மூலம் பரப்பி புண்ணியம் கட்டிக்கொண்டுள்ளன.

தாராவி, நேருநகர் குர்லா, செம்பூர் போன்ற இடங்களில் பெருவாரியாக வாழும் தமிழ்மக்களுக்கு எந்த தமிழ் சங்கமும் முன்வந்து உதவி செய்ததாக செய்தி இல்லை. தமிழ்ப் பத்திரிகைகளும், தமிழ் டி.வி சேனல்களும் "மாண்புமிகு அமைச்சர் கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார் " போன்ற செய்திகளுடன் கொசுறாக மும்பையில் மழை என்றும் , சில புள்ளி விவரங்கள் தந்ததோடு நிறுத்கிக்கொண்டு விட்டன. முன்பின் தெரியாத மக்களின் உதவியிலும் தியாக மனப்பாங்குமே மும்பையை இயற்கையின் சீற்றத்தில் போராடிப் பிழைக்கவைத்தன என்பது கண்கூடு.
சராசரி மும்பைவாழ் மனிதன் வெள்ளத்தின் மேலே பத்தடி உயர்ந்து நிற்கிறான்.

Wednesday, July 27, 2005

பேய்-யெனப் பெய்யும் மழை

பேய்-யெனப் பெய்யும் மழை
-------------------------

குஜராத்தில் அங்கலேஷ்வரில் நேற்று அலுவலக மீட்டிங் -கில் இருந்தபோது வீட்டிலிருந்து செல்போனில் அவசரமாக அழைப்பு வந்தது. சாதாரணமாக இவ்வாறு வருவதில்லை.
" நீங்கள் இன்னும் மும்பைக்கு கிளம்பிவிவ்லையென்றால் அங்கேயே இருந்துவிடுங்கள். மும்பையில் பயங்கர மழை..நெடுஞ்சாலையில் போக்குவரத்து நின்றுவிட்டது.மின்சாரம் துண்டிக்கப் பட்டுவிட்டது." என்ற செய்தி அதிர்ச்சியாக இல்லையெனினும் கவலை தந்தது. எப்படிப் போயிச்சேரப்போகிறோம்? என்பதை விட, ஏங்கே, நடுவழியில் நின்று விடுவோமோ? என்ற பயம் தொத்திக்கொண்டது.
" ஒரு துளிக் கூடப் பெய்யலை சார். சும்மா பயமுறுத்தியிருக்காங்க" என்ற டிரைவர், விரார் என்ற இடம் வந்தபோது, மழையின் திடீர்த் தீவிரம் கண்டு பயந்துதான் போனான். " முன்னால ஒண்ணும் தெரியலை சார். நிறுத்திரலாமா? " என்றவனின் குரலில் அச்சம் தெரிந்தது. ராட்சத லாரிகள் பாறைகளில் முட்டிக்கொண்டு அங்கங்கே சுளுக்கி நின்றிருந்தன.
போரிவல்லி வந்தபோது நெடுஞ்சாலையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை லாரிகளும், கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன. " சாயங்காலம் நாலு மணிக்கு இங்கே நிறுத்தினேன் " என்றார் ஒரு கார் ஓட்டுனர். நான் அவரிடம் கேட்டபோது இரவு பத்து மணி. ஓரமாக பல கார்கள் நிறுத்தப்பட்டு ப்லிங்கர்கள் அணைந்து எரிந்துகொண்டிருந்தன. உரிமையாளர்கள் வண்டிகளை அப்படியே போட்டுவிட்டு கால்நடையாகப் போயிருந்தார்கள். பேருந்துகள் மிகச்சிலவே இயங்கியிருந்தன. புறநகர் ரயில்கள் நின்றுவிட்டிருந்தன. மக்கள் அங்கங்கே இறங்கி சுமார் மூன்று நான்கு ரயில் நிலையங்கள் நிறுத்தத்திற்கான தொலைவு நடந்து வந்துகொண்டிருந்தார்கள் சாரை சாரையாய். ஒரு நபர் பத்து கிலோமீட்டர் தொலைவு நடந்திருக்கக் கூடும்- அதுவும் கொட்டுகிற மழையில்.
"இப்படி ஒரு மழை பத்து வருசமாகப் பார்த்ததில்லை" என்றார் எங்கள் காலனி இரவுக் காவலாளி." இங்க வீட்டுப் பக்கம் கழுத்தளவு தண்ணி. குழந்தைகளைக் கூட்டிகிட்டு என் பொஞ்சாதி எங்க போயிருக்குன்னு தெரியலை. விடிஞ்சதும் தேடப் போணும்" என்றார் கவலையிடன்.
அலுவலகங்களில் பலர் தங்கிவிட்டனர். இதில் மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டுவிட்டது. பள்ளிக் குழந்தைகள் வகுப்புகளிலேயே தங்கியிருக்க, அம்மா ,அப்பாகள் அலுவலகங்களில்.

செல்போன்கள் வேலை செய்யவில்லை. மாட்டிக்கொண்ட மக்கள் வீடுகளுக்குத் தொடர்பு கொள்ள முயன்று வெறுப்புல் திட்டித் தீர்தார்கள். "அவசரத்துக்கு உதவலைன்னா இது எதுக்கு?" என்ற ஞனானோதயம் மழைச்சாரலின் அடியில் உதிக்க, பலரும் ஒரு ரூபாய் பி.சி.ஓ க்களைத் தேடிப் போனார்கள். ஆறுதலான செய்தி, எம்.டி.என்.எல் -இன் பொதுத் தொலைபேசிகள் இயங்கின என்பதுதான். வீடுகளில் கார்ட்லெஸ் போன் வைத்திருந்தவர்கள் மின்சாரம் இல்லாது , போன் இருந்தும் உபயோகமில்லாமல் தவித்தனர்.
ந்யூயார்க்கில் மின்சாரம் இல்லாது 2003-இல் மக்கள் தவித்தபோது, செல்போன்கள் நின்றூவிட, இதே நார்மல் தொலைபேசிகள் மட்டும் இயங்கின என்ற செய்தி ஞாபகத்திற்கு வருகிறது. எம்.டி.என்.எல், பி.ஏச். என்.எல் இதை விளம்பரத்திற்கு பயன்படுதலாம்.

21 மணி நேரத்திற்குள் சான்டாகுரூஸ் விமான தளத்தில் 833 மிமீ மழை பதிவாகியிருந்தது. புற நகர் கட்டுமானங்கள் தாங்கும் சக்திக்கு இது மிக மிக அதிகம். இருப்பினும், மக்கள் பீதியடையாமல் பொறுமையாக சாலையில் வரிசையாக்ச் சென்றனர் என்பதும், கார்கள், லாரிகள் சாலையில் நின்றுகொண்டிருந்த மக்களை யார் எவரென்ப் பார்க்காது செல்லும் அளவு தூரத்திற்கு ஏற்றிச் சென்றனர் என்பதும், சில கடைகளி, வெளியே போகமுடியாமல் மாட்டிக்கொண்ட நபர்களுக்கு டீ, ரொட்டி தந்து உதவினர் என்பதும் மும்பையில் இன்னும் மனிதம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு சான்று.

இதையெல்லாம் விட, இன்று காலை ,இவ்வளவு மழைக்கும் பிறகும் அலுவலகம் செல்ல 5.30 பஸ்ஸிற்காகக் காத்துநின்ற பெண் பளீரெனக் கண்ணில் பட்டாள் - மும்பையில் மட்டுமே இது சாத்தியம்.

Saturday, May 21, 2005

விஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்

விஜெய் டென்டுல்கர்- சில குறிப்புகள்

இந்திய நாடக உலகில் நவீன நாடகங்களில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்களில் முக்கியமானவர் விஜெய் டென்டுல்கர்.மராத்தியிலும், இந்தியிலும் அவர் எழுதிய நாடகங்கள் நாடக உலகை ஒரு கலக்கு கலக்கின. ஐம்பது வருட சாதனையாக அவர் முப்பதுக்கும்மேற்பட்ட நாடகங்களையும், 23 ஓரங்க நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இது தவிர 11 குழந்தைகள் நாடகங்களையும் மராத்தியில் எழுதியுள்ள அவருக்கு பத்மபூஷன், சங்கீத நாடக அகாடமி ஃபெல்லோஷிப் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை.

மராத்தி நாடக உலகில் பெரும் புகழும் மரியாதையும் வழங்கப்பெற்ற டென்டுல்கர், பு.லெ. தேஷ்பாண்டேயின் சக கால படைப்பாளியாக இருந்ததில் , மராத்தி நாடகம் செழித்தது. துணிவாகவும் நேரடியாகவும் ஜொலிக்கும் கதாபாத்திரங்களைக் கொண்ட அவரது நாடகங்கள் சமூக எதிர்ப்பையும் சிலசமயங்களில் பெற்றன.
சாக்காராம் பைண்டர் ( Sakharam Binder) என்ற நாடகம் 1974ல் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டதும், இந்திய அரசால் தடை செய்யப்பட்டது.நாடகக் கருவும், பேசப்பட்ட மொழியும் அன்று அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அமெரிக்கா "விஜெய் டென்டுல்கர் விழா" என 2004-ல் அவரது படைப்புகளை மேடையேற்றி கெளரவித்தது. இதனை இந்திய அமெரிக்க கலைக்குழு ( Indo American Art Council) மற்றும் South Asian Theater Group,American Theater Grop, Queeen's Museum of Art, the Pan Asian Repoertory, The Play Company போன்ற குழுக்கள் செப்டம்பர் 04- நவம்பர் 04 வரை அமெரிக்காவில் பல இடங்களில் நடத்தி சிறப்பித்தன.
விஜெய் டென்Tடுல்கரை இந்தியாவில் விட பிற நாடுகளில் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். முக்கிய காரணம், அவரது நாடகங்களை பிற இந்திய மொழிகளில் உருவாக்கப் பலரும் தயக்கம் காட்டியமையே.

அவரது காதம்பரி II என்ற சமீபத்திய நாடகத்திற்கு அண்மையில் ப்ரியதர்ஷினி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. தனது நாடகங்களுக்கு தற்போது கிடைத்துவரும் சிறப்பான இயக்கங்களுக்கும், நாடக நிகழ்வுகளின் தரத்திற்கும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் இம்முன்னோடி,"இவ்வாறான சிரத்தை காணப்பெறும்போது, 50 வருடங்களாக நாடகங்கள் இயற்றிவரும் என்போன்றவர்களும் மேலும் ஊக்குவிக்கப்படுவது ஆச்சரியமில்லை" என்கிறார் மனநிறைவோடு.

தமிழில் அவரது நாடகங்களை எவரேனும் எடுத்துச் செயலாற்றினால் , தமிழுலகம் வி.சி. காண்டேகர் என்னும் எழுத்தாளரை முன்பு அறிந்ததோடு தேங்கி நிற்காமல், பு.லெ. தேஷ்பாண்டே என்னும் பெரும் நாடக ஆசிரியரை பெயரளவில் அறிந்ததோடு நிற்காமல்,நவீன நாடகங்களில் புது ஓட்டத்தோடு பொலிவு பெறும்.

Saturday, May 14, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள்-4

தாலாட்டில் தந்தைப்பேறு

தாய்மை எவ்வளவுக்கு முக்கியமாக மதிக்கப்படுகிறதோ, அத்தனைக்கு, மறைமுகமாக தந்தைப்பேறும் சமூகத்தில் கவனிக்கப்படுகிறது. இதற்காகவே, குழந்தைப்பேறில்லா மனிதன் பல புண்ணியம் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறான். அவனது பரிவு கண்டு மனைவி, தன் கணவனின் அரும்பணிகளை ,தாலாட்டில் தன் பிள்ளைக்குச் சொல்வது போல, தன் பாராட்டையும் ,நன்றியையும் தெரிவிக்கிறாள்.
"மைந்தன் பெற வேண்டுமென்று
வருந்திய பாண்டியர்கள்
சாலைகள் போட்டுவைப்பார்
சத்திரம் கட்டிவைப்பார்"
எனத் தொடங்கிய வரிகளில்,அறப்பணிகளுக்கான காரணம் தெளிவாகச் சொல்லப்படுகிறது.
"நெல்லியிலை பிடுங்கி
நேர்த்தியாய் தொன்னை தைத்துப்
பசியறிந்து அன்னமிடும்
பாண்டியர்."
எனப் புகழ்பவள் ,அடுத்த வரிகளில் அவரது அறச்செயலின் ஈடுபாட்டைப் பாடுகிறாள் - ஒரு சிறு கதை மூலம்.
ஊரில் கடும்பஞ்சம். மக்கள் வெளியூர்களுக்கு புலம்பெயர்கின்றனர். வருபவர்க்கெல்லாம் சோறிடுகிறான் தலைவன். அத்தோடு நிற்கவில்லை. பசித்தவர்களைத் தேடி, விளக்கோடு செல்கிறான். உணவின்றி உறங்குபவர்களை,அவர் முகம்பார்த்து, எழுப்பி உணவிடுகிறான். இச்செயலை
"கொப்பரையில் சோறும்
குடத்தில் இளநீரும்
பந்தம் கொளுத்திவந்து
பசித்தார் முகம்பார்த்து
அந்த நகர்ச் சோலையிலே
அமுதிடுவார்"
எனப்பாடுகிறாள் தாய்.தந்தையின் அறச்செயலைக் கேட்டு உறங்குகிறது குழந்தை.
"சீக்கிரம் தூங்கலே... பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்" என மிரட்டி குழந்தைகளைத் தூங்கவைக்கும் தாய்மார்கள் படிக்கவேண்டிய வரிகள் இவை.

கடவுளுக்கு மாலை சார்த்துகிறான் தலைவன்.மிக்க கவனத்துடன் பூக்களைப் பறித்து மாலை செய்கிறான். அதில் பூக்களை எவ்வாறு கொய்கிறானென்பதை விவரிக்கிறாள்
"கையாலே பூவெடுத்தா
காம்பழுகிப் போகுமின்னு..
விரலாலே பூவெடுத்தா
வேரழுகிப் போகிமின்னு
பொன்னூசி கொண்டு
பூத்த மலரெடுத்து
வெள்ளூசி கொண்டு
வெடித்தமலரெடுத்து
செடிசெடியாய்ப் பூவெடுத்து
செண்டு செண்டாய் மாலைகட்டி"
சார்த்துகிறானாம் தலைவன். அவனது கவனத்தையும் சிரத்தையையும் உறங்கும் குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்கிறாள்.

"தாமரையின் நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
போட்டாரே நெய்விளக்கு -உங்கய்யா ஒரு
புத்திரனே வேணுமின்னு"

தன் தந்தையின் அறச்செயல்களையும், அவர் பட்ட பாடுகளையும் கேட்டு உறங்குகிறது குழவி. இதல்லவோ பிற்காலத்தில் "மகன் தந்தைக்குச் செய்யும் உதவி" யை செவ்வனே செய்ய உந்துதலாகும்?. இவ்வாறு தான் பிறந்த வரலாறையும், தன்பெற்றோர் செய்த நற்செயல்களையும் கேட்டு வளரும் குழந்தைகள் இருந்த காலத்தில் கண்டிப்பாக "முதியோர் இல்லம்" தேவைப்படவில்லை.

Thursday, May 12, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -3

பிள்ளைக்கலி - பெண்ணின் மேலான சமூக அழுத்தங்கள்.

பெண்கள் தாய்மையில் முழுமையடைவதாக சமூகம் எண்ணுகிறது. இது தலைமுறை வளர்ச்சிக்காக சமூகத்தின் அக்கறை என்னுமளவில் ஆரோக்கியமான எண்ணம். ஆயின் தாய்மையடையும் வரை , மணமாண பெண் ஒரு நெரிசலில் உட்படுத்தப்படுகிறாள். "மலடி" என்னும் அடைமொழி, அவள் நினைக்கமுடியாத பயங்கரமான சமூக அங்கீகாரம். இதற்காக அவள் பல வழிமுறைகளையும், சம்பிரதாயங்களையும் கைக்கொள்கிறாள். அவ்வாறான திணறல்களை அவள் வெளிப்படுத்தப் பாடல்களை நாடுகிறாள். அவளது மேலான சமூக அழுத்தங்களைப் பாருங்கள்,




"மலடி மலடியென்னே
வையத்தார் ஏசாதே
மலடியென்ற பெயரை
மாற்றிவைக்க வந்த கண்ணோ?

இருசி இருசியென்றே -என் அப்பா!
என்னைத் தேசத்தார் ஏசாதே
இருசியென்ற பெயரை
எடுத்துதைக்க வந்த கண்ணோ?

இத்தகைய அழுத்தங்களை போக்குவதற்காகவே பிள்ளைக்கலி தீர்க்கச்சொல்லி தெய்வங்களை வேண்டுகிறாள். சடங்குகளையும், விரதங்களையும் மேற்கொண்டு,உடல் வருத்தி மனவருத்தத்தைத் தவிர்க்கப் படாதபாடு படுகிறாள். எப்படியென்றால்,

"காணாக் கோவிலுக்கு
கற்பூரத் தீபமிட்டு
தூரத்துக் கோவிலுக்கு
சுடர்விளக்கு நேர்ந்தாளோ?"

"தை ஆறு மாசமா
தரைமொழுகிச் சாதமுண்ண
நிச்சயமா ஆறுமாசம்
நிலமொழுகிச் சாதமுண்ண
மாசமுடிவிலே மனமொடிஞ்சி நிக்கையிலே..."

"வெள்ளி முழுகி வெகுநாளாத் தவசிருந்து
ஊசி முனையிலே உனக்கே தவசிருந்தேன்"

"விளக்கிலிட்ட நெய்போலே நான் வெந்துருகி நிக்கையிலே"
என்னும் சொல்லில் பிள்ளைக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் வேதனையடர்ந்த ,எதிர்பார்ப்புச் சுமைகளுடன் நம் நோக்கி நீள்வது நிஜம்.
பிள்ளையில்லாத பெண்களை நமது சமுகம் எவ்வாறு நடத்துகிறது என்பதின் அழுத்தத்தை இந்நாட்டுப்புறப் பெண்கள் தாலாட்டிலேயே சொல்லிவைத்தது, நமது சசமுதாயத்தில் பெண்களைக் குறித்தான கண்ணோட்டம் தெளிவாகிறது.

Sunday, May 08, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -2

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -2

கடவுள் துதி

பெரும்பாலான பாடல்கள் மதுரை மாவட்டத்தில் கம்பம்பள்ளத்தாக்குப் பகுதியில் சேகரிக்கப்பட்டவை.சுருளியாறு, மலைப்பகுதி, முல்லை நிலப்பகுதி,வேளாண்மையாகும் மருதநிலப்பகுதியென நிலப்பகுதிக்கான தெய்வங்கள் வணங்கப்பட்டன. கணபதியும்,முருகனாரும், அம்மனும், விஷ்ணுவும் வணங்கப்படுவதில் இப்பாடல்களின் பரவல்களை உணரலாம்.

"முந்திமுந்தி விநாயகரே
முருகா சரஸ்வதியே
கந்தனுக்கு முன்பிறந்த
கணபதியே முன் நடவாய்" ( பக் 32)

"மந்தையிலே மாரியாயி
மலைமேல மாயவரே
இந்திரரே சூரியரே
இப்ப வரவேணுமய்யா" ( பக் 32)
இப்பாடல் "தண்ணீர் தண்ணீர்" படத்தில் ஒரு பாடலில் வந்துள்ளது.

சுருளி மலைவளம் குறித்து இப்பாடல் சுருக்கமாகச் சொல்கிறது.
"இஞ்சி படருமலை
ஏலக்கா காய்க்குமலை
மஞ்சி படருமலை
மகத்தான சுருளிமலை"

பொதுவாக நாட்டுப்புறப்பாடல்கள் எளிமையானவை. நேராக விசயத்திற்கு வந்துவிடுபவை. எளிய பதங்கள், எளிய இசை. ஆயின் மிக மிக நுட்பமான வார்த்தைகளில் அவற்றின் ரத்தினச் சுருக்கமான பொருள்கள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
"எட்டடிக் குச்சுக்குள்ளே- சுப்பைய்யா
எப்படி நானிருப்பேன்
தங்கமயிலேறி-சுப்பைய்யா
வந்திட வேணுமைய்யா"
எட்டடிக் குச்சு என்பது ஒரு மாளிகையல்ல. எண்சாண் உடம்பு எனக் கொள்க. சுப்பைய்யா என்பது சுப்பிரமணிய கடவுளைக் குறிக்கிறது.

"போலீஸ்காரன்மகள்" படத்தில் வரும்
" எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த
என் தலைவன் விட்டுவிட்டுச் சென்றானடி" என்ற பாடலின் உந்துதல் இங்கிருக்கிறது.

"ஆறும் பெரியாறு- சுப்பய்யா
ஆறுமுகனாறு
இந்த ஆறு கடந்து -சுப்பய்யா
எப்படி நான் வருவேன்" (பக் 40)

இதில் ஆறு என்பதற்கு வழி எனப் பொருள்கொண்டு பார்க்கையில், பக்தியின் உச்ச நிலை புலப்படுகிறது.

நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்தும் எளிமையெனவும் நேராகவே பொருள்கொள்ளலாம் எனவும் நாம் இதுகாறும் நினைத்திருந்ததற்கு நல்ல பாடம்! மிகக் கூர்மையான, பெரும்புலமைகொண்ட புலவர்களின் பாடல்களை மட்டுமே இதுவரை இவ்வாறு அலசியிருந்தவர்கள், கொஞ்சம் நாட்டுப்புறப்பாடல்களை அக்கண்ணோட்டத்தில் காண்பின் பல கவிதை விந்தைகள் வெளிவரும்.

Saturday, May 07, 2005

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -1

ஏட்டில் எழுதாக் கவிதைகள் -1

சில வாரங்களுக்கு முன்பு 1947 முதல் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டிய அமரர் திரு. அன்னகாமு அவர்களின் முயற்சி குறித்து எழுதியிருந்தேன். "ஏட்டில் எழுதாக் கவிதைகள்" என அவரது திரட்டு வெளியிடப்பட்டது. மிகக்குறைவாகவே பதிக்கப்பட்ட அந்நூலினைப் படித்த அனுபவம் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்நூலின் தோற்றுவாய்ப் பாடல் நாம் வெகுவாக அறிந்த திரைப்படப்பாடலாக வெளிவந்தது.
"பாடறியேன், படிப்பறியேன்,
பள்ளிக்கூடம் தானறியேன்.."

"நாட்டுப்புறப்பாடலென்னும் பாற்கடலை நக்கிக்குடிக்கத் துணிந்த பூனையின் கதை" இது என ஆசிரியர் அன்னகாமு தன் முயற்சி பற்றிக் கூறுகிறார். அவருடன் இருந்து நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டிய மாணவர்கள் அவரது அவையடக்கம், மென்மையான பண்பு முதலியவற்றை இன்னும் நினைவுகூறுகின்றனர்.
இந்நூலிற்கு சிறப்புரை திரு.கிவா.ஜ தந்திருக்க, தலையுரை திரு. அவினாசிலிங்கம் தந்திருக்கிறார்.

திரட்டிய பாடல்களை பதினாறு அத்தியாயங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் பொருள் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. கடவுள் துதியிலிருந்து, மாழை,நாட்டுச்சிறப்பு, பிறப்பு வளர்ப்பு, திருமணம், தொழிற்பாட்டு, திருமணம், குழந்தைகளின் விளையாட்டு, நவீனங்கள், களியாட்டங்கள், கதைப்பாட்டுக்கள், சோதனைகள், வேதாந்தப்பாடல்கள், ஆதிவாசிப்பாடல்கள் , முடிவில் மங்களம் என வகுக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு வகைப்பாடலுக்கும், ஆசிரியர் தனது விளக்கங்களையும், அப்பாடலின் தோற்றக்கதையினையும் இயன்றவரை வழங்கியிருக்கிறார்.
நாட்டுப்புறப்பாடல்கள் /கருப்பொருளை ஏதோவொரு நிகழ்வின் அடிப்படையிலும் சொல்ல முயற்சிப்பதால், தோற்றப்பின்னணி அறியப்படின்,பாட்டின் அறிதலின் சுவை கூடுகிறது.

இப்பாடல்களைக் குறித்து மேலும் காண்போம்

Tuesday, May 03, 2005

மரவெட்டு விழா

மரவெட்டு விழா
Grow trees,Chop cars என அலறுகிறது ஒரு விளம்பரப் பலகை, மும்பையின் மேற்கத்திய விரைவுச்
சாலையின் ஓரம். காரணமில்லாமல் இல்லை.

மும்பையின் மேற்குவிரைவுச் சாலை புறநகர்ப்பகுதியில் அழகன மரங்களின் வரிசை இருபுறமும்
கொண்டது. சாலையை விரிவுபடுத்தவேண்டி, மரங்களை சகட்டுமேனிக்கு வெட்டிச் சாய்க்கிறார்கள்.
மரங்களை மீண்டும் நடும் முயற்சியில் செய்வதாகத் தெரியவில்லை. ஜூன் மாதம் பருவமழை
தொடங்குமுன்னே சாலையின் விரிவாக்கப்பணிகளை முடிக்கவேண்டிய அவசரம் மட்டுமே தெரிகிறது.

இயற்கைச் சூழல் பெரிதும் பாதிக்குமென பல தன்னார்வலக் குழுக்கள் கொடிபிடித்தும் பயனில்லை.
எதிர்ப்பு மிகக் குறைந்து பிசுபிசுத்துப்போனது. இதே போல இரு மழைக்காட்டு மரங்கள் , மும்பை
நகருள், சாலையின் நடுவே இருந்தனவற்றை வெட்ட முயன்றபோது எழுந்த எதிர்ப்பு, பல மரங்கள்
வெட்டப்படும்போது இல்லை. மும்பை நகருள் நடப்பதென்றால் ஒரு வித கவனிப்பும்,
நகர்ப்புறமென்றால் ஒருவித கவனிப்புமாக தன்னார்வலக் குழுக்களும் செயல்படுவது பெரும் அவலம்.
இங்கும் மழைக்காட்டு மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன என்கிறது டைம்ஸ் ஆஃப்
இந்தியா(புகைப்பட ஆதாரங்களுடன்).
சாலை விரிவாக்கம், முன்னேற்றம் வேண்டியதுதான். ஆயின் அது எந்த விலை கொடுக்கப்பட்டு
பெறப்படுகிறது என்பதையும் நோக்கவேண்டும். இந்த மரங்களை சாலையோரம் மீண்டும் நடுவதற்கும்
பராமரிப்பதற்கும் தனியார் நிறுவனங்கள் முன்வரலாம்.
மும்பையின் மர அடர்வு குறைந்துகொண்டே வருகிறது எனக் கவலைப்படுகின்றனர் mமும்பை
சுற்றுப்புறசூழல் சங்கத்தினர். அவர்களுடனாவது கலந்து ஆலோசித்து, தக்க அனுபவமும், திறமையும்
வாய்ந்த நிறுவனங்களிடம், மரம் பெயர்த்து மீண்டும் நடுவதின் கான்டிராக்ட் அளித்திருக்கலாம்.
ராவோடு ராவாக மரங்கள் சாய்க்கப்பட்ட மர்மம் புரிபடவில்லை.
முனிசிபாலிடி அலுவலர்கள் என்றேனும் சுற்றுப்புறச் சூழல் மாசுபடல் குறைப்பு போன்றவற்றில்
அடிப்படை அறிவு பெறுவரா? என்ற ஆதங்கத்துடன் நான் அனுதினமும் செல்லும்
விரைவுச்சாலையின் இடப்புறம் தெரியும் மரங்களைப்பார்க்கிறேன்.
கடைசி தடவையாக(?)

Monday, May 02, 2005

கோடை - கவிதை

கோடை
------

தேனீர்க்கடை பெஞ்சுகளை
நனைத்துச் சொட்டி, சாலையோரம்
சிறுகுட்டையாய்ச் சேர்ந்த நீர்
அந்நாளின் முதல் பேருந்தின் பின் சக்கரத்தில்
சகதியாய்ச் சிதறிப் பயணிக்க,

நாக்கில் நீர்சொட்டி,
நக்கிக் குடிக்கவந்த
கறுப்பு நாய்
தொங்கிய முலைகள்
கோபமாய் ஊசலாட,
பேருந்தின் பின்னோடி
எழுப்பிய குரைப்புகள்.

மின்வெட்டில் தயங்கி நின்ற
மின்விசிறிகளின்
அழுத்திய மொளனத்தில்
மூடிய கதவுகளினின்றும்
மிதந்து நீளும்
வியர்வைப்
பெருமூச்சுகள்..

இவைபோதும்
கோடைவந்ததென்று
அறிவிக்க.
சூரிய உதயங்களின் அவசியமேயின்றி.

Sunday, May 01, 2005

HIV-யும் சமூக விழிப்புணர்சியும்

HIV-யும் சமூக விழிப்புணர்சியும்

அண்மையில் கேரளாவில் , எயிட்ஸ்-ஆல் இறந்த மனிதர்களுக்கு சர்ச்சுகளில் இறுதி வழிபாடும் , சாதாரண சவ அடக்க உரிமையும் மறுக்கப்பட்டது என்னும் செய்தி பெரிதாக வந்திருந்த பொழுதும் ,அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

100% படிப்பறிவு பெற்ற கேரளத்திலேயே இந்த நிலையென்றால், சமூக விழிப்புணர்விற்கும், படிப்பறிவிற்கும் உள்ள தொடர்பு ஆரம்பகால நிலையிலேயே இன்னும் உள்ளது என்றே தோன்றுகிறது. சமூகக் கட்டுப்பாடுகளை புரட்சியால் மீற எத்தனித்த கேரளம் இன்று, ஒரு நோயாளிக்கு அவன் மனிதன் என்னும் அடிப்படை உரிமை மறுதலிக்கப்படும்போது எதிர்ப்பு தெரிவிக்காதது மிக்க ஏமாற்றமளிக்கிறது.

எனது இல்லத்திலிருந்து இரு கி.மீ தொலைவில் இருக்கிற மோட்டார் ரிப்பேர் கடையில் வேலை செய்து வந்த மார்வாடி இளைஞனுக்கு HIV positve என தெரியவர, முதலாளி அவனது தந்தையை ராஜஸ்தானிலிருந்து கூப்பிட்டனுப்பினார். மிகவும் பின் தங்கிய கிராம மனிதனார அவர், மும்பையில் வந்ததும் பலர் ' இவனை இங்கேயே எப்படியோ பிழைக்கட்டும் என விட்டுவிட்டுப் போங்கள்" என அறிவுறுத்தினர். மனிதர் குனிந்த தலை நிமிராமல் இருந்துவிட்டு இறுதியில் மகனை அழைத்துப்போனார். அவர்கள் சமூக ஆட்கள் எதிர்த்துக் கேட்டதில் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார் " இன்நோய் வருமுன்னேயே இவன் எனது மகன்."
மிகப் பின் தங்கிய கிராமத்தில் அவர்கள் ஒதுக்கிவைக்கப் படும் சூழ்நிலை இருப்பினும், அவரது அரவணைப்பு, எயிட்ஸ் நோயாளிகளை விலக்கிவைக்கும் நமது சமூகத்திற்கு ஒரு பாடம்.

எவ்வளவுதான் விளம்பரம் செய்தாலும் நாம் எயிட்ஸ் என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டதைப் போல ஒதுங்குகிறோம். எத்தனை பேர் எயிட்ஸ் நோய் குறித்த விளம்பரங்களையும் , தகவல்களையும் கவனித்து உள்வாங்குகிறோம்? இது குறித்து பேசினாலே " வேற எதாவது சொல்லுங்க சார்" என்னும் பதில் வருகிறது.
அடிப்படையில் நமக்கு ஒரு எண்ணம்- ஏதோ நாம் படு புனிதமானவர்களென்றும், நமது சமூகத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லையென்றும். எயிட்ஸ் நோயாளியென்பவன் நம்து சமூகத்தின் களங்கமெனவும், இருக்கவே கூடாதென்னும் புனிதப்படுத்தும் முயற்சியில் நமக்குப் பாத்தியதை இருக்கிறதெனவும் ஒரு purging &cleaning attitude எங்கிருந்தோ போலியாக வந்துவிடுகிறது. இது சமுதாயத்தைக் குறித்தும், செக்ஸ் குறித்தும் நாம் கொண்டுள்ள கறுப்புப் படிவங்கள். இதிலிருந்து சற்றே மாறுபட்டுப் பேசினால் முத்திரை குத்தப்படுகின்றனர்
" இத் தன்னார்வலக் குழுக்கள் புகழ் தேடி இவ்வாறு செய்கின்றன" அல்லது " இவனுக்கும் இருக்கிறதோ?" இதெல்லாம் படுசாதாரணமாகக் கேட்கப்படுகின்றன.

பஞ்சாப் போலீஸ் தனது படையில் HIV infected ஆக இருக்கும் காவலாளிகளை அடையாளம் கண்டபின், சற்றும் பெரிதுபடுத்தாமல், அடித்தளத்தில் பெருமளவில் பரிசோதனை செய்யச் உத்தரவிட முயற்சியெடுத்திருக்கிறது. பாராட்டப்படவேண்டிய செயல். அக்காவலாளிகள் விலக்கிவைக்கப் படவில்லை.

HIV மற்றும் AIDS குறித்து தடுப்புக் காப்புகள் அவசியம். எனினும், தாக்கப்பட்டவர்களை எவ்வாறு சமூகத்தில் நடத்தவேண்டும் என்பதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். இல்லையென்றால் மும்பையின் பிரபலமான மருத்துவமனைகளில் Hiv infected மனிதர்கள் அடுத்தடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள்.

Saturday, April 30, 2005

உலோகப்பறவை வர்த்தகமும் உலக அரசியலும்

உலோகப்பறவை வர்த்தகமும் உலக அரசியலும்

ஏர் இந்தியா போயிங் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்ததின் பின்னே இருக்கும் உலக வர்த்தக அரசியல் குறித்து பல விவரங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கின்றன.

ஏர்பஸ் கன்ஸார்டியம் இரண்டுதள அசுர விமானத்தின் வெள்ளோட்டம் வெற்றியானது குறித்து, ஷாம்பெய்ன் பாட்டில்களைத் திறந்த நேரத்தில் இந்த போயிங் ஆர்டர் , ஏர்பஸ் நிறுவனத்தை சற்றே ஆட வைத்துவிட்டது. வர்த்தகத்தின் மதிப்பு அப்படி..

கிளின்Tடன் அரசின் முக்கிய பொறுப்பிலிருந்த தாமஸ் பிக்கரிங், போயிங்-கில் வைஸ் ப்ரசிடென்Tட்டாக, புஷ் அரசு பொறுப்பேற்றதும், சேர்ந்தது நடந்தது 2001-ல். இதன் பின்னணி குறீத்து அமெரிக்கப் பத்திரிகைகள் "புது அரசு, தனக்கு ஆதரவாக உலக அரசியலில் பேசுவதற்காகவே, அரசியல் புள்ளியான பிக்கரிங்-கை போயிங் எடுத்திருக்கிறது" என்னுமளவிற்கு துக்கடாவாகச் செய்தி வெளியிட்டுவிட்டு, ஒதுக்கிவிட்டன.
இந்தப்பின்னணியில் சீனாவும், இந்தியாவும் விமானப் போக்குவரத்தில் பெருமளவில் முன்னேற்றமடையும் என்னும் எதிர்பார்ப்பில் இரு விமானக் கம்பெனிகளும் 2002-ல் இருந்தே தங்கள் வேலையைத் தொடங்கிவிட்டன. சீனாவின் விமானப் போக்குவரத்து , பலமடங்காகப் பெருகிவந்தாலும், 2008 ஒலிம்பிக் விளையாட்டிற்காக சீனா தனது விமானதளங்களை நவீனப்படுத்திப் பெரிதுபெரிதாகக் கட்டிவருகிறது. எனவே, முதல் கவனம் , இக்கம்பெனிகளுக்கு சீனாதான்.

திடீரென ஏர் இந்தியா போயிங்-கிற்கு ஆதரவாக முடிவெடுத்ததில் அண்மையில் அமெரிக்க போக்குவரத்து செக்ரட்டெரி நார்ம் மினேட்டா,இந்தியா வருகை என ஒரு பின்னணி இருக்கிறது. போயிங் , அவரது தேர்தலுக்கு பணம் கொடுத்திருந்தது எனச் சொல்லப்படுகிறது. நார்ம் மினேட்டாவின் வருகையின் பின்னும், கொண்டலீஸா ரைஸ் வந்திருந்த போதும்,போயிங் தனது விற்பனை நுட்பங்களை உச்சப்படுத்தியது.
ஏர்பஸ் சும்மாஇருக்கவில்லை எனினும், அதன் lobbying power சற்றே குறைந்திருந்தது எனவும், "இவர்கள் காலம் காலமாகப் பேசிவருகிறார்கள். எங்கே வாங்கப்போகிறார்கள்?" என்ற அலுப்பும் அலட்சியமும் அவர்கள் தரப்பில் சற்று மேலோங்கியிருந்ததெனவும், உள்நாட்டு விமானத் துறையில் கூறுகிறர்கள். இந்த நேரத்தில்.. ஏர் இந்தியா தனது முடிவை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது.

ஏர் பஸ் கன்ஸார்டியம், " ஏர் இந்தியாவின் முடிவில் ஏதோ இருக்கிறது" என Central Vigilance Committee இடம் புகார் செய்திருக்கிறது.
அமெரிக்கா f16 விற்கிறது என்றால் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோரின் வேலை தக்கவைக்கப்பட்டிருக்கிறது என்னும் அமெரிக்க உள்நாட்டு அரசியல்தானே ஒழிய, சாதாரண டெக்ஸஸ் குடிமகனுக்கு, இந்தியா பாகிஸ்தான் யார் வாங்கினால் என்ன? யார் மேல் குண்டு போட்டால் என்ன?

போயிங் விமானங்கள் அமெரிக்காவின் எந்த விமானதளத்திலிருந்து இந்தியாவின் எந்தப் பன்னாட்டு விமானதளத்திற்கும் நேரடி விமானப் போக்குவரத்து நடைபெற வழிவகுக்கும் எனவும் , குறைந்த எரிபொருள் செலவாக்கும் தொழில் நுட்பமுள்ளவை எனவும் ஏர் இந்தியா தரப்பில்சொல்லப் பட்டாலும்...
உலோகப்பறவை வர்த்தகம் , உலக( அமெரிக்க) அரசியல் நிலை கொண்டே அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

Thursday, April 28, 2005

மனநலமும் காவல்துறையும்

மனநலமும் காவல்துறையும்
சாம்னாவில் வந்த சிவசேனாவின் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கல்லூரி மாணவ/மாணவியர் "எங்கள் ஆடைகளை நோக்குவதை விட்டுவிட்டு உருப்படியாக எதாவது செய்யுங்கள்" எனச் சொல்லப்போக, வேண்டாத விவாதங்கள் பத்திரிகைகளை நிரப்புகின்றன. "கலாச்சாரச் சீரழிவு ஆடையின் குறைப்பில் தொடங்குகிறது" என்பது ஒரு கட்சி. "ஆடை குறைப்பு செய்யாத பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள்" என்கிறது இன்னொன்று. பத்திரிகைகளுக்கு மெல்லுவதற்கு அவல் கிடைத்தாகிவிட்டது. இன்னும் ஒரு வாரத்திற்கு அவர்களுக்குக் கவலையில்லை.
அடிப்படை நோயை விட்டுவிட்டு எங்கோ ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது.

உளவியல் அடிப்படையான தேர்வு காவல் துறைக்கு அவசியம் கொண்டுவரவேண்டும் என்பது என் எண்ணம். வன்முறைகளை தினமும் பார்த்துக்கொண்டிருக்கும் மனதில் அதன் கறைபடியாமல் பணியாற்ற வேண்டும் என்பதற்கு , அத்தகைய மன நிலை அடித்தளத்தில் உண்டான மனிதர்களே தேர்வு செய்யப்படவேண்டும்.

உடல் நிலை கண்காணிப்பு எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் மனநிலைக் கண்காணிப்பும் சீரமைப்பும். வருடம் ஒரு முறை மருத்துவச் சோதனை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தும் மேநிலை காவல்துறை அதிகாரிகள் , கட்டாய மனநிலை சோதனை குறித்து ஏனோ இதுவரை பேசவில்லை. மனநிலை ஆலோசனை என்பது காவல்துறையில் இருக்கிறதா என்பதும் கேள்விக்குறிதான்.

இரு நாட்களுக்கு முன்பு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய சர்வே யில் ,"பாதுகாப்பு/உதவிதேவையென்றால் நீங்கள் காவலர்களை அணுகுவீர்களா ?" என்ற கேள்விக்குப் பல பெண்கள் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகளையும் தனியாக விளையாட விடுவதற்கு இப்போது தயங்குவதாகவும் கூறியுள்ளனர்.
ஒரு தனிமனிதனின் செய்கை காவல்துறையின் ஒழுங்கையே கேள்விக்குறியாக்கியிருக்கும் பட்சத்தில், அத்துறை, தனது நடப்பினையும், காவலர்களின் ஒருங்கிணைந்த நலப்பாதுகாப்பையும் குறித்து முழுக்கவனத்துடன் ஒரு மீள்பார்வை செய்யவேண்டியது அவசியம். இது போன்ற சÁÂங்களில காவல்துறை அதிகாரிகள் பேசுகிறார்களே ஒழிய, இன்னும் ஒன்றையும் உருப்படியாகச் செய்யக்காணோம்.

Wednesday, April 27, 2005

வேலியே பயிரை மேய்கையில்..

வேலியே பயிரை மேய்கையில்..

இதுகாறும் மும்பை பெண்களுக்கு மிகவும் பத்திரமான இடம் என்னும் கருத்து நிலவி வந்தது. இன்றும் பெருமளவு இது உண்மைதானெனினும், அண்மையில் ஒரு கல்லூரிப் பெண், பட்டப்பகலில், ஒரு காவலனால், காவல் நிலையத்தினுள்ளேயே கற்பழிக்கப்பட்ட செய்து, மும்பையின் பெருமிதத்தைத் தகர்த்து விட்டது.

மூன்று நாட்களுக்கு மக்களின் ஆத்திரம், கொந்தளிப்பு வீதியில் உணரப்பட்டது. மெரைன்லைன்ஸ் என்னும் பகுதியில்( இச் சோகச் சம்பவம் நிகழ்ந்த இடம்), பொதுமக்கள் சாலையை மறித்து காவல்துறையினரை, அக் காமுகனைத் தங்களிடம் விடுமாறு கோஷமெழுப்பினர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சமூக,பொருளாதார மட்டத்தில் மிக மிக உயர்ந்த தளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறை சரியான விளக்கம் அளிக்கத் திணறியது. "மிகவும் சீரியஸான விஷயம். தக்க தண்டனை வழங்கப்படும்" என்றெல்லாம் காவல்துறை மேலிடம் அறிக்கை விட்டது. துணை முதலமைச்சர்" அப்பெண்ணின் வீட்டில் தானே சென்று மன்னிப்புக் கேட்பதாகவும், அப்பெண்ணின் புனர்வாழ்விற்கு என்ன வேண்டுமானாலும் செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் " சொன்னார்.
இதிலெல்லாம் எவரும் சமாதானமானதாகத் தெரியவில்லைல்.

தலைவலியாக, சிவசேனாவின் சங்கப் பத்திரிகையான சாம்னா " பெண்கள் படு கவர்ச்சியாக ஆடை அணிவதைத் தவிர்க்கவேண்டும்" எனச் சொன்னதோடு நிற்காமல் " இதெல்லாம்தான் ஒரு மனிதனை இவ்வாறு தவறான செயல்களுக்குத் தூண்டுகின்றன" என்றும் சொல்லிவைத்து, ஒர் விவாதத்தைக் கிளப்பி வைத்திருக்கிறது.
பெண்கள் கவர்ச்சியாக ஆடைஅணிவதால் ஒரு மனிதன் , அதுவும் காவல் துறையில் இருப்பவன் கற்பழிக்கும் அளவிற்குத் தூண்டப்படுகிறான் என்பது நியாயமல்ல. காவல்துறைக்கு இச்செயல் பெரும் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. சீருடையில் இருக்கும் ஒரு மனிதன் இவ்வாறு செய்யத் துணிகிறான் என்றால்,அடிப்படையில் அவன் அத்தொழிலுக்கே அருகதையற்றவன். காவல்துறையின் செலக்ஷன் முறைகளில் மாற்றம் வேண்டும்.
காவலர்கள் பணிநேரம் மிக அதிகமாக இருப்பதால், பெரும் மனச் சோர்வு, உடல் தளர்ச்சியும் அடைகிறார்கள் என்றும், அவர்களுக்கு இம்மனச்சுமைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை அளிக்கப்படவேண்டும் என மனவியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃ இண்டியா மும்பை கூறுகிறது. மனத்தையும் உடலையும் சீராக வைத்திருக்க கட்டாய உடற்பயிற்சி, யோகா, கட்டாய வார விடுமுறைகள் அளிக்கப்பட வேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
உளவியல் வல்லுநர்களின் இக்கருத்துகள் பலமுறை வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் காவல் துறை எதையும் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. மேலும், ராணுவம், அதிகரிகளைத் தேர்ந்தெடுக்கும் முறையில் உளவியல் வல்லுநர்களைப் பயன்படுத்துவதை, காவலர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையிலும் பயன்படுத்தினால், மிருகங்கள், காவல்துறையில் சேர்வதைத் தடுக்கலாம்.

எது எப்படியோ, வேலி பயிரை மேய்ந்துவிட்டது. "இது முதல்முறையல்ல - முதல்முறை வெளிவந்த செய்தி என்கிறார்கள்" பெண்ணுரிமை வாதிகள்.
ஒரு கல்லூரிப் பெண்ணின் வாழ்வே குலைந்திருப்பதும் மும்பைக் காவல்துறையின் சீருடை கறைபட்டிருப்பதும் மட்டும் இப்போது நிதர்சனம்.

Sunday, April 24, 2005

தாய்மொழியும், உணர்வு வெளிப்பாடும்

தாய்மொழியும், உணர்வு வெளிப்பாடும்

தாய்மொழி மூலம் கல்வி என்பது அரசியலாகிவிட்டது. எந்த காரணத்திற்காக கல்வியியல் வல்லுநர்கள் தாய்மொழி மூலம் அடிப்படைக் கல்வியாவது வேண்டும் என அறிவுறுத்திக்கொண்டிருக்கிறார்களோ, அது விவாதங்களில் செறிவடையாமல் நீர்த்து வருவது வேதனைக்குரியது. சரி, கல்விக்கூடங்களில்தான் தமிழ் இல்லை... வீட்டிலாவது இருக்கவேண்டாமா என்னும் கேள்விக்கு " ஆங்கிலத்தில், ஹிந்தியில் பேசச்பேசத்தான் அதில் சரளமாக புழங்க வரும்" என்னும் வாதத்தை முன்வைக்கின்றனர் பெற்றோர். அவர்களின் கவலை, உலகமயமாக்கலில், ஆங்கிலம் பேச எழுதத் திணறினால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதில் சற்றுதான் உண்மையிருக்கிறது.

அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த சிறுவர் நாடகப் பயிற்சி முகாமிற்கு சென்று வந்த பேராசிரியர் இராமானுஜம் ,குழந்தைகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் பேசிவரும் தமிழ்+ஆங்கிலம் கலந்த "இரண்டும் கெட்டான்" மொழி பெரும் தடையாக இருப்பதாகச் சொன்னார். சென்னை நகரிலிருந்து வந்திருந்த குழந்தைகளைக் குறித்துக் கூறுகையில் "குழந்தைகள் உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த இயல்பாக தாய்மொழி உதவும். வேற்று மொழியில் அவர்களால் ,சொற்செறிவில் தங்கள் உணர்வுகளைத் தோய்க்க இயலுவதில்லை. அவ்வாறு வலுவான வேறுமொழிச் சொற்களைக் கையாடினாலும், அவை தனது உணர்வுகளைச் செய்தியாகச் சுட்டும் வார்த்தைக் கோர்வையாக மட்டுமே காணப்படுகின்றன. உணர்வுகளின் உயிர் அதிலில்லை. இது அக்குழந்தைகளின் பெற்றோர் பெரும்பாலும் உணர்வதில்லை " என்றார். முகாமிற்கு குழந்தைகளை அழைத்து வந்திருந்த தாத்தா,பாட்டிகள் இதனைப் பெரிதும் ஆமோதித்து வரவேற்றனர் என்றும், மாறாக,குழந்தைகளின் பெற்றோர் இதிலிருக்கும் சிரமங்களை முன் வைத்தனர் என்றும் சொன்னார்.அதே நேரத்தில், தான் கிராமங்களில் நடத்திய நாடகப் பயிற்சி முகாம்களில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் , தமிழ் சொற்றடர்களையும் அதிலூடும் உணர்வுகளையும் உள்வாங்கி, தமிழில் தனக்குத் தெரிந்த அளவில் உயிரோடு வெளிப்படுத்துகின்றனர் என்றார்.

நமது குழந்தைகள் நம்மிடம் சொல்லுவதின் செய்தி மட்டும் அறிகிறோம். அவர்கள் தங்கள் சிறிய உலகத்தில் சேர்த்துவைத்திருக்கும் வார்த்தைகளின் வெளிப்பாடுகள், உடல் மொழி வெளிப்பாடுகள் முதலியனவற்றை நாம் பெரும்பாலும் கவனிக்கத் தவறுகிறோம். அவர்கள் சரியாக தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அறியவேண்டியிருக்கிறது. இது அவர்களுக்கு பெரும் சுமையல்ல. குழந்தைகள் வெகு விரைவாக வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ளூம் சக்திபெற்றவர்கள் என சிறுவர் மன நல வல்லுநர்கள் கூறுகின்றனர். தாய்மொழிச் சொற்கள் மிக விரைவாக அவர்களின் மூளைக்கும், நெஞ்சிற்கும் சென்றடைகின்றன. பிற மொழிச் சொற்கள் மூளையைச் சென்றடைந்து, வெறும் லாஜிக்-கில் பேசும்போது பிரயோகிக்கப்படுகிறது. இதுவே உயிரற்ற சொற்றொடர்கள் உமிழப்படுவதின் காரணம் என நான் நினைக்கிறேன்.

அவர்களுக்குத் தாய்மொழியில் சரியான வார்த்தைகளை அறிமுகம் செய்து வைக்கவேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.

தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில்(வடக்குப்பட்டு) நான் நேராகக் கண்ட அனுபவம் இது. உலையில் இருக்கும் நெருப்பு "தீ" என்று அழைக்கப்படுவதில்லை. "அனல்" என்கின்றனர். அது"அணைக்க"ப் படுவதில்லை. "இறக்கப்" படுகிறது. மீண்டும் " ஏற்றப்" படுகிறது. அடுப்பின் இருக்கும் நெருப்பு உயிரைக் காப்பதால் "அணைக்கப்" படுவதில்லை. மீண்டும் "மூட்டவும்" படுவதில்லை. அருமையான வாழ்வியல் தத்துவங்களை தீ, நெருப்பு, அனல் போன்ற சொற்களைப் பயன்படுத்துபவர் தமிழ்ப் புலவர்களோ, அறிஞர்களோ இல்லை. கிராம மக்கள். இது ஏன் நகரக் குழந்தைகளுக்குச் சொல்லித்தரப்படக் கூடாது?
தாய்மொழியில் வீட்டில் பேசுவது என்பது, குழந்தைகளின் மன வளர்ச்சிக்குப் பெரிதும் உதவக்கூடும்.
தொலைக்காட்சி சீரியல்களிலிருந்து சற்றே மீண்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுவதென்பது சிரமமானாலும், இயலாததில்லை.

Saturday, April 23, 2005

நாடக ரசிப்பும் தமிழ் நாடகங்களும்

நாடக ரசிப்பும் தமிழ் நாடகங்களும்
--------------------------------

ரசனை என்பது ஒரு தனி மனித தளம். ஆயின் எவ்வாறு தமிழ் நாடகங்கள் தொய்வுற்றிருக்க பிற மாநிலங்களில் நாடகங்கள் வலுவடைந்திருக்கின்றன?
இக்கேள்வியை சற்றே திரித்து "மராத்தியில் எவ்வாறு நாடகம் இன்னும் வலுவாக இருக்கிறதென?" எனது நண்பரும், நாடக ரசிகருமான திரு.சி.ºÅ¡ñ அவர்களுடன் கேட்டிருந்தேன். அவர் சொன்னதில் இùவிடயங்கள் முக்கியமானதாகப் பட்டது.
1. நாடக ஆசிரியர்கள், அவர்களது படைப்புகள் பள்ளிகளிலேயே சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. கல்லூரிக்கு வரும்போது மாணவர்கள் குறைந்தபட்சம் பு.லெ. தேஷ்பாண்டே குறித்து அறிந்திருக்கின்றனர். பலர் டென்Tடுல்கரின் நாடகங்கள் படித்திருக்கின்றனர் அல்லது பார்த்திருக்கின்றனர். எனவே, தற்கால நாடகம் குறித்து அவர்களால் இயல்பாகப் பேச முடிகிறது.
2. மகாராஷ்டிராவில் மராத்தி சினிமா அவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. பாலிவுட் ஆசீர்வாதம்.. ஆயின், மராத்திய கலாச்சார,மொழிக்கு ஏற்ப இயல்பாக மராத்தி நாடகங்கள் அமைந்துவிட்டன. ஒரு சீரியலைவிட, பொதுஜன மராட்டியானவன், நாடகத்தை பார்க்கவும், அது குறித்துப் பேசவும் விரும்புகிறான். அவ்வாறு உரையாடப் பலர் கிடைக்கின்றனர். இது மும்பையிலிருந்து , ஓஸ்மனாபாத் மாவட்ட கிராமம் வரை பொதுவானது.
3. மராத்திய மொழி அறிவாளர்கள், எழுத்தாளர்கள், மராத்திய பத்திரிகைகள் மராட்டிய நாடகங்களைப் பற்றி பேசுகின்றனர். விமர்சிக்கின்றனர். தமிழ்நாட்டில் இலக்கியத்துறையில் ஒரு செங்குத்துப் பிளவு (verticalization) காணப்படுகிறது. எழுத்தாளர்கள், கலை இலக்கியத்துறை சார்ந்தவர்கள் எத்தனைபேர் நாடகம் குறித்து பேசுகின்றனர் மக்களிடம்?
4. நாடகம் பார்ப்பதென்பது தனிமனித அளவில் மட்டுமல்லாமல், சமூக அளவில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குடும்பமாக நாடகம் பார்க்கச் செல்வதும், நண்பர்களூடன் செல்வதும் சகஜமாகப்போனதால், நாடகத்திற்கு வருமானம் அவ்வளவு பஞ்சமில்லை. புது நாடக முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

இது குஜராத்தி நாடகங்களுக்கும் பொருந்தும்.

நாடக நடிகர்கள் சீரியலில் செல்வது இங்கும் உண்டு. குஜராத்தி நாடகங்களில் முக்கியமான நடிகை அபாரா மேத்தா ,பல ப்ரபலமான ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.ஆனால், அவர் குஜராத்தி நாடகமேடையை இன்னும் விட்டுவிடவில்லையே? தின்யார் கான்Tட்ட்ராக்டர், வர்ஷா உஸ்காங்கர்,ஷபானா ஆஸ்மி ,தமிழில் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே... பலரைச் சொல்லலாம்.

தமிழ் மக்கள் நாடகம் பார்க்க வருவார்களானால், பொருளாதாரச் சிக்கல் இக் குழுக்களுக்குக் குறையும். போட்டியில் நல்ல நாடகங்களூம் காணக் கிடைக்கும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால், மக்கள் பிற மாநிலங்களில் நாடகத்தை சமூகத்திலிருந்து விலக்கிவிடவில்லை. இந்த ஆதரவு இருக்குமானால் தமிழ்நாடகங்கள் மேலும் வளரும்.

The world will never starve for want of wonders; but only
for want of wonder. G.K.Chesterton

இந்த மேற்கோளைத் தமிழ் நாடகத்திற்குப் பொருத்தி எழுதினால்..
The Tamil world will never starve for want of Good plays ; but only
for want of play.
மக்களிடம் நல்ல நாடகத்திற்கான விருப்பம் வளரவேண்டும். Who will bell the cat and how?

Thursday, April 21, 2005

தமிழ் நாடகங்கள் (தொடர்ச்சி)

ஊக்கப்படுத்திய நண்பர்கள அனைவருக்கும் நன்றிகள். மக்களிடம் ரசனை குறைந்து விட்டது எனச்சொல்லவில்லை. எதுநாடகம்எதுதிரைக்கதையின்அரங்கச் செயலாக்கம்
என்பதில் உள்ள மனப்பிறழ்வே நமது நாடகங்களின் இந்நிலைக்குக்காரணம் எனவே சொல்லியிருக்கிறேன்.
ரசனை என்பது தனிமனித தளத்தைச் சேர்ந்தது.
பாய்ஸ் கம்பனியின் நாடக நடிகர்கள் திரையுலகில் எவ்வாறு பரிமளித்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அன்று திரையுலகு நாடக வசனங்களையும், காட்சியமைப்பையும் பெரிதும் உள்வாங்கியது. இன்று நாடகத்தில் நாம் திரையுலக சிரிப்புக் காட்சி அங்கங்களையும், வெள்ளித்திரையின் காட்சியமைப்பு தாக்கங்களையும் எதிர்பார்க்கிறோம். நாடகம், முப்பரிமாணத்தில் நடிக்கப்படும் சினிமா அல்ல என்பது நம் மக்கள் உணரவேண்டும். அதன் வீச்சு அலாதியானது.

கதகளிக்கும், யக்ஷகானத்திற்கும் கிடைக்கும் மரியாதையும் தனி அந்தஸ்தும் தமிழ்நாடக வடிவங்களுக்குக்கிடைப்பதில்லை. பெரும்பாலானோர்க்கு எது நமது மரபுக்கலை என்பதும் தெரியாது. மரபுக்கலைக்கும் நாடகத்ற்கும்தொடர்பு
இருப்பினும் இரண்டும் வேவேறு தளங்களைச் சேர்ந்தவை.

நாடகங்களின் தொய்விற்கு பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்குமென நான் நம்பவில்லை.நாடகக் குழுக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள, அனுமதிச்சீட்டின் விலையை நம்பியிருக்கின்றன.
சினிமா போல ஒரே நேரத்தில் பல இடங்களில் ஒரு நாடகக் குழு நடத்த முடியாது.எனவே அவற்றின் வருமானத்திற்கும், பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு எல்லை இருக்கிறது. டி வி டி கலாச்சாரம் நாடகத்தில் எடுபடாதது. நரைன் சொன்னது போல
ஒரு சீசன் முயற்சி செய்துபார்க்கலாம்.

மும்பையில் என் சி பி ஏ என்னும் அரங்கு, வருடம் தோறும் பன்னாட்டு நாடகங்களை செயலாக்கச் செய்கிறது. இதே போல ப்ருத்வி தியேட்டர் ( ப்ருத்வி ராஜ் கபூர் நினைவாக) பன்னாட்டு நாடக வாரம் கொண்டு வருகிறது மும்பையில், வருடம் தோறும். நம்நாட்டின் சிறுவர் நாடக முயற்சிகளும் இங்கு ஊக்கப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலிருந்து பல குழுக்கள் இதனை நல்ல மேடையாக பயன்படுத்தியிருக்கின்றன. .இது போல ஒரு வலுவான அமைப்பு தமிழ் நாட்டில் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

Tuesday, April 19, 2005

¾Á¢Æ¢ø ¿¡¼í¸û Tamil Theater

தமிழில் நாடகங்கள்

நவீன நாடங்கள் என்றாலே நம்மிடையே பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. அது என்னமோ அறிவு ஜீவிகளுக்காக ( அல்லது அவ்வாறு நடந்துகொள்பவர்களுக்காக), அல்லது ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருக்கும் மக்களுக்காகவே ,அம்மக்களால் இயற்றப்படும் நாடகங்கள் என. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரிகிறது - அவை அப்படியில்லை.

நாடகமென்பது இப்போது திடீர் நகைச்சுவை வசனங்களும், மேடையில் திரைப்படக் கதைத் துணுக்குபோல ஒன்றை நடித்துக் காட்டும் காட்சியமைப்புகளுமாக மட்டுமே என நமது எண்ணம் சுருங்கிவிட்டது. இதில் திரைப்படத்தின் ஆதிக்கம் இருக்கிறது என்று வெறுமே குற்றப்படுத்துவது மட்டும் போதாது. மக்களிடம் "எது நாடகம், எது திரைப்படம்" என்னும் பிரித்தறியும் ஆற்றல் குறைந்துவிட்டது. ஏதோ பார்த்தோம் வந்தோம் என்பது மட்டுமல்ல நாடகம்.
பார்ப்பவரின் பங்களிப்பு நாடகத்தின் இயல்பில் முக்கியமான ஒன்று. ஆரோக்கியமான நாடக நிகழ்வு, அவையினரின் பங்களிப்பில் பரிணமிக்கிறது என்கின்றனர் நாடக மேதைகள். தொலைக்காட்சியிலும், திரைப்படத்திலும் அவையினரின் பங்கு பார்ப்பதில் மட்டுமே. நாடகத்தை இவ்வாறு பார்க்க நினைப்பது தவறெனவே நினைக்கிறேன். இதுவே அடிப்படையில் தமிழ் நாடகத்தின் தொய்வுநிலைக்கு காரணமாகவும் இருக்கலாம்.

நவீன நாடகங்கள் நம்மை பன்னாட்டு சமுதாயத்தில் பிணைக்கின்றன. தமிழ் நாடகம் என்பதை விட தமிழில் நாடகம் என்பது மேலும் ஆரோக்கியமான சமுதாயத்தின் அடையாளம். தமிழில் நல்ல நாடகங்கள் இருக்கின்றன. ஆயின், நவீன நாடகத்தில், ப்ரெஞ்சு, ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்றவர்களின் நாடகப் பாங்குகள் நம்மில் வந்தடைவதை நாம் ஏன் அறியாமல் தள்ளுகிறோம்? "போப்பா. எவனுக்கு இந்த அளவு நேரமிருக்கு?" என்பது ரசனைக்குறைவு என்பதாக மட்டும் ஆகாது... ஒரு மனித வளர்ச்சியின் சீரழிவு எனவே கொள்ளவேண்டும்.

திரு. அண்ணாமலை அவர்கள்(பி.பி.சி சென்னை) தினமணியில் 25.3.2005 அன்று எழுதிய கட்டுரையை வாசிக்கக் கிடைத்தது. இருவது வருடங்களாக ஈழத்தமிழர்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை எவ்வாறு அவர்கள் அடைக்கலம் புகுந்த சுவிட்சர்லாந்து மக்கள் நாடகமெனும் ஊடகம் மூலம் அறிந்துகொள்கின்றனர் என்பதை விவரித்திருக்கிறார். இது ஒன்று போதும் "நாடகம் , பிற ஊடங்களைவிட எவ்வாறு மனிதன் ,மற்றொரு மனிதனைப் புரிந்துகொள்ள உதவுகிறது" என்பதைக் காட்டுவதற்ற்கு.ஒரு interactive media ஆக இருப்பதால், நாடகம் மனிதனை மனித நேயத்தின் அருகிலேயே வைக்கிறது.
தினமணி கட்டுரையினைக்கீழ்க்கண்ட சுட்டியில் காணலாம். எழுத்துரு தேவைப்படின்,தினமணி தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
http://www.dinamani.com/news.asp?ID=DNE20050325104518&lTitle=R%FBXVeLm&Title=Editorial+Page

Thursday, March 24, 2005

கடைவீதி- Kadaiveedhi ( poem)

கடைவீதி
--------

கோணலாக அழுந்திய
கற்கள் பாதையாக,
இரூபுறமும் கடைகள்
கூவிக்கூவி விற்பனை
இக்கடைவீதியில்.


விழாச்சந்தையில்லை
இக்கடைவீதி - நேற்றிருந்து
இன்றில்லாது போக...


ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு கூட்டம்
விற்பவனும் மாறுவான்
சிலபொழுதில்..

விற்பவனும் வாங்க,
வாங்குபவனும் ஏதோ
விற்கவே வாங்கும்
விபரீத வியாபரம்...

அழகுச் சாதனங்கள்,
அரிசி பருப்பு, தண்ணீர்
அண்ணன் தம்பி, அம்மா அப்பாவென
என எதை விட்டுவைத்தது
இக்கடைவீதி?

விற்பவனும் போக
வாங்குபவனும் போக
அன்றைய குப்பைகளும் வாரிப் போக..

நாளைய வியாபாரம்
எதிர்நோக்கிக்
காத்திருக்கிறது
கடைவீதி.

சுவர்க்கோழி சப்தங்களில்
எலிகளையும்,
திருட்டுப்பூனைகளையும்
சகித்தபடி,
நடுஇரவில்
படுசுத்தமாக.

Saturday, March 19, 2005

பரிசு -ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்திருப்பது தமிழர்கள் பெருமிதம் கொள்ளவேண்டிய செய்தி. "அகிலனுக்குப் பிறகு யாருமே தகுதியானவர்கள் இல்லையா?" எனப் பொருமிக்கொண்டிருப்பவர்கள் சற்று ஆசுவாசப்படலாம். காலம் தாழ்ந்த மரியாதைதான். ±É¢Ûõ better late than never.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, தூத்துக்குடி பொது நூலகத்தில் கேட்ட புத்தகம் இல்லாமல், வேண்டாவெறுப்பாகப் புரட்டிய ஜெயகாந்தனின் "யுகசந்தி" எனது கண்ணோட்டத்தையே மாற்றியது. எனது கணிப்பில் புரட்சியான சிறுகதைகளில் தமிழைத்திசை திருப்பியதில் ஜெயகாந்தனுக்கு முக்கிய பங்கு உண்டு.
அவரது பல கதைகள் project madurai-ல் படிக்கக் கிடைக்கின்றன. project maduraiக்கு இந்த இணைய தலைமுறை கடமைப்பட்டிருக்கிறது... புரட்சி எழுத்துக்களுக்காக நாம் என்றென்றும் ஜெயகாந்தனுக்குக் கடமைப்பட்டிருப்பதைபோலவே.

Eccha mikuthikal -எச்ச மிகுதிகள்

எச்ச மிகுதிகள்
___________

என்றும்போலவே
அன்றும்,
கடமைக் கனலில்
கனன்று சிவந்தபடி
மாலைக் கங்கில்
எரிந்ததைத் தேடியலுத்து
இருளில் புகைகிறேன்.

வினையெச்சத்துடன்
பெயரும் பிற எச்சங்களும் கூட்டி
நாளை விரிக்க
சுருட்டிப்பந்தாக்கி
மிடறு விழுங்கித் திணறுகிறேன்..
நினைவில் சேர்த்த
கனத்தில்
காற்றில் அழுந்தியபடி.


தோட்டத்து மூலையில்
மூடச் செடிகளோவெனில்
மூடிய மலர்களில் நம்பிக்கையைச்
சேர்த்துவைத்து வைக்கின்றன
வெறுமே நாளை விரியுமென அறிந்திருந்தும்.

பரிணாமத்தில் திரும்புதல்
சாத்தியமிருக்கிறதா?
மலர்கள் குலுங்கும்
அம்மல்லிகைக் கொடியாகாவிட்டாலும்
நாய் கூட முகராத
பேர்தெரியாத அப்புதராக மாறினாலும்
போதும்.

Wednesday, March 16, 2005

Kaisikam -2 (concluding) கைசிக புராணத்தில் சமூகப்புரட்சி சிந்தனை

கைசிக புராணத்தில் சமூகப்புரட்சி சிந்தனை
-------------------------------------------------------

பக்திஇயக்கம் சாதியமைப்பு உள்ள சமூகச் சூழலில், இறைவனைத் துதிக்க ஜாதியில்லை என்ற புரட்சிக் கொள்கையை முக்கியமாக முன்வைத்தது. பக்தி இயக்கத்திற்கு முன்பும் இது காணப்பட்டது.ஆழ்வார்களும், நாயன்மார்களும்,ஆச்சார்யார்களும் இதனைத் தங்கள் வாழ்விலும், இயற்றிய நூல்களிலும் பல இடங்களில் உணர்த்தியிருக்கிறார்கள்.

கைசிகபுராணக் கதையமைப்பு இதனைத் தன் கருவில் கொண்டிருக்கிறது. கைசிகபுராணத்தைக் கொண்டுள்ள வராஹ புராணமும் இதனை மற்ற இடங்களிலும் தெளிவாக்கியுள்ளது.
பலவகையான பக்தி நிலைகளை விவரித்தபின் ,
"இத்தகைய பக்தி எவனொருவன் அமையப்பெற்றுள்ளானோ, அவன் எக்குலத்தைச் சார்ந்தவனாக இருப்பினும், அவனோடு பிற பக்தர்கள் கொடுக்கல் வாங்கல் செய்யலாம்" என்கிறது வராஹ புராணம்.

இதில் எவனொருவன் என்னும் ஒற்றை விளி, ஜாதியற்று பொதுநிலையில் காணப்படுவதை கவனிக்கவும்.

"ஒரு வைணவ பக்தன், சக வைணவபக்தனின் ஜாதியைச் சோதித்தால் அவன் தன் தாயின் கருப்பையைச் சந்தேகித்த பாவத்தை செய்தவன் " என்கிறது ஆச்சார்ய ஹ்ருதயம்."மாத்ரு யோனி பரீக்க்ஷா".(நன்றி: திரு. பி.ஏ. கிருஷ்ணன்- புலி நகக் கொன்றை ஆசிரியர்)

இவ்வாறே பக்தரிடம் ஜாதி வேறுபாடில்லை என்பதை கைசிகபுராணம், பிற முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் விரதங்களுக்கு நிகராக, பிறப்பினால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நம்பாடுவான் என்னும் பக்தனின் ஏகாதசி விரதத்தை சிறப்பாகக் காட்டுகிறது.
வைணவ பக்தர்களில் முக்கியமானவர்களுக்கு நம் என்ற அடைமொழி மிகுந்த மரியாதையுடன் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார், நம்பிள்ளை, நஞ்சீயர்,நம்பெருமாள், நம்பிராட்டி என்பதோடு நம்பாடுவான் என்று பாணர் குலப் பக்தனின் பெயர் கைசிகபுராணத்தில் காணப்படுவதால், இப் பக்தனின் சிறப்பு பன்மடங்காகிறது.

,இறைவனைப் பாடித்துதித்தல் என்பது பக்தியின் முக்கிய வெளிப்பாடு என்பதையும் கைசிகம் காட்டுகிறது.

ஆண்டாள் பாடல்களில் பாடித்துதிப்பதற்கு மிகமுக்கியத்துவம் இருப்பதைத் தெளிவாக அறியலாம்.
"வாயினற்பாடி மனத்தினாற் சிந்தித்து.."
"ஓங்கியுலகளந்த உத்தமன் பேர்பாடி.."
"உன்னைப்பாடிப்பறைகொண்டு நாம் பெற்ற சன்மானம்" போன்ற வரிகள் இதனை விளக்குகின்றன.
மாணிக்கவாசகரின் திருவாசகமும் "சோதித்திறம்பாடி" இறைவனைத் துதிக்கத் தூண்டுகின்றது.

புராணக்கதையின் வழக்கு இப்படியென்றால், நாடகம் இன்னும் சிறப்பாக தன் செய்தியை வலுவுடன் தெரிவிக்கின்றது.
பேராசிரியர் இராமானுஜம், கீழ்க்கண்டவற்றை இந்நாடகத்தின் சிறப்பென்கிறார்.
1. நாடகக் கலைஞர்கள் , பிரம்மராட்சசன் தவிர அனைவரும் பெண்கள். பொதுவாக , மேடையில் ஆண்கள் பெண்வேடமணிந்து நடிக்கும் வழக்கிற்கு மாறாக பெண்கள் ஆண்வேடமணிந்து நடிக்கும் புதுமை இந்நாடகத்தில் நூற்றாண்டுகளாக வழங்கிவருகிறது.
2.இப்பெண்கள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்றும், அவர்கள், ஏகாதசி விரதமிருந்தே, நாடகத்தில் பங்குகொண்டனர் என்றும் அறியப்படுகிறது.
3.விரதமிருக்கும் உயர்குலத்தோர் தரையில் அமர்ந்திருக்க, இந்நாடகம் மேடையில் நடிக்கப்பெறுகிறது.

நாடகம் என்ற ஊடகம் ,சினிமா, தொலைக்காட்சி போன்ற ஊடகத்திலிருந்து வேறுபடுவதில் ஒரு முக்கிய காரணம் நாடகத்தில் பார்வையாளர்களின் பங்கு. ஒவ்வொரு நாடகமும், வேறு வேறு சமயங்களில், தளத்தில் செயலாக்கப்படும்போது, அதன் வீச்சு, பார்வையாளர்களின் பங்கு கொண்டு மாறுபடும். It is a cocreative activity.

கைசிகநாடகத்தில், கிழவராக வரும் நம்பிப் பெருமான், தன் பங்கு முடிந்ததும் "நாமும் நம் இடம் செல்வோம்" எனக்கூறி மேடையிலிருந்து இறங்கிச் செல்லும் போது, இரு புறமும் அமர்ந்திருக்கும் மக்கள் அவரை வணங்குவதும், நாடகம் முடிந்ததும், நடிகர்கள் வேடம் கலைக்குமுன், பக்தர்கள் அவர்களை வணங்கும் வழக்கம் இன்றும் காணலாம். இப்படியொரு பார்வையாளர்களின் பங்களிப்பை ஆழமாகக் கொண்டுள்ளது கைசிக நாடகம்.

இந்நாடகத்தில் பரதக்கலை, கூடியாட்டம் மற்றும் யக்ஷகானம் போன்றவற்றின் தாக்கம் தெரிகிறது. எனினும், தனது புரட்சியான வடிவமைப்பை சிதைக்காமல், பிற ஒழுங்குகளையும் தன்னகத்தே ஏற்றுக்கொண்டுள்ளது இதன் சிறப்பு.

பொதுவாக புரட்சியான கருத்தை முதலில் உள்வாங்கி, அதற்கு ஏற்ப சடங்குகள் (rituals) அமைவது வழக்கம். கைசிகநாடகத்தில், முதலில் நாடகப்பாங்கு அமையப்பெற்று, அதனுள் கைசிகம் தன் கரு சிதையாமல் உள்வாங்கப்பட்டுள்ளது என்கிறார் பேராசிரியர்.இராமானுஜம்.
இதனை நோக்கும்போது, இந்நாடகப்பாங்கு மிகத் தெளிவாகச் சிந்திக்கப்பட்டு, அதனுள் கதை சிதையாமல் ஏற்கப்படும் விதம் அமைக்கப்பட்டுள்ளது எனக் கருதலாம்.

சமூகப் புரட்சியென்பதை , மதத்தின் வாயிலாக, மதக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அனுட்டானச் சைகைகள் (rites) மற்றும் சடங்குகள் மூலமாகவும் (rituals) மெல்லப் பரப்பி மக்களை அடிமனத்திலிருந்து உணரவைக்க இயலும்.புரட்சியென்பது முரட்டுத்தனமான எதிர்ப்பு மட்டுமே கொண்டு வருவதல்ல. சமூகத்தில் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்ட, ஏற்படுத்தப்பட்ட புரையோடிப்போன கொள்கைகளை, அச்சமூகம் நம்பும் பிற கொள்கைகள் , நம்பிக்கைகள் கொண்டும் சீர்திருத்த இயலும். ஆயின், இச்சீர்திருத்த எண்ணங்கள் மீண்டும் சடங்குகளாக மட்டுமே உள்வாங்கப் பெறின், அதன் மூலங்கள் மீண்டும், அனுட்டானங்களின் சாம்பல் மண்டி, உள்மட்டும் கனன்றுகொண்டிருக்கும் அபாயம் இருக்கிறது.

கைசிகநாடகம் மீண்டும் புத்தொளி பெற்றதில், இவ்வமைதியான புரட்சி மீண்டும் காண்பவர் மனத்தில் எழும் வாய்ப்பு இருக்கிறது என்னும் நம்பிக்கையே மகிழ்ச்சியளிக்கிறது.

இந்நாடகம் காணவிரும்புவோர், வைணவத் தலங்களைத் தொடர்பு கொண்டால், கைசிகஏகாதசி நாளறிந்து, திருக்குறுங்குடி சேரலாம். நெல்லையிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.

Saturday, March 12, 2005

Kaiskam -1

கைசிகம் - ஒரு அறிமுகம்
(இக் கட்டுரையின் கருத்துகள் பேராசிரியர் சே.ராமானுஜம் அவர்களுடனான எனது கலந்துரையாடல்களையும், "சே.ராமானுஜம் -நாடகக் கட்டுரைகள்" தொகுப்பு- சி. அண்ணாமலை ,காவ்யா வெளியீடு புத்தகத்தையும், அடிப்படையாகக் கொண்டவை. கட்டுரைகளின் அடிக்குறிப்புகள் பக்கங்களின் எண்களில் தரப்பட்டிருக்கின்றன )
நமது முன்னோர்கள் தங்களது செய்திகள் மக்களைக் காலம் காலமாகச் சென்றடைய பல உத்திகளைப் பயன்படுத்தினர்.
அனுட்டானச் சைகைகள் (rites), அவற்றைச் செய்யும் வழிமுறைகள் கொண்ட சடங்குகள்( rituals),
நிகழ்வுச்செயல்களை(events)ப் படம்பிடிக்கும் மீள்நிகழ்வுகள்(enactment), நிகழ்வுச் செயலாக்கங்கள் (performance) என இவற்றை வரையறுக்கலாம்.
இவற்றால் , தங்களது மரபுச் சிந்தனைகளை மட்டுமே, சந்ததிகளுக்குச் செய்தியாகத் தந்தனர் என்ற கோட்பாடு , சற்றே மீள்பார்வைக்கு வைக்கப்படவேண்டும் என்று ஒரு நாடகம் சிந்திக்க வைக்கிறது.
அது கைசிகபுராண நாடகம்.

கைசிகபுராணக் கதை வராஹ புராணத்தில் காணப்படுவதிலிருந்து அதன் தொன்மையை உணரலாம். ( வராஹ புராணம் -நாற்பத்தியெட்டாம் அத்தியாயம்). (பக்: 341)
வராஹ புராணத்தின் வியாக்கியானம் பராசரபட்டரால் ( கி.பி 12ம் நூற்றாண்டு) மணிப்ப்ரவாள நடையில் எழுதப்பட்டது எனக்காணக்கிடைக்கிறது.(பக் 347)

பெருமாளை கைசிகப்பண்கொண்டு பாடிய பக்தன் ஒருவனின் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது இப்புராணக்கதை. கைசிகப்பண் என்பது தமிழ்ப்பண் -பைரவி ராகம் எனலாம்..
கைசிகபுராணம் , கைசிக அமாவாசையின் மறுநாள் -துவாதசியன்று வைணவத் திருத்தலங்களில் மணிப்ப்ரவாள நடையில் வாசிக்கப்பட்டு போற்றப்படுகிறது. பக் 341
முக்கியமாக, நிகழ்வுச் செயலாக்கமாக ( performance), நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த திருக்குறுங்குடி என்னும் வைணவத் தலத்தில் நாடகமாக நடிக்கப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக செயலாக்கப்பட்டு வந்த இந்நாடகம் காலத்தின் மாற்றத்தால் பொலிவிழந்து, சடங்காக ஆக்கப்பட்டு, "கைசிகம் கண்டால் புண்ணியம் உண்டு' என்ற எண்ணத்தால் மட்டுமே உந்தப்பட்ட சில பக்தர்களால் மட்டுமே காணப்பட்டு வந்தது அண்மையில் சில ஆண்டுகள் முன்பு வரை.

திருமதி. அனிதா ரத்தினம் (T.V.S group) அவர்களின் முயற்சி மற்றும் கொடையாலும், பேராசிரியர். இராமானுஜம் அவர்களின் முயற்சியாலும், இந்நாடகம் புதுப்பிக்கப்பட்டு, புது வாழ்வு பெற்று பொலிவுடன் மீண்டும் அரங்கேறியிருக்கிறது என்பது மகிழ்வான செய்தி.
இந்நாடகம் ஆண்டுதோறும் திருக்குறுங்குடி ஊரில் (நெல்லைமாவட்டம் நாங்குநேரியருகில் ) கார்த்திகை மாதம் வளர்பிறை 11ம் நாள் ஏகாதசிதினத்தன்று சிறப்பாக தற்போது நடைபெற்று வருகிறது.

கைசிக புராணத்தின் கதைச் சுருக்கம்:
நம்பாடுவான் என்ற , நால்வகை வருணத்தாரினும் தாழ்த்தப்பட்ட குடிப்பிறந்த வைணவ பக்தன், தனது யாழினால் திருக்குறுங்குடி நம்பிப் பெருமாளை தினமும் பாடி வணங்கிவந்தான். ஒரு கார்த்திகை மாதத்து ஏகாதசியன்று இரவில் பெருமானைப் பாடிவணங்கச் சென்ற போது, அவனை ஒர் பிரம்ம ராட்சசன் பிடித்துக்கொண்டு கொன்று தின்னப்போவதாகச் சொன்னது. உயிர்போவது குறித்து வருந்தாத நம்பாடுவான், ஓர் ஏகாதசி இரவில் பெருமானைப்பாடும் வாய்ப்பு போகிறதே என வருந்தி, " நான் வணங்கி வந்தபின் என்னைப் புசித்துக்கொள்" எனப் பிரம்மராட்சசனிடம் கூறினான்.முதலில் நம்பாத பிரம்மராட்சசன், பின் இரக்கம் கொண்டு அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது. கோவிலில் பண்பாடி வணங்கித் திரும்பிவந்த நம்பாடுவான் தன்னைப்புசித்துக்கொள்ளும்படி பிரம்மராட்சசனிடம் சொன்ன சொல் தவறாது திரும்பிவந்தான். இதனால் மனம்மாறிய ப்ரம்மராட்சசன் "உன்னைக்கொல்ல மனம் வரவில்லை. இன்று நீ இறைமுன் பாடியதின் புண்ணியத்தைக் கொடு " என இறைஞ்ச, நம்பாடுவான் மறுத்தான். "நீ கைசிகப் பண் கொண்டுபாடியதின் புண்ணியத்தையாவது கொடு" என ப்ரம்மராட்சசன் மன்றாட, இறுதியில் நம்பாடுவான்"தந்தேன்" எனச் சொல்ல, பிரம்மராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த ஒர் அந்தணன் ,சாபவிமோசனமடைந்து, நம்பாடுவானை வணங்கி, இறைவனின் திருவடிகளை அடைந்தான்

இக்கதையில், நம்பாடுவான் கோவிலிலிருந்து திரும்பி ப்ரம்மராட்சசனிடம் வர முயலும்போது, திருக்குறுங்குடிப் பெருமாளான நம்பி , ஒர் கிழவன் வடிவம் கொண்டு " நீ தப்பிச்செல்லலாம்" என நம்பாடுவானிடம் ஆசைகாட்டிச் சோதிக்க , "வைணவ பக்தன் சொன்ன சொல் தவறான்" எனச்சொல்லி நம்பாடுவான் ப்ரம்மராட்சசனிடம் செல்ல உறுதியாயிருக்கிறான் எனவும் வருகிறது. இது நாடகத்தில் காணப்பெறுகிறது.

இக்கதையின் மூலம் திருக்குறுங்குடி தலபுராணம் பக் XXVI -XXVII - என சே.ராமானுஜம் நாடகக் கட்டுரைகள் பக் 346 ல் காணக்கிடைக்கிறது

இந்நம்பாடுவானைக்குறித்து வைணவப் பெரு நூலான நாலாயிரத்திவ்யப் ப்ரபந்தத்தில் காணப்பெறவில்லை. ஆயின் நம்பிள்ளை ஸ்வாமியின் ஈடுரையிலும், பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்திலும் , கைசிகம் எடுத்துக்காட்டப்படுகிறது.
இவ்வாறே புகழேந்திப்ப்புலவரின் பாடலிலும், பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் பாடலிலும் நம்பாடுவான்பற்றி விவரங்கள் காணக்கிடைக்கின்றன ( பக் 346-7)

இக்கதையின் புரட்சிகரமான சமூகச்சிந்தனை வெளிப்பாடு நாடகத்தில் எவ்வாறு காணக்கிடைக்கிறது என்பதைப் பின் காண்போம்.

Saturday, March 05, 2005

NaatuppuRappaadalkaL-2

சில நாட்கள் முன்பு நாட்டுப்புறப்பாடல்களின் முன்னோடியென அமரர். திரு. அன்னகாமு அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன்.1950-60களில் நடைபெற்ற அவரது நாட்டுப்புறப் பாடல்கள் திரட்டு முயற்சிகள், அதற்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றி விவரங்கள் தேடும் முயற்சியிலிருந்தேன். அதிர்ஷ்டம் எனச் சொல்லவேண்டும். பேராசிரியர் இராமானுஜம் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது பல விவரங்கள் கிடைத்தன.

பேராசிரியர் இராமானுஜம் , காந்திகிராம ஆசிரியர் கல்லூரியில் அன்னகாமு அவர்களின் மாணவர். காந்திகிராமத்தில் வாழ்ந்தவர்.அன்னகாமு அவர்களுடன் கிராமங்களுக்குச் சென்று, பாடல்களை எழுதிப் பதிவு செய்த மாணவர்களில் ஒருவர். அவர் குறிப்பிட்ட சில செய்திகள் இவை.

அன்னகாமு அவர்கள் 50களில் நாட்டுப்புறப்பாடல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.மதுரைமாவட்ட கிராமங்களில் நேரில் சென்று, பாடல்களைத் திரட்டினார். குறிப்பாக ஆலம்பட்டி,முருகன் பட்டி, கன்னிவாடி போன்ற கிராமங்கள் ( காந்திகிராமத்தைச் சுற்றிய கிராமங்கள் இவை).
பாடல்களைப் பதிவு செய்வதில் பல இன்னல்கள் ஏற்பட்டன.
1. நாட்டுப்புறப்பாடல்கள் , தன்னிச்சையான உணர்வின் வெளிப்பாடு. பாடும் இடம், காலம், பாடுபவரின் உணர்வு அனைத்தும் கலந்த புலப்பாடு. அவ்வாறு பாடுபவர்களுக்கு பிறர் நகலெடுக்கப் பாடுவதில் தயக்கம் வெட்கம் இருந்தது.அதனால், பாடல்களைப் பதிவு செய்வதற்கு, அவர்கள் அத்தயக்கத்தினை மீறி வந்து பாடுவதற்கு பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருந்தது.. அவர்கள் மொழியில் பேசி, நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
2. ஒலிப்பதிவு இல்லாததாலும், மொழியின் மாறுபாடுகளாலும், வரிகளை ஒழுங்குபடுத்துவதில் உண்டான சிரமங்கள் பல. அன்னகாமு அவர்கள், கிராம வழக்குப்படி வழங்கிய மொழிச்சொற்களைச் சிதைக்காமல் அப்படியே கையாளுவதில் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். அதனால், நாலு மாணவர்களோடு சேர்ந்து தானும் கிராம மக்கள் பாடும்போது எழுதியெடுப்பார். அனைவரின் எழுத்துப்படிவங்களையும் ஒப்பிட்டு, அன்னகாமு அவர்கள் எந்தச் சொல் எந்த இடத்தில் வரவேண்டும் என்பதை உறுதிப்படுத்துவார்.
3.எழுதியபின், அதன் மெட்டுகளை வரிசைப்படுத்துவதில் முதலில் சிரமமிருந்தது.
இதில் மறைந்த திருமதி. சியாமளா பாலகிருஷ்ணன் அவர்கள்(நாட்டிய மேதை பத்மா சுப்ரமணியம் அவர்களின் அண்ணி) பெரும்பங்கு ஆற்றினார். கிராமங்களில் பாடல்களைப் பாடும்போது , அருகிலிருந்து கேட்டு, மெட்டுகளை அப்படியே உள்வாங்கி, பாடல்களை அந்த இசைவடிவு மாறாமல் ஒருங்கமைத்துக் கொடுத்தார். அவரது அபார இசையறிவால், பாடல்கள் மெட்டு, சிதையாமல் பொலிவுடன் பதிவு செய்யப்பட்டன.

சில நாட்டுப்புறப்பாடல்களின் திரட்டுகளில், வரிகள் சரியாக அமையாதிருந்தால், திரட்டியவரே, சில வரிகளை தானே எழுதி அல்லது மாற்றியமைத்து பாடல்களைப் பதிவு செய்திருந்த காலமது. அக்காலக்கட்டத்தில், வார்த்தைகள் சிதைந்திருப்பினும், பாடல் வழக்கிலிருந்த வார்த்தைகளையே அன்னகாமு அவர்கள் பதிவு செய்தார். அவரது திரட்டுகள் உண்மையான பாடல்களைக்கொண்டிருந்தன.
திரைப்படங்களிலும் நாட்டுப்புறப்பாடல்கள் வந்திருந்தாலும், பெருமளவில் திரைக்கேற்ப மாற்றப்பட்டிருந்தன. சில திரைப்படப்பாடல்கள் நாட்டுப்புறப்பாடல் பண்ணிலும், மொழியமைப்பிலும், பாடலாசிரியர்களால் எழுதப்பட்டிருந்தன.இவ்வழக்கம் 70 களிலும் தொடர்ந்தது.

அன்னகாமு அவர்களது வாழ்க்கைப்பின்னணி குறித்து மேற்கொண்டு தகவல் கிடைக்கப்பெறும்போது மேலும காண்போம்